Friday, November 25, 2011

மயக்கம் என்ன...





2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, சந்தியா நடிக்க யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்க R.ரவீந்திரனுடன் இணைந்து நண்பர்களான செல்வராகவன், யுவன்ஷங்கர்ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா கூட்டமைப்பில் உருவாக்கிய White Elephant நிறுவனம் சேர்ந்து தயாரிப்பதாக இருந்த 'மாலை நேரத்து மயக்கம்' திரைப்படம்; நண்பர்களுக்கிடயிலான விரிசலால் கைவிடப்பட R.ரவீந்திரன், கார்த்தி கூட்டணியில் ஆயிரத்தில் ஒருவனை செல்வராகவன் இயக்கினார். அதன் பின்னர் மீண்டும் 'மாலை நேரத்து மயக்கம்' திரைப்படத்தில் தனுஷ், ஆண்ட்ரியா நடிக்க 'இரண்டாம் உலகம்' என பெயர் மாற்றி செல்வராகவன் இயக்கப் போவதாக கூறப்பட்டது. மீண்டும் செல்வா, ஆண்ட்ரியா பிணக்கினால் அது கைவிடப்பட; புதிய கதைக்களம், புதிய கூட்டணி என செல்வராகவன் தந்துள்ள திரைப்படம்தான் 'மயக்கம் என்ன'. ('இரண்டாம் உலகம்' ஆரியாவை வைத்து செல்வாவால் இயக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது)

'மயக்கம் என்ன' - எதிர்பார்ப்பை செல்வராகவன் ஏமாற்றவில்லை; எதிர்பார்ப்பை எகிறவைக்கும் இயக்குனர்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் செல்வராகவன் தன் மீதிருந்த எதிர்பார்ப்பை மிகத் திருப்தியாக பூர்த்திசெய்துள்ளார். மாறுபட்ட கதைக்களம், நேர்த்தியான & குழப்பமில்லாத திரைக்கதை, செல்வாவின் டிப்பிக்கல் டச் என 'மயக்கம் என்ன' செல்வாவின் மற்றுமொரு திரைவிருந்து. திரைப்படத்தில் தனுஸ் கேரக்டரை அவ்வப்போது Genius என்று அழைப்பார்கள், மயக்கம் என்னவை பார்த்த பின்னர் எனக்கு தோன்றியது; செல்வராகவன் - Genius. ஆயிரத்தில் ஒருவனில் குழப்பமான திரைக்கதை மூலம் செல்வராகவன் விட்ட தவறை 'மயக்கம் என்ன'வில் சரிப்படுத்தியுள்ளார். படம் அதிக வேகம் என்று சொல்லமுடியாவிட்டாலும் மெதுவாக நகர்கின்றது என்றும் சொல்ல முடியாது, எந்த இடத்திலும் திரைக்கதையில் தொய்வில்லை.



தனக்கு பிடித்த ஒரு துறையிலே தன் எதிர்காலம் அமைய வேண்டும் என ஆசைப்படும் ஒரு இளைஞன் தனது துறையினை எந்தளவிற்கு நேசிக்கின்றான் என்பதை காதல், காமம், துரோகம், நட்பு, தாய்மை, விரக்தி, மகிழ்ச்சி, ஏக்கம், இயலாமை என பல உணர்வுகளின் துணை கொண்டு சிறப்பாக கையாண்டிருக்கும் செல்வராகவனுக்கு மீண்டும் Hats Of. 'மயக்கம் என்ன'வில் நிறைய இடங்களில் செல்வராகவன் பிரமிப்பூட்டுகின்றார்; வசனங்கள் அனைத்தும் யதார்த்தமாகவும், அளவாகவும்; அதே நரம் ஆபாசமில்லாமலும் சில இடங்களில் பிரமிக்கதக்க வகையிலும் அமைந்தது திரைப்படத்திற்கு மேலும் பலம்; காருக்குள் தனுஸின் மனைவியும், தனுஸின் நண்பனும் பேசும் காட்சியும் வசனங்களும் பிரமாதம், அதிலும் "உன்மேல தப்பில்லை ஏன்னா நீ ஆம்பிளை" எனும் இந்த வசனம் எத்தனை உண்மை! உங்கள் திறமையை இன்னொருவன் தன் திறமை என்று சொல்லி பெயர் எடுத்த சம்பவம் உங்கள் வாழ்வில் எப்போதாவது ஏற்ப்பட்டுள்ளதா? அப்படி இருந்தால் அந்த வலியை 'மயக்கம் என்ன'விலும் நீங்கள் உணர்வீர்கள்.

தனுஷ் - படத்தில் கார்த்திக் + Genius கேரக்டரில் அதகளப்படுத்தியுள்ளார், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக தனுஸ் மாறிவருவது நன்றாக தெரிகின்றது. ஒவ்வொரு பிரேமிலும் தனுஷ் நடிப்பால் மிரட்டுகிறார்; உடல் மொழி, வசன உச்சரிப்பு, முகபாவம் என நடிப்பின் அத்தனை பரிமாணங்களிலும் வெளுத்து கட்டியிருக்கிறார்; தனுஸ் தவிர்த்து யாராலும் செய்ய முடியாத கேரக்டர் இது. அதென்னமோ தெரியல செல்வராகவன் படங்கள் என்றால் தனுஸ் வழமையைவிட பலமடங்கு அதிகமான output கொடுக்கிறார். தனுசிற்கு ஒரு பணிவான வேண்டுகோள்; தயவு செய்து வேங்கை, மாப்பிள்ளை போன்ற மொக்கை மசாலாப் படங்கள் வேண்டாமே!!!



றிச்சா- யாமினி கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார், தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் படத்தில் றிச்சாவிர்க்கு நடிக்க வாய்ப்பில்லை என்றால்த்தான் ஆச்சரியம்; அற்ப்புதமாக நடித்துள்ளார், சமீப காலங்களில் நடிகை ஒருவருக்கு இந்தளவு ஸ்கோப் உள்ள கேரக்டர் அமைத்ததில்லை; கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார். காதல், காமம், தாய்மை, பொறுப்பு, தைரியம், புரிதல் என பல பரிமாணங்களிலும் தேவைக்கேற்ப அழுத்தமான நடிப்பை கொடுத்துள்ளார். அசப்பில் பார்ப்பதற்கு நயன்தாரா + சோனியா அகர்வால் + பிரியங்கா சோப்ரா போலுள்ளார், தென்னிந்தியாவில் சிறப்பான எதிர்காலம் உண்டு. இவர்கள் இருவர் தவிர்த்து தனுஸின் நண்பர்கள், National Geographic Photographer ஆக வருபவர், நண்பர்களில் ஒருவரின் தந்தை என மிகக்குறைந்த கேரக்டர்களே 'மயக்கம் என்ன'வில் நடித்திருந்தாலும் தனுஷ், றிச்சா இருவரும்தான் படம் முழுவதும் தெரிகிறார்கள்.

தனுஷ் தவிர்த்து 'மயக்கம் என்ன'விர்க்கு இரண்டு கதாநாயகர்கள்; ஒருவர் ராம்ஜி - ஒளிப்பதிவாளர்; மற்றையவர் ஜீ.வி.பிரகாஷ்குமார் - இசையமைப்பாளர். இயக்குனர் அமீரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான ராம்ஜி 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் செல்வராகவனுடன் முதல் முதலில் இணைந்தார், இப்போது மீண்டும் 'மயக்கம் என்ன' வில் இணைந்து விஷுவல் விருந்து படைத்திருக்கிறார். அரவிந்த் கிருஷ்ணா இல்லாத வெற்றிடம் செல்வராகவன் திரைப்படத்தில் இல்லவே இல்லை!! ஒரு Photography சம்பந்தமான ஒரு திரைப்படத்தை எவ்வளவு அழகாக படாமாக்க வேண்டுமோ அதைவிட பலமடங்கு சிறப்பாக படமாக்கியிருக்கிறார். லைட்டிங், ஆங்கிள், கமெரா மூவ் என ராம்ஜி சாம்ராட்சியம்தான் 'மயக்கம் என்ன'.



சுட்டுக்குடுத்தாரோ, சுடாமல் குடுத்தாரோ ! அண்மைக்காலங்களில் பாடல்களில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஏமாற்றியதில்லை. மதராசப்பட்டினம், தெய்வ திருமகள் திரைப்படங்களுக்கு பின்னர் மீண்டும் பாடல்கள் அனைத்துமே அற்ப்புதமாக அமைந்துள்ளன. "நான் சொன்னதும் மழை வந்திச்சா", "ஓட ஓட" இரண்டு பாடல்களும் படமாக்கப்பட்டதும் சிறப்பாக உள்ளது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் பலம்; பல இடங்களின் மௌனத்தை ஜி.வியின் பின்னணி இசை சிறப்பாக ஈடுகட்டி இருக்கிறது, அதேநேரம் தேவையான இடங்களில் மௌனத்தையும் ஒலித்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் - தமிழ் சினிமாவின் மற்றுமொரு தவிர்க்க முடியாத சக்தி.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை, தனுஸின் நண்பனாக வரும் றிச்சாவின் Boy Friend கேரக்டர்; தனுஸ், றிச்சாவை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை உருவாக்குவது திரைக்கதைக்கு தேவை என்னினும் செயற்கையாக உள்ளது. ஒருவரை பார்த்தவுடன் or ஒருவர் கேரக்டரை புரிந்தவுடன் வரும் காதலுக்கு எதற்க்காக அந்த நண்பனை கொண்டு இருவரையும் தனிமைப்படுத்தியும், தொடுகைக்குட்படுத்தியும் செல்வா காட்சி அமைத்தார் என்று புரியவில்லை!! அந்த இடங்கள் அபத்தமாகவும், அருவருப்பாகவும் உள்ளதை மறுபதற்கில்லை. இதுதவிர ஒருசில குறைகள் ஆங்காங்கே இருந்தாலும் அவை மிகப்படுத்தப்பட வேண்டிய பாரிய தவறுகளோ லாஜிக் மீறல்களோ அல்ல.



மாறுபட்ட சினிமாவை, தரமான சினிமாவை கொடுப்பதில் செல்வராகவன் வெற்றி கண்டுள்ளார்; உங்களுக்கும் மாறுபட்ட, தரமான சினிமாவை பார்க்க விருப்பமா? 'மயக்கம் என்ன' நிச்சயம் உங்களை திருப்திப்படுத்தும். "இல்லை நான் மசாலா மட்டும்தான் பார்ப்பேன்" என்பவரா நீங்கள்! தயவுசெய்து திரையரங்கு செல்லாதீர்கள்; அங்கு சென்று படம் பார்ப்பவர்களையும் சத்தம் போட்டு குழப்பாதீர்கள்(இன்றைய அனுபவம்). இது ஏதாவதொரு உலக சினிமாவின் சாயலா! என்றெல்லாம் எனக்கு தெரியாது, அப்படி இருந்தாலும் எனக்கு கவலை இல்லை; 'எனக்கு மயக்கம்' என்ன மிகவும் பிடித்துள்ளது. செல்வாவின் முன்னைய படங்கள் உங்களுக்கு பிடிக்குமென்றால் 'மயக்கம் என்ன'வும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.......

மயக்கம் என்ன - உணர்ச்சிக் குவியல்...

Saturday, November 19, 2011

சிவகார்த்திகேயனும் மெரினாவும்.....





சிவகாத்திகேயன்; இந்த பெயரை தெரியாத சின்னத்திரை பார்வையாளர்கள் இருக்க முடியாது. இன்றைய விஜய் TV யின் One Man Army இவர்தான்; ஒரு நிகழ்ச்சியை வெற்றியடைய செய்ய சிவகாத்திகேயனின் stage presence போதும் என்பதை அறிந்துள்ளதாலோ என்னமோ விஜய் TV யின் நிர்வாக இயக்குனர்கள் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சிவகார்த்திகேயனை களமிறக்கு கின்றார்கள். சாதாரண மிமிக்கிரி போட்டியாளராக 2008 இல் விஜய் Tv யின் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் பங்குபற்ற வந்த சிவகார்த்திகேயன் அந்தப்போட்டியின் இறுதியில் முதல்ப்பரிசை வென்று விஜய் Tv பார்வையாளர்களுக்கு நக்கு பரிச்சியமானார்.

அதன் பின்னர் 'ஜோடி நம்பர் வண்' நிகழ்ச்சியில் விஜய் Tv யின் 'லொள்ளுசபா' புகழ் ஜீவாவிற்கும் இயக்குனர்/நடிகர் S.J சூரியாவிற்கும் இடையிலான கருத்து வேறுபாட்டினால் போட்டியின் இடையிலேயே விலகிய ஜீவாவிற்கு பதிலாக களமிறக்கப்பட்டார். அதில் விஜய் TV யின் மற்றொமொரு தொகுப்பாளரான ஐஸ்வர்யாவுடன் ஜோடி சேர்ந்து 3 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டாலும் பின்னர் சிறப்பாக ஆடக் கற்றுக்கொண்ட சிவகார்த்திகேயன் விஜய் Tv யின் 'ஜோடி நம்பர் வண்'னிற்கு பதிலாக இரண்டு சீசன் நடாத்தப்பட்ட Boys VS Girls நிகழ்ச்சிலும் கலந்துகொண்டு பட்டையை கிளப்பியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் டான்ஸ் நன்றாக ஆடினாரோ இல்லையோ பாலாஜியுடன் சேர்ந்து இவர் பண்ணிய ரணகளத்தை அந்த சீசனை பார்த்த யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.



