Wednesday, February 1, 2023

இது கதையல்ல நிஜம்.





அப்போது அந்த சிறுமிக்கு ஐந்து வயதுக்கு உள்ளாகத்தான் இருக்கும், பட்டாம்பூச்சியாக பறக்க வேண்டியவயத்தில் தாய்,தந்தை இரண்டுபேரையும் இழந்து ஒரு கிறிஸ்தவ பாதிரியாரின் அரவணைப்பில் ஒரு 'சிறுவர்கள் இல்லத்தில்' சேர்க்கப்பட்டாள். சொந்தம் என்று சொல்வதற்கு உறவுகளென்று யாருமில்லை, அங்கிருந்தே தனது பாடசாலை கல்வியை பயின்ற அந்த சிறுமி காலத்தின் வேகத்திற்கு இணையாக திருமண வயதை அடைந்தாள். கன்னிப்பருவத்தில் எல்லோருக்கும் வரும் காதல் உணர்வு ஒரு வாலிபன்மீது அவளுக்கு ஏற்படவே தான் விரும்பியவினையே கைப்பிடித்தாள்.

அதுதான் அவளுக்கு வாழ்க்கையில் ஏற்ப்பட்ட முதல்ப்பிடிப்பு, இவர்களது காதலின் அடையாளமாக ஒரு குழந்தையும் பிறந்தது. அன்பான கணவன், புதிதாக மழலை செல்வம், பணவசதி குறைவு என்றாலும் மனநிறைவான தனது இளம் (மழலை, குழந்தை, கன்னி) பருவத்தின் வெறுமையை பூரணப்படுத்தும் விதமாக குடும்பவாழ்க்கை அவளுக்கு மகிழ்ச்சியாக அமைந்தது.

அப்போதுதான் அவளது வாழ்வில் மிகப்பெரும் பூகம்பம் வெடித்தது. சிலநாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த அவளது கணவர் காய்ச்சல் குறையாததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஓரிருநாளில் இவ்வுலகை விட்டு பிரிந்துவிட்டார். அவளால் அந்த துயரத்தை தாங்க முடியவில்லை, கணவன் இறந்து 30 நாட்களுக்குள் தான் தனது கணவரிடம் போய்ச் சேர்ந்துவிடுவேன் அன்று கூறியபடியே அழுதுகொண்டிருந்த அந்த அபாக்கியவதி மூன்றுமுறை தற்கொலை முயற்சி செய்து காப்பாற்றப்பட்டு இறுதியாக ஒருநாள் நள்ளிரவில் நான்காவது தடவையாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்துவிட்டார். கணவன் பிரிந்து 30 நாட்களில் தன்னை மாய்த்தபோது தான் ஈன்ற மழலைக்கு வயது வெறும் 45 நாள்த்தான் என்பது அவருக்கு தெரியாததல்ல.

ஒருபக்கம் அவருக்காக அனுதாபப்பட்டாலும் அவரது தற்கொலையை சரியென்றும், தவறென்றும் இருவேறு பார்வையில் ஊர்மக்கள் விவாதித்தனர். தற்கொலை என்பது கோழைத்தனம், தனது குழந்தையை அவர் நினைத்து பார்த்திருக்கவேண்டும் என ஒரு பிரிவினரும், அவளும் என்னத்தை செய்வாள்? சிறுவயதில் இருந்து வெறுமையோடு வாழ்ந்தவளுக்கு கிடைத்த முதற்பிடிப்பு சொற்பநாளிலேயே தன்னைவிட்டு போனதை அவளால் எப்படி தாங்கமுடியும்? என்று இன்னொரு தரப்பும் தத்தமது தரப்பில் இருந்து நியாயத்தை பிளந்தாலும் அந்த பெண்ணின் மனநிலை எப்படி இருந்திருக்குமென்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். எது எப்பிடியோ இன்று அவளது குழந்தைக்கு அவளது நிலைதான், ஆம் பிறந்து 45 நாட்களில் அந்த குழந்தைக்கு கிடைத்த பெயர் அநாதை.

இந்த நிலைக்கு யார் காரணம்?(கடவுளா? இயற்கையா? விதியா?)

இவற்றில் உங்கள் நம்பிக்கைக்கு எது பொருந்துதோ அதை நீங்கள் எடுத்து கொள்ளலாம், ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் கவனக்குறைவுதான் முக்கியகாரணம். அப்படி இவர்கள் கவனக்குறைவாக இருந்தது யாரிடம்?/எதில் ?



நுளம்பிடம் (வேடிக்கை அல்ல), ஆம் இவர்கள் கவலையீனமாக இருந்தது டெங்கு நோயை பரப்பும் Aedes albopictus என்கிற நுளம்பிடமும், காய்ச்சல் வந்ததும் உடனடியாக மருத்துவமனையை நாடாமல் தாங்களே மருந்துகளை வாங்கி உட்கொண்டு டெங்குநோய் கிருமிகளை வளரவிட்டதிலும்தான்.

காய்ச்சல் சாதரணமாக காய்ந்தாலே உடனடியாக மருத்துவரை நாடவேண்டும், இரண்டு நாட்களுக்குள் காய்ச்சல் விடாவிட்டால் இரத்த பரிசோதனை செய்யவேண்டும் என்று பலதடவைகள் பத்திரிக்கைகளில் எழுதியும் பலரும் இதை சாட்டை செய்யவில்லை. இதனால் கடந்த 6 மாதத்திற்குள் 25 இக்கும் மேற்பட்டவர்கள் டெங்கால் உயிரிழந்துள்ளனர், 4000 பேருக்குமேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீடுகளில் வாய்க்கால்களில் நீரை தேங்கவிடவேண்டாம், நீர் தேங்கும் எந்த பொருட்களையும்(தேங்காய் சிரட்டைகள், யோக்கட் கிண்ணங்கள் போன்றன) தேக்கிவைக்கவேண்டாம், குப்பைகளை புதையுங்கள் அல்லது எரியுங்கள், அடர்த்தியான குரோட்டன் செடிகளின் இலைகளை கத்தரியுங்கள், புற்கள் வீட்டு முற்றத்திலோ வீட்டின் வெளிப்பகுதியிலோ இருந்தால் அவற்றை செருக்குங்கள் என சுகாதார உத்தியோகஸ்தர்களும் பொலிசாரும் இணைந்து ஒலிபெருக்கிகளில் வீதிகளில் பிரச்சாரம் செய்தபோது காதில் வாங்கிக்கொள்ளாத நம்மாளுகள் இப்போது சுகாதாரம் குறைவான வீடுகளை திடீரென சோதனைசெய்து அகப்படும் குடும்ப தலைவரை நீதிமன்றில் ஆஜர்செய்து குற்றப்பணம் அறவிடப்படுகின்றது என்றதும் ஓரளவு வீடுகளை சுத்தமாகவைத்திருக்க முயற்சிக்கின்றனர்.

இப்போது மழைகாலம் ஆரம்பித்திருப்பதால் தண்ணீர் தேங்குவதும், புற்கள் முளைப்பதும், குரோட்டன் செடிகள் வளர்வதும் முன்னைவிட அதிகமாக இருப்பதால் நுளம்புகள் அதிகரிக்க தொடங்கிவிட்டன. டெங்கு ஒரு தொற்றுநோய் அல்ல என்பதால் அனைவரும் முடிந்தவரை உங்கள் வீடுகளையும் வீதிகளையும் சுத்தமாக வைத்திருந்தாலே டெங்கை குறைக்கலாம். சாதாரண காய்ச்சல் அறிகுறிகள் ஏற்ப்பட்டாலே மருத்துவமனையை நாடுங்கள், நீங்களே வைத்தியராகாதீர்கள்.

இலங்கையின் வடபகுதியில் இயற்க்கை அழிவுகள் இல்லை, ஆயுதத்தாலான அழிவுகளும் இப்போது இல்லை என்பதால் இயற்கையை சமப்படுத்த ஏதாவதொரு ரூபத்தில் அழிவு வரத்தான் செய்யும். ஒருபக்கம் வீதிவிபத்துக்கள் ஆட்களை பதம் பார்த்தாலும்(இதுபற்றி ஒரு தனிப்பதிவு எழுதவேண்டும்) பெரும்பாலும் நோய்கள் வடிவிலே இயற்கை சமப்படுத்தப்படலாம் என்பதால் முடிந்தவரை துப்பரவாகவும் சுகாதாரமாகவும் இருக்கபாருங்கள்.

(மேலுள்ள சம்பவம் பதிவுக்காக எழுதப்பட்டதல்ல, அது ஒரு உண்மை சம்பவம்.)

Monday, April 4, 2016

பென் ஸ்ரோக்ஸ்ம் யோக்கரும்!



யோக்கர்....



குட் லென்த், சோர்ட், ஃபுல்  போல்கள் போல யோக்கருக்கு பந்தை பிட்ச் செய்யும் இடத்தை இதுதான் என  வரையறைப்படுத்த முடியாது!   போலரால் உண்மையில் யோக்கர் என்று ஒன்றை வீச முடியாது, பட்ஸ்மனை வேண்டுமானால் அந்தப்பந்தை யோக்கராக்கிக் கொள்ளும்படி செய்யமுடியும். பட்ஸ்மனின் ஸ்ரான்ஸ், மூவ்மண்ட் போன்றவற்றை வைத்து இந்தப்பந்தை பட்ஸ்மன் ஜோக்ட் ஆக்குவான் என்று எதிர்பார்த்து வீசுவதுதான் யோக்கரின் சிறப்பு!

 துடுப்பாட்ட  வீரரால் மேற்கொள்ளப்படும்  அசைவுகளாலும், வீசப்படும் பந்து சிறிது விலகினாலும் யோக்கர்கள் பரிதாபமாக்கப்பட்டுவிடும்! டெஸ்ட் மச்  யோக்கர்கள் லிமிட்டர் ஓவேர்சிலும் சிறப்பானவை, எதிர்பார்க்காத நேரத்தில் வீசப்படும் யோக்கர்கள் கொடுக்கும் விக்கட்டுகள் அலாதியானவை. லிமிட்டட் ஓவர்சை பொறுத்தவரை டெத் ஓவர்களிலேயே அதிகமான யோக்கர்கள் வீசப்படும். சில சமயங்களில் யோக்கர்தான் வீசப்படும் என்று எதிர்பார்த்து நின்றாலும் பட்ஸ்மனால் யோக்கர்களை ஓட்டங்களாக மாற்ற முடியாத அளவுக்கு போலேர்சின் துல்லியம் இருக்கும்.

எங்கள் காலங்களில்  வசீம், வக்கார், அக்தர் என பாகிஸ்தான் வேகங்கள் ரிவேஸ் ஸ்விங் யோக்கர்களில்  மிரட்டிய நாட்கள் மறக்க முடியாதவை, அதிலும் ட்டெயில் என்டேர்சுக்கு வசீம்  அடிக்கும் சொலிட் யோக்கர்கள் சான்சே இல்லை!  புதிய பந்தில் யோக்கரில் கலக்கியவர் இங்கிலாந்தின் டரன் கஃப்!, எனக்கு தெரிந்து  கஃப் போன்று புதிய பந்தில் யோக்கரில் மிரட்டியவர்கள் யாருமில்லை, குறிப்பாக லெப்ட் ஹான்ட் பட்ஸ்மனுக்கு கஃப் சிம்மசொப்பனம்.

இவங்களுக்கெல்லாம் அப்புறம்தான் வந்தான் மலிங்க! யோக்கர்களின் அத்தனை பரிமாணங்களையும் அலாதியாக கையாள்வதில் எனக்கு தெரிந்து மலிங்கவுக்கு  நிகர் வேறு யாரும் இல்லையென்பேன். இன் ஸ்விங், அவுட் ஸ்விங், ரிவேஸ்  ஸ்விங் , (F)ப்லைட்டட்  ஸ்லொவ், (F)ப்ளற் ஸ்லொவ் என யோக்கர்களை ஓப் ஸ்ரம், லெக் ஸ்ரம், மிடில் ஸ்ரம், 'அவுட் சைட் தி ஓப் ஸ்ரம்' என  தான்  நினைக்கும் ஏரியாவில் பந்தை வீசி  பட்ஸ்மனை  யோக்கராக்க வைக்க  மலிங்கபோல் வேறெவராலும் முடியாது!

மலிங்க - கோட் ஒஃப் யோக்கர்  !!


