Saturday, May 4, 2013

(மூட) நம்பிக்கையும் சமூகமும்!! 




நாகரிகம் வளர  வளர பண்டைய மனிதனின் நம்பிக்கைகளும் மாறிக்கொண்டே வர ஆரம்பித்தது; சில நாகரீக மனிதர்களால் பல நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகள் என்று வரையறுக்கப்படத் தொடங்கின!!  ஆனாலும் பலர் இன்றும் தொடர்ந்தும் அதே நம்பிக்கைகளை  நம்பிக்கையாக பின்பற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இங்கு நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையிலான அளவுகோல் எனப்படுவது பார்ப்பவரது பார்வையில்தான் தீர்மானிக்கப்படுகின்றது!!  சில நம்பிக்கைகள் அரசாங்கங்களால் உத்தியோக பூர்வமாக நிராகரிக்கப்பட்டும், சில நம்பிக்கைகள் அரசாங்கத்தால் உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டும் பின்பற்றப்படுகின்றன!! 

இன்று மூடநம்பிக்கைகள் என்று சொல்லப்படுபவற்றில் பல ஏதோ ஒரு காரணத்துக்காக ஆரம்பிக்கப்பட்டு; பின்னர் தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப்பட்டு வருபவைதான்!! அவற்றில்  பல  நம்பிக்கைகள்; ஏற்படுத்தப்பட்ட காரணங்களை விடுத்து தவறான புரிதலோடு இன்றுவரை வெவ்வேறு காரியங்களுக்கு பின்பற்றப்பட்டு வருகின்றது. இவற்றின் பாதகத்தன்மை, சாதகத்தன்மை என்பதெல்லாம் அவை கொடுக்கும் பலனில் வைத்து கணிக்கப்பட வேண்டியவை அல்ல!! அவற்றின் தாக்கம் அவற்றால் கிடைக்கப்பெறும் மன/உடற் தாக்கங்களில்தான் தங்கியுள்ளது. அன்றாட  மனிதப் பழக்கவழக்கங்களில் இருந்து மூடநம்பிக்கைகள் என்று சொல்லப்படுபவற்றை விமர்சிப்பது மிகச் சுலபமான காரியங்களில் ஒன்று; அப்படி செய்வதற்குப் பெயர்தான் பகுத்தறிவு என்றால் அது சுத்த முட்டாள்தனம்(என் பார்வையில்)

மேலே சொன்னதுபோல நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் இடையில்  இருக்கும் வித்தியாசம்  ஒவ்வொருவருக்கும்  மாறுபடுபவை. ஆனால் அந்த நம்பிக்கைகள் கொடுக்கும் தாக்கங்களின் சாதகத்தன்மை, பாதகத்தன்மை பொறுத்தே அவை வேண்டியவையா, வேண்டாதவையா, இருந்திட்டு போகட்டும் வகையறாக்களா என முடிவெடுக்க  முடியும். அதுகூட  அவரவர் வாழும் சமூகம், மொழி, மதம் என கலாச்சாரம் சார்ந்துதான் முடிவெடுக்கமுடியும். சிலருக்கு/ஒரு சமூகத்துக்கு  மூட நம்பிக்கையாக தோன்றும் விடயங்கள் பலருக்கு/இன்னொரு சமூகத்துக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கலாம்! இந்த நம்பிக்கை மரபுவழியாக ஏற்பட்ட உளவியல் உறுதி என்றுகூட  சொல்லலாம். இதை விமர்சிப்பதென்பது அறியாமையின் வெளிப்பாடே!! 

சில நம்பிக்கைகள் அடிமைத்தனங்கள், உயிர்பாதிப்பு, உடற்பாதிப்பு, மனப்பாதிப்பு போன்ற பாரிய தாக்கங்களை இயன்றளவிலும் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றது; இது பல சமூகங்களுக்கும் பொருந்தும். அவற்றை  இல்லாமல் செய்ய குரல் கொடுப்பது  நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய செயல்தான். ஆனால் இங்கு மூடநம்பிக்கையாக சொல்லப்படுபவை; அதை ஒரு நம்பிக்கையாக ஏற்று  செயற்படும்  சமூகத்தில் நிகழ்கின்றது என்னும் பட்சத்தில் அவர்களை கண்டிப்பதோ, கிண்டல் செய்வதோ அவர்களை ஒருபோதும் மாற்றியமைக்காது என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அது அவர்களுக்குள் மேலும் வன்மத்தையும், கோபத்தையும்தான் ஏற்படுத்தும். அவர்களை பொறுத்தவரை அவர்களாக புரிந்து, கலாச்சார மறுமலர்ச்சியால் மீண்டால்தான் அவற்றிலிருந்து விடுபடமுடியும்; புரியவைத்தால் என்பது சாத்தியமான வழியல்ல!! 