அதன் பின்னர் விஜய் Tv சிவகார்த்திகேயனை முன்னிறுத்தி வழங்கிய 'அது இது எது' நிகழ்ச்சி இன்றுவரை மிகச்சிறப்பாக சென்றுகொண்டிருக்கின்றது. சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சியின் மூன்று சுற்றுக்களுமே சுவாரசியமானவை; அதிலும் சிவகார்த்திகேயனால் மூன்றாவது சுற்றில் கேட்க்கப்படும் 'மாற்றி யோசி' மிகவும் சுவாரசியமாக இருக்கும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக விஜய் Tv இனுள் தனக்கென ஒரு இடத்தை ஏற்ப்படுத்திக்கொண்ட சிவகார்த்திகேயன் 'விஜய் அவாட்'சினை கோபிநாத்துடன் இணைந்து தொகுத்து வழங்கியதன் மூலம் விஜய் tv யின் தவிர்க்க முடியாத தொகுப்பாளராக மாறினார். அதன் பின்னர் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் அவ்வப்போது தொகுப்பாளராக வந்து கலகலப்பூட்டினார். அதன் பின்னர் 'ஜோடி நம்பர் வண்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிநார்; ஒரு நடன நிகழ்ச்சியை நகைச்சுவை நிகழ்ச்சியோ என்று சொல்லுமளவிற்கு உடல் மொழியாலும், டைமிங் காமடியாலும் கிச்சு கிச்சு மூட்டினார்.

இறுதியாக நடந்த 'ஜோடி நம்பர் வண்' நிகழ்ச்சியை விட அதிகளவில் ரீச் ஆனதென்னமோ அதன் 'ப்ளு பேஸ்' தொகுப்புத்தான்; நிகழ்ச்சியின் தொடக்கம் முதல் இறுதிவரை இடம்பெற்ற இதுவரை ஒளிபரப்பப்படாத சுவாரசியமான நிகழ்வுகளில் தொகுப்பே இது. ஒரு தொலைக்காட்சியில் சாதாரண போட்டியாளராக நுழைந்து 4 ஆண்டுகளில் அந்த தொலைக்காட்சியின் முதல்த்தர தொகுப்பாளராக மாறியிருக்கின்றார் என்றால் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அபரிமிதமானது! நகைச்சுவை உணர்வு (sense of humor), உடல் மொழி (Body Language), Timing sense, Voice Modulation போன்றவைதான் சிவகார்த்திகேயனின் இந்த அசுர வளர்ச்சியின் இரகயியம். சின்னத்திரையில் தொகுப்பாளராக எத்தனையோ பேர் வந்திருந்தாலும் ஒரு சிலரர்தான் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர். 'பெப்சி' உமா, 'காமடி டைம்' அர்ச்சனா & சிட்டி பாபு, ஆனந்த கண்ணன், விஜயசாரதி, விஜய் ஆதிராஜ், 'நீயா நானா' கோபிநாத்,திவ்யதர்சினி, தேவதர்சினி என ஒரு சிலரே மக்களை அதிகம் ஈர்த்தவர்கள்; அந்த வரிசையில் இப்போது சிவகார்த்திகேயனும்........



ஆனால் சிவகார்த்திகேயனுக்கு சின்னத்திரை மட்டுமல்ல; இப்போது வெள்ளித்திரையும் செங்கம்பளம் விரித்துள்ளது. 'பசங்க' புகழ் பாண்டியராஜ் இயக்கம் 'மெரீனா' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி வெள்ளித்திரைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் சிவகார்த்திகேயன். பசங்க, வம்சம் திரைப்படங்களின் வரவேற்ப்பிற்க்கு பின்னர் பாண்டியராஜ்சும், சிவகார்த்திகேயனின் அறிமுகமும் உள்ளதால் மெரினாவிற்கு அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'களவாணி' படத்தில் நடித்த ஓவியா நடிக்கிறார்; 1988 இல் மிரா நயிர் (Mira Nair) இயக்கிய 'சலாம் மும்பை' ஹிந்தி திரைப்படத்தின் இன்ஸ்பிரேஷன்தான் மெரீனா என்று சொல்லப்படுகின்றது. இந்த திரைப்படமும் பசங்க திரைப்படத்தை போன்றே குழந்தைகள் சம்மந்தப்பட்ட திரைப்படம்தான், மேரினாவில் சிறுவர்களும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். சரியான முறையில் விளம்பரம் செய்யப்படும் பட்சத்தில் மெரீனா மிகப்பெரும் ஓப்பினிங்கை பெறும் சந்தர்ப்பம் உண்டு; மயக்கம் என்னவிர்க்கு அடுத்து நான் அதிகம் எதிர்பார்ப்பது மெரினாவைத்தான்...

மெரீனா தவிர்த்து R. ஐஸ்வர்யா தனுஸ் இயக்கத்தில் தனுஸ், சுருதிஹாசன் நடிக்கும் '3' திரைப்படத்தின் போஸ்டரிலும் தனுஷுடன் சிவகார்த்திகேயன் காணப்படுகின்றார். தனுஷுடன் குணச்சித்திர நடிகராக (Character artist) இல்லாமல் நகைச்சுவை நடிகராக (Comedy artist ) நடித்தால் சிறப்பாக இருக்கும்; இப்போதிருக்கும் தமிழ் சினிமாவின் நகைச்சுவையாளர்களின் வெற்றிடத்தை சிவகார்த்திகேயன் சரியாக பயன்படுத்திக்கொள்ளலாம். அடுத்து எழில் இயக்கம் திரைப்படமொன்றிலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகின்றது. ஹீரோவாக வெற்றிபெற்றால் மகிழ்ச்சி, ஒருவேளை அது கைகூடவில்லை என்றால் இருக்கவே இருக்கு நகைச்சுவை; அது சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்கும். சின்னத்திரையில் சாதிச்ச சிவகார்த்திகேயன் வெள்ளித்திரையிலும் சாதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.......

Thursday, November 10, 2011

நானும் சினிமாவும் பாகம் - 2





முதல் பதிவில் விஜய் பற்றி எழுதியுள்ளதால் இந்த பதிவை அஜித்தில் இருந்து ஆரம்பிக்கிறேன். நான் முன்னர் குறிப்பிட்டது போலவே நாட்டின் போர் காரணமாக 1996 க்கு பின்னர்தான் அடுத்த தலைமுறை நடிகர்களின் முகத்தையே காணும் வாய்ப்பு கிடைத்து. அப்படி அஜித்தை முதல் முதலில் பார்த்தது ஒரு ஒலியும் ஒளியும் பாடலில்த்தான். 1996 இல் பல்கலைக்கலகத்திற்கே யாழ்நகரில் முதல் முறையாக மின்சாரம் வழங்கப்பட்டது (6 ஆண்டுகளின் பின்னர்) அதுகூட மாலை 6 மணி முதல் இரவு 12 மணிவரைதான்! பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட மின்சாரம் அந்த அயலில் உள்ள வீடுகளுக்கும் கிடைத்தது. குறிப்பிட்ட பகுதியில் அண்ணா ஒருவரின் வீடு இருந்ததால் ஒவ்வொரு வெள்ளியும் இரவு தங்குவது அங்குதான்; காரணம் 8 மணிக்கெல்லாம் ஊரடங்குசட்டம், வீதியில் நடமாடமுடியாது.

இரவு 7.30 மணிக்கு ஒலியும் ஒளியும் பார்த்துவிட்டு இரவு 9.30 மணிக்கு டூடடர்சனில் ஒளிபரப்பப்படும் திரைப்படத்தினை 12 மணிவரை பார்ப்போம்; மின்சார நிறுத்தத்தால் படம் அரைகுறையில் தடைப்படும்போது வரும் ஏக்கமும், கோபமும், ஏமாற்றமும் சொல்லில் கூறமுடியாதவை. சில நேரங்களில் 10 நிமிடங்கள் அதிகமாக மின்சாரம் தொடர்ந்திருக்கும், எங்களுக்கும் இன்று மின்சாரம் தொடர்ந்து இருக்குமோ என்று ஒரு நப்பாசை !! அடுத்த கணமே மின்சாரம் தடைப்பட்டு எமக்கு மிகுந்த ஏமாற்றம் கிடைக்கும். அப்படி மின்சாரம் தடைப்படாமல் பார்த்தது இரண்டு திரைப்படங்கள்; திருமலை தென் குமரி, வேலைக்காரன்; இவை இரண்டும்தான் அன்று முழுமையாக பார்த்த இரண்டு திரைப்படங்கள்; வேலைக்காரன் முழுமையாக பார்த்து முடித்தபோது இருந்த மனநிலை சொல்லி புரிய வைக்க முடியாதது!



அப்படி அங்கு ஒருநாள் ஒளியும் ஒளியும் பார்க்கும்போது அறிமுகமாகிய நடிகர்தான் அஜித்குமார்; என்ன பாடல் என்று தெரியவில்லை, "யார் இந்த பையன்" என்ற ஒருவரின் கேள்விக்கு "அஜித் என்று ஒரு பையன் புதுசா நடிக்கிறான்" என்பதுதான் நான் அஜித் பெயரையும், அஜித்தின் உருவத்தையும் கேட்ட, பார்த்த கணம். ஆனாலும் எனக்கு எந்த விதமான ஈர்ப்பும் அப்போது ஏற்ப்படவில்லை. அதன் பின்னர் நான் பார்த்த முதல் அஜித் திரைப்படம் 'வான்மதி'; 'பூவே உனக்காக' முன்னமே பார்த்ததாலோ என்னமோ எனக்கு அஜித் மீது அப்போதும் ஈர்ப்பு வரவில்லை. தொடர்ந்து காதல்க்கோட்டை, நேசம், ஆசை என பல அஜித் படங்களை பார்த்திருந்தாலும் அஜித் அன்று எனக்கு பத்தோடு பதினொன்றாகத்தான் தெரிந்தார். மீடியா வசதிகள் எதுக்குமே இல்லாத காரணத்தால் சினிமாவின் தாக்கம் திரைப்படங்களை ரசிப்பதில் மட்டும்தான் அன்றிருந்தது; இன்றுபோல் நடிகர்களுக்காக ரசிகர்கள் நண்பர்களுடன் மோதியதில்லை.

இந்நிலையில் அஜித்தை எனக்கு பிடிக்க ஆரம்பித்த திரைப்படம் சரண் இயக்குனராக அறிமுகமாகி அதகளப்படுத்திய காதல் மன்னன்; இந்த திரைப்படம் நான் பார்க்கும்போது திரைப்படம் வெளியாகி நீண்ட நாட்கள் இருக்குமென்று நினைக்கின்றேன்; ஒரு ரூபாயில் சவால் விடுவது, சொடுக்கு போடுவது, 'மெட்டுத்தேடி தவிக்கிது ஒரு பாட்டு' பாடல் என காதல் மன்னனும்; காதல் மன்னனால் அஜித்தும் பிடித்துப்போயிற்று. அடுத்து அமர்க்களம், தீனா என அஜித் படத்திற்கு படம் என்னை அதிகமாக இம்ப்ரெஸ் செய்ய ஆரம்பித்தார். அந்த காலப்பகுதியில் வெளிவந்த அனைத்து அஜித் திரைப்படங்களையும் பார்த்திருக்கின்றேன்; அந்த நேரத்தில்த்தான் அஜித்தின் 'நான்தான் சூப்பர் ஸ்டார்' ஸ்டேட்டஸ் பத்திரிகைகளில் வெளிவந்தது; அன்றிலிருந்து அஜித்மீதிருந்த ஈர்ப்பு குறைய ஆரம்பித்தது. அடுத்த தலைமுறை நடிகர்களில் விஜய், அஜித் இருவருமே அந்த காலப்பகுதியில் எனக்கு பிடித்தமானவர்கள்தான்; ஆனால் அன்றைய அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ரிரஜினியுடன் இவ்விருவரையும் ஏட்டிக்கு போட்டியாக வைத்து பேசியதுதான் நான் விக்ரமின் தீவிர ரசிகரான மாற காரணமாக அமைந்தது.



விக்ரம் பற்றி பின்னர் பார்ப்போம்; தீனா திரைப்படத்தை தொடர்ந்து வெளிவந்த அஜித்தின் திரைப்படங்களில் 'வில்லன்' தவிர்த்து ஆறு திரைப்படங்கள் தோல்வியடைந்தன! இந்த நிலையில் விஜயின் திருமலை, கில்லி வெற்றி விஜய் ரசிகர்களை அஜித்தை கிண்டல் செய்யும் அளவிற்கு வளர்ந்திருந்தன. கில்லி வெற்றியின் பின்னர் கூட இருந்த சில விஜய் ரசிகர்கள் பண்ணிய ரகளைதான் அடுத்து வெளிவந்த அஜித்தின் 'அட்டகாசம்' திரைப்படத்தை மிகுந்த ஆவலுடன் பார்க்க தூண்டியது; அதுவரை அஜித் மீதிருந்த வெறுப்பும் குறைந்திருந்தது, கூடவே அஜித்தும் மிகவும் மாறியிருந்தார். 'அட்டகாசம்' திரைப்படம் பார்த்த பின்னர்தான் மீண்டும் அஜித்தை பிடிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து 'ஜீ' திரைப்படத்திற்கு முதல்க்காட்சி சென்றாலும் லிங்குசாமி ஏமாற்றியிருந்தார்!