இப்பேர்ப்பட்ட  யோக்கர் ஸ்பெஷலிஸ்டான மலிங்கவையே யோக்கரை மறக்கும் அளவுக்கு அடித்து துவைத்த சாமுவேல்ஸின் இனிங்க்சை இலங்கை ரசிகர்கள் எவரும் இலகுவில்  மறந்துவிட முடியாது!  மலிங்க யோக்கர் எறியப்போகிறார் என்பதை  எதிர்பார்த்து, சொட்டை அஜெஸ்ட் பண்ணியும், இம்ப்ரவைஸ் செய்தும் பெரும்பாலான பட்ஸ்மன்ஸ் தோல்வியையே கண்டிருந்த நிலையில்; சாமுவேல்ஸ் மட்டும் மலிங்காவின் யோக்கர்களை ஃபுல்  லெந்தாக்கி வெட்டிய வெட்டுக்கள் அபாரம். சாமுவேல்ஸின் அந்த அஜஸ்மண்டுகள்தான் கிரிக்கட்டின் நுணுக்கங்கள்!

யோக்கர்கள் பட்ஸ்மனால் சரியான முறையில் அஜெஸ்ட் செய்யப்பட்டால் ஃபுல் லெந்தாகவும், லோ ஃபுல்டோசாகவும் ஆக்கமுடியும்; ஆம் யோக்கர்கள் பட்ஸ்மன் நினைத்தால்  இல்லாமல் செய்யப்படக் கூடியவையே! பல சமயங்களில் யோக்கர்கள் மிஸ் யோக்கர்கள் ஆகி ஃபுல்டோஸ் ஆகிவிடும்; சேட்டன் ஷர்மா யோக்கர் வீசப்போய் அது மிஸ்டாகி  அடிக்கப்பட்ட மியாண்டாட்டின் சிக்ஸர் சரித்திரம்.  யோக்கர்கள் இறுதி ஓவர்களுக்கு தேவையானவைதான், ஆனால் அது வீசப்படும் சூழ்நிலை, வீசப்படும் வீரர், எதிர்கொள்ளும் வீரர், அப்போதைய காலநிலை என பல விடயங்கள் சார்ந்துதான் சாதக/பாதக முடிவை கொடுக்கும்.


பென் ஸ்ரோக்ஸ் - : பைனல் ஓவர், இங்கிலாந்து யோக்கருக்கு திட்டமிட்டே தயாரானது, 19 ஓட்டங்களைக் கட்டுப்படுத்த யோக்கர் சிறந்த தெரிவுதான், ஆனால் காலநிலை பந்தை வழுக்கும் நிலையில் வைத்திருந்தது, முதல் பந்து மிஸ்ட்  யோக்கராகி லெக் சைட்டில் பட் ரேஞ்சில் விழுந்தது, அதை அடிக்க பரத்வைட் தான் தேவை இல்லை, ஸ்லொக் பண்ண தெரிந்த யாருக்குமே அது ஆறுதான்!  முதல் பந்து சிக்ஸ் ஆகியவுடன் நிச்சயம் லெந்தை மாற்ற யோசித்திருக்க வேண்டும், மாற்றவில்லை, இந்த தடவை யோக்கர் சரியாக விழுந்தது; ஆனால் அதை ஃபுல் லெந்தாக்கி பரத்வைட் வெளியே அனுப்பினார், இப்போது கூட ஸ்ரோக்கும் இங்கிலாந்தும் திட்டத்தை மாற்றவில்லை, மீண்டும் ஒரு யோக்கர், மீண்டும் பரத்வைட் அதை ஃபுல் லெந்தாக்கி  வெளியே அனுப்பினார்!

முதல் சிக்ஸ் உடன் நிச்சயம் லென்த் மாற்றம் அல்லது வேரியேஷன் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும், குறைந்த பட்சம் ஓஃப் ஸ்டம் யோக்கராவது ட்ரை பண்ணி இருக்கலாம், எல்லாம் முடிந்துவிட்டது!  பரத்வைட் ஹீரோவாகிவிட்டார், இனிமேல் அவர் T/20 தனியார் சந்தைகளில் நல்ல விலை போவார். ஸ்ரோக்ஸ் கூட மனக் காயத்தில் இருந்து  இலகுவில்  மீண்டு வருவார்! அதேநேரம்   மேற்கிந்திய தீவுகளின் இரு T/20 உலக கிண்ணமும் யோக்கர்களை சிதறடித்து பெறப்பட்டு வரலாறாகிவிட்டது :-)

Tuesday, August 19, 2014

மகேலவும், நானும், சில பசுமையான ஞாபகங்களும்!





1997 - பகல் நேரங்களில் மின்சாரம் அற்ற யாழ்ப்பாணம், இரவில் அள்ளித்தெளிக்கும் சொற்ப நேரத்து மின்சாரத்தின் தயவில் அன்றைய எமது இரண்டு அலைவரிசைகளில் ஒன்றான டூடடர்சன் தொலைக்காட்சியின் இரவுச் செய்திகளின் விளையாட்டுச் செய்தி "இலங்கை அணி 39 ஓட்டங்களுக்கு ஒரு இலக்கினை இழந்துள்ளது, இந்தியா முன்னதாக எட்டு இலக்குகளை இழந்து 537 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது" என்கின்ற செய்தியை சொன்னது, எனக்கு இது அன்று ஒரு சாதாரண செய்தி! டூடடர்சனின் தமிழ் செய்திகளில் கிரிக்கட் வீரர்களின் பெயர்களின் உச்சரிப்புக்கள் வேறுமாதிரியாக சொல்லப்படும், கேட்பதற்கு நகைச்சுவையாக இருக்கும் (உதாரணமாக மறவன் அட்டப்பட்டு, நாதன் ஆஸ்லே, மார்க் & ஸ்டீவ் வா)

மறுநாள் இரவுச் செய்திகளில் ஓட்ட எண்ணிக்கை சற்று கவனத்தை ஈர்த்தது, மேலதிக இலக்குகள் இழப்பின்றி அன்றைய நாளை இலங்கை 322 ஓட்டங்களைப் பெற்று நிறைவு செய்திருந்தது! ஆனால் மறுநாள் செய்திகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது; அந்தநாள் முடிவிலும் மேலதிக விக்கட்டுகள் வீழ்த்தப்படவில்லை. சனத் ஜெயசூர்யா 326 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் , கூடவே ரொஷான் மகாநாம 225 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார், அப்போது இலங்கை 587 ஓட்டங்களை பெற்றிருந்தது! அனைத்து இலங்கை கிரிக்கட் ரசிகர்களின் அன்றைய நாளின் ஒரே எதிர்பார்ப்பு; சனத் ஜெயசூர்யா நாளை டெஸ்ட் போட்டிகளின் இன்னிங்க்ஸ் ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய தனிமனித ஓட்ட சாதனையான பிரைன் லாராவின் 375 ஓட்டங்களை முறியடிப்பாரா என்பதுதான்!

காலைப் பொழுதும் புலர்ந்தது, மணி பத்தை எட்டியது. மின்சாரமற்ற நேரங்களில் டின்னரை மோர்ந்து பார்க்கக் கொடுத்து, ஏமாற்றி மண்ணெண்ணையில் இயங்க வைக்கப்பட்ட ஜெனரேட்டர் துணைகொண்டு; ஆங்காங்கே சில வீடுகளில் பல ரசிகர்கள் ஆவலோடு பாத்திருக்க சனத் 340 ஓட்டங்களில் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தார்! கூடவே பல ஜெனரேட்டர்களும் நிறுத்தப்பட்டுவிட்டன! மாலையில் இலங்கை பெற்ற இமாலய ஓட்டங்களான 952/6 சாதனை எண்ணிக்கை; நாம் ஊரில் விளையாடிக் கொண்டிருக்கும் மைதானத்தில் பேசப்படுகின்றது! கூடவே அரவிந்தவின் சதம், அர்ஜுனவின் அரைச்சதம், கூடவே ஒரு புதுப்பெயர் பெற்ற அரைச்சதம், அந்தப்பெயரை முதல் முதலில் கேட்ட தருணம் அதுதான்!! - மகேல ஜெயவர்த்தன

"19 வயது சின்னப் பெடியன் நல்லா விளையாடினான்" என்று அவர்கள் பேசும் போது; அன்று யாரவன் என ஏற்பட்ட எதிர்பார்ப்பு, இன்று 17 வருடங்கள் ஆகியும் ஒவ்வொரு தடவையும் மகேலவை கிரீசில் காணும்போதெல்லாம் இம்மியளவும் குறையவில்லை!! மகேல என்னும் சொல் வெறும் பெயராக அல்ல, 17 ஆண்டுகள் என்னோடு கைகோர்த்து, நீங்கா நினைவாக, பசுமையான பசுமரத்து ஆணிபோல் பயணித்த ஓர் அற்புத நிகழ்வு! அந்த நிகழ்வின் சில துளிகளையும், மெய் சிலிர்ப்புக்களையும், பெருமைகளையும் பகிரலாமென்று நினைக்கிறேன்!!

காயம் காரணமாக அணியில் இல்லாமல்போன ஹஷான் திலகரத்னாவுக்கு பதிலாக கிடைத்த வாய்ப்பில்; இலங்கையின் 69 ஆவது டெஸ்ட் வீரராக அறிமுகமாகி தனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் இந்தியாவுக்கு எதிராக ஆடிய மகேலவுக்கு; மூன்றாவது போட்டியை ஆடும் வாய்ப்பு பத்து மாதங்களுக்கு பின்னரே மீண்டும் கிடைக்கப்பெற்றது, இம்முறை நியூசிலாந்துக்கு எதிராக. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளும் மகேலவின் கிரிக்கட் வாழ்வின் முக்கிய திருப்புமுனைகளாக அமைந்தன! இவ்விரு போட்டிகளுமே மகேலவின் மீதான நம்பிக்கையை தேர்வாளர்களுக்கும் , ரசிகர்களுக்கும் அதிகப்படுத்தியது. எதிர்கால இலங்கை கிரிக்கட்டைக் கலக்கப்போகும் நாயகனாக மகேலவின் பெயர் இலங்கை டெஸ்ட் அணியில் உறுதிசெய்யப்பட்டதும் இத்தொடரில்தான்.



பகல் நேரத்திலும் மின்சாரம் வழங்கப்பட ஆரம்பித்த புதிது, முதல் முறையாக இலங்கையின் ஆசுவாசமாக ஒரு டெஸ்ட் போட்டியை பார்க்கக் கிடைத்தது! முதல் இன்னிங்சில் மகேல 52 ஓட்டங்களைப் பெற்றிருந்தாலும்; இலங்கை போட்டியின் தோல்வியைத் தவிர்க்க போராடிய வேளையில், அரவிந்த டீ சில்வாவுடன் இணைந்து தடுப்பாட்டம் ஆடிய மகேல 255 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் (SR - 21.17), இலங்கைக்கு இந்தப்போட்டி தோல்வியில் முடிவடைந்திருந்தது!! அடுத்த டெஸ்ட் போட்டி காலி விளையாட்டரங்கில் இடம்பெற்றது, இலங்கையின் இன்றைய பிரபலமான அழகிய டெஸ்ட் மைதானமாக விளங்கும் காலி மைதானத்தின் முதல் சர்வதேசப்போட்டி அதுதான்!

முதல் போட்டியின் தோல்விக்கு பழிதீர்க்க காத்திருந்த இலங்கைக்கு அந்தப்போட்டியில் கிடைத்ததோ இன்னிங்ஸ் வெற்றி!! ஆட்ட நாயகன் வேறுயாருமல்ல, 20 வயதேயான இளம் நட்சத்திர வீரர் மகேல தான்!! சனத், மார்வன், அரவிந்த, அர்ஜுன, ஹஷான், களுவிதாரண என இலங்கையின் அனுபவ/பிரபல வீரர்கள் சரியச்சரிய, மூன்றாம் இலக்க வீரராக களமிறங்கிய மகேல மட்டும் நிலைத்து நின்று 278 பந்துகளில் 167 ஓட்டங்களை (SR - 60) குவித்திருந்தார், இலங்கை சார்பில் வேறு எந்த வீரரும் 40 ஓட்டங்களைக் கூட தாண்டவில்லை, நியூசிலாந்தின் நதன் அஸ்டில் பெற்ற 53 ஓட்டங்கள்தான் அந்தப்போட்டியில் பெறப்பட்ட ஒரே அரைச்சதம்! பந்துவீச்சுக்கு சாதகமான காலி ஆடுகளத்தில் மகேல பெற்ற இந்த 167 ஓட்டங்கள் மகேலவின் எதிர்காலத்தையும், இலங்கைக் கிரிக்கட்டின் எதிர்காலத்தையும் எதிர்வுகூறியது! அடுத்தடுத்த இரண்டு போட்டிகளிலும் முரண்பட்ட இனிங்ஸ்களை ஆடி இருபது வயதிலேயே தன்னை ஒரு முதிரிந்த நுணுக்கமான வீரராக வெளிக்காட்டியிருந்தார் மகேல!