எல்லோரும் விமர்சகர்களாக இருக்கத்தான் ஆசைப்படுகின்றோம், அது மனிதனில் ஒன்றிப்போன ஒரு சுபாவம்!!!  ஆனால் மற்றவரை விமர்சிக்கும் நாம் அதே விடயத்தில் உறுதியாக இருக்கின்றோமா என்பதை சுயபரிசோதனை செய்து பார்ப்பதில்லை. உதாரணமாக சொல்வதானால், பர்தா அணியும் முஸ்லிம் சமூகத்துப் பெண்கள்  வெப்பமான காலப்பகுதியில் உடலை முழுமையாக மூடியிருப்பது  உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதில்லை என்று சொல்லும் கனவான்கள்; அதே  வெப்பமான காலப்பகுதியில் தங்கள் குடும்ப பெண்களை பிகினியில்/நிர்வாணமாக நடமாட விடுவார்களா?  குறைந்த பட்ச நாகரிக உடையை உடுத்துவது எப்படி அவர்களுக்கு அவசியமோ; அதேபோலத்தான் அவர்களது சமூகத்தின் நாகரீகம் அது, அவ்வளவுதான்! அவர்களது மாற்றத்தை அவர்களது நாகரீகம் தீர்மானிக்கட்டும்; அதில் எதற்கும் நாம் சொறிய வேண்டும்? 

மூடநம்பிக்கைகள்  என்று சொல்லப்படும் பல நம்பிக்கைகள் ஏதோ ஒருவகையில் ஆரோக்கியமானவை என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு!! எல்லோரும் பரந்த சிந்தனையாளர்கள் இல்லை; சிந்தனைத்  திறன் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இந்நிலையில் இன்றும் பல நம்பிக்கைகள்தான்  பலருக்கும்  நம்பிக்கையை, தைரியத்தை கொடுக்கிறது; சிலரை தப்புச் செய்யவிடாமல் தடுக்கின்றது.  மூடநம்பிக்கைகள் என்று சில தசாப்தங்களுக்கு முன்னர் சொல்லப்பட்ட பல விடயங்கள்; அடிப்படையில் சுகாதார, மருத்துவ ரீதியில் சரியானவை என சொல்லப்பட்டிருக்கின்றன!!  பலருக்கு பல நம்பிக்கைகள் நிறைவேறும் போது திருப்தியை கொடுக்கின்றன!!  புரட்டாதிச் சனியானால் அம்மா காக்காவுக்கு சாதம் வைக்கும் சம்பவம்  விமர்சிக்கப்படும், காக்காக்கள் பிதுர்கள் இல்லாமல் இருக்கட்டும், அது மூடநம்பிக்கையாக இருக்கட்டும்; ஆனால் காக்காவுக்கு வைக்கும் சோறு அம்மா/அப்பா/தாத்தா/பாட்டியின் நம்பிக்கை, அவர்களுக்கு திருப்தி ஏற்படுத்தும் சம்பவம்!! 361 நாளும் வேளா வேளைக்கு சமைத்துக் கொட்டும் அம்மாவுக்காக 4 நாட்கள் சற்று பிந்தி சாப்பிட்டால் என்ன ஆகிவிடப்போகிறது? 

பல்லி  கத்தும்போது கைவிரலால் சுண்டுவது, பூனை குறுக்கே போனால் தண்ணீர் குடித்துவிட்டு போவது, சாப்பாட்டில் தலைமயிர் இருந்தால் தண்ணீர் தெளிப்பது, காலையில் வெளியே போகும்போது விளக்குமாறு/துடைப்பம் கண்ணில் படாமல் போவது, எங்கே போகின்றாய் என்று கேட்டால் ஓரிரு நிமிடங்கள் தாமதித்து செல்வது, ஊசியை கையில் கொடுப்பதில்லை, வாகன சாவியை கையில் வாங்குவதில்லை போன்று  நூற்றுக்கணக்கான நம்பிக்கைகள்  அன்றாட வாழ்விலும்; ஒவ்வொரு விசேட சம்பவத்தின் போதும் இப்படியான பல நூறுக்கணக்கான நம்பிகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதும் வழமை!!  சிலவற்றுக்கு  காரணம் சொல்லப்படும், பலத்துக்கும்  காரணம் தெரியாமல் மரபுவழி பயன்படுத்தப்பட்டுவரும்!! இங்கு கடைப்பிடிக்கப்படும் அனைத்தும் மூடநம்பிக்கைகள் என்று கொண்டாலும்; அவற்றைக் கடைப்பிடிப்பதில் என்ன தவறு? இழப்பு என்று ஏதும் இல்லை, ஆனால் கிடைப்பது திருப்தி!! 