அடுத்து வெளிவந்த பரமசிவன் திரைப்படம்தான் அஜித்மீது மிகப்பெரும் ஈர்ப்பை கொண்டு வந்தது, அது மரியாதை கலந்த ஈர்ப்பு. யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாதளவிற்கு தன் உடல் எடையை குறைத்திருந்தார். யாழ்ப்பாணத்தில் குண்டு எறியும் கலாச்சாரம் அதிகமாக இருந்த காரணத்தால் திரையரங்கிற்கு செல்வதில்லை என்றிருந்தோம்; ஆனால் சண் டிவியில் புதிய பாடல்களை ஒளிபரப்பிய அடுத்த 15 நிமிடங்களுக்குள் நாம் திரையரங்கில் நின்றோம்; காரணம் அஜித்தின் தோற்றம்!! வாசு படத்தை சொதப்பினாலும் அஜித் என்னை ஏமாற்றவில்லை! படம் சரியாக போகாவிட்டாலும் கூடவந்த ஆதி, சரவணா திரைப்படங்களைவிட அதிகம் வசூலித்தது. அதற்க்கு அடுத்து வெளிவந்த திருப்பதி திரைப்படத்தை முதல்நாள் முதல் காட்சியில் பார்த்தேன்; ரஜினியை வைத்து பேரரசு படமெடுத்தாலும் திரையரங்கில் போய் பார்ப்பதில்லை என்பது அன்று எடுத்த முடிவுதான்:-)



அடுத்து வரலாறு திரைப்படம் நாட்டு பிரச்சனை காரணமாக யாழ்ப்பாணத்தில் வெளியாகவில்லை; அதன் பின்னர் இன்றுவரை எந்த அஜித் திரைப்படத்தையும் திரையரங்கில் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. நேரம், பணம், கூடவரும் நண்பர்கள் என ஈதோ ஒரு காரணத்திற்க்காக ஒவ்வொரு தடவையும் அஜித் படங்களை திரையரங்கில் பார்ப்பதற்கு முட்டுக்கட்டை விழுந்தது. இறுதியாக மங்காத்தா பார்ப்பதற்கு குறைந்தது 4 தடவைகள் திட்டமிட்டிருப்போம், ஆனால் அது கடைசிவரை கைகூடவில்லை; இறுதியில் வழமைபோல DVD தான்!!! இறுதி ஐந்து ஆண்டுகளில் ரஜினி, விக்ரம் திரைப்படங்கள் தவிர்த்து திரையரங்கில் நான் பார்த்த திரைப்படங்கள் என்றால் 5 திரைப்படங்கள்தான்; மொழி, தீபாவளி, நான்கடவுள், பையா, நந்தலாலா என்பவைதான் அந்த ஐந்தும்!!!!

மங்காத்தா எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இப்போது அஜித்தையும் அதிகமாகவே பிடிக்கின்றது; காரணம் ரஜினியா! இல்லை எமது சமூக தளங்களில் உள்ள விஜய் ரசிகர்களா! அல்லது அஜித்தை புறக்கணிக்கும் ஊடகங்களா! அல்லது அஜித்தின் அண்மைக்கால வெளிப்படையான நடவடிக்கைகளா! காரணம் இவை அனைத்தும் சேர்ந்ததுதான் என்றாலும்; அஜித் இப்போது எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர்.

சாவியைபிரித்தல் (Dis Key அதாவது டிஸ்கி )

அடுத்த பதிவுகளில் விக்ரம், சூர்யா, தனுஸ், சிம்பு மற்றும் ஹீரோயின்ஸ் பற்றியும் பார்க்கலாம் :-) பலருக்கும் இந்த பதிவு போரடிக்கும் என்பது புரிகிறது; காரணம் இது எனது சுய சொறிதல், இருந்தும் ஏன் எழுதுகின்றேன் என்றால் பின்னொருநாளில் குறைந்தபட்சம் எனக்காவது படிப்பதற்கு சுயாரசியமாக இருக்கும் என்பதால்த்தான், "அட நாதாரி இதை டயரியில எழுதவேண்டியதுதானே" என்கிற உங்க மைன்ட் வாய்ஸ் கேக்கிது, ஆனா எனக்கு அந்த கெட்ட பழக்கமெல்லாம் இல்லை :-)

முதல் பதிவு -> நானும் சினிமாவும் - பாகம் 1

Tuesday, October 25, 2011

யாழ் திரையரங்குகளும் திரைப்படங்களும்





1990க்கு முன்னர் யாழ்நகரில் திரையரங்குகளில் சினிமா பார்க்கும் மக்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம்; இத்தனைக்கும் அன்றைய தேதியில் தமிழகத்தில் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகி குறைந்தது ஒரு மாதத்தின் பின்புதான் இங்கு திரையிடப்படும் (இந்தியாவிலும் இலங்கையிலும் ஒரே நாளில் திரையிடப்பட்ட முதல் திரைப்படம் பாபா) ஆனாலும் அந்நாட்களில் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்ட பல எம்.ஜி.ஆர், சிவாஜி திரைப்படங்கள் 100 நாட்களை கடந்து திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகுந்த லாபத்தை அள்ளிக்கொட்டியது வரலாறு. ராஜா, வின்சர், ராணி, மனோகரா, ரீகல், நாகம்ஸ், சாந்தி, லிடோ, வெலிங்கடன், ஸ்ரீதர், லக்ஸ்மி என ஏகப்பட்ட திரையரங்குகள்; ஆனாலும் ஒவ்வொன்றும் லாபகரமாகவே அன்று இயங்கின.

ஆனால் இன்று முக்கியமான திரையரங்குகள் என்று பார்த்தால் ராஜா, மனோகரா, செல்லா, நாகம்ஸ் என நான்கு திரையரங்குகள்தான்; அதிலும் குறிப்பிட்டு சொல்வதென்றால் ராஜா, மனோகரா என இரண்டு திரையரங்குதான் பெரிய படங்களை திரையிடுபவை. தமிழகத்தில் திரையிடப்படும் நாளிலே இங்கும் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன, இன்னும் சொல்லப்போனால் முதல்நாள் இரவுக்காட்சியே இங்கு திரையிடப்படுகின்றது. அப்படி இருந்தும் 30 நாட்கள் ஒரு திரைப்படத்தை ஓட்டுவதற்கு படாதபாடு படவேண்டி இருக்கின்றது; வரும் வசூலில் படப்பெட்டி வாங்கிய தொகை, திரையரங்க செலவுகள் போனால் கையில் எதுவுமே மிஞ்சுவதில்லை என்கின்றார்கள் யாழ்ப்பாண திரையரங்க உரிமையாளர்கள். இதனால் இப்போதெல்லாம் யாழ்நகர் வரும் புதுப்படங்கள் குறைவடைய தொடங்கியுள்ளன.



"விநியோகிஸ்தர்கள் லாபத்தை அள்ளிக்கொண்டுபோக கஷ்டப்பட்டு திரையரங்கை நடாத்தும் நாம் ஒன்றுமில்லாமல் வேடிக்கை பார்ப்பதா" என்பதே யாழ் நகரின் முக்கிய திரையரங்க உரிமையாளர் ஒருவரின் ஆதங்கம். யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை திரைப்படங்கள் மூன்று விதமாக திரையிடப்படுகின்றன.

1 ) படப்பெட்டிகளை குறிப்பிட்ட விலைக்கு வாங்குவது

2 ) விகிதாசார அடிப்படையில் வசூலை பங்கிடுவது

3 ) திரையரங்கை விநியோகிஸ்தருக்கு வாடகைக்கு கொடுத்தல்

இவற்றில் இதுவரை யாழ்நகரில் அதிகம் திரையிடப்படுவது முதல் முறையில்த்தான்; எந்த திரைப்படமானாலும் படப்பெட்டியை குறிப்பிட்ட தொகைக்கு வாங்கி அதனை திரையிடுவதுதான் இதுவரை யாழ்ப்பாணத்தில் நடைமுறையில் இருந்து வந்ததுள்ளது. இந்த முறையில் திரைப்படங்களை வாங்கி வெளியிடும்போது யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை இதுவரை வெளியான ரஜினி, விஜய் படங்கள் பெரும்பாலும் லாபத்தை அள்ளிக் கொடுத்திருக்கின்றன; தமிழகத்தில் அட்டர் பிளாப்பாகும் விஜய் படங்கள் யாழ்நகரில் சக்கை போடு போட்டிருக்கின்றன! ஏனைய நடிகர்களின் திரைப்படங்கள் சிறப்பாக இருந்தாலன்றி திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டம்தான்.



சுறா திரைப்படம் ராஜா திரையரங்கிற்கு நல்ல வசூலை கொடுத்துள்ளது. சச்சின், திருப்பாச்சி, சிவகாசி, வேட்டைக்காரன் திரைப்படங்கள் மனோகராவிலும்; கில்லி, மதுர, சுறா, காவலன் திரைப்படங்கள் ராஜாவிலும் போட்ட பணத்திற்கு மேலாக லாபத்தை அள்ளிக்கொடியிருக்கின்றன. மனோகராவில் சிவாஜிக்கு (51 லட்சம்) அடுத்து அதிக வசூல் வேட்டைக்காரன்(45 லட்சம்); ராஜாவில் எந்திரனுக்கு(86 லட்சம்) அடுத்த அதிக வசூல் காவலன் (62 லட்சம்) (ராஜாவில் டிக்கட் காசு மனோகராவைவிட 2 மடங்கு அதிகம்).

இதை ஏன் குறிப்பிட்டுள்ளேன் என்றால்; யாழ் நகரின் வசூல் இளவரசனாக விஜய் இருந்தும்; யாழ் நகரின் முன்னணி திரையரங்குகளான ராஜா, மனோகராவிற்கு இதுவரை விஜய் படங்கள் லாபத்தை அள்ளிக்கொடுத்திருந்தும் விஜயின் வேலாயுதத்தை மனோகரா, ராஜா என இரண்டு திரையரங்குகளும் எதற்க்காக கைவிட்டன? என்பதை கூறத்தான். வாகன பாக்கிங், இடவசதி போன்றவற்றை வைத்துப்பார்த்தால் மனோகராதான் யாழ் நகரின் சிறந்த திரையரங்கு; எந்த திரைப்படமாயினும் இங்கு திரையிட்டால் சற்றி அதிகமான பார்வையாளர்களை பெறமுடியும் (குறைந்த டிக்கட் கட்டணமும் இதற்க்கு ஒரு காரணம்) என்னதான் திரையரங்கு வசதியாக இருந்தாலும் இங்கு சவுண்ட் சிஸ்டம் மிகவும் மோசம். ஆனால் ராஜா திரையங்கில் சவுண்ட் சிஸ்டம் மனோகராவை விட சிறப்பு; இங்கு டிக்கட் கட்டணம் சற்று அதிகமாகையால் பார்வையாளர்கள் சற்று குறைந்தாலும் மனோகராவிற்கு குறைவில்லாத வசூல் இங்கு கிடைக்கும்.



மனோகரா திரையரங்கின் சவுண்ட் சிஸ்டத்தை சீரமைத்து புதிய நாற்காலிகள் போட்டு திரையரங்கை வளப்படுத்த மேலதிகமாக ஒரு கோடி ரூபா போதும் என்றும்; அதனை போட்டு திரையரங்கை சீரமைப்பதில் தனக்கு எந்த சிக்கலும் இல்லை என்றும் கூறும் அதன் உரிமையாளர்; முதலிட்ட ஒரு கோடிக்கு லாபம் கிடைக்குமா என்பதிலுள்ள தயக்கம்தான் தன்னை முதலிடாமல் வைத்துள்ளதாகவும் கூறுகின்றார். சவுண்ட் சிஸ்டம் சீரமைக்கப்பட்டு, தரமான இருக்கைகள் இடப்பட்டு, குளிரூட்டப்பட்டால் இலங்கையின் முதல்த்தர திரையரங்கு மனோகராதான். அது தெரிந்திருந்தும், கையில் பணமிருந்தும் அதன் உரிமையாளருக்கு ஏன் இந்த தயக்கம்? காரணம் திரையரங்கிற்கு வரும் குறைந்தளவு பார்வையாளர்களும், விநியோகிஸ்தர்களின் பேராசையும்தான்.

1990க்கு முன்னதாக நீண்ட நாள் கழித்து வெளிவந்த திரைப்படம் 100 நாள் ஓடியதற்கும்; இன்றைய திரைப்படங்கள் 30 நாள் ஓடவே கஷ்டப்படுவதர்க்கும் காரணம் திரைப்படம் வெளியான மறுநாளே அருகிலுள்ள கடைகளில் கிடைக்கும் திருட்டு vcd யும்; வீட்டுக்கு வீடு உள்ள DVD Player, CD Player, கம்ப்யூட்டர் போன்ற இலத்திரனியல் சாதனங்களும்தான். அன்று 30 வீட்டுக்கு ஒரு வீட்டில் இருந்த இந்த சாதனங்கள் இன்று அதிகமாக ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கின்றன. இதையும் தாண்டி மக்கள் திரையரங்கிற்கு வந்து 30 நாட்கள் ஒரு திரைப்படம் ஓடுவதென்பது பெரிய விடயமே. இந்த 30 நாட்களும் திரைப்படம் ஓடினாலே யாழ்நகரை பொறுத்தவரை நல்ல வசூல் கிடைக்கும்; ஆனால் இதில் ரஜினி, விஜய் படம் தவிர வேறெந்த படத்திற்கும் மினிமம் கராண்டி இல்லை.


90 களுக்கு முன்னர் யாழ்நகரின் மிகப் பிரபலமான வின்சர் திரையரங்கு இன்று களஞ்சியமாக உள்ளது


தமிழகத்தில் சக்கை போடு போட்ட அஜித், சூர்யா, விக்ரம், தனுஸ் படங்கள் இரண்டாவது வாரமே இங்கு ஈ கலைக்கும் நிலையில்த்தான் உள்ளன. முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கே இந்த நிலையென்றால் மற்றைய திரைப்படங்களின் நிலைமை??? இதனால்த்தான் எல்லோருமே கொண்டாடிய மிகச்சிறந்த திரைப்படங்கள் எவையும் (பெரிய நாயகர்கள் இல்லாத) யாழ் நகரில் வெளியாகவில்லை; எதிர்வரும் காலங்களில் பெரிய நடிகர்களின் திரைப்படங்களுக்கும் இந்த நிலை ஏற்ப்படாலாம். திருட்டு vcd களின் தாக்கம் திரையரங்கிற்கு பார்வையாளர்கள் வராதமைக்கு காரணம் என்பது எப்படி உண்மையோ அதேபோல திரையரங்கத்தினரின் விளம்பரங்கள் போதாமையும் மக்கள் திரையரங்கிற்கு வராமைக்கு முக்கியகாரணம்; விளம்பரத்தின் இன்றியமையாமையை இன்னமும் திரையரங்க உரிமையாளர்கள் யாரும் சரியாக உணராதது கவலையான விடயம்.