மகேலவின் ஏழாவது டெஸ்ட் போட்டி, அது ஆசிய கிண்ணத்துக்கான டெஸ்ட் போட்டி. அப்போது பாடசாலையில் இலங்கை இந்திய கிரிக்கட் ரசிகர்களின் மோதல் உச்சத்தில் இருந்த நேரம்! இலங்கை தோற்றால் மறுநாள் பாடசாலையில் என்னைச் சுற்றி இந்திய ரசிகர் கூட்டம் சர்க்கரையை மொய்க்கும் ஈக்களாய் குழுமிவிடுவார்கள், எப்படி அவர்களின் வாயை அடைப்பது என்பதை சிந்திப்பதில் தூக்கம் தொலைத்த இரவுகள் பல! அதேநேரம் இந்தியா இலங்கையிடம் தோற்றுவிட்டால் புரட்டாதிச் சனிக் காக்கைகள் போல ஒரு இந்திய ரசிகனும் கண்ணில் அகப்படமாட்டார்கள், அகப்பட்டால் அன்று அவர்களுக்கு சனிதான்.


முதல் இரு நாட்களும் இந்தியா புரட்டிப்போட்டிருந்தது, 500 ஓட்டங்களுக்குமேல் குவித்த இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கையை தொடர்ந்த இலங்கையின் இலக்குகள் ஒரு முனையில் சாயச்சாய மறுமுனையில் 3 ஆம் இலக்கத்தில் களமிறங்கிய இளம் சிங்கம் மகேலவின் அற்புதமான இன்னிங்ஸ் ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. சுழலுக்கு சாதகமான மைதானத்தில் இந்தியாவின் வரலாற்றுச் சுழல்பந்துவீச்சாளர்களான கும்ளேயும் ஹர்பஜனும் வீசிக்கொண்டிருக்க, மிகச் சிறப்பான நுணுக்கமான துடுப்பாட்டத்தின் மூலம் 242 ஓட்டங்களை மகேல குவித்தார். அனைத்து திசைகளிலும், அனைத்து விதமான கிரிக்கட் ஷொட்களையும் அழகாக விளையாடும் மகேலவின் ஒவ்வொரு அசைவிலும் ஒரு நளினம் இருந்தது!


ஒருசில வீரர்களுக்குத்தான் ஸ்டைல் இயல்பிலேயே இருக்கும்; உதாரணமாக சொல்வதானால் மார்க் வோ, அசாருதீன் போன்றோரை சொல்லலாம், மகேலவிடமும் ஸ்டையில் இயல்பிலேயே இருந்தது, அது துடுப்பாடும்போதும் சரி, களத்தடுப்பின் போதும்சரி அன்றிலிருந்து இன்றுவரை மாறாத அழகு! ஒவ்வொரு ஷொட்களையும் மகேல விளையாடும் நேர்த்தி கிரிக்கட்டை காதலிக்கும் எவருக்கும் சிலிர்ப்பைக் கொடுக்கும்; அதனால்தான் If Cricket is an Art, Mahela is Picasso என்று பெருமைப்படுத்தி சொல்வார்கள். அந்த சிலிர்ப்பை ஓட்டங்குவிக்கும் ஒவ்வொரு இன்னிங்ஸ்களிலும் மகேல உணரவைத்திருப்பார்.


1999 உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக அவுஸ்திரேலியாவில் இலங்கை, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் ஆடும் VB முக்கோணத்தொடர் இடம்பெறவிருந்தது. டெஸ்ட் வீரராக மட்டும் கணிக்கப்பட மகெலவை ஒருநாள் போட்டிகளுக்கும் பொருத்தமான வீரராக அடையாளம் காட்டியது இந்தத் தொடர்தான். VB தொடருக்கான இலங்கைக்கான குழாமில் முதற்சில போட்டிகளில் அரவிந்த டீ சில்வா சில காரணங்களுக்காக ஆடமுடியாத நிலை ஏற்படவே; அரவிந்தவிற்கான மாற்றீடாக இறுதி நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்டார் மகேல! தொடரின் முதல் சில போட்டிகளில் சோபிக்காவிட்டாலும்; மகேலவின் கிரிக்கட் வாழ்வின் முக்கியமான ஒரு போட்டி மகேலவிற்காக இந்தத் தொடரில் காத்துக்கொண்டிருந்தது!

இலங்கை யின் ஓர் தனியார் தொலைக்காட்சி போட்டிகளை ஒளிபரப்பியது, அவற்றை நேரடியாக பார்க்கும் வசதிகள் அப்போதைய யாழ்ப்பாணத்தில் இல்லை! பலாலியை மையமாக கொண்டு இயங்கிய இராணுவத்தினரின் தொலைக்காட்சியில் முதல் நாள் போட்டிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு மறுநாள் ஒளிபரப்பப்பட்டது. ஆரம்பப் போட்டிகளின் தோல்வி VB தொடர்மீது ஆர்வத்தை குறைத்திருந்தது, இந்நிலையில் ஒருநாள் மாலை உறவினர் வீடு ஒன்றிற்கு நானும் தம்பியும் சைக்கிளை மிதித்தபடி சென்றுகொண்டிருந்தோம். அப்போது மனோகரன் அண்ணை மறித்தார். மனோகரன் அண்ணை - பாடசாலைக்கு பக்கத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பவர், எங்களுக்கு எட்னா (EDNA) சாக்லேட் விற்றே பணக்காரனாகியிருப்பார் :-) எட்னா கவருக்குள் வரும் கிரிக்கெட் வீரர்களது ஸ்டிக்கர்கள் அப்போது இங்கு மிகப்பிரபலம்! அதிலும் 20 ரூபா எட்னா ஸ்டிக்கர்தான்; ஸ்டிக்கர் சேர்க்கும் அனைவரும் விரும்புவது. சில நேரங்களில் ஸ்டிக்கரை செலக்ட் செய்யப்போவதாக சொக்லேட்களை வாங்கி; ஸ்டிக்கர் திருட்டுகளும், எங்களிடம் டபிளாக இருக்கும் ஸ்டிக்கர்களை மாற்றி வைக்கும் சம்பவங்களும் நடைபெறும் :-)

வழிமறித்த மனோகரன் அண்ணன் "எப்பிடி அடி? குடுத்து விட்டாங்கள், 300 ஐக் கலைச்சிட்டாங்கள்" என்றார். ஆர்வமும், மகிழ்ச்சியும் அதிகரிக்க யார் அடித்தது என்று ஒரே குரலில் நானும் தம்பியும் கேட்டோம், அவர் "மாக்கட ஜெயவர்த்தன" என்றார்! இன்றுவரை மகேலவை செல்லமாக 'மாக்கட' என்று எங்களுக்குள் அழைப்பதுண்டு :-) மனோகரன் அண்ணையிடம் விடைபெற்று வீடு திரும்பும் வரை எங்களுக்கிருந்த மகிழ்ச்சி, மறுநாள் ஒளிப்பதிவு ஒளிபரப்பப்படும்வரை காத்திருந்த நிமிடங்களின் நீளங்கள் என்பன சொல்லிப் புரியாதவை!

அன்று 1999 ஜனவரி 23 - இலங்கைக் கிரிக்கட்டின் மறக்கமுடியாத ஓர்நாள்! VB தொடரில் இலங்கை இங்கிலாந்துக்கு இடையிலான போட்டி அடிலைட் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை பந்துவீசிக் கொண்டிருந்தது. போட்டியின் 18 ஆவது ஓவரின் நான்காவது பந்தை முரளிதரன் வீசிக்கொண்டிருந்தபோது; போட்டியின் இரண்டாம் நடுவராக (Square Leg Umpire) கடமையாற்றிக் கொண்டிருந்த 'ரோஸ் எமர்சன்' என்ன நினைத்தாரோ தெரியவில்லை, முரளி வீசிய அந்தப் பந்தை முறைதவறி வீசப்பட்டதாக அறிவித்தார், காரணம் முரளியின் பந்துவீசும் முறை என சொல்லப்பட்டது!

தலைமை என்றால் என்ன? ஒரு அணித் தலைவர் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கான விடை அன்று கிடைத்தது! சில நொடிகளில் ரோஸ் எமர்சனுக்கும் அர்ஜுனவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது. அர்ஜுனாவின் முகத்தில் கடும் கோபம் தெரிந்தது,சில நிமிட வாக்குவாதத்தின் பின்னர் அர்ஜுன இலங்கை அணியை கூட்டிக்கொண்டு எல்லைக்கோட்டுக்கு சென்றுவிட்டார். உடனடியாக இலங்கை அணியின் முகாமையாளரும், போட்டி மத்தியஸ்தரும் இலங்கைக் கிரிக்கட் சபையுடன் பேசி ஒருவழியாக சமரசம் ஏற்பட்டது. முரளி தொடர்ந்து பந்துவீசுவதாக முடிவெடுக்கப்பட்டது, ஆனால் ரோஸ் எமர்சன் முதல் நடுவராக இருக்கும் திசையிலிருந்தே பந்து வீசுவதென்று முடிவு செய்யப்பட்டது! (முதல் நடுவருக்கு பந்துவீசும் முறை பற்றி முடிவெடுக்க அதிகாரமில்லை) முரளி பந்து வீச வருகிறார் around Through வழியாக பந்துவீச ஆரம்பிக்கிறார், எமர்சன் விக்கட்டுக்கு சற்று பின்னே நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார், அவர் முரண்டு பிடிக்கிறார், அர்ஜுன மீண்டும் சிங்கமாகிறார், இம்முறை எமர்சன் பின்வாங்குகிறார்.



ஆனால் முரளியின் பந்தினை இங்கிலாந்தின் கிராம் ஹிக் பதம் பார்க்க தொடங்குகிறார், ஆட்டத்தின் போக்கு இங்கிலாந்தின் பக்கம் இலகுவில் திரும்புகிறது, 302 ஓட்டங்களை இங்கிலாந்து 50 ஓவர்கள் நிறைவில் பெற்றுக்கொள்கின்றது! அன்றைய தேதியில், அதிலும் அவுஸ்திரேலிய மண்ணில் இதுவொரு மிகப்பெரும் இலக்கு! இலக்கினை நோக்கி இலங்கை அடியெடுத்துவைக்க நினைக்கையில் ஓட்டம் பெறாமல் களுவிதாரண Run-out ஆகிறார், அடுத்துவந்த அத்தப்பத்துவும் உடன் வெளியேற, திலகரட்ணவின் ஆமைவேக ஆட்டத்தை தன் அதிரடியால் சமப்படுத்திய சனத்; வேகமாக 36 பந்துகளில் அரைச்சதம் கடந்து ஆட்டமிழக்கிறார்; அப்போது இலங்கையின் ஓட்ட எண்ணிக்கை 10 ஓவர்களில் 3 இலக்குகளை இழந்து 68 ஓட்டங்கள்!

நட்சத்திர வீரர் அரவிந்த டீ சில்வா இல்லாத நிலையில்; இந்தப் போட்டியில் இலங்கையின் வெற்றிக்கனி வாய்ப்பு எட்டாக்கனி என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்தது. அப்போதுதான் மைதானம் நுழைந்தான் அந்த 20 வயது இளைஞன். ஹஷான், அர்ஜுன என இரு அனுபவங்களும் துணை நிற்க அற்புதமான சதத்தை கடந்தான் அந்த இளம் சிங்கம், எங்கள் மகேல! அனுபவ இங்கிலாந்தை அன்னியமண்ணில் ஒரு உணர்ச்சிமிக்க போட்டியில் பந்தாடிய மகேல 111 பந்துகளில் 120 ஓட்டங்களை குவித்து வெளியேறினார்! உப்பிள் சந்தனவின் அதிரடி கைகொடுக்க வெற்றிக்கான ஓட்டத்தை அன்றைய சர்ச்சை நாயகன் முரளிதரன் பெற்றுக்கொடுக்க இலங்கை உணர்ச்சிபூர்வமான வெற்றிக்கனியை பறித்தது, ஆட்டநாயகனாக 20 வயதான மகேல.

தொடர்ந்து வாசிம் அக்ரம், சொகைப் அக்தர், சக்லின் முஸ்டாக் என பலமான பாகிஸ்தான் பந்து வீச்சு வரிசையை எதிர்கொண்டு மகேல பெற்றுக்கொண்ட அவரது இரண்டாவது ஒருநாள் சதமும் மகேலாவின் முக்கியமான இனிங்ஸ்களில் ஒன்று! இந்தப்போட்டியைக் காண 10 Km வரை சைக்கிள் மிதித்து நண்பன் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன், மின்கலத்தில் இயங்கும் ஒரு சிறிய கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில் பார்த்த அந்த இனிங்ஸ்சும், நினைவுகளும் இன்னமும் பசுமையாக உள்ளது, 99 ஓட்டங்களில் மகேல Run-Out இல் இருந்து மயிரிழையில் தப்பியதுகூட!