 Facebook இல் கூட  ஒரு கடவுள்  படத்தை போட்டு இதை  Share செய்தால் 7 செக்கனில் நல்லது நடக்கும் என்று போடப்பட்டிருக்கும்; அதை பலர் இன்னமும் share செய்து வருகின்றனர், சிலர் அவர்களை கேவலமாக விமர்சித்தும் வருகின்றனர். நன்மை கிடைக்கிதோ இல்லையோ அதை share செய்பவனுக்கு அதில் ஒரு நம்பிக்கை!! நாம் அரசியல், சினிமா, கிரிக்கட், பொது விடயங்களுக்கு போடும் கோபமான, ஆதங்கமான  விமர்சன Status கள் எல்லாம் சம்பந்தப்பட்ட தரப்பால்  பரிசீலிக்கப்பட்டு பலன் கொடுக்கின்றனவா? ரெண்டுபேரும் ஒரே வேலையைதான்  செய்கின்றோம், ஆனால் வேறு வேறு வழிகளில். இதில் ஒருவரை மட்டும் எப்படி நையாண்டி பண்ணமுடியும்?  

அடுத்தவர்களை விமர்சித்து, பகுத்தறிவு பேசுபவர்களுக்கு; அப்படி செய்வதில்  ஒரு சந்தோசம், மகிழ்ச்சி கிடைக்கும் என்றால் அதில் தவறில்லை! அதேநேரம் அடுத்தவர் நம்பிக்கையை சுரண்டி, அதை காயப்படுத்துவது ஆரோக்கியமான செயலா? சில ஆண்டுகளுக்கு முன்னர் கடவுளை மறுத்து, கடவுளை கேவலப்படுத்தி தன்னை நாத்திகராக காண்பித்த ஒருவர்; தன்  திருமணத்தில் கடவுள் படத்தை வைத்திருந்ததால் விமர்சிக்கப்பட்டார். அவர் தரப்பில் சொல்லப்பட்ட நியாயம், அவர் மனைவியின் குடும்பத்தின் நம்பிக்கை அது என்பதுதான்!!  தனக்கு என்று வந்தால், தன்  உறவென்று வந்தால் நம்பிக்கையை நிறைவேற்றுவதும்; அடுத்தவர்களது நம்பிக்கையை காயப்படுத்துவதும்தான் பகுத்தறிவா? 

தாலியை, கோவில்களை, பூசாரியை, ஜாதகத்தை,பஞ்சாங்கத்தை  கேவலமாக கருத்திடும் ஒவ்வொருவருக்கும் தன்  திருமணத்தை  மேற்சொன்ன எவையும் இல்லாமல் நிகழ்த்த தைரியம் இருக்கா? திருமணம் என்பது தனி நபர்  விருப்பு வெறுப்பல்ல; பெண்ணிற்கு மேற்சொன்ன சம்பிரதாயங்கள் அற்ற  திருமணத்தில்  விருப்பம் இல்லாத பட்சத்தில் இவர்கள் ஆணாதிக்கமாக தங்கள் எண்ணத்தை திணிக்கவேண்டும். தங்கள் பெற்றோரை, பெண்ணின் பெற்றோரை என பலரை காயப்படுத்தவேண்டும். சரி இப்படியான சூழ்நிலையில் பெண்ணுக்கு புரியவைத்து, பெற்றோரை சமாதனப்படுத்தி/காயப்படுத்தியேனும்  சம்பிரதாயம் அற்ற திருமணம் செய்துகொண்டால் விமர்சனம் ஏதுமில்லை. மாறாக பெண்ணின்(வருங்கால மனைவி), பெற்றோரின், மாமனார் குடும்ப  நம்பிக்கைக்காக என்று தங்கள் நாத்திக கொள்கையை இவர்கள் செருப்பைபோல கழட்டிவிட்டால்; இவர்கள் தங்களை செருப்பால் அடிக்க சம்மதிப்பார்களா?  உணர்வு என்பது தன் குடும்பத்திற்கு மட்டும்தான் இருக்குமா? அடுத்தவன் உணர்வை சொறிபவர்கள்; அதே உணர்வை தன்  சுற்றத்திற்காக  விட்டுக் கொடுப்பது மிகக் கேவலமான செயல். இதனால்தான் சொல்கிறேன் இவர்களில் மிகப்பெரும்பான்மை  போலிகள் என்று!!