இப்போது மேட்டருக்கு வருவோம்; ஏன் வேலாயுதத்தை மனோகராவோ, ராஜாவோ வாங்கவில்லை? இம்முறை வேலாயுதத்தை விநியோகிக்க வந்தவர்கள் மிகவும் அதிக விலையை கூறியுள்ளார்கள்; எப்படி ஓடினாலும் கிட்டாத தொகை அது. அது விநியோகிஸ்தருக்கும் நன்கு தெரியும். அது தெரிந்தும் அவர்கள் அந்த ரேட்டை கூறியதற்கு காரணம் அவர்களே வேலாயுதத்தை நேரடியாக திரையிடுவதுதான்; திரையரங்கை வாடகைக்கு அமர்த்தி தாங்களே வசூலை அள்ளுவது அவர்களின் நோக்கம். விஜய் படத்திற்கு இங்குள்ள மாக்கெட் அவர்களுக்கே தெரிந்திருக்கும்போது இங்கு பழம் தின்று கொட்டை போட்ட ராஜா, மனோகர உரிமையாளர்களுக்கு தெரியாதா? அவர்கள் மறுக்கவே ஒரு மூத்திர சந்திலுள்ள செல்லா (நாதன்ஸ்) திரையரங்கை வாடகைக்கு அமர்த்தி விநியோகிஸ்தர்களே வேலாயுதத்தை யாழ்நகரில் வெளியிடுகின்றார்கள்.



இப்படி யாப்பாணத்தில் வெளியிடப்படும் முதல் விஜயின் திரைப்படம் இதுதான். போதிய இடவசதி, வாகன பாக்கிங், சவுண்ட், விஷுவல் போன்றவற்றில் சிறப்பான தன்மை எதையும் கொண்டிராத செல்லா திரையரங்கால்; ராஜா அல்லது மனோகரா கொடுக்குமளவிற்கு வசூலை நிச்சயம் கொடுக்க முடியாது. ஆனாலும் விநியோகிஸ்தருக்கு கொள்ளை லாபம் உறுதி; அதேநேரம் இதுநாள்வரை ஈ கலைத்த செல்லா திரையரங்கிற்கும் குறிப்பிட்ட தொகை வாடகையாக கிடைக்க உள்ளது. மனோகராவும், ராஜாவும் அனைத்து பெரிய படங்களையும் வாங்கினால் மற்றவர்கள் என்ன செய்வது!! என செல்லா திரையங்கின் சார்பில் வாதிட்டாலும்; தமிழர்களின் 'ஒற்றுமையை' பயன்படுத்தி விநியோகிஸ்தர்கள் நல்ல காசு பார்க்கப் போகின்றார்கள் என்பது மட்டும் உறுதி.

செல்லா திரையரங்கு ராஜா, மனோகராவோடு போட்டி போடுவதென்றால் அதிக தொகை கொடுத்து போட்டிக்கு படத்தை வாங்கியிருக்கலாம்; ஆனால் இப்போது திரையரங்கை வாடகைக்கு கொடுத்திருப்பது விநியோகிஸ்தர்கள் எதிர்காலத்தில் இதே பாணியில் யாழ்நகரில் கொள்ளையடிக்க வழிசெய்ததை போலாகிடும். மனோகரா வேலாயுதம் திரைப்பத்தை திரையிட்டால் வேலாயுதம் திரைப்படத்தின் முதல் இரண்டு நாள் காட்சிகளில் குறிப்பிட்ட தொகை டிக்கட்டை தமது தொலைபேசி நிறுவனத்தின் விளம்பரம் மூலம் விநியோகிக்க ஹச் நிறுவனம் மனோகராவை அணுகியது; பின்னர் செல்லா திரையரங்கில் வேலாயுதம் வெளியாவதால் ஹச் நிறுவனம் வேலாயுதம் திரைப்படத்தை கைவிட்டுவிட்டு இப்போது ஏழாம் அறிவினை வெளியிடும் ராஜா திரையரங்கை அணுகியுள்ளார்கள்.



ரா-ஒன் திரைப்படத்தை மனோகரா வெளியிட தயாராக இருந்தாலும், விநியோகிஸ்தர்கள் சொல்லும் தொகை மலைக்க வைக்கிறது; 20 லட்சம் கேட்கின்றார்கள்! ஒரு முழுமையான ரஜினி படம் ஒன்றை திரையிடும்போது கொடுக்கும் தொகையின் பாதி இது. இந்த தோகையை கொடுத்து ஒரு டப்பிங் படத்தை முதல் முறையாக யாழ்நகரில் வெளியிட்டு விஷப்பரீட்சை மேற்கொள்ள மனோகரா தயாரில்லை. விகிதாசாரப்படி விநியோகம் செய்ய வினியோகிஸ்தர் தயாராக உள்ளபோதும் 70:30 விகிதத்தில் கேட்ப்பதால் திரையரங்கத்திற்கு கட்டுப்படியாகாது என்று கூறுகின்றார்கள். ஊழியர் சம்பளம், மின்சாரம், பொருட்சேதம் என செலவை பார்க்கும்போது குறைந்தது 55:45 தந்தால்தான் ஓரளவேனும் ஓகே என்கின்றார்கள். இப்போது ரா- ஒன்ணிற்கு பேரம் நடக்கின்றது; சுமூகமாக முடிந்தால் மனோகராவில் தீபாவளி அன்று ரிலீசாகும் சாத்தியம் உண்டு, இல்லையேல் யாழ் நகரில் ரா-ஒன் இல்லை.

Wednesday, September 28, 2011

லசித் மலிங்க என்னும் நாகாஸ்திரம்





மகாபாரதக் கதையில் கர்ணன் கையில் இருந்த நாகாஸ்திரம் ஒரு தடவைதான் கர்ணனுக்கு பயன்பட்டது. ஆனால் இன்று மலிங்க இருக்கும் அணியின் தலைவருக்கு மலிங்க என்னும் நாகாஸ்திரம் தேவைக்கேற்ப பயன்படுத்த உதவுகின்றது என்றால் அது மிகையான வார்த்தை இல்லை. எனக்கு தெரிந்து ஆரம்பகால ஷொஹைப் அக்தருக்கு பின்னர் ரசிகர்கள் காணும்போதெல்லாம் ஆர்ப்பரிக்கும் ஒரே பதுவீச்சாளர் மலிங்கதான். மலிங்க Run-up இல் பந்துவீச தயாராக இருக்கும்போது ஏற்ப்படுத்தப்படும் ரசிகர்களின் ஆரவாரம்கூட ஆரம்பகால ஷொஹைப் அக்தரை ஞாபகப்படுத்தும். என்னைக் கேட்டால் அக்தரின் வேஷன்-2 தான் மலிங்க என்பேன்.

அக்தர் அளவிற்கு வேகம் இல்லாவிட்டாலும்; விவேகத்தில் அக்தருக்கு மலிங்க எந்த விதத்திலும் குறைந்தவரில்லை. வக்கார்,வசீம்,அக்தர் வரிசையில் நான்காவது 'ஜோக்கர்' மன்னன் மலிங்கதான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காதென்று நம்புகின்றேன். புதிய பந்தில் (New Ball) ஜோக்கர்களை வீசுவது சாதாரண விடயமல்ல; ஒரு சில பந்து வீச்சாளர்களால் ஆரம்ப ஓவர்களிலும் சிறப்பாக யோக்கர் வீச முடியுமாயினும், மலிங்க அளவிற்கு ஆரம்ப ஓவர்களில் யாராலும் ஜோக்கர்களை நேர்த்தியாக வீச முடியாது (இங்கிலாந்தின் 'டரன் கவ்' கூட இதில் கில்லாடி)



ஒருநாள் போட்டிகளின் இறுதி பத்து ஓவர்களும், T/20 போட்டிகளின் இறுதி நான்கு ஓவர்களும் பந்து வீசுவதற்கு இன்றைய தேதியில் சிறந்த தெரிவாக மலிங்கவைவிட வேறு யாராகவும் இருக்க முடியாது. Full A Length Delivery (Blochold Arias), Yorker, Low Full Toss, Slow Delivery, Bouncer, Slow Ball Bouncer என பத்துவீச்சின் அத்தனை உக்திகளையும் பயன்படுத்தி இறுதி ஓவர்களில் மலிங்க ஆடும் கதகளியில் தப்பித்து ஓட்டங்களை குவிப்பதென்பது எதிரணியினருக்கு சாதாரண விடயமல்ல. பிரபலமான தொழில்சார் துடுப்பாட்ட வீரர்களே இறுதிநேரத்தில் மலிங்கவிற்கு திணறும்போது; பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் நிலை எப்படி இருக்கும்? அதிலும் பின்வரிசை 'இடதுகை' துடுப்பாட்ட வீரர்களின் நிலை ரொம்பவும் பரிதாபகரமாக இருக்கும்.

மலிங்காவின் சக வீரர்களும், இன்றைய சர்வதேச கிரிக்கட்டின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களும், மலிங்கவிற்கு அணித்தலைவர்களாக இருந்தவர்களுமான மஹேல ஜெயவர்த்தன, குமார் சங்ககார போன்றவர்களே மலிங்காவின் ஜோக்கருக்கு பதிலளிக்க முடியாதபோது; பாவம் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களால் என்னதான் செய்யமுடியும்? இறுதி நேரங்களில் மட்டுமல்ல, ஆரம்ப ஓவர்களிலும் மலிங்காவின் சிறந்த பந்துவீச்சு பல தடவை அணியின் வெற்றிக்கு வழிசமைத்துள்ளது. ஆனாலும் ஆரம்ப ஓவர்களிலும் பார்க்க இறுதி ஓவர்களில்த்தான் மலிங்க ஸ்பெஷலிஸ்ட்.



எப்போதுமே பந்துவீச்சில் கலக்கிவரும் மலிங்க கடந்த 2 சாம்பியன் லீக் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தது அவர் சார்ந்த மும்பை அணிக்கு அவ்விரு போட்டியையும் வெற்றியாக மாற்றியது. இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் வைத்து 50 ஓட்டங்களை பெற்று இலங்கைக்காக ஒரு போட்டியையும் மலிங்க வென்று கொடுத்துள்ளார். இதில் குறிப்பட்டு சொல்லவேண்டிய முக்கியவிடயம் என்னவெனின் சென்னையுடனான போட்டியில் மலிங்காவின் துடுப்பாட்டத்தை 'மாஸ்டர் பாட்ஸ்மன்' சச்சின் மிகவும் விரும்பி ரசித்ததுதான். இதற்கு முன்னர் வேறு எந்த வீரரது துடுப்பாட்டத்தையும் சச்சின் அந்தளவிற்கு ரசித்து நான் பார்த்ததில்லை; சச்சினையே இம்ப்ரஸ் செய்த மலிங்கவிற்கு சராசரி ரசிகர்களை இம்ப்ரெஸ் செய்வது கடினமா என்ன?

அப்படி மலிங்கவினால் இம்ப்ரெஸ் ஆனவர்களில் நானும் ஒருவன், ஆனால் இப்போதல்ல; மலிங்காவின் முதல்ப் போட்டியிலிருந்தே!!! 2004 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரத்தில் அறிமுக டெஸ்ட் போட்டியில் 6 விக்கட்டுகளை வீழ்த்தி அன்று மலிங்க இலங்கை ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார். வழமைக்கு மாறான ஆக்ஷன், இலங்கையில் வேறெந்த பந்துவீச்சாளருக்குமில்லாத பந்து வீச்சு வேகமென மலிங்க புதிதாக தெரிந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் மலிங்கவால் சொல்லிக்கொள்ளும்படியாக பிரகாசிக்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் மலிங்கவை அன்றைய இலங்கையின் அணித்தலைவர் மார்வன் அத்தப்பத்து சரியாக பயன்படுத்தவில்லை என்றே சொல்லலாம். அத்தப்பத்து பர்வீஸ் மஹரூபை நம்பிய அளவிற்கு மலிங்கவை நம்பவில்லை என்பதே உண்மை.



மார்வனுக்கு பின்னர் மஹேல தலைமை ஏற்ற சிறிது காலத்தில் இங்கிலாந்தில் இடம்பெற்ற ஒருநாள் போட்டித்தொடரில் மீண்டும் கலக்க ஆரம்பித்த மலிங்க அடுத்து இடம்பெற்ற நியூசிலாந்து தொடரின் டெஸ்ட் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை செய்திருந்தார். ஆனாலும் அடுத்து சில மாதங்களில் இடம்பெற்ற 2007 உலகக்கிண்ணப் போட்டிகள்தான் மலிங்கவை மிகப் பிரபலமாக்கியது. தென்னாபிரிக்காவிற் கெதிராக மலிங்க தொடர்ச்சியாக வீழ்த்திய 4 விக்கட்டுகள் (Double Hat-Trick) மலிங்கவை மிகவும் பிரபலாமாக்கிற்று; ஆனாலும் மலிங்காவின் புகழ் உச்சத்தை அடைந்தது என்னமோ IPL போட்டிகளால்த்தான் என்பதை மறுக்க இயலாது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சினுக்கு அடுத்து அதிக ரசிகர்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பையும் பெற்ற லசித் மலிங்க; சொந்த நாட்டு அணிக்காக டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வை அறிவித்தபோது பலத்த சர்ச்சையும், மாற்றுக் கருத்தும் எழுந்தன. சொந்த நாட்டுக்காக ஆடுவதிலும் பார்க்க பணத்திற்கு மலிங்க முன்னுரிமை கொடுத்துள்ளதாக இலங்கையின் தீவிர விசுவாசிகளும், மலிங்கவை பிடிக்காமல் கடுப்பில் இருந்தவர்களும் மலிங்கவிற் கெதிராக குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினர்.