அடுத்து உலகக் கிண்ணம் 1999, நடப்பு சாம்பியனாக போட்டிகளில் பங்கேற்ற இலங்கைக்கு மிகப்பெரும் அடி காத்திருந்தது, முதற் சுற்றுடன் வெளியேறியது இலங்கை. அதிலும் இந்தியாவுடனான படுதோல்வி பாடசாலையில் இலங்கை ரசிகர்களான எமக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தது!! உலகக் கிண்ண தோல்வியைத் தொடர்ந்து 1996 இல் கொண்டாடப்பட்ட நாயகர்கள்மீது கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இலங்கை கிரிக்கட் தமது அடுத்த கட்டத்தை நோக்கி சிந்திக்கத் தொடங்கியது, முதற்கட்டமாக இலங்கைக் கிரிக்கட்டின் தூண்களான அரவிந்த, அர்ஜுன இருவரும் ஒருநாள் அணிகளில் இருந்து நீக்கப்பட்டனர். புதிய தலைவராக சனத் ஜெயசூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டார், உலகக்கிண்ணப் போட்டிகளில் ஓரளவேனும் ஓட்டம் குவித்திருந்த ரொஷான் மகாநாம கிரிக்கட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது அதிர்ச்சியாக இருந்தது, காரணம் தலைமைப் பதவி கிடைக்காதது என்று பேசப்பட்டது!


உலகக்கிண்ண போட்டிகளில் பெரிதளவில் சோபிக்காவிட்டாலும் இலங்கை சார்பாக கணிசமான ஓட்டங்களை பெற்றிருந்த மகேலவின் துடுப்பாட்டம் எல்லோரையும் கவர்ந்திருந்தது! இலங்கை கிரிக்கட்டும் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு மகேலவை அணியின் உபதலைவராக அறிவித்தது. 20 வயதில் இது மகேலவிற்கு ஒரு மிகப்பெரும் அங்கீகாரம். சனத் தலைமையிலான அணி; எடுத்த எடுப்பிலேயே இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா பங்குகொண்ட முக்கோணத் தொடரை சொந்தமண்ணில் வெற்றி கொண்டதோடல்லாமல், முதல்தர அணியான அவுஸ்திரேலியாவுடன் முதல் போட்டி மற்றும் போட்டித் தொடர் வெற்றியையும் பதிவு செய்தது!



மகேலவின் டெஸ்ட் போட்டிகளின் மீதான ஆளுமை அதிகரித்துக்கொண்டு சென்றாலும் ஒருநாள் போட்டிகளில் மகேலவின் ஓட்டக்குவிப்பு சராசரியாகவே இருந்து வந்தது. தனது விக்கட்டை தானே தூக்கியெறியும் விதமாகவே பல ஒருநாள் போட்டிகளை மகேல ஆடிக்கொண்டிருந்தார்! முக்கிய தருணங்களில் நிதானமாக பொறுப்பாக ஆடும் திறன், சாதாரண நேரங்களில் மகேலவிடமிருந்து வெளிப்படுவதில்லை, நிலைத்து நிற்கும் இனிங்ஸ்களிலும், 40 ஓவர்களைக் கடந்துவிட்டால்; ஒவ்வொரு பந்தையும் அடித்தாட வேண்டும் என்கின்ற மனநிலையில் காணப்படுவார். தனது இந்த இயல்பை அவர் இறுதிவரை மாற்றவில்லை! அதனை மாற்ற முடியாதுள்ளதாக மகேலவே கூறியிருந்தார். மகேல ஆடியிருக்கும் ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கைக்கும், அவர் திறனுக்கும் அவர் பெற்ற ஓட்டங்கள் குறைவானவையே!

இந்நிலையில் 2000 ஆம் ஆண்டு இலங்கையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இலங்கை கிரிக்கட்டால் மகேலவின் உபதலைவர் பதவி மீளப்பெறப்பட்டு, அத்தப்பத்து உபதலைவராக்கப்பட்டார். மகேலவின் துடுப்பாட்டத்தை சீர் செய்யவே இந்த முடிவு என்று சொல்லப்பட்டது. பதவி பறிக்கப்பட்ட அடுத்தடுத்த இரண்டு போட்டிகளிலும் தலா ஒரு அரைச்சதத்தை மகேல பெற்றிருந்தார். அடுத்து தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரின் முதல்ப் போட்டியில் மிகச் சிறப்பான இனிங்க்ஸ் ஒன்றை ஆடி மீண்டும் ஒரு 167 ஓட்டங்களை காலி மைதானத்தில் குவித்தார், 165,166,167 ஓட்டங்களில் மகேல 5 தடவைகள் ஆட்டமிழந்துள்ளார். தென்னாபிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அர்ஜுனவின் இறுதி இனிங்ஸில்; அவருடன் இறுதிவரை களத்தில் இணைந்து ஆடி, மற்றொரு சதத்தையும் அதே தொடரில் பெற்றுக்கொண்டார்!

இலங்கையின் அடுத்த தொடரின் முதல் போட்டி தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான டேர்பன் மைதானத்தில் இடம்பெற்றது. இந்தப் போட்டியின் முதல் இனிங்ஸில் மகேல 98 ஓட்டங்களை பெற்றவேளையில் ஆட்டமிழந்தார், மகேலவின் கிரிக்கட் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஆட்டமிழப்பு இது. அனைத்து டெஸ்ட் விளையாடும் நாடுகளுடனும் சதமடித்துள்ள மகேலவிற்கு; வெறும் 2 ஓட்டங்களால் டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளிலும் சதமடித்திருக்கும் வீரர்கள் பட்டியலில் இணையும் வாய்ப்பு இறுதிவரை அமையவில்லை.

தொடர்ந்து டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சதங்களுடன் ஓட்டங்களைக் குவித்துக்கொண்டிருந்த மகேலவிற்கு மற்றுமொரு மைல்கல் 2002 ஆம் ஆண்டு கடந்தது. கிரிக்கட்டின் தாய்வீடான இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் சதமடித்து, டெஸ்ட் கிரிக்கட் விளையாடும் வீரர்களின் முக்கிய கனவுகளில் ஒன்றை நிறைவேற்றினார். பின்னர் 2006 இல் மீண்டும் ஒரு சதம் மகேலவால் லோட்சில் பெறப்பட்டது. போட்டியின் நான்காம், ஐந்தாம் நாட்களில் போட்டியை சமநிலையில் கொண்டு செல்ல, மகேல போராடியபோது கிடைத்த சதமது. மகேல மற்றும் பின்வரிசை வீரர்களால் போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது. ஆசிய வீரர்களில் வெங்காஸ்கர்(3 சதம்) தவிர்த்து மகேல மட்டுமே லோட்ஸ் மைதானத்தில் 2 சதங்கள் அடித்த வீரர் என்கின்ற பெருமையை பெற்றுள்ளார்.

2003 - உலகக் கிண்ணம் ஆரம்பமாகியது, பெரும்பாலான முக்கோணத் தொடர்களைக் கைப்பற்றி; சனத் தலைமையில் சாதித்துக் கொண்டிருந்த இலங்கை அணிமீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இலங்கையைப் பொறுத்தவரை கென்யாவுடனான தோல்வியை விடுத்து பார்த்தால், அரையிறுதிவரை முன்னேறியது உலகக் கிண்ணத்தை பொறுத்தவரை கௌரவமான பெறுபேறுதான். ஆனால் அறையிறுதித் தோல்வி ஜீரணிக்க முடியாமல் போனது நிதர்சனம். 213 எனும் வெற்றி இலக்கு நிச்சயம் எட்டப்பட கூடியதே, ஆனால் இலங்கையால் போட்டியை வெற்றிகொள்ள முடியவில்லை. இந்த உலகக் கிண்ணம் மகேலவின் கிரிக்கட் வாழ்க்கையின் ஓர் மோசமான அத்தியாயம்.



2003 உலகக் கிண்ணப் போட்டிகளில் மகேல எட்டு இனிங்ஸ்களில் ஆடி 22 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தார், இது அந்தத் தொடரின் இரண்டாவது மோசமான ஓட்ட எண்ணிக்கை. பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹாக் மகேலவை விட குறைவான எண்ணிக்கையில் 17 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மகேலவின் மீது அதிருப்தி அடைந்த இலங்கைக் கிரிக்கட், அடுத்தசாஜா தொடருக்கான குழாமில் மகேலவை இணைக்கவில்லை! இது மகேலவிற்கு மட்டுமல்ல, அவர் ரசிகர்களான எமக்கும் ஏமாற்றத்தையும் வேதனையையும் கொடுத்தது. மகேலவை பிடிக்காதவர்கள், மகேலவின் கிரிக்கட் வாழ்க்கை அஸ்தமனம் என்றே பேசிக்கொண்டனர். நாமோ மகேலவை மீண்டும் காணும் நாளுக்காக காத்துக் கொண்டிருந்தோம்.

அடுத்த தொடராக இலங்கைக்கு நியூசிலாந்து பயணம் மேற்கொண்டிருந்தது. டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்துடன் ஆடும் இலங்கை 'கிரிக்கட்சபை அணி' அறிவிக்கப்பட்டது, அதில் மகேலவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. கூடவே நீண்ட நாட்களாக அணியில் இல்லாதிருந்த களுவிதாரணவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் நான் கொழும்பில் ஒர் அமைச்சில் பணியாற்றிக் கொண்டிருந்தேன், குறிப்பிட்ட பயிற்சிப் போட்டியன்று வேலைக்கு போக்குக் காட்டிவிட்டு, நண்பன் ஒருவனை வலிந்து அழைத்துக்கொண்டு, போட்டி நடைபெறும் NCC மைதானத்திற்கு சென்றோம், முழுக்க முழுக்க மகேலவிற்காக!

எமது ராசி நன்றாக இருந்திருக்கவேண்டும், ஏனெனில் இலங்கைதான் துடுபெடுத்தாட ஆரம்பித்திருந்தது. ரசல் ஆர்னோல்ட், டில்ஷான் என பிரபல வீரர்கள் ஆட்டமிழக்க, 4 ஆம் இலக்கத்தில் மகேல களமிறங்கினார். எனக்கு பயங்கரமான பதட்டம்! ஷேன் பொண்ட், ஜேகப் ஒராம் வீசிய வேகங்களுக்கு மகேல தடுத்தாடிய அவரது விருப்பத்துக்குரிய Forward Defense பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது.

வைஸ்மனின் ஓவர் ஒன்றில் காலியாக இருந்த மிட் விக்கட் திசையை குறிவைத்த மகேலவின் முயற்சி பலனளிக்க, அங்கு அற்புதமான இனிங்க்ஸ் ஒன்று என் கண்களுக்கு முன்னால் நிகழ்ந்தேறியது. திருப்திகரமான சதம் ஒன்றை மகேல நிறைவு செய்துவிட்டு ஆட்டமிழந்தார். அன்றைய எல்லையற்ற என் மகிழ்ச்சி 10 ஆண்டுகள் கழித்து இப்போதும் உணரக்கூடியது, அந்தப்போட்டியில் 57 ஓட்டங்கள் பெற்று, மகேலவுடன் டெஸ்ட் அணியில் களுவிதாரண இடம்பிடித்தது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.

முதல் டெஸ்ட் போட்டி சரவணமுத்து மைதானத்தில் இடம்பெறவிருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 515 ஓட்டங்களை குவித்திருந்தது. மூன்றாம்நாள் ஆட்டத்தைக் காண மைதானம் செல்ல முடிவெடுத்திருந்தேன், மைதானம் செல்ல பம்பலப்பிட்டியில் இருந்து 154 இலக்க பேரூந்தில் சென்று, பொரளை சந்தியிலிருந்து அடுத்த நிறுத்தத்தில் இறங்கி, முன்னால் உள்ள சிறிய வீதியில் செல்ல ஆட்டோவுக்கு 40 ரூபா கொடுத்தால் போதும், 40 ரூபாயை மிச்சப்படுத்த சில சமயம் நடத்தும் சென்றிருக்கிறோம்!



அன்றையதினம் துடுப்பாட்டத்தில் இலங்கையும் நன்றாக ஆடியது, எதிர்பார்க்கப்பட்ட மகேலவும் களுவிதாரணவும் அரைச்சதம் கடந்தனர். போட்டி நிறைவடையும் நேரம் நெருங்க மழையும் ஆரம்பித்தது, அதிகமாக மைதானத்தில் தூங்கும் ஹஷான் திலகரட்ன; சதமடித்த பின்னர் வேகமாக ஓட்டங்குவிக்க, மைதானம் ஆரவார நிலையில் இருக்கும்போதே அன்றைய நாள் முடிவடைந்தது! மகேல ஓட்டங்களை குவித்ததால் மீண்டும் அணியில் தொடர்ந்து ஆடுவார் என்கின்ற நம்பிக்கையான மகிழ்ச்சியில் அந்தநாள் நிறைவடைந்தது.