கமல்ஹாசன்  பக்தியை உங்கள் படுக்கை அறையில் வைக்கச் சொன்னார். அதையேதான் நானும் சொல்கிறேன் உங்கள் நாத்திகம், பகுத்தறிவையும் உங்கள் படுக்கை அறையிலேயே வைத்துவிடுங்கள். மதம் மட்டும் ஆணுறுப்பு போன்றதல்ல, நாத்திகமும் கூட ஆணுறுப்பு போன்றதுதான்; அதை வெளியில் எடுத்துவிட்டு திரியாதீர்கள், குழந்தைகள்மேல் திணிக்காதீர்கள், எல்லாவற்றையும்  அதை வைத்தே சிந்திக்காதீர்கள். இவை எல்லாவற்றையும் தாண்டிய ஒரு உணர்வு பூர்வமான விடயம் இருக்கின்றது, அதுதான் நம்பிக்கை; அதில் கல்லைவிட்டு எறிந்து மற்றவர்களை காயப்படுத்தி உங்களுக்கு அடையாளம் தேடாதீர்கள். என் நண்பன் ஒருவர் சொன்னது 'தன்  நண்பன் ஒருவன் நாத்திகனாம், அவனுக்கு எந்த சம்பிரதாயங்களிலும் நம்பிக்கை இல்லை, சுவாமி அறைக்குள் செருப்போடு போவானாம்', அதை சொல்லும்போது அவனுக்கு அப்படி ஒரு பெருமையாம். பெற்றவர்களது நம்பிக்கையை காயப்படுத்தி தன்  நாத்திகத்தை வெளிப்படுத்தும் இந்த நண்பரின் நண்பர் செய்யும் செயலுக்குப்  பேர்தான் நாத்திகம்/பகுத்தறிவென்றால் அது என் பார்வையில் குப்பை!! 

நம்பிக்கை, மூட நம்பிக்கையை எதுவென்றாலும் அதை ஒவ்வொருவரும் தங்களிடத்தில் வைத்திருத்தல் நல்லது!!  அதே நேரம் அடுத்தவர்களது நம்பிக்கையில் (அது பார்ப்பவர் பார்வையில் மூட நம்பிக்கையாய் இருப்பினும்) சொறியாமல் இருப்பது இன்னமும் நல்லது!!!  

கொசிறு :-

இன்று இணையத்தில் நிறையவே  சமூகத்தள  புரட்சியாளர்கள்  தோன்றியுள்ளனர்; எங்கு அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்பார்கள், பிரபலங்களில் குறை தேடுவார்கள், எதையும்/எவற்றையும் விமர்சிப்பார்கள், பகுத்தறிவு பேசுவார்கள், (மூட) நம்பிக்கைகளை உடைத்தெறிவார்கள். இவர்களது நிஜமுகம் அங்கு தெரியப்போவதில்லை; பொதுவெளியில் முதிர்ச்சி அடைந்த மனநிலையாளர்களாக, சமூகத்தை நெறிப்படுத்தும் முன்னோடிகளாக தங்களை நிரூபிக்கும் ஒருவகை ஹீரோயிச எண்ணம்தான் இப்படியான இணையப் போராளிகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றது!   ஏழை, தாழ்ந்த ஜாதி(அவர்களே சொல்வார்கள்), படிக்காதவன் போன்றோர்  மகா நல்லவர்கள் என்னும் மாயையையும்; பணக்காரன், உயர்ந்த ஜாதி(அவர்களே சொல்வார்கள்), படித்தவன் போன்றோர்  மகா கெட்டவர்கள் போன்ற மாயையையும் இணைய சமூகத்தளங்களில் காணலாம். மனித குணங்கள் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமும் இருப்பது என்பதைகூட புரிந்துகொள்ள முடியாத போராளிகள் இவர்கள்!! இவர்களைவிட ஆபத்தானவர்கள் சமூக விடுதலைப் போராளிகள்; இவர்களால் எதிர்க்கருத்துக்கு துரோகிப்பட்டம் கூட இலவசமாக வழங்கப்படும்!!

4 வாசகர் எண்ணங்கள்:

நாடோடி said...

epoodi...

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

SURESH said...

நாத்திகமும் கூட ஆணுறுப்பு போன்றதுதான்; அதை வெளியில் எடுத்துவிட்டு திரியாதீர்கள்,

Jayadev Das said...

\\கமல்ஹாசன் பக்தியை உங்கள் படுக்கை அறையில் வைக்கச் சொன்னார். அதையேதான் நானும் சொல்கிறேன் உங்கள் நாத்திகம், பகுத்தறிவையும் உங்கள் படுக்கை அறையிலேயே வைத்துவிடுங்கள். \\ Repeatuuuuuuu.......

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)