அந்த நேரத்தில் இலங்கையின் சமகால தூண்களும், மலிங்காவின் அணித்தலைவர்களாக இருந்தவர்க்களுமான மஹேல ஜெயவர்த்தனாவும் குமார் சங்கக்காரவும் மலிங்கவிற்கு ஆதரவாக தம் கருத்துக்களை முன்வைத்தனர். டெஸ்ட் போட்டிகளில் மலிங்க ஆடுவதால் ஏற்ப்படும் உபாதை மலிங்கவை பல மாதங்களுக்கு கிரிக்கட்டில் இருந்து தள்ளி வைப்பதாகவும்; இதற்கு டெஸ்ட் கிரிக்கட்டின் ஓய்வு சரியான முடிவே என்பதும் அவர்களது கூற்று.

மலிங்க டெஸ்ட் போட்டிகளின்போது ஏற்ப்பட்ட காயம் காரணமாக பல தடவைகள் மாதக்கணக்கில் கிரிக்கட் விளையாடாமல் இருந்தது என்னமோ உண்மைதான்; ஆனால் IPL போட்டியென்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் இதே காயத்தை காரணம் காட்டி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பாரா என்பது மிகப்பெரும் சந்தேகம்தான். உண்மையை சொல்வதென்றால் IPL என்னும் பணம் கொட்டும் பூதத்திடம் செல்வதற்கு மலிங்க தன் உபாதையை நன்றாக பயன்படுத்தி இருந்தார். நாட்கணக்கில் வெய்யிலில் நின்று குறைந்த சம்பளத்திற்கு உடல் உபாதையை வாங்குவதற்கு; வெறும் நான்கு ஓவர்கள் பந்துவீசி கோடிக்கணக்கில் பணத்தை அள்ளுவதற்கு யாருக்குத்தான் கசக்கும்!!!!



இலங்கை ரசிகர்கள் மற்றும் கிரிக்கட் ஆர்வலர்கள் பக்கம் நின்று பார்த்தால் மலிங்க செய்தது மிகப்பெரும் தவறுபோல் தோன்றினாலும் மலிங்கவை பொறுத்தவரை அது சரியான முடிவே. மலிங்க பணத்திற்காக இந்த முடிவை எடுத்துக் கொண்டதாகவே வைத்துக்கொண்டாலும்; டெஸ்ட் போட்டிகளின் உபாதை காரணமாக மலிங்க மாதக்கணக்கில் ஆடாதபோது இலங்கைக்காக பல ஒருநாள், T/20 போட்டிகளிலும் விளையாட முடியாமல் போனது; அந்தக்குறை இப்போது இல்லை. மலிங்க டெஸ்ட் கிரிக்கட்டில் இல்லாத போதும்; ஒருநாள், T/20 போட்டிகளில் தன்னாலான முழுப் பங்களிப்பையும் தன் நாட்டிற்காக கொடுக்கிறார்; சமீபகாலத்து இலங்கையின் ஒருநாள், T/20 வெற்றிகளை பார்த்தால் இதை புரிந்து கொள்ளலாம். அதே சமயம் மலிங்க இல்லாத குறை சமீபத்தைய டெஸ்ட் போட்டி முடிவுகளில் நன்கு புலப்படுகின்றதையும் மறுக்க முடியாது.

மலிங்கவின் பந்துவீச்சு எப்படி சிறப்பானதோ அதைவிட ஒருபடி அதிகம் சிறப்பானது மைதானத்தில் அவரது நடத்தை. இதுவரை எந்த துடுப்பாட்ட வீரருடனும் மலிங்க முறைத்தோ, தர்க்கம் பண்ணியோ பார்த்ததில்லை; ஒரு விக்கட்டை வீழ்த்திய பின்னர் குறிப்பிட்ட துடுப்பாட்ட வீரரை முகம் பார்த்து கேலிபண்ணி மலிங்க தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதில்லை; தன் பந்திற்கு ஆறு, நான்கு என துடுப்பாட்ட வீரர்கள் விளாசியபோதுகூட மலிங்க புன்னகையைத்தான் உதிர்ப்பவர்; எந்த அணிக்காக ஆடியபோதும் தன் அணித்தலைவருடனோ, சக வீரர்களுடனோ இதுவரை எந்த பிணக்கிலும் மலிங்க ஈடுபட்டதில்லை; எந்தப்பொழுதிலும் நடுவருடன் அவரது தீர்ப்பை எதிர்த்து மலிங்க விவாதித்ததில்லை; இப்படியான உயரிய பண்புகளுடன் எத்தனை வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்!!!



ஆனால் இதே லசித் மலிங்காவை 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நேர்முக வர்ணனையில் கேவலப்படுத்திய பெருந்தகை ஒருவர் இருக்கிறார்; அவர்தான் அர்ஜுன ரணதுங்க. மலிங்கவின் தலைமுடியையும், அவரது இமையில் குத்தப்பட்ட தோட்டினையும் சுட்டிக்காட்டிய அர்ஜுனா மலிங்கவை ஒரு ஒழுக்கமில்லாதவர் என்று கூறியிருந்தார். ஒரு பாடசாலைக்கு சிறப்பு விருந்தினராக மகேலா, சங்கா, முரளி, வாஸ் இப்படியானவர்களை கூட்டிச்செல்லலாம்; மலிங்காவை கூட்டிச்செல்ல முடியுமா? என்று அன்று அர்ஜுனா கேள்வி எழுப்பினார். ஒரு உயரிய பண்புள்ள ஒரு கிரிக்கட் வீரரை அவரது புறத்தோற்றத்தில் வைத்து எடைபோட்டமை அர்ஜுனா போன்ற மிச்சிறந்த வீரருக்கு அழகாக இல்லை.

மலிங்காவின் புறத்தோற்றம் அவரது மனதுக்கு பிடித்தமானது, ஒருவரது புறத்தோற்றம்தான் அவரது ஒழுக்கத்தை தீர்மானிக்கின்றது என்கின்ற அர்ஜுனாவின் அன்றைய கூற்று அபத்தமான ஒன்று. எந்த மாணவனும் மலிங்காவின் புறத்தோற்றத்தில் இம்ப்ரெஸ் ஆகப்போவதில்லை, அப்படி ஆனாலும் அதிலென்ன தவறு? தலை முடியை வளர்த்து, கலர் அடிப்பது ஒழுக்கம் கெட்ட செயலா? அதிகமான சிறுவர்கள் இன்று மலிங்கவை முன்னுதாரணமாக கொண்டு பந்துவீசவே எத்தனிக்கிறார்கள், தலைமுடியை வளர்ப்பதில் அல்ல என்கின்ற கூற்றில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை; சிறுவர்கள் விளயாடும்போதுகூட போல்ட் முறையில் விக்கட்டை வீழ்த்தினால் 'மலிங்க ஸ்டையில்' என்றுதான் சொல்கிறார்கள். மலிங்காவின் தலைமுடியைவிட மிகமிக அதிகமாக இம்ப்ரெஸ் செய்வது அவரது 'ஜோக்கர்'கள்தான்.



உடல்நிலை ஒத்துளைக்குவரை, உடல் உபாதைகள் தொந்தரவின்றி தான் சார்ந்த அணியினருக்கு மலிங்கவும், மலிங்கவின் ஜோக்கர்களும் எப்போதும் விக்கட்டுகளை அள்ளிக்கொடுக்கும் என்கின்ற நம்பிக்கையில் சமகால கிரிக்கட்டின் எனக்கு பிடித்த ஒரே வேகப்பந்து வீச்சாளருக்கு இன்னுமின்னும் பல விக்கட்டுகளை தகர்க்க அவரது லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக நானுன் வாழ்த்துக் கூறுகின்றேன்.............

Monday, July 18, 2011

நானும் சினிமாவும் - பாகம் 1





நிறைய விசயம் எழுதணுமின்னு தோணுது, எந்த வகையில் வகைப்படுத்தி எழுதுவதென்று தெரியல!! மனதில் உள்ளவற்றை அப்படியே எழுதுவதால் பதிவில் தொடர்ச்சி இருக்காது. குறிப்பிட்ட ஒவ்வொரு விடயங்களையும் பற்றி எழுதும்போது ஆண்டுகள் கிராமமாக வராமல் சுழற்ச்சியில் வரும். இது எனது எண்ணங்களின் பதிவு என்பதால் போரடிக்குமென நினைப்பவர்கள் வேறொரு பதிவில் சந்திக்கலாம். பாலாவின் பக்கங்கள் பாலா கிரிக்கட் தொடரை எழுதுவதுதான் எனது இந்த பதிவின் இன்ஸ்பிரேஷன். இது பெருந்தொடர் என்று என்ன வேண்டாம், ஜஸ்டு 4 அல்லது 5 பதிவுகள்தான், யாராவது இந்த பதிவை தொடரவிரும்பினாலும் தொடரலாம்.

மனிதன்; இது நான்பார்த்த முதல்த் திரைப்படம். அன்று ஆரம்பித்த ரஜினி மற்றும் சினிமா மீதான காதல்(மோகமல்ல) இன்றுவரை தணியவில்லை, இனிமேலும் தணிய வாய்ப்பில்லை :-) 1991 ஆம் ஆண்டுவரை நான் பார்த்த திரைப்படங்களில் 90 சதவீதமானவை ரஜினிகாந்த், மற்றும் விஜயகாந் நடித்த திரைப்படங்கள்தான். இவர்கள் இருவருக்குமடுத்து அன்று கார்த்திக், பிரபு திரைப்படங்களை விரும்பி பார்த்திருக்கிறேன்.

ஏனைய திரைப்படங்களில் சண்டைக்காட்சிகளை மட்டும் பார்த்தவிட்டு மீதி நேரங்களில் முற்றத்தில்; கிரிக்கட் அடித்ததுதான் ஞாபகத்தில் உள்ளது. அன்றைய நாட்களில் என் மனதில் ஹீரோன்னா அது ரஜினிதான்(இன்று வரைக்கும், எப்போதுமே). அன்று எனக்கு கமல், மோகன் இருவருக்குமிடையில் உருவத்தில் பெரிதாக வித்தியாசம் தெரியாது; இருவரையும் அழுகுணி நடிகர்கள் என்று சொல்லி இவர்கள் படங்களை சிறுவயதில் பார்ப்பதில்லை. பின்னாட்களில் மோகனின் திரைப்படங்களை பாடல்களுக்காக தேடித்தேடி பார்த்துள்ளேன்.



90 களில் ஆரம்பத்தில் ஈழப்போர் யாழ்ப்பாணத்தில் உக்கிரமடைந்த நிலையில் புதிய திரைப்படங்களை பார்ப்பது சாத்தியமில்லாமல் போயிற்று, அக்காலப்பகுதியில் வெளிவந்த திரைப்படங்களில் ஓரிரண்டு திரைப்படங்கள்தான் யாழ்ப்பாணத்திற்கு கேசட்டாக வந்தன; அவற்றில் வீரா, வள்ளி, சின்னத்தம்பி, கார்த்திக் நடித்த சீமான், சரத்குமார் பிரபுதேவாவின் 'இந்து' போன்றவை அன்று புதிய திரைப்படங்கள் என்று சொல்லப்பட்ட திரைப்படங்கள். வேறு புதிய திரைப்படங்கள் கேசட்டாக வந்தது ஞாபகத்தில் இல்லை. அக்காலப்பகுதியில் நான் அதிக தடவைகள் பார்த்த திரைப்படங்கள் என்றால் அவை ரஜினியின் சிவா மற்றும் விஜயகாந்தின் ராஜநடை.

ஈழப்போரின் உக்கிரம் அதிகரித்திருந்த நிலையில் இந்த காலப்பகுதியில் அறிமுகமாகிய அஜித், விஜய், பிரஷாந்த் போன்ற நடிகர்களையோ; அவர்களின் திரைப்படம், ஏன் புகைப்படத்தை கூட 1996 வரை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஒரு மிகப்பெரும் இடம்பெயர்வின் பின்னர் 1996 இல்தான் அன்றைய புதிய தலைமுறை நடிகர்களின் திரைப்படங்களை முதல் முதலாக பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. அப்படியாக அடுத்த தலைமுறை நடிகர்களின் திரைப்படங்களில் நான் பார்த்த முதல் திரைப்படம் 'பூவே உனக்காக'.



அன்று என்னை மிகவும் பாத்தித்த, எனக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக அமைந்தது. அந்த காலப்பகுதியில் மின்சாரம் இல்லாத காரணத்தால் டீவி,டேக்,ஜெனரேட்டர் வாடகைக்கு எடுத்து ஒரேநாளில் நான்கு திரைப்படங்களை மாலை 6 மணி முதல் மறுநாள் காலை வரை போட்டு பார்ப்பது வழக்கம். ஞயிறு இரவு முழுவதும் திரைப்படங்களை பார்த்துவிட்டு காலையில் பாடசாலை சென்ற நாட்களும் உண்டு, சிவராத்திரி என்றால் மாலை 6 மணி முதல் மறுநாள் மாலைவரை 7 அல்லது 8 திரைப்படங்களை தொடர்ந்து பார்த்த சம்பவமும் உண்டு. கடைசியில் எல்லா படமும் ஒன்றோடு ஒன்று மிக்ஸ்ஆகி மண்டையைப் பிச்சுக்கிட்டதும் உண்டு.

ஒரே அயலில், வாரம் ஒரு வீட்டில் இவ்வாறு திரைப்படங்கள் போடப்படுவது வழக்கம்; அவ்வாறு போடப்படும் திரைப்படங்களில் பாட்ஷா, முத்து, இந்தியன், பூவே உனக்காக, காதல் கோட்டை, உள்ளத்தை அள்ளித்தா போன்ற திரைப்படங்கள் அதிகமாக பார்க்கப்படும் திரைப்படங்கள். அப்போது சிலகாலம் வாரம் ஒரு வீட்டில் திரைப்படங்களின் தீபாவளியாக இருந்தது. இப்போது நினைத்தாலும் பசுமையான அழகிய காலமது..............