அப்படியே ஆண்டுகள் நகர்ந்தன மகேலவின் துடுப்பாட்ட வரைபடம் சராசரியாக நகர்ந்துகொண்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு அணித்தலைவர் அத்தப்பத்துவிற்கு ஏற்பட்ட உபாதை காரணமாக மகேல தற்காலிக தலைவராக பங்களாதேஷ், பாகிஸ்தான் தொடர்களில் கடமையாற்றினார். பாகிஸ்தானுடனான சொந்தநாட்டு தொடர் தோல்வியில் முடிந்தாலும்; அடுத்ததாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட, அத்தப்பத்து இல்லாத இலங்கை அணிக்கு மீண்டும் மகேலவே பதில் தலைவராக அனுப்பிவைக்கப்பட்டார்.

மகேலவின் மட்டுமல்ல, இலங்கைக் கிரிக்கட்டின் எதிர்காலமும் இந்தத் தொடரில் தீர்மானிக்கப்பட்டது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சமப்படுத்திய மகேல தலைமையிலான இலங்கை அணி; ஒரே T/20 போட்டியையும் வென்று, ஒருநாள் தொடரில் 5:0 என மிகப்பெரும் வெற்றி பெற்று இங்கிலாந்தை சொந்தமண்ணில் திணறச் செய்திருந்தது. டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதமும், ஒருநாள் போட்டிகளில் இரு சதமும் என மகேலவால் இந்தத் தொடரில் மூன்று சதங்கள் குவிக்கப்பட்டன. தொடர்ந்து ஹொலண்டுடனான ஒருநாள் தொடரின் ஓர் போட்டியில், ஒருநாள் போட்டிகளின் அதிகபட்ச ஒட்டமான 443 ஓட்டங்கள் இலங்கையால் குவிக்கப்பட்டது. பின்னர் 2007 இல் இடம்பெற்ற T/20 உலகக் கிண்ணப் போட்டிகளில் சாதனை ஓட்டங்களான 260 ஓட்டங்களையும் மகேல தலைமையிலான இலங்கை அணி குவித்திருந்தது. டெஸ்ட் கிரிக்கட்டின் அதிகூடிய ஓட்டமான 952 ஓட்டங்களை இலங்கை குவித்த போட்டிதான் மகேலவின் முதற் போட்டி என்பது கூடுதல் சிறப்பு.

அடுத்து இலங்கையில் இடம்பெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மகேலவிற்கு மறக்கமுடியாத மற்றுமொரு தொடர். இரு போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் இரண்டு போட்டிகளும் மகேலவிற்கு சிறப்பான போட்டிகள். முதற் போட்டியில் சங்கக்காரவுடன் இணைந்து தென்னாபிரிக்க அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களான போலக், நிட்டினி, ஸ்டெயின் போன்றோரை திணறடித்து 624 ஓட்டங்களை இணைப்பாகமாக பெற்று உலகசாதனை படைத்தனர். இந்த போட்டியில் மகேல குவித்த 374 ஓட்டங்கள், ஆசியாவின் தனிமனித சாதனை எண்ணிக்கை, வலது கை வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்டமும் இதுதான். என்னைப் பொறுத்தவரை இந்தப் போட்டியிலும் மின்சாரம் விளையாடியிருந்தது, 3 ஆம் நாள் ஆட்டத்தன்று எமது பகுதிக்கு பவர் கட். அக்கா ஒருவரின் வீட்டில் போட்டியை பார்க்க சென்றிருந்தேன், மகேல 370 ஓட்டங்களுக்குள் நுழைந்த நேரம் அங்கும் மின்தடை ஏற்பட்டது, பதட்டத்துடன் காத்திருந்த எனக்கு 10 நிமிடங்களில் மின்கலம் ஒளிர்ந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, தொலைக்காட்சி திரை தோன்றும் அந்தக் கணம்வரை பரபரப்பு! ஆனால் அங்கே திரையில் மகேல ஆட்டமிழந்து வெளியேறிக் கொண்டிருந்தார்.

374 ஓட்டங்கள், தூக்குவாரிப்போட்டது, மிகப்பெரும் ஏமாற்றம், அன்ட்ரே நெல் வீசிய புதிய பந்தினாலான இன்ஸ்விங் பந்தொன்று மகேலவின் மட்டைக்கும் காலுக்கும் இடையிலான இடைவெளியில் புகுந்திருந்தது. "அட இன்னும் ஓர் ஓட்டம் எடுத்திருந்தால் லாராவின் 375, ஆறு ஓட்டம் எடுத்திருந்தால் ஹெய்டனின் 380" என அடுத்தடுத்த சில நாட்களுக்கு வெறுவாய் மென்று கொண்டிருந்தோம். ஆனாலும் மகேலவின் தனித்துவமான ஷொட்டான inside out பற்றி பேசி பெருமைப்பட்டுக்கொண்டும் இருந்தோம். மகேல அடிப்பது நான்கோ, ஆறோ; அவர் எதிர்முனையில் இருக்கும் கிரீஸ்வரை சென்று கிரீசை தொட்டுவிட்டுத்தான் திரும்புவார், இதை அவர் ஒரு அதிஷ்டமாக நினைப்பவர். எமக்கும் சில அதிஷ்டங்களை நம்பும் குணம் உண்டு! மகேல ஆடிக்கொண்டிருக்கும்போது என் தம்பி சோபாவில் இருந்து ஒரு கதிரைமேல் காலைப் போட்டுக்கொண்டிருப்பான், இடியே விழுந்தாலும் மகேல ஆட்டமிளக்கும்வரை .எழும்பவே மாட்டான். தொலைக்காட்சி சத்தம் மகேல நிற்கும்வரை 27 இல் இருக்கும், மின்சாரம் தடைப்பட்டால் மீண்டும் மின்சாரம் வரும்போது மகேல மைதானத்தில் ஆடிக்கொண்டிருக்க மாட்டார், என பல நம்பிக்கைகள். மகேலாவை ரசித்தோம் என்று சொல்ல முடியாது, தீவிரமாக காதலித்தோம்!




தென்னாபிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற நான்காவது இனிங்ஸில் 352 ஓட்டங்களை இலங்கை பெற்றாக வேண்டும், இலங்கை ஆடுகளங்களில் நான்காம் ஐந்தாம் நாட்களில் இந்த ஓட்டங்களை பெறுவதென்பது மிகவும் கடினமான விடயம். சனத் கொடுத்த தொடக்கத்தை பயன்படுத்தி மகேல தனித்து நின்று போராடி 123 ஓட்டங்களைப் பெற்று, வெற்றிக்கு மேலும் 10 ஓட்டங்கள் மட்டுமே தேவையானபோது ஆட்டமிழந்தார், இறுதியில் இலங்கை 1 விக்கட்டினால் போட்டியையும், தொடரையும் கைப்பற்றியது! மகேலாவினது மட்டுமல்ல; இலங்கை வீரர் ஒருவர் பெற்ற மிகச்சிறந்த டெஸ்ட் சதமும் இதுவென்பேன்!

இங்கிலாந்து, மற்றும் இலங்கையில் தென்னாபிரிக்காவுடனான தொடர் வெற்றிக்கு பின்னர் இலங்கைக் கிரிக்கட் மகேலவே தொடர்ந்தும் தலைமைப்பதவி வகிக்க விரும்பியது. அடுத்த சாம்பியன்ஸ் ட்ரோபி, நியூசிலாந்துடனான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள், இந்தியாவுடனான ஒருநாள் தொடர் போன்றவற்றிற்கு மகேலவே தலைமை தாங்கினார். ஆனால் மகேலவின் ஓட்டக்குவிப்பு மீண்டும் மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருந்தது. பெரியளவிலான ஓட்டங்கள் எவையும் மகேலவிடமிருந்து கிடைக்கவில்லை. இந்நிலையில் 2007 உலகக் கிண்ணப் போட்டிக்கான அணித் தலைவராக மகேலவையே இலங்கைக் கிரிக்கட் தேர்வு செய்திருந்தது. ஏற்கனவே 2003 உலகக்கிண்ணம் மகேலவிற்கு கொடுத்த அனுபவம் மறக்கப்படாமலிருக்க, 2007 உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை ஆடத்தொடங்கியது. தனது அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்த மகேல; அந்தத் தொடரில் அரையிறுதியில் பெற்ற அற்புதமான சதத்துடன் மொத்தமாக 548 ஓட்டங்களைக் குவித்து இலங்கையை இறுதிப் போட்டிவரை அழைத்துச் சென்றிருந்தார்.

2003 உலகக் கிண்ணப் போட்டித்தொடரில் இரண்டாவது மோசமான ஓட்டம் பெற்றிருந்த மகேல; இம்முறை இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்கள் குவித்த வீரர் என்கின்ற பெருமையைப் பெற்றார். இதுதான் போராட்ட குணம் மிக்க மகேலாவின் வெற்றி! அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக மகேல பெற்ற சதம் மறக்க முடியாத சதங்களில் ஒன்று. மிகுந்த பதட்டத்துடன் போட்டியை காணக் காத்திருந்த எங்களுக்கு சனத், சங்கா ஏமாற்றமளிக்க, நான்காம் இலக்கத்தில் மகேல களமிறங்கினார். உப்பில் தரங்க சற்று வேகமாக ஓட்டமெடுக்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய மகேல, அற்புதமான ஒரு நீண்ட இனிங்ஸ்சிற்கு தயாராகிக்கொண்டிருந்தார். நிதானமாக ஓட்டங்களைக் சேர்த்துக் கொண்டிருந்த மகேல இறுதி 5 ஓவர்களில் அதிரடியாக ஆடி ஆட்டமிளக்காமல் 115 ஓட்டங்களைக் குவித்தார். முக்கிய போட்டிகளில் நிலைத்து நின்று பொறுப்போடு ஆடும் மகேலாவின் போராட்டம் மிக்க இனிங்ஸ்களில் இதுவும் ஒன்று! அரையிறுதியில் பெற்ற வெற்றிக் கொண்டாட்டங்களை; இறுதிப்போட்டி புஸ்வானமாக்கிப்போனது. அடம் கில்கிறிஸ்டின் தனிமனித தாக்குதலை இலங்கையால் கட்டுப்படுத்த முடியாமல் போனதுதான்; உலகக் கிண்ண இறுதிப் போட்டித் தோல்விக்கும்,இலங்கையின் உலகக் கிண்ணம் மீதான கனவை மீண்டும் தள்ளிபோடவும் காரணமாயிற்று!

2007 உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னர் பெரிதளவில் வெற்றிகளை இலங்கையால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. 2007 இன் T/20 உலககிண்ண வெளியேற்றம், இந்தியாவுடனான உள்நாட்டு ஒருநாள் போட்டித்தொடர் தோல்வி என்பன மகேலவை தலைமைப் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய காரணமாயிற்று. ஒரு தலைவராக மகேல கவர்ந்தளவிற்கு வேறெவரும் என்னைக் கவரவில்லை. இறுதிவரை போராடும் குணம், வீரர்களை ஒருங்கிணைக்கும் வல்லமை, பொறுப்பை தோளில் சுமக்கும் இயல்பு, புதுமையான திட்டங்கள், எதிரணி வீரர்களுக்கு ஏற்ப களத்தடுப்பு வியூகம், பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் விதம் என மகேல ஒரு அணித்தலைவராக தன்னை வெளிக்காட்டினார்.

2006 இங்கிலாந்து மண்ணில் பீட்டர்சனுக்கு அமைத்த வியூகங்கள் பெரும்பாலும் வெற்றியைக் கொடுத்திருந்தன. 2007 உலகக் கிண்ணத்தில் ஒரு சிறப்பான தலைமைத்துவத்தை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மகேல வெளிக்காட்டியிருப்பார். 235 ஓட்டங்களுக்குள் இங்கிலாந்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் 15 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்து இங்கிலாந்து 69 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில்; எந்த அணித்தலைவரும் போலிங் பவர்பிளேயை எடுத்துக் கொள்வது சாதாரணம். ஆனால் மகேல பவர் பிளேயை எடுத்துக்கொள்ளாமல் தனது பகுதிநேரப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த தொடங்கினார். ஜெயசூர்யா, டில்ஷான் இருவரும் வீசிய ஓவர்களில் தங்கள் விக்கட்டை இழக்காமல் நிதானமாக ஆடிய இங்கிலாந்து; 29 ஆவது ஓவரின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட போலிங் பவர்பிளே ஓவர்களில் பலமான முரளியையும், மலிங்கவையும் எதிர்கொண்டு விக்கட்டுகளை இழக்க ஆரம்பித்தது, மகேலவின் திட்டம் எதிர்பார்த்ததுபோல் வெற்றியைக் கொடுத்தது. போட்டியை இங்கிலாந்தின் பின் மத்தியவரிசை வீரர்களான நிக்சனும், போப்பராவும் இறுதிவரை விறுவிறுப்பாக்கினாலும், இறுதியில் இலங்கை இரண்டு ஓட்டங்களால் போராடி வெற்றி பெற்றது!