அன்று (15 ஆண்டுகளுக்கு முன்னர்) யாழ்ப்பாணத்தில் 'காதல் கோட்டை' திரைப்படத்தை முதலில் பார்த்தவர்கள் அஜித் ரசிகர்களாகவும்; 'பூவே உனக்காக' திரைப்படத்தை முதலில் பார்த்தவர்கள் விஜய் ரசிகர்களாகவும் தங்களை வெளிக்காட்டிக் கொண்டார்கள்; இன்றுவரை இங்கு பலர் அஜித்,விஜய் ரசிகர்களாக இருக்க இவ்விரு திரைப்படங்களும்தான் முக்கிய காரணம் (தீனா, கில்லி அப்புறம்தான்). ஒருவேளை அஜித் ரசிகன் 'பூவே உனக்காக'வையும், விஜய் ரசிகன் 'காதல்க் கோட்டை'யையும் முதலில் பார்த்திருந்தால் அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களாகவும், விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களாகவும் இருந்திருப்பார்கள்!!!



நான் பூவே உனக்காக முதலில் பார்த்ததால் எனக்கு விஜயை அப்போது பிடித்திருந்தது, சினிமா பற்றி விவாதிப்பவவர்கள் அருகில் இல்லாததால் நல்லவேளை அன்று அஜித்தில் வெறுப்பு ஏற்படவில்லை. விஜயின் அத்தனை திரைப்படங்களையும் அன்று ரசித்துப் பார்ப்பது வழக்கம், விஜயின் அட்டர் பிளாப் திரைப்படங்களையும் ரசித்துள்ளேன்; அதேநேரம் அஜித், பிரஷாந்த் திரைப்படங்களையும் பார்க்கத் தவறியதில்லை. அஜித் திரைப்படங்களில் காதல் கோட்டை, வான்மதி, பவித்திரா, நேசம், ஆசை திரைப்படங்களும் பிரஷாந்தின் மன்னவா, ஆணழகன், திருடா திருடா திரைப்படங்களையும் பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.

சிலகாலங்களின் பின்னர் இந்தியாவில் படம் வெளியாகி ஒரு வாரத்தினுள் மினி திரையரங்குகளில் திரைப்படங்களை போட்டுவிடுவார்கள், அந்த காலப்பகுதியில் எந்த திரையரங்கும் யாழ்ப்பாணத்தில் இயங்கவில்லை. அதிகமான மினி திரையரங்குகளில் அந்தமாதிரி படங்கள் போடப்படுவதால் அதிகமான பெற்றோர் தம் பிள்ளைகள் மினி திரையரங்கிற்கு செல்ல விரும்புவதில்லை. ஆனால் எனக்கு மினி திரையரங்கில் சென்று படம் பார்க்க வீட்டில் எந்த தடையும் போடவில்லை, வீட்டிற்கு தெரிந்தே நான் திரையரங்கு சென்று பார்த்த முதல் திரைப்படம் நான் பல தடவைகள் மீண்டும் மீண்டும் பார்த்த 'உள்ளத்தை அள்ளித்தா'. 6 வயதில் இரு தடவைகள் (ராஜாதி ராஜா, பணக்காரன்) திரையரங்கிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தாலும் பெரியதிரை அதிகம் ஞாபகத்தில் இல்லை என்பதால் ஓரளவு பெரியதிரையில் மினியில் படம் பார்ப்பது புதிய அனுபவமாக இருந்தது.



தொடர்ந்து சிலகாலம் மினி திரையரங்கில் புதிய திரைப்படங்கள் எது வந்தாலும் ஆஜராவது வழக்கம், டிக்கட் காசும் 10 ரூபாதான் என்பதால் பைனான்சியல் பிரச்சினைகளும் இருக்கவில்லை :-) அடுத்து மினி திரையரங்கில் நான் பார்த்து ரசித்த திரைப்படம் 'மினி'யாக ஷாலினியும் விஜயும் நடித்த பாசிலின் காதலுக்கு மரியாதை. காதலுக்கு மரியாதைக்கு பின்னர் விஜய் மீது சற்று அதிக ஈடுபாடு உண்டாயிற்று அந்த ஈடுபாடு 'யூத்' திரைப்படம்வரை வரை என்னை விஜய் திரைப்படங்களை தொடர்ந்து ரசிக்க வைத்தது. யூத் திரைப்படம் முதல்முதலாக என்னை விஜய்க்கு எதிராக மாற்றியது. காரணம் என்கூட இருந்த ஒரு விஜய் ரசிகர்!!!

எனக்கு என்னதான் விஜய் மீது அன்று ஈடுபாடு இருந்தாலும் ரஜினி எப்போதுமே என் மன சிம்மாசனத்தில் நிரந்தரமாக உட்கார்ந்திருந்தார். ரஜினியின் பாபா வெளிவரும் நேரத்தில்தான் விஜயின் யூத் திரைப்படமும் வெளிவர இருந்தது.பாபாவுக்கு போட்டியாக யூத்தினை கூட இருந்த குறிப்பிட்ட விஜய் ரசிகர் ஒப்பிட்டு விவாதித்து அந்த நொடியிலேயே விஜய் மீதிருந்த ஈடுபாடு துண்டுதுண்டாக்கியது!! பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான் என எனக்கு பிடித்த விஜய் படங்களையே பின்னர் பார்ப்பதற்கு சங்கடமாக இருந்தது(ஆனாலும் இப்போதும் அத்திரைப்படங்களை பார்க்கும்போது ஏதோ ஒன்று ஈர்ப்பது உண்மை). சில விஜய் ரசிகர்கள் என்னதான் விஜயை அன்று ரஜினியுடன் ஒப்பிட்டாலும் விஜய் ரஜினியை 'தலைவர்' என்று வாய்க்குவாய் சொல்லியதால் விஜய் மீது வெறுப்பு ஏற்ப்படவில்லை.



தொடந்து தன் திரைப்படங்களில் ரஜினியின் பெயரையோ, ரஜினி படப்பெயரையோ உபயோகித்து வந்ததாலும். கில்லி வெற்றி விழாவில் ரஜினி காலில் வீழ்ந்து ஆசி பெற்றதாலும்; ரஜினியும் அமிதாப்பும் என் கடவுள்கள் என்று சஞ்சிகை ஒன்றுக்கு பேட்டி கொடுத்ததாலும் சச்சின் திரைப்படம் வெளிவரும்வரை விஜய்மீது வெறுப்பை ஏற்ப்படுத்தவில்லை. ஆனால் சச்சின் திரைப்படத்தை சந்திரமுகியுடன் விஜய் வெளியிட்டதன் நோக்கம் அடிப்படை அறிவுள்ள அனைத்து சினிமா ரசிகர்களுக்குமே நன்கு தெரியும். அந்த நிகழ்வின் பின்னர் எந்த ரஜினி ரசிகனுக்கும் விஜய் மீது வெறுப்பு ஏற்ப்படுவது ஆச்சரியமல்ல!!! ஆனாலும் விழுந்தும் மீசையில் மன் ஒட்டாதவாறு விஜய் சந்திரமுகி வெற்றிவிழாவில் ரஜினியை தலைவா, தலைவா என உருகினாலும் விஜய் மீதிருந்த கோபம் குறையவில்லை.

அந்த கோபம் லயோலாக்கலூரி வாக்கெடுப்பின் பின்னைய சம்பவங்களினால் பலமடங்கு அதிகமாகி இன்று விஜயை பரம எதிரி போல் பார்க்கவைத்து விட்டது. ஆரம்பத்தில் என் மனதிற்கு பிடித்த விஜய் இப்போ ரொம்ப தூரத்தில்!! ஆனாலும் இப்பவும் தொலைக்காட்சியில் 'பூவே உனக்காக' திரைப்படம் போனால் நிச்சயம் பார்ப்பேன், விஜயையும் தாண்டி அதில் ஏதோ ஒரு பீல் கிடைக்கறது............ இந்த விடயங்களை விஜயை சிறுமைப்படுத்தும் நோக்கில் நான் கூறவில்லை; நான் பார்த்த சினிமாவில் எனக்குள் விஜயின் பயணம்தான் நான் மேற்கூறியவை.

அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் பற்றியும், நம்ம ஹீரோயின்ஸ் பற்றியும், இன்னபிற விடயங்களையும் அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம் :-)

தொடரும்............

Friday, July 15, 2011

தெய்வத்திருமகள் - எனது பார்வையில்





சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க, ஸ்ரீ ராஜகாளி அம்மன் மீடியாஸ் மோகன் நடராஜன் தயாரிக்க, இயக்குனர் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷாவும், இசையமைப்பாளராக ஜீ.வி.பிரகாஷும், படத்தொகுப்பாளராக ஆண்டனியும் பணியாற்றியுள்ளனர். விக்ரம் தவிர பேபி சாரா, அனுஷ்கா, அம்லா பால், சந்தானம், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் போன்றோரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

'படத்திற்கு படம் வித்தியாசமாக நடிக்கும் விக்ரம்' என்று சொல்வது சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பதை ஒத்தது என்பதை விக்ரம் மீண்டும் நிரூபித்திருக்கிறார். தேசிய விருது கிடைக்கும் என்று சொல்லி விக்ரமின் நடிப்பை சிறுமைப்படுத்த நான் விரும்பவில்லை; தெய்வதிருமகளில் விக்ரமின் நடிப்பு விருதுகளுக்கு அப்பாற்ப்பட்டது. என்னைக் கேட்டால் விக்ரமின் திரை வாழ்க்கையில் மிகச்சிறந்த பெர்போமன்ஸ் என்று தெய்வத்திருமகன் 'கிருஷ்ணா'வைத்தான் சொல்வேன்.

ஆம் தெய்வத்திருமகளில் கிருஷ்ணா கேரக்டரில் விக்ரம் வாழ்ந்திருக்கிறார், வார்த்தைகளால் சொல்லி விக்ரமின் நடிப்பினை விபரிப்பது சாத்தியமில்லை. என்னால் 'கிருஷ்ணா' பாத்திரத்திற்கு விக்ரம் தவிர்த்து வேறு எந்த நடிகரையும் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. விக்ரமால் மட்டுமே இது சாத்தியம் என்பதை உணர்ந்த இயக்குனர் விஜய் உண்மையிலே புத்திசாலிதான். படம் முழுவதும் தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் தன் முத்திரையை பதித்துள்ள விக்ரம். நீதி மன்றில் கால் தடக்கி கீழே விழுந்த நிலையில் முகத்தில் கொடுக்கும் உணர்ச்சி சொல்லி புரியவைக்க முடியாது; அதுபோன்றே மன்றத்தின் உள்ளே இறுதிக் காட்சியிலும், திரைப்படத்தின் உச்சக்கட்ட காட்சியிலும் விக்ரமின் நடிப்பு சபாஷ் போட வைக்கிறது.



'நிலா'வாக பேபி சாரா; விக்ரமிற்கு அடுத்து தெய்வத்திருமகளின் முக்கிய பாத்திரம் பேபி சாராதான். எப்படித்தான் இந்த சின்ன குழந்தைகள் இவ்வளவு திறமைகளை கொட்டி நடிக்கிறார்களோ என்று மீண்டும் ஒருதடவை எண்ண வைத்துள்ளார் பேபி சாரா. 'நிலா' வரும் ஒவ்வொரு காட்சிகளும் அழகியல்; விக்ரமுடன் போட்டிபோட்டு நடித்த அந்த சிறுமிக்கு எந்தப்பாராட்டும் தகும். பாசம், பரிவு, செல்லக் கோபம், தவிப்பு, ஏக்கம், அழுகை, சிரிப்பு என எல்லா இடங்களிலும் மிகச்சிறப்பாக ஜொலிக்கின்றார் பேபி சாரா.

படத்தின் நாயகிகளாக அனுஷ்கா மற்றும் அம்லாபால் நடித்திருந்தாலும் அதிகமான காட்சிகளில் நடித்திருப்பதென்னவோ அனுஷ்காதான். ஆகா ஓகோன்னு இல்லையின்னாலும் தனக்கு கொடுத்ததை அனுஷ்கா சிறப்பாக செய்த்துள்ளார். வக்கீல் ட்ரெஸ்ஸும் அம்மணிக்கு நல்லாத்தான் இருக்கு :-) அம்லாபாலுக்கு சொல்லிக்கொள்ளும்படியான வேடம் இல்லை, அழகாக இருக்கிறார், அவளவுதான். படத்தை போர் அடிக்காமல் கொண்டு செல்லும் பொறுப்பை சரியாக செய்த்திருக்கிறார் சந்தானம்; மனிதர் வரும் இடங்கள் ஒவ்வொன்றும் கலகலப்பாக இருக்கின்றது. அடுத்த சில ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவின் நகைச்சுவை கல்லாச்சாவி சந்தானத்தின் கைகளில்த்தான்.



நாசர் அப்பாட்டக்கர் வக்கீலாக வந்தாலும் ஏற்க்கனவே பல திரைப்படங்களில் பார்த்துப் பழகிய வக்கீல் கேரக்டர்தான். நாசர் தவிர வை.ஜி.மகேந்திரம், எம்.எஸ்.பாஸ்கர், 'கனாக்காணும் காலங்கள்' பாண்டி போன்றோரும் படத்தில் அப்பப்போ வந்து போனாலும் மனதில் ஒட்டவில்லை. அனுஷ்காவின் அசிஷ்டண்டாக வரும் பெண்ணும் அவரை ஜொள்ளுவிடும் நாசரின் அசிஷ்டண்டும் திரைக்கதையின் தேவைக்காக இயக்குனர் பயன்படுத்தியிருந்தாலும் அவர்களது பாத்திரங்கள் திரைக்கதைக்கு பெரிதாக ஒட்டவில்லை. அதேபோல அம்லா பாலின் தந்தை, சொக்கலேட் கம்பனி ஓனர், எம்.எஸ்.பாஸ்கரின் மனைவி பாத்திரங்கள் டெம்ளேட் பாத்திரங்கள்.