தமது அணி குறைந்த ஓட்டங்களை பெற்றிருப்பினும் இறுதிவரை போராடி வெற்றி பெற செய்வதில் மகேல கில்லாடி, வெற்றி கிடைக்காதவிடத்து கௌரவமான தோல்வியாவது மிஞ்சும். மகேலவின் தலைமைத்துவத்தின் சிறப்பை பெரும்பாலான கிரிக்கட் விற்பன்னர்கள் உணர்ந்திருந்தனர். 2007 உலகக் கிண்ண போட்டித்தொடரை அடுத்து, ஆசிய அணிக்கும் ஆபிரிக்க அணிக்குமான போட்டித் தொடரிலும் மகேல தலைமை ஏற்று தொடரை 3:0 என வென்று கொடுத்ததோடு, தொடரின் நாயகன் விருதையும் வென்றிருந்தார். மூன்றாவது போட்டியில் இந்திய நட்சத்திரம் டோனியுடன் இணைந்து ஆறாவது விக்கட்டுக்காக பெற்றுக்கொண்ட 218 ஓட்ட இணைப்பாட்டம் இன்றுவரை சாதனையாக உள்ளது. 2008 ஆசியக் கிண்ணப் போட்டிகளில் லீக் போட்டிகளில் இந்தியாவுடன் ஆடவிடால் வைத்திருந்துவிட்டு இறுதிப் போட்டியில் அஜந்த மெண்டிசை துரும்பு சீட்டாக பாவித்து, இலங்கைக்கு கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தார். பஞ்சாப், கொச்சி, டெல்லி என மகேல விளையாடிய மூன்று IPL அணிகளும் மகேலவின் தலைமைமீது நம்பிக்கை கொண்டு அவரை அணித் தலைவராக்கியிருந்தன!

தலைவராக மட்டுமல்ல ஒரு சிறந்த பண்பை வெளிப்படுத்தும் வீரராக மகேல தன்னை மைதானத்தில்;வெளிக்காட்டிருப்பார். 2007 உலக கிண்ணப் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை;எட்டு விக்கட்டுகளை இழந்து மூன்று ஓவர்களில் மீதமிருக்க;தோல்வியின் விளம்பில் இருந்தது. ஆனால் மைதானத்தில் இருள் குழுமியிருந்தது, பந்து தெரியத அளவுக்கு இருள் சூழ்ந்துவிட்டது. நடுவராக இருந்த அலீம் டார் மிகுதி மூன்று ஓவர்களையும் மறுநாள் வைத்துக்கொள்ளாம் என முடிவெடுக்கிறார். கொண்டாட்ட மனநிலையில் இருந்த அவுஸ்திரேலியர்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. அந்தநேரம் மைதானத்துள் வந்த இலங்கை தலைவர் மகேல, அணி வீரர்களிடம் கலந்து பேசி மீதி;மூன்று ஓவர்களையும் இலங்கை விளையாட பணித்தார், மிதமான வேகத்தில் மிகுதி மூன்று ஓவர்களும் பந்துவீச இலங்கை தோல்வியடைந்தது.

ஒரு வீரராக களத்தில் தன்னை;கனவானாக வெளிப்படுத்தும் மகேல; களத்துக்கு வெளியேயும் மிகச்சிறந்த சேவைகளை ஆற்றி வருபவர். சிறுவயதில் தனது ஆருயிர் தம்பியை புற்றுநோய்க்கு பறிகொடுத்த மகேல, நீண்ட நாட்களுக்கு அதனிலிருந்து மீள கஷ்டப்பட்டவர். தனக்கு வந்த துன்பத்தை அப்படியே விட்டுவிடாம்ல், தனது முயற்சியால் Hope Cancer Project க்கு பெரும் பங்களிப்பார்றினார். அத்தப்பத்து தலைமை ஏற்ற காலத்தில் இருந்து தமக்கு (சங்ககாரவும்) கிடைக்கும் ஆட்ட நாயகன், ஆட்டத் தொடர் நாயகன் விருதுக்கான பணத்தொகையை மருத்துவத்திற்கு தேவையானவர்களுக்கு அமைப்பு மூலமாக வழங்கிவருகின்றார்கள். எலோருடனும் சகஜமாக பேசக்கூடிய மகேலவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு பிரமிப்பாக இருக்கும். தனது அணியை, அணித்தேர்வை, வீரர்களை விட்டுக்கொடுக்காமல் பேசும் மகேல, அதனை பத்திரிகையாளர்கள் பகைத்துக்கொள்ளாமல் புரிந்துகொள்ளும்படி சொல்வதில் கில்லாடி. போட்டி வெற்றியோ தோல்வியோ, மகேலாவின் ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பும் அருமையாக இருக்கும்.

மகேலாவின் தலைமைப் பதவி ராஜினாமாவின் பின்னர் இலங்கையின் அடுத்த தலைவராக சங்ககார பொறுப்பேற்க; இலங்கை அணி மீண்டும் சராசரியாக சென்றுகொண்டிருந்தது. 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற T/20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில்; தனக்கு பிடித்தமான மேற்கிந்திய ஆடுகளங்களில், தொடர்ச்சியாக குறைந்த பந்துகளில் 81,100,98* ஓட்டங்களைக் குவித்த மகேல தன்னை T /20 போட்டிகளிலும் ஆடும் திறன் படைத்தவர் என்பதனை நிரூபித்தார். அடுத்த தடவை இடம்பெற்ற IPL வீரர்களுக்கான ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்கின்ற பெருமையையும் மகேல பெற்றார்.

அடுத்து 2011 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கிண்ணதொடர் ஆரம்பிக்கவிருந்தது. இலங்கை அணியும் அறிவிக்கப்பட்டது, அதில் மகேல அணியின் உபதலைவர். தனக்கு கீழே உபதலைவராக இருந்தவரின் தலைமையின் கீழ், தான் உபதலைவராக இருக்க இலகுவில் எந்த பெயர் பெற்ற வீரரும் சம்மதிக்க மாட்டார்கள்! ஆனால் மகேல சம்மதித்தார், காரணம் அவர் ஒரு அணிக்கான வீரனாகவே தன்னை எப்போதும் எண்ணியிருந்தார். அதனால்தான் ஒருநாள் போட்டிகளில் தனது துடுப்பாட்ட வரிசை இலக்கத்தை அணியின் தேவைக்கு ஏற்ப மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் மாற்றி மாற்றி ஆடிக்கொடுத்தார், கொடுத்துக்கொண்டிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அரவிந்தவின் ஓய்வால் வெற்றிடமான; டெஸ்ட் கிரிக்கட்டின் நங்கூரமான நான்காம் இலக்கத்தை ஸ்திரப்படுத்துவதற்காக தனது மூன்றாம் இலக்கத்தை இழந்திருந்தார்.

2011 உலகக் கிண்ணத்தை நோக்கி சங்கா தலைமையில் இலங்கை அணி தயாராகியிருந்தது. மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இலங்கை இறுதிப்போட்டிவரை முன்னேறியது. அடுத்தடுத்த இரண்டு உலகக் கிண்ணங்களில் இறுதிப்போட்டிக்கு தெரிவான இலங்கைக்கு, இம்முறையும் பெருத்த ஏமாற்றமே காத்திருந்தது. இந்திய அணியால் அவர்களது சொந்த மைதானத்தில் வைத்து இலங்கையின் கனவு மீண்டும் தகர்க்கப்பட்டது. ஆனால் அந்தப் போட்டியில் மகேல பெற்ற சதம் அந்தப் போட்டியை காணுற்ற ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. மிக முக்கியமான, அழுத்தம் நிறைந்த போட்டியொன்றில் எத்தனை அழகாக தனது இனிங்ஸ்சை மகேல கொண்டு சென்றார்! மகேலவின் அற்புதமான இனிங்ஸால், இந்திய மைதானம் மூச்சிழந்து காணப்பட்டது! ஆனால் போட்டி முடிவு என்னவோ எம்மை மூர்ச்சையாக்கியிருந்தது :-(


2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டித் தோல்வியின் எதிரொலியாக சங்ககார தலைமைப் பதவியை ராஜினாமா செய்ய, மகேலவும் தனது உப தவைவர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த தலைவராக டில்ஷான் இலங்கைக் கிரிக்கட்டினால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் டில்ஷான் தலைமையில் இலங்கை தடுமாறிக்கொண்டிருந்தது, இந்நிலையில் மீண்டும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க இலங்கைக் கிரிக்கட் விரும்பினாலும், யாரை தேர்ந்தெடுப்பது என தடுமாறியது. மீண்டும் மகேலவிடம் கோரிக்கை வைக்கப்படாது, இம்முறை மகேல தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டார்.

மகேல தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர், முதல் தொடராக அவுஸ்திரேலியாவின் கொமன்வெல்த் பாங்க் சீரிஸ் அமைந்தது. இலங்கை அவுஸ்திரேலியாவில் ஒரு முக்கோணத் தொடரில் அதுவரை அசத்தாத அளவுக்கு அசத்தியது. இந்தியா வெளியேற, அவுஸ்திரேலியாவுடன் இறுதிப்போட்டிக்கு இலங்கை தகுதிபெற்றது. தொடர் முழுவதும் அவுஸ்திரேலியாவை அடக்கி வைத்திருந்த இலங்கைக்கு முதல் இறுதிப் போட்டியிலும் வெற்றி கிடைத்தது. இரண்டாம் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற, மூன்றாவது இறுதிப் போட்டி எதிர்பார்ப்பை தூண்டியிருந்தது. முதலில் ஆடிய அவுஸ்திரேலியாவை குறைந்த ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்திய இலங்கை வெற்றிக்கனியை எட்டுவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த எமக்கு மீண்டும் ஒரு இறுதிப்போட்டி தோல்வி. இம்முறையும் உடைந்தே போய்விட்டோம். இந்தத் தொடரில் இலங்கையின் வெற்றிகள் மகேலவின் துடுப்பினாலும், தமைத்துவ சிறப்பினாலும் பெரும்பாலும் பெறப்பட்டிருந்தன. ஆரம்ப துடுப்பாட்ட வரிசையின் சீரின்மையை ஈடுசெய்ய; மத்திய வரிசையில் ஆடிவந்த மகேல, தானே ஆரம்பவீரராக களமிறங்கி சிறப்பாக ஆடி இலங்கையை வெற்றிப் பாதையில் இட்டுச்சென்றிருந்தார்.

அடுத்து சொந்தநாட்டில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் அன்றைய பலமான இங்கிலாந்து அணியை காலி மைதானத்தில் சந்தித்த மகேலவின் இலங்கை அணி, இங்கிலாந்தை காலி செய்தது. துடுப்பாட சிரமமான மைதானத்தில் இலங்கை பெற்ற 318 ஓட்டங்களில் தனித்து நின்று ஆடி மகேல 180 ஓட்டங்களை குவித்திருந்தார். இங்கிலாந்தின் ஜிம்மி அன்டர்சன் 'தான் பார்த்த இனிங்ஸ்களில் இதுதான் மிகச்சிறந்த இனிங்க்ஸ்' என்று அப்போது புகழ்ந்திருந்தார். இரண்டாவது போட்டியில் இலங்கையின் இரண்டு இனிங்க்ஸ்களிலும் மகேல 105,64 ஓட்டங்களை மகேல பெற்றிருந்தார். தன் தலையில் பொறுப்பு இருக்கும்போதும், முக்கியமான நேரங்களிலும் பொறுமையாக கவனத்துடன் ஆடும் மகேலவின் ஆட்டத்திறன் மீண்டும் இந்தத்தொடரிலும் வெளிப்பட்டிருந்தது!

அடுத்து 2012 ல் சொந்த மண்ணில் T/20 உலககிண்ணம் ஆரம்பமாயிற்று. பலமான அணிகள் பல விளையாடினாலும், சொந்தநாட்டு மைதானம் என்பதால், இலங்கைக்கும் வாய்ப்புக்கள் காணப்பட்டன. இலங்கையின் வாய்ப்பை மகேலவின் தலைமைத்துவம் சரியான முறையில் கையாண்டது! இறுதிப்போட்டிவரை முன்னேறிய இலங்கைக்கு, இலகுவான அணியான மேற்கிந்தய தீவுகளுடன் இறுதிப் போட்டி. அதுவரை எந்த T/20 போட்டியிலும் மேற்கிந்தியாவுடன் தோற்றிருக்காத இலங்கைமீது; மிகப்பெரும் நம்பிக்கை இருந்தது.