நீரவ்ஷாவின் கமெரா இதுவரை ஒருபோதும் ஏமாற்றியதில்லை, அது தெய்வத்திருமகளிலும் தொடர்ந்திருக்கிறது. தேவைக்கு ஏற்ப அழகான நேர்த்தியான ஒளிப்பதிவு. அதேபோல ஆண்டனியும் காட்சிகளை அழகாக கோர்த்திருக்கிறார், புதுமைகள் எதுவும் இல்லையெனினும் தேவைக்கு போதுமான படத்தொகுப்பு. பாடல்கள் அனைத்திலும் புகுந்து விளையாடியிருக்கும் ஜீ.வி.பிரகாஷ் பின்னணி இசையிலும் நன்றாகவே ஜொலித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு எது வேண்டுமோ அதை அளவாக கொடுத்திருக்கிறார் ஜீ.வி.

அடுத்து திரைப்படத்தின் முக்கிய கர்த்தா இயக்குனர் விஜய்; நிச்சயம் இது 'மதராசப்பட்டினம்' போன்று விஜயின் முத்திரை குத்திய திரைப்படம் அன்று. விக்ரமின் கேரக்டரையும், கிருஷ்ணாவுக்கும் நிலாவுக்குமான உறவினையும் அடிப்படியாக கொண்டே திரைக்கதையை பின்னியிருப்பதால் இயக்குனர் சில இடங்களில் கம்பிரமயிஸ் ஆகவேண்டியிருப்பது தெரிகிறது. சில பாத்திரங்களும், காட்சிகளும் முன்னமே பார்த்தவை போன்று இருந்தாலும் கதையை பின்னுவதற்கு இயக்குனருக்கு வேறு வழி இல்லை என்பதால் அதை குறையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.



அதிகமான இடங்களில் செண்டிமெண்ட் காட்சிகள் இருந்தாலும் எவையும் அலுப்படிக்கவில்லை, இறுதிக்காட்சி இயக்குனரின் தனக்கே உரிய முத்திரை. மனதை கனமாக்கி திரையரங்கை விட்டு ரசிகர்களை வெளியேற்றும் உக்தி தெரிந்த இயக்குனர்களில் விஜையும் ஒருவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். திரைக்கதையின் தொய்வை காமடியால் நிவர்த்திசெய்ய எத்தனித்த விஜய் அதில் வெற்றிகண்டுள்ளார் என்றே சொல்லலாம். ஆங்காங்கே சில காம்பிரமைஸ் செய்திருந்தாலும் (விழிகளில் ஒரு வானவில் பாடல் எதுக்கு விஜய் சார் ? )தெய்வத்திருமகளில் 'இயக்குனர்' விஜய் மீண்டும் தன்னை ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

நிச்சயமாக தெய்வத்திருமகள் ஒரு பக்கா கமர்சியல் படமல்ல, அதேநேரம் ஒரு ஆர்ட் திரைப்படமும் அல்ல, முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்க்ககூடிய ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம் என்று சொல்லலாம். விக்ரமிற்காகவும், அந்த குழந்தைக்காகவும் (பேபி சாரா) நிச்சயம் அனைவரும் திரையில் பார்க்க வேண்டிய திரைப்படம் தெய்வத்திருமகள்.

தெய்வத்திருமகள் - ஜனரஞ்சகம்

Wednesday, July 6, 2011

சீரழிந்து வரும் யாழ்ப்பாண கலாச்சாரம்......





யாழ்ப்பாணத்தையும், யாழ்ப்பாண இளைஞர்கள், யுவதிகளையும் எதிர்மறையாக மட்டுமே நோக்கப்போகிறேன் என்று நினைப்பவர்களுக்கு இந்தப் பதிவு ஏமாற்றத்தை 'மட்டுமே' தரும்.

இன்றைய திகதியில் புலம்பெயர் நாடுகளில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்களும் சரி, தம்மை கலாச்சாரக் காவலர்களாக காட்டிக்கொள்ள எத்தணிப்பவர்களும் சரி யாழ்ப்பாணத்தையும், யாழ் இளைஞர் யுவதிகளையும் அடையாளப்படுத்தும் விதமாக பயன்படுத்தும் முக்கிய சொல் 'சீரழிவு'. யுத்தம் முடிவுக்கு வந்ததன் பிற்ப்பாடு யாழ்ப்பாண கலாச்சாரம் சீரளிந்துள்ளதாகவும், இளைஞர்களும் யுவதிகளும் கெட்டுப்போவதாகவும் இவர்களது குற்றச்சாட்டு. உண்மைதான்; இவர்களால் யாழ்ப்பாண கலாச்சாரம் சீரழிந்து வருவதாக குற்றம் சாட்டப்படுவதில் எத்தனை சதவிகிதம் உண்மைத்தன்மை உள்ளதோ அதேபோல யாழ்ப்பாணம் வாழ்க்கைத்தரம், தொழில்நுட்பம், தொடர்பாடல், வசதி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து, அபிவிருத்தி போன்ற பல விடயங்களில் முன்னேற்றம் அடைந்து வருவதிலும் அத்தனை சதவிகிதம் உண்மை உள்ளது; இதை யாராவது மறுக்க முடியுமா?

ஒவ்வொரு விசைக்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு என்கின்ற நியூட்டனின் மூன்றாம்விதி விஞ்ஞானம் மட்டுமல்ல; அது உண்மையில் வாழ்க்கைத்தத்துவம். இன்றைய யாழ்ப்பாணத்தின் நிலையும் நியூட்டனின் மூன்றாம் விதியை ஒத்ததுதான் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். வாழ்க்கைத்தரம், தொழில்நுட்பம், தொடர்பாடல், வசதி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து, அபிவிருத்தி என்பன அதிகரித்துவரும்போது அதன் பக்க விளைவுகளாக சில வேண்டத்தகாத மாற்றங்களும் இடம்பெறத்தான் செய்கின்றன, அதை யாரும் மறுக்க இயலாது; அப்படியான சில வேண்டத்தகாத நிகழ்வுகள் இடம்பெறுகின்றன என்பதனால் ஏற்ப்படும் முன்னேற்றகரமான விடயங்களை அப்படியே புறக்கணிக்க முடியுமா??



ஆமென்று கூறும் பிற்போக்கான எண்ணம் கொண்டவர்களை நாம் குறைகூற முடியாது; அது அவர்களின் சொந்த உணர்வு. அனால் இந்த விடயத்தை நேர்மறையாக அணுகுமிடத்தில் தற்போது உண்டாகிவரும் வசதி வாய்ப்புக்கள்தான் தீய பக்கவிளைவுகளுக்கு காரணம் என்று நோக்காமல்; புதிய வசதி வாய்ப்புக்களால் ஏற்ப்படுகின்ற தீய பக்கவிளைவுகளை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்க முடியுமோ அதற்கான வழியை ஆராய்வதுதான் புத்திசாலித்தனம்; அதுதான் இன்றைய தேவை. அதை விடுத்து குறை கூறுவதை மட்டுமே வேலையாக வைத்திருப்பவர்களை என்னதான் செய்யமுடியும்!

யாழ் இளைஞர்களும் யுவதிகளும் பண்பாடில்லாமல் முறைதவறி நடக்கின்றார்கள் என்பதுதான் இன்று முக்கியமாக யாழ்ப்பாணம் சீரழிவதாக கூறுபவர்களால் வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு; இவைதவிர கல்விப் பெறுபேறுகளில் வீழ்ச்சியும் இன்னுமொரு முக்கிய குற்றச்சாட்டு. இவ்விரண்டு குட்டச்சாட்டுகளும் ஏற்பட காரணமாக குற்றம் சொல்பவர்களால் கூறப்படும் முக்கிய காரணிகளாக தொலைபேசி, தொலைக்காட்சி, இணையம், வெளிநாட்டுப்பணம், எ-9 பாதை திறப்பு, கட்டுப்பாடு இல்லாமை (புலிகளின் கட்டுப்பாடு) போன்றவை முக்கியமானவை. இக்குற்றச்சாட்டுகளிணை விரிவாக நோக்குவோமாயின்...



1991 முதல் 1995 வரை யாழ் குடாநாட்டிலேயே மக்கள் பாவனைக்காக 'இயங்கும் நிலையில்' ஒன்றிரண்டு தொலைபேசிகள்தான் இருந்தன; அப்போதைய கட்டணங்களை கேட்டால் இப்போதும் தலை சுற்றும். அதிலும் வெளிநாடுகளுக்கு தொலைபேசியில் பேசுவதற்கு யாழிலிருந்து கொழும்பிற்கு செல்லவேண்டிய நிலை (அந்த காலப்பகுதியில் கொழும்பு செல்வது சாதாரண விடயமல்ல). 1995 க்கு பின்னர் மெல்லமெல்ல நிலையான தொலைபேசி (Land Line) இணைப்புக்கள் யாழ் குடாநாட்டிற்குள் அதிகரிக்க ஆரம்பித்தது; பெரும்புள்ளிகள், வசதியானவர்கள், தொலைத்தொடர்பு நிலையங்கள் போன்ற இடங்களில் நிலையான தொலைபேசி இணைப்புக்கள் இருந்தாலும் சாதாரண குடிமக்களால் அவற்றை சொந்தமாக பாவிக்க இயலவில்லை.

அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டளவில் அறிமுகமாகியதுதான் கைத்தொலைபேசி; ஆரம்பத்தில் கைத்தொலைபேசியின் தாக்கம் குறைவாக காணப்பட்டாலும் 2007 இற்கு பின்னர் வீட்டிற்கு ஒன்றாக அதிகரித்து இன்று ஒவ்வொருத்தரும் ஒரு கைத்தொலைபேசி பயன்படுத்துமளவிற்கு அதன் பாவனை அதிகரித்துள்ளது. இது ஆரோக்கியமான விடயமா என்பதில்த்தான் விவாதமே. எதையுமே நாம் பயன்படுத்தும் விதத்தில்த்தான் அதன் நன்மை, தீமை தீர்மானிக்கப்படுகிறது; ஒரு தீக்குச்சியால் தீபமும் ஏற்றலாம் தீயும் வைக்கலாம்; அது பயன்படுத்தும் முறை மற்றும் தேவையை பொறுத்தது.



இன்று தொலைபேசி உள்ளதால் எத்தனை சௌகரியங்கள்!!! ஒரு சந்திப்பை எடுத்துக் கொண்டாலே ஒருவரை சந்திக்குமுன் தொலைபேசியில் அவர் சந்திப்புக்கு தயாராக உள்ளாரா என அறிந்த பின்னர் செல்வதால் வீண் அலைச்சல், பணம், நேரம் என்பன எவ்வளவு சேமிக்கப்படுகிறது! சரியான நேரத்திற்கு வீடிற்கோ அல்லது குறிப்பிட்ட ஓரிடத்திற்க்கோ செல்வதற்கு தாமதமாகினால் தாமதத்தை அறியப்படுத்தி ஏற்ப்படும் அசௌகரியங்களை தவிர்க்கிறோம். தூரதேச பிரிவின் இடைவெளி எத்தனை குடும்பங்களுக்கு தொலைபேசியில் இன்று ஆறுதலை வழங்குகின்றது!!!

வெளிநாடுகளில் உள்ளவர்களின் குரலையோ முகத்தையோ அன்று வருடக்கணக்கில் காணாத நாம் இன்று தினமும் பார்த்தும் கேட்டும் மனதிற்கு ஆறுதலை தேடுவது எதனால்? இவைதவிர வர்த்தகம், மருத்துவம் முதல் அத்தனை தொழில்களிலும், சேவைகளிலும் தொலைபேசியின் பங்கு என்ன என்பதை யாவருமே அறிவோம்! இத்தனை நன்மைகளை தன்னகத்தே கொண்ட தொலைபேசிதான் இன்றைய பல யாழ் இளைஞர்களினதும் யுவதிகளினதும் 'காம வேட்க்கைக்கு' பயன்படுகின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை. 'பல'('சில' அல்ல) இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இன்று ஒன்றுக்கு மேற்ப்பட்ட (ஒரு சிலர் யாரென்றே தெரியாத) எதிர்ப்பாலருடன் தமது இச்சைகளை போக்கிக்கொள்ளும் ஒரு கருவியாக தொலைபேசியை பயன்படுத்துகிறார்கள் என்பது சோகமான விடயமே.

நிச்சயம் இது தொலைபேசியால் ஏற்ப்பட்ட சீரழிவுதான்; ஆனால் இந்த சீரழிவு யாழ்ப்பாணத்திற்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்த்தனம் வேறில்லை. இது உலகம் முழுவதிலும் உள்ள சீரழிவுதான், ஆனால் யாழ்ப்பாணம் எப்படி தனித்து காட்டுகின்றதென்றால்; இதுவரை காலமும் இருந்துவந்த கட்டுப்பாடான ஒழுக்கம்தான். உதாரணமாக கறுப்புடன் வேறெந்த நிறம் சேர்ந்தாலும் பெரிதாக வித்தியாசம் தெரியாது, ஆனால் வெள்ளையுடன் ஒரு துளி வேறு எந்த நிறம் சேர்ந்தாலும் அது மிகைப்படுத்திக் காட்டிக்கொடுக்கும்; அந்த நிலைதான் இன்றைய யாழின் நிலை.



தொலைபேசிபோலத்தான் இணையந்தின் பங்கும்; இணையத்தால் ஏற்ப்பட்டிருக்கும் நன்மைகளை சொல்லித் தெரியவேண்டியதில்லை! வீட்டிலிருந்தே உலகத்தை புரட்டிப்பார்க்கும் நெம்புகோல் இணையம்; அதனை ஆக்கவழியில் பயன் படுத்துவதும் அழிவுப்பாதையில் பயன்படுத்துவதும் தனிமனித நிலைப்பாடு. ஒரு சிலர் தவறாக பயன் படுத்துகிறார்கள் என்பதற்காக இணையத்தை புறந்தள்ள முடியுமா? இல்லை இணையம் இல்லாமல் இனிவரும் காலங்களில் உலகத்துடன் இணைந்து வாளத்தான் முடியுமா?

Face Book; இது இன்று உலகம் முழுவதும் ஆட்கொண்டிருப்பதை மறுக்க முடியாது; அதன் தாக்கம் யாழிலும் இல்லாமல் இல்லை. கல்வி வீழ்ச்சிக்கு இன்றைய Face Book இன் தாக்கம் ஒரு காரணமாக கூறப்படுகிறது, உண்மைதான்; சில மாணவர்கள் Face Book தான் வாழ்க்கை என்கின்ற அளவில் உள்ளார்கள்; இவர்களின் வயதும் அதற்க்கு துணைபோகும் காரணிகளும் Face Book இல் உள்ளமைதான் இவர்களின் இந்த அதீத ஈடுபாட்டிற்கு காரணம். பொய்யான பெயர்களில் கணக்கு வைத்திருந்து வேண்டாத நட்புகளை உருவாக்கி வயதின் இச்சையை பூர்த்திசெய்யும் விடலைகள் சற்று அதிகமாகவே இருக்கத்தான் செய்கிறார்கள்!!! அப்படியானால் Face Book என்கின்ற சமூகத்தளம் தேவையற்றதா? நிச்சயமாக தேவையற்றது என்று கூற முடியாது; பல நல்ல விடயங்கள் Face Book இல் உள்ளதையும் மறுக்க முடியாது.



இவற்றைப்போலவே எ-9 பாதை திறக்கப்பட்டதால் கலாச்சார சீரழிவுகள் அதிகரித்துள்ளது என்கின்ற வாதத்திலும் மறுப்பு ஏதும் கூறுவதற்கில்லை; பலதரப்பட்டவர்களும் வருகிறார்கள், தீய விளைவுகளை ஏற்படுத்தும் காரணிகளை ஊக்குவிக்கிறார்கள்; உண்மைதான், அதற்காக எ-9 பாதை பயன்பாட்டை நிறுத்த முடியுமா? இல்லை புறக்கணிக்கத்தான் முடியுமா? எ-9 பாதை இல்லாத காலங்களில் எம்மக்கள் பட்ட அவஸ்தையை எட்ட நின்று கருத்து கூறும் யாராலும் புரிந்து கொள்ள இயலாது. 1000 ரூபாயில் செய்ய வேண்டிய போக்குவரத்தை 30,000 ரூபாவில் கூட செய்யமுடியாத சூழலில் எத்தனை பேர் முக்கிய நிகழ்வுகளில் (மரணம், திருமணம்) கலந்துகொள்ளாமல் மனரீதியாக தாக்கப்பட்டார்கள் என்பதை 'எக்ஸ்போ' விமான சீட்டு அலுவலகத்திற்கு குறிப்பிட்ட காலப்பகுதிகளில் சென்றவர்களால் உணரமுடியும்.

எ-9 பாதை திறக்கப்பட்டதால் ஏற்ப்பட்ட இலகு மற்றும் குறைந்த செலவில் நினைத்தநேர பயணம், ஏறுமதி மற்றும் இறக்குமதி, பொருட்களின் விலை வீழ்ச்சி போன்ற சாதகமான காரணிகளுடன் ஒப்பிடும் பொழுது பாதகமான காரணிகள் மிகச்சொற்பமே. அதற்காக பாதகமான காரணிகளை வரவேற்பதாக அர்த்தமல்ல, அப்பாதகமான காரணிகளை எவ்வாறு நீக்கலாம் என்று சிந்திப்பதுதான் புத்திசாலித்தனம்; அதைவிடுத்து எ-9 பாதை திறந்ததுதான் இன்றைய யாழின் சீரழிவிற்கான காரணம் என்று கூறுவதல்ல!!



அடுத்து வெளிநாட்டுப்பணம்; மேலதிகமாக கிடைக்கும் வெளிநாட்டுப் பணத்தினால் பள்ளி வயது முதல் பாடை வயதுவரை பீர் மழையும், மோட்டார் சைக்கிள்களும் (குறிப்பாக பள்சர்) யாழ்ப்பாணத்தில் குறைவில்லாமல் உள்ளன. வேலைக்கு போகும் பணியாளர்களுக்கும், மாணவர்களின் தேவைகளுக்கும், வியாபாரிகளின் பயன்பாட்டிற்கும் மோட்டார் சைக்கிள்களின் தேவை இன்றியமையாதது என்பது நிதர்சனம். அதேநேரம் பகட்டுக்காக மோட்டர் கைக்கிளை வைத்து 'படம்' காட்டும் இளைஞர்களும் அதிகமாகவே உள்ளனர்; இவர்கள்தான் இன்றைய வீதி விபத்துக்களின் ஏஜண்டுகள், மற்றும் பெண் செட்டைகளின் முக்கிய சூத்திரதாரிகள். இவர்களை கட்டுப்படுத்துவது அவரவர் குடும்பத்தினதும், வெளிநாடுகளில் இருந்து தேவைக்கதிகமாக பணம் அனுப்புபவர்களதும், சமூகத்தினதும், பொலிசாரினதும்(?) கைகளில்த்தான் உள்ளது.

அடுத்து கூறப்படும் இன்னுமொருவிடயம்; "புலிகள் காலத்தில் இளைஞர்கள் யுவதிகள் புலிகளின் கட்டுப்பாட்டிற்கு பயந்து ஒழுக்காமாக இருந்தனர், ஆனால் இன்று புலிகளின் தாக்கம் இல்லாததால் ஒழுக்கம் குறைவாக நடக்கின்றார்கள்" என்பதுதான். இங்கு ஒழுக்கம் என்று சொல்லப்படும் முக்கிய விடயங்களாக ரவுடித்தனம், பெண் சேட்டைகள், கள்ளத்தொடர்பு, விபச்சாரம், போதை போன்றன அடங்குகின்றன. இவ்வாறான ஒழுக்க மீறல்களினை காணும் அல்லது அறியும் சந்தர்ப்பங்களில் "இவங்களுக்கு அவங்கள்தான் சரி" என்பதே பலராலும் உச்சரிக்கப்படும் ஒரு வாக்கியம்!!!



உண்மைதான் இதை நானும் பல இடங்களில் உணர்ந்திருக்கின்றேன்; அனால் இதில் இன்னுமொரு விடயத்தையும் உற்றுநோக்கவேண்டும், புலிகளின் கட்டுப்பாட்டுக்கு பயந்துதான் (மரண பயம்) இதுவரை காலமும் யாழ் இளைஞர்கள் யுவதிகள் ஒழுக்கமாக இருந்தார்களா? ஆம் என்றால் அந்த ஒழுக்கம் யாழ்ப்பாணத்தின் அடிப்படை ஒழுக்கமா? இல்லை கட்டுப்படுத்தியதால் ஏற்ப்பட்ட ஒழுக்கமா? இது எம்மக்களின் சுயமரியாதையை காயப்படுத்துவதாக இல்லையா?

அப்படியானால் கட்டுப்பாடு தேவை இல்லையா என நீங்கள் கேட்கலாம்! நிச்சயம் கட்டுப்பாடு தேவை, ஆனால் கட்டுப்பாடு மட்டுமே போதாது; கூடவே நல்ல சமூக கட்டுக்கோப்பும் தேவை; தனிமனிதனில் சமூகத்தினதும், சமூகத்தில் தனிமனிதனதும் ஒழுக்கம் தங்கியுள்ளது என்பதை நாம் அனைவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். காவல்த்துறையும் நீதித்துறையும் மக்களுக்கும், மக்கள் காவல்த்துறைக்கும் நீதித்துறைக்கும் பூரணமான ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும் இதய சுத்தியோடு வழங்கினால் வேண்டத்தகாத பல தீய விளைவுகளை அடியோடு ஒழிக்கலாம்; அனால் இன்றைய சூழலில் அது உடனடிச்சாத்தியம் இல்லை என்பதையும் மறுப்பதற்கில்லை.



தொலைபேசி, தொலைக்காட்சி, இணையம், எ-9, வெளிநாட்டுப்பணம் போன்றன எந்தளவிற்கு யாழ்மக்களுக்கு இன்றியமையாத தேவைகளாக உள்ளதோ! அதேபோல இவற்றால் ஏற்ப்படும் 'சீரழிவு' என்று சொல்லப்படும் அசௌகரியங்கள் அதிகரித்துள்ளமை மிகவும் பாதகமான விடயமாகவே உள்ளது. தொலைபேசி, இணையம் போன்றவற்றால் இன்று ஒழுக்கத்திலும், கல்வியிலும் ஏற்ப்பட்டுள்ள தாக்கங்கள் காலப்போக்கில் குறைவடைந்து ஓர்நாள் இல்லாமலே போய்விடும் என்கின்ற நம்பிக்கை உண்டு.

உதாரணமாக சொல்வதானால் 1996 களில் யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் மின்சாரம் (6 ஆண்டுகளின் பின்னர்) வழங்க ஆரம்பித்த புதிதில் அன்று பொதிகை தொலைக்காட்சியில் ஒலியும் ஒளியும் முதற்கொண்டு வயலும் வாழ்வும் வரை முழுநேரமும் தொலைக்காட்சியுடன் தான் அன்றைய இளைஞர்கள் நேரத்தை செலவிட்டனர்; ஆனால் இன்று??? வேண்டியபோதுதான் தொலைக்காட்சி! அதேபோலத்தான் புதிதாக ஒரு தொலைபேசியை வாங்கிய முதல் இரண்டு வாரம் அதையே போட்டு நோண்டி நொங்கெடுப்போம் , பின்னர் ???? பாவனைக்கு மட்டும்தான் பயன்படுத்துவோம்! இது மனித இயல்பு, எதையும் புதிதாய் கண்டால் சிலகாலம் அதனுடன் ஒன்றிப்பது மனிதர்க்கு புதிதல்ல!!!

இந்த நிலைதான் இன்று எம்மவரில் சிலருக்கும் இருக்கும் பிரச்சனை!!! காணாததை கண்டதால் ஏற்ப்பட்ட விளைவு என்றுகூட இதை சொல்லலாம். எந்த புதிய அறிமுகமும் அறிமுகமான புதிதில் சில அசௌகரியங்களை கொடுக்கத்தான் செய்யும்; ஆனால் நாளடைவில் அவை தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும், இது உலக நியதி, யாழ்ப்பாணம் ஒன்றும் இதற்க்கு விதி விலக்கல்ல. அப்படித்தான் கூடிய சீக்கிரம் தொலைபேசியும், இணையமும் மாறும் என்கின்ற நம்பிக்கை உள்ளது.



ஆனால் ரவுடீசம், பெண் சேட்டைகள், புதிதாக நுழைந்துள்ள போதை, விபச்சாரம் போன்றன கட்டுப்படுத்தப்பட வேண்டுமானால் அது நிச்சயம் சமூகத்தின் கைகளிலும், போலிஸ், மற்றும் நீதி துறையின் கைகளிலும்தான் தங்கியுள்ளது. போலீசார் நினைத்தால் இவற்றை அழிப்பது அவளவு கடினமல்ல; காரணம் இவையெல்லாம் இப்போதுதான் ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. எதையுமே ஆரம்பத்தில் அழிப்பது சுலபம் என்பதால் பணத்திற்கு முன்னுரிமை கொடுக்காது இதய சுத்தியோடு செயற்ப்பட்டால் போலிஸ் துறையால் நிச்சயம் இவற்றை கட்டுப்படுத்த முடியும்; ஆனால்???

யாழ்மக்களை குறை சொல்பவர்களே ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்திருங்கள், இங்குள்ளவர்களும் மனிதர்கள்தான்; தவறு செய்பவன்தான் மனிதன், அந்த தவறை சுட்டிக்காட்டி ஏளனப்படுத்தி கேவலப்படுத்துவதை கெட்டித்தனமென்று எண்ணாமல் தவறுகளை எப்படி தீர்க்கலாம் என்று சிந்தியுங்கள், அறிவுறுத்துங்கள். இன்னமும் பாவாடை தாவணி, சேலையில் பெண்களும்; வேட்டி சட்டைகளில் ஆண்களும் இருந்தால்த்தான் யாழ்ப்பாண கலாச்சாரம் காக்கப்படும் என நீங்களாகவே கற்பனை பண்ணிகொண்டு, அவ்வாறு இல்லாதவர்களை கலாச்சார சீர்கேட்டாளர்களாக எண்ணினால்; உங்களுக்கு நாங்கள் சொல்லாது ஒன்றே ஒன்றுதான் "VERY SORRY"

உலகம் போகிற வேகத்தில்த்தான் இனிவரும் காலங்களில் எங்களாலும் போக முடியும்; கலாச்சாரம் முக்கியம்தான்; அதற்காக கலாச்சாரத்தை மட்டுமே கட்டி பிடித்துக்கொண்டு இங்குள்ளவர்கள் 50 ஆண்டுகள் பின்நிற்க வேண்டும் என்று கலாச்சார காவலர்கள் நினைத்தால் அவர்களுக்கு AGAIN "VERY SORRY"தான். நான் ஒன்றும் முற்போக்கு வாதம் செய்யவில்லை, இதுதான் இன்றைய யதார்த்தம். உலகத்துடன் தன்னை இணைக்கும் முயற்ச்சியில் எல்லா துறைகளிலும் வேகமாக வளர்ந்து வரும் யாழ்ப்பாணத்தின் இன்றைய தளம்பல் நிலை தற்காலிகமானது; தளம்பல் நிலை சீரடைந்து உரிய வளர்ச்சியை எட்டும்போது இப்போது காணப்படும் சில வேண்டத்தகாத 'சீரழிவுகள்' நிச்சயமாக இல்லாதுபோகும், இல்லாது போக வேண்டும்!!!!!!!!!

அந்த நாளுக்காக காத்திருக்கும்,
யாழ் மக்களில் ஒருவன்.