கிரிஸ் கெயில் மீது பயம் இருந்தாலும்; கெயிலை வெளியேற்றலாம் என்கின்ற நம்பிக்கையும் பலமாக .இருந்தது. எதிர்பார்த்தது போலவே கெயில் வெளியேற, 10 ஓவர்கள் முடிவில் இலங்கையின் கைப்பிடியில் இருந்த போட்டி; சாமுவேல்ஸின் அதிரடியில் அப்படியே மாறிப்போனது. மீண்டும் இறுதிப்போட்டியில் தோல்வி, இறுதிப்போட்டிகளில் இலங்கையின் தோல்விகள் உச்சக்கட்ட எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. எதிர்பார்த்ததுபோல் மகேலவும் பதவியை ராஜினாமா செய்தார். அதேநேரம் இந்த தொடரின் அதிக ஓட்டங்குவித்தவர்கள் பட்டியலில் மகேல இரண்டாவது இடத்தில் இருந்தார். மகேலவின் ஓய்வுக்கு பின்னர் இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி அணிகளுக்கு மத்தியூசஸும், T/20 அணிக்கு சந்டிமலும் தலைவராக்கப்பட்டனர்.


டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் சிலகாலம் மகேல சதமடிக்கவில்லை என்கின்ற விமர்சனம் எழுந்தபோது; மற்றுமொரு சிறப்பான சதத்தை (129) அபுதாபியில் பாகிஸ்தானுக்கு எதிராக மகேல குவித்திருந்தார். தன்மீது விமர்சனம் வரும்போதெல்லாம் முக்கியமான போட்டியொன்றில் தன்னை நிரூபித்து அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வது மகேலவின் பாணி. டெஸ்ட் கிரிக்கட்டைப் போலவே ஒருநாள் போட்டிகளிலும் சில போட்டிகளில் பெரிதளவில் சோபிக்காத மகேல; தன்மீதான விமர்சனங்களுக்கு இவ்வாண்டு இடம்பெற்ற ஆசியக் கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் பதிலளித்தார். இக்கட்டான நேரத்தில் 75 ஓட்டங்களைக் குவித்து இலங்கையின் கிண்ண வெற்றிக்கு முக்கிய காரணமானார். தொடர்ந்து இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் ஐந்தாவது போட்டியிலும்; மகேலவின் அரைச்சதத்தின் பங்களிப்பு இலங்கைக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது. மகேல தன்னை முக்கிய/பெரிய போட்டிகளில் ஓட்டங்குவிக்கும் வீரராக தொடர்ந்தும் முன்னிறுத்திக் கொண்டிருந்தார்.


2014 - T/20 போட்டிகள் ஆரம்பிக்க இருந்த நிலையில்; உலகக் கிண்ணத்துடன் T/20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக மகேலவும் சங்காவும் அறிவித்தனர். இம்முறை T/20 போட்டிகளில் இலங்கை கிண்ணத்தை வெல்லும் என்கின்ற எதிர்பார்ப்பு குறைந்தளவே காணப்பட்டது. மலிங்க தவிர்த்து T/20 போட்டிகளுக்கான விசேட வீரர்கள் இல்லாத நிலையிலும் இலங்கை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. அரையிறுதிக்கு தகுதிபெற்ற இலங்கை, கடந்த உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் தோல்வியைக் கொடுத்த மேற்கிந்திய தீவுகளுடன் மோதும் நிலை ஏற்பட்டது. பழிதீர்க்கும் ஆட்டமாக அமைந்த இந்தப் போட்டியில் அணித்தலைவர் சந்திமல் நீக்கப்பட்டு, மலிங்க தலைமை தங்கினார்.

முதலில் துடுப்பெடுத்தாடி 160 ஓட்டங்கள் குவித்த இலங்கையின் இலக்கை எட்ட எத்தனித்த மேற்கிந்தியாவை வெறும் 80 ஓட்டங்களுக்குள் இலங்கை சுருட்டியது. பெயருக்கு மலிங்க முன்னிற்க மகேலவே பின்னின்று அணியை வழிநடத்தினார். மீண்டும் மகேலவை தலைவராக ரசித்த திருப்தி கிடைத்தது. அடுத்து இறுதிப் போட்டி இந்தியாவுடன், எப்படியும் இலங்கைக்கு தோல்விதான் எண்ணத்திலேயே போட்டியை பார்க்க ஆரம்பித்தாலும், மனதில் வெற்றிக்கான அவா அழுத்தத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. இறுதி ஓவர்களில் இலங்கையின் வேகங்கள் கொடுத்த சவாலில், இந்தியாவின் அதிரடி மன்னர்களான யுவராஜ், டோனி, கோலி போன்றோரால் ஓட்டங்களைக் குவிக்க முடியாமல் போக; இலங்கை இந்தியாவை 130 ஓட்டங்களில் மட்டுப்படுத்தியது. துடுப்பாட்டத்திற்கு சாதகமான மைதானத்தில் 131 என்னும் இலக்கை, சங்காவின் அரைச்சதத்துடன் இலங்கை இலகுவாக எட்டியது. இலங்கை 2014 ஆம் ஆண்டின் T/20 சாம்பியன் - நம்ப முடியவில்லை, நாம் இறுதிப் போட்டியில் இறுதியாக வென்றே விட்டோம்!!!! மகேலவுக்கும் சங்காவுக்கும் மிகச்சிறந்த பிரியாவிடை இலங்கை அணியால் வழங்கப்பட்டது.

சில நாட்களின் பின்னர் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி அங்கு ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, மகேல தனது டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளின் ஓய்வு தினத்தை அறிவித்தார். சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், மிகச்சரியான முடிவு. இலங்கை மண்ணில் அடுத்து விளையாடும் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுடனான தலா இரண்டு போட்டிகள் கொண்ட தொடர்களுடன் சொந்தமண்ணில் ஓய்வு பெறுவது என்பது மகேலவின் அறிவிப்பு. பெரும் பெரும் ஜாம்பவான்களெல்லாம் வயது அதிகரித்து, ஓட்டக்குவிப்பு நலிவடைந்த நிலையில் 'எப்படா போவாங்க' என கிரிக்கட் ரசிகர்களும், கிரிக்கட் சபைகளும் காத்திருந்த நிலையை மகேல தனக்கும் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. நல்ல நிலையில் இருக்கும்போதே தனது ஓய்வை அறிவித்திருந்தார் மகேல, அதிலும் சொந்த நாடு, சொந்த மக்களுக்கு முன்னிலையில்!

ஓய்வை அறிவித்தபின்னர் தென்னாபிரிக்காவுடனான இரண்டாவது போட்டியில் 160 ஓட்டங்களையும், பாகிஸ்தானுடனான இறுதி இரு போட்டிகளிலும் தலா ஒரு அரைச்சதத்தையும் மகேல பெற்றிருந்தார். அதிலும் தனது இறுதி இனிங்க்சில் 54 ஓட்டங்களைப் பெற்றதுடன், தனது நண்பனும், டெஸ்ட் கிரிக்கட்டில் இணைப்பாட்ட சாதனைக்கு பங்குதாரருமான சங்காவுடன் இணைந்து 19 ஆவது தடவையாக 100 ஓட்டங்களுக்கு மேல் இணைப்பாட்டமாக பெற்றிருந்தார். முன்னதாக காலியில் மகேலவின் இறுதி இனிங்க்ஸ், பொழுது சாயும் நேரம், நன்றாக இருட்ட ஆரம்பித்துவிட்டது, மழை எந்நேரத்திலும் வரலாம் என்னும் நிலையில்; ஆட்டமிழந்த மகேல, அன்று தனக்காக திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கும் தனது துடுப்பை காட்டி பிரியாவிடை பெறாது, வேகமாக ஓடிச்சென்று அடுத்த வீரருக்கு வழி விட்டார். இப்போட்டியில் இலங்கை வெற்றிபெற்று அடுத்த சில செக்கன்களில்; மழை சோவெனப் பொழிய ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது. தனது இறுதி இரு போட்டிகளிலும் அணியின் வெற்றிக்கான தனது பங்களிப்பை மகேல வழங்கியிருக்கிறார். தனது சொந்த நாட்டில், சொந்த மைதானத்தில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், இறுதிப் போட்டி மற்றும் தொடர் வெற்றிபெற்ற மகிழ்வுடன் மகேல ஓய்வு பெற்றுக்கொண்டார். அற்புதமான பிரிவுபசாரம் ஒன்றை மகேல பெற்றிருந்தார், இது இலங்கையின் எந்த ஜாம்பவானுக்கும் வாய்த்திராத கொடை - சாதனையாளர்!

இலங்கை டெஸ்ட் அணியில் இனிமேல்.......

விபரம் தெரிந்த நாள் முதல் ரசித்துவந்த 69 ஆம் இலக்க ஜேர்சியை இனிமேல் காண இயலாது!

ஸ்கோர் போட்டில் 2 விக்கட்டுக்கு பின்னர், விக்கட் எண்ணிக்கை மாறாமல் இருக்க, ஓட்ட எண்ணிக்கை மட்டும் கிடுகிடுவென உயரும்போது; மைதானத்தின் நடுவே உணர்ச்சி பூர்வமாக தன் நண்பனை ஆரத்தழுவும் ஒரு உணர்ச்சிமிக்க வீரனை காண இயலாது!

புதிய இளம் வீரருடன் ஆடும்போது, ஒரு தந்தை தன் பிள்ளையை வழி நடத்துவதுபோல, கற்றுக்கொடுக்கும் ஆசானைக் காண இயலாது!

எவர் தலைவராக இருப்பினும், எந்தவித ஈகோவும் இல்லாமல்; இக்கட்டான நேரங்களில் தானே முன்வந்து ஆலோசனை சொல்லி வழிநடத்தும் தலைவனைக் காண இயலாது!

முதலாவது சிலிப்சில் பிடியை பிடித்துக்கொண்டு இடது கையை மடக்கி அசைத்தபடி சிங்கமென கர்ஜித்தபடி ஓடும் இளைஞனைக் காண இயலாது!

ஒவ்வொரு போட்டியிலும் அணியின் பொசிட்டிவ் எனர்ஜியாக இருந்து, இறுதிவரை அணியில் ஸ்திரத்தை குறையவிடாமல் வைத்திருக்கும் ஒரு சிறந்த அணி வீரனை இனி காண முடியாது!

ஆனால்....... அவன் விட்டுச்சென்ற நினைவுகளும், கொடுத்த அனுபவமும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது! என்றும் நிலைத்திருக்கக்கூடியது

நிச்சயமாக மகேல ஒரு ஓட்டங் குவிக்கும் இயந்திரம் அல்ல, மகேலவின் ஓட்டக்குவிப்பு எப்போதும் தொடர்ச்சியாக இருந்ததுமில்லை; ஆனால் முக்கியமான போட்டிகளில், இக்கட்டான நேரங்களில் தன் கையைத் தூக்கி முன்வந்து போட்டியை வென்று கொடுக்கும் மகேல வரலாற்றின் ஒர் வெற்றியாளன்! மோசமான துடுப்பாட்ட நேரங்களில், தன்மீது விமர்சனங்கள் வரும்போதெல்லாம், அவற்றுக்கு தன் துடுப்பால் பதில் சொல்லும் ஓர் போராட்ட வீரன்!! மகேல முழுத்திறனுடன் ஆடும் இனிங்ஸ் ஒன்றின் அழகுக்கு இணையான இனிங்சை வெளிப்படுத்த வேறெந்த சமகால வீரரும் இல்லை!

Inside out, Foreword defense, Cover drive, squire drive, Late cut, cut, pull, glance, flick, down the wicket to long on & mid-wicket, sweep in font of the wicket, sweep behind the wicket, slog sweep, reverse sweep, paddle sweep, upper cut, improvisation in  behind the wicket of both side, soft hand touches, quick single in the gaps - என கிரிக்கட் ஷொட்களையும், நுணுக்கங்களையும், ஓட்டம்பெறும் முறைகளையும் நேர்த்தியுடன் பிரமிப்பாக செயற்படுத்தும் திறன்படைத்த முழுமையான துடுப்பாட்ட வீரர் மகேல!

மகேல இல்லாத இடைவெளி இலங்கை கிரிக்கட்டுக்கும், ரசிகர்களுக்கும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்! என்னைப் பொறுத்தவரை இதுவொரு மிகப்பெரும் தாக்கம். எனது 15 வயதில் உருவான பந்தமிது; பாடசாலை கல்வி, வெட்டியான காலம், அரச வேலை, தனியார் வேலை, சொந்த முயற்சி, சொந்த தொழில், திருமணம், குழந்தை என என் வாழ்க்கை ஓட்டத்துடனும், இடமாற்றங்களின் போதும், 17 ஆண்டுகளாக என்கூடவே பயணித்த மகிழ்ச்சியான பந்தம் இது! அற்புதமான நினைவலைகளை விட்டுச்சென்ற, வாழ்வின் இறுதி மூச்சுள்ளவரை மறக்கப்பட முடியா இணைப்பிது!!

மகேல - என் வாழ்வின் ஓர் அங்கம்!!


நன்றி மகேல!!!







Saturday, May 4, 2013

(மூட) நம்பிக்கையும் சமூகமும்!! 




நாகரிகம் வளர  வளர பண்டைய மனிதனின் நம்பிக்கைகளும் மாறிக்கொண்டே வர ஆரம்பித்தது; சில நாகரீக மனிதர்களால் பல நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகள் என்று வரையறுக்கப்படத் தொடங்கின!!  ஆனாலும் பலர் இன்றும் தொடர்ந்தும் அதே நம்பிக்கைகளை  நம்பிக்கையாக பின்பற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இங்கு நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையிலான அளவுகோல் எனப்படுவது பார்ப்பவரது பார்வையில்தான் தீர்மானிக்கப்படுகின்றது!!  சில நம்பிக்கைகள் அரசாங்கங்களால் உத்தியோக பூர்வமாக நிராகரிக்கப்பட்டும், சில நம்பிக்கைகள் அரசாங்கத்தால் உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டும் பின்பற்றப்படுகின்றன!! 

இன்று மூடநம்பிக்கைகள் என்று சொல்லப்படுபவற்றில் பல ஏதோ ஒரு காரணத்துக்காக ஆரம்பிக்கப்பட்டு; பின்னர் தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப்பட்டு வருபவைதான்!! அவற்றில்  பல  நம்பிக்கைகள்; ஏற்படுத்தப்பட்ட காரணங்களை விடுத்து தவறான புரிதலோடு இன்றுவரை வெவ்வேறு காரியங்களுக்கு பின்பற்றப்பட்டு வருகின்றது. இவற்றின் பாதகத்தன்மை, சாதகத்தன்மை என்பதெல்லாம் அவை கொடுக்கும் பலனில் வைத்து கணிக்கப்பட வேண்டியவை அல்ல!! அவற்றின் தாக்கம் அவற்றால் கிடைக்கப்பெறும் மன/உடற் தாக்கங்களில்தான் தங்கியுள்ளது. அன்றாட  மனிதப் பழக்கவழக்கங்களில் இருந்து மூடநம்பிக்கைகள் என்று சொல்லப்படுபவற்றை விமர்சிப்பது மிகச் சுலபமான காரியங்களில் ஒன்று; அப்படி செய்வதற்குப் பெயர்தான் பகுத்தறிவு என்றால் அது சுத்த முட்டாள்தனம்(என் பார்வையில்)

மேலே சொன்னதுபோல நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் இடையில்  இருக்கும் வித்தியாசம்  ஒவ்வொருவருக்கும்  மாறுபடுபவை. ஆனால் அந்த நம்பிக்கைகள் கொடுக்கும் தாக்கங்களின் சாதகத்தன்மை, பாதகத்தன்மை பொறுத்தே அவை வேண்டியவையா, வேண்டாதவையா, இருந்திட்டு போகட்டும் வகையறாக்களா என முடிவெடுக்க  முடியும். அதுகூட  அவரவர் வாழும் சமூகம், மொழி, மதம் என கலாச்சாரம் சார்ந்துதான் முடிவெடுக்கமுடியும். சிலருக்கு/ஒரு சமூகத்துக்கு  மூட நம்பிக்கையாக தோன்றும் விடயங்கள் பலருக்கு/இன்னொரு சமூகத்துக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கலாம்! இந்த நம்பிக்கை மரபுவழியாக ஏற்பட்ட உளவியல் உறுதி என்றுகூட  சொல்லலாம். இதை விமர்சிப்பதென்பது அறியாமையின் வெளிப்பாடே!! 

சில நம்பிக்கைகள் அடிமைத்தனங்கள், உயிர்பாதிப்பு, உடற்பாதிப்பு, மனப்பாதிப்பு போன்ற பாரிய தாக்கங்களை இயன்றளவிலும் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றது; இது பல சமூகங்களுக்கும் பொருந்தும். அவற்றை  இல்லாமல் செய்ய குரல் கொடுப்பது  நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய செயல்தான். ஆனால் இங்கு மூடநம்பிக்கையாக சொல்லப்படுபவை; அதை ஒரு நம்பிக்கையாக ஏற்று  செயற்படும்  சமூகத்தில் நிகழ்கின்றது என்னும் பட்சத்தில் அவர்களை கண்டிப்பதோ, கிண்டல் செய்வதோ அவர்களை ஒருபோதும் மாற்றியமைக்காது என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அது அவர்களுக்குள் மேலும் வன்மத்தையும், கோபத்தையும்தான் ஏற்படுத்தும். அவர்களை பொறுத்தவரை அவர்களாக புரிந்து, கலாச்சார மறுமலர்ச்சியால் மீண்டால்தான் அவற்றிலிருந்து விடுபடமுடியும்; புரியவைத்தால் என்பது சாத்தியமான வழியல்ல!! 

எல்லோரும் விமர்சகர்களாக இருக்கத்தான் ஆசைப்படுகின்றோம், அது மனிதனில் ஒன்றிப்போன ஒரு சுபாவம்!!!  ஆனால் மற்றவரை விமர்சிக்கும் நாம் அதே விடயத்தில் உறுதியாக இருக்கின்றோமா என்பதை சுயபரிசோதனை செய்து பார்ப்பதில்லை. உதாரணமாக சொல்வதானால், பர்தா அணியும் முஸ்லிம் சமூகத்துப் பெண்கள்  வெப்பமான காலப்பகுதியில் உடலை முழுமையாக மூடியிருப்பது  உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதில்லை என்று சொல்லும் கனவான்கள்; அதே  வெப்பமான காலப்பகுதியில் தங்கள் குடும்ப பெண்களை பிகினியில்/நிர்வாணமாக நடமாட விடுவார்களா?  குறைந்த பட்ச நாகரிக உடையை உடுத்துவது எப்படி அவர்களுக்கு அவசியமோ; அதேபோலத்தான் அவர்களது சமூகத்தின் நாகரீகம் அது, அவ்வளவுதான்! அவர்களது மாற்றத்தை அவர்களது நாகரீகம் தீர்மானிக்கட்டும்; அதில் எதற்கும் நாம் சொறிய வேண்டும்? 

மூடநம்பிக்கைகள்  என்று சொல்லப்படும் பல நம்பிக்கைகள் ஏதோ ஒருவகையில் ஆரோக்கியமானவை என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு!! எல்லோரும் பரந்த சிந்தனையாளர்கள் இல்லை; சிந்தனைத்  திறன் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இந்நிலையில் இன்றும் பல நம்பிக்கைகள்தான்  பலருக்கும்  நம்பிக்கையை, தைரியத்தை கொடுக்கிறது; சிலரை தப்புச் செய்யவிடாமல் தடுக்கின்றது.  மூடநம்பிக்கைகள் என்று சில தசாப்தங்களுக்கு முன்னர் சொல்லப்பட்ட பல விடயங்கள்; அடிப்படையில் சுகாதார, மருத்துவ ரீதியில் சரியானவை என சொல்லப்பட்டிருக்கின்றன!!  பலருக்கு பல நம்பிக்கைகள் நிறைவேறும் போது திருப்தியை கொடுக்கின்றன!!  புரட்டாதிச் சனியானால் அம்மா காக்காவுக்கு சாதம் வைக்கும் சம்பவம்  விமர்சிக்கப்படும், காக்காக்கள் பிதுர்கள் இல்லாமல் இருக்கட்டும், அது மூடநம்பிக்கையாக இருக்கட்டும்; ஆனால் காக்காவுக்கு வைக்கும் சோறு அம்மா/அப்பா/தாத்தா/பாட்டியின் நம்பிக்கை, அவர்களுக்கு திருப்தி ஏற்படுத்தும் சம்பவம்!! 361 நாளும் வேளா வேளைக்கு சமைத்துக் கொட்டும் அம்மாவுக்காக 4 நாட்கள் சற்று பிந்தி சாப்பிட்டால் என்ன ஆகிவிடப்போகிறது? 

பல்லி  கத்தும்போது கைவிரலால் சுண்டுவது, பூனை குறுக்கே போனால் தண்ணீர் குடித்துவிட்டு போவது, சாப்பாட்டில் தலைமயிர் இருந்தால் தண்ணீர் தெளிப்பது, காலையில் வெளியே போகும்போது விளக்குமாறு/துடைப்பம் கண்ணில் படாமல் போவது, எங்கே போகின்றாய் என்று கேட்டால் ஓரிரு நிமிடங்கள் தாமதித்து செல்வது, ஊசியை கையில் கொடுப்பதில்லை, வாகன சாவியை கையில் வாங்குவதில்லை போன்று  நூற்றுக்கணக்கான நம்பிக்கைகள்  அன்றாட வாழ்விலும்; ஒவ்வொரு விசேட சம்பவத்தின் போதும் இப்படியான பல நூறுக்கணக்கான நம்பிகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதும் வழமை!!  சிலவற்றுக்கு  காரணம் சொல்லப்படும், பலத்துக்கும்  காரணம் தெரியாமல் மரபுவழி பயன்படுத்தப்பட்டுவரும்!! இங்கு கடைப்பிடிக்கப்படும் அனைத்தும் மூடநம்பிக்கைகள் என்று கொண்டாலும்; அவற்றைக் கடைப்பிடிப்பதில் என்ன தவறு? இழப்பு என்று ஏதும் இல்லை, ஆனால் கிடைப்பது திருப்தி!! 

 Facebook இல் கூட  ஒரு கடவுள்  படத்தை போட்டு இதை  Share செய்தால் 7 செக்கனில் நல்லது நடக்கும் என்று போடப்பட்டிருக்கும்; அதை பலர் இன்னமும் share செய்து வருகின்றனர், சிலர் அவர்களை கேவலமாக விமர்சித்தும் வருகின்றனர். நன்மை கிடைக்கிதோ இல்லையோ அதை share செய்பவனுக்கு அதில் ஒரு நம்பிக்கை!! நாம் அரசியல், சினிமா, கிரிக்கட், பொது விடயங்களுக்கு போடும் கோபமான, ஆதங்கமான  விமர்சன Status கள் எல்லாம் சம்பந்தப்பட்ட தரப்பால்  பரிசீலிக்கப்பட்டு பலன் கொடுக்கின்றனவா? ரெண்டுபேரும் ஒரே வேலையைதான்  செய்கின்றோம், ஆனால் வேறு வேறு வழிகளில். இதில் ஒருவரை மட்டும் எப்படி நையாண்டி பண்ணமுடியும்?  

அடுத்தவர்களை விமர்சித்து, பகுத்தறிவு பேசுபவர்களுக்கு; அப்படி செய்வதில்  ஒரு சந்தோசம், மகிழ்ச்சி கிடைக்கும் என்றால் அதில் தவறில்லை! அதேநேரம் அடுத்தவர் நம்பிக்கையை சுரண்டி, அதை காயப்படுத்துவது ஆரோக்கியமான செயலா? சில ஆண்டுகளுக்கு முன்னர் கடவுளை மறுத்து, கடவுளை கேவலப்படுத்தி தன்னை நாத்திகராக காண்பித்த ஒருவர்; தன்  திருமணத்தில் கடவுள் படத்தை வைத்திருந்ததால் விமர்சிக்கப்பட்டார். அவர் தரப்பில் சொல்லப்பட்ட நியாயம், அவர் மனைவியின் குடும்பத்தின் நம்பிக்கை அது என்பதுதான்!!  தனக்கு என்று வந்தால், தன்  உறவென்று வந்தால் நம்பிக்கையை நிறைவேற்றுவதும்; அடுத்தவர்களது நம்பிக்கையை காயப்படுத்துவதும்தான் பகுத்தறிவா? 

தாலியை, கோவில்களை, பூசாரியை, ஜாதகத்தை,பஞ்சாங்கத்தை  கேவலமாக கருத்திடும் ஒவ்வொருவருக்கும் தன்  திருமணத்தை  மேற்சொன்ன எவையும் இல்லாமல் நிகழ்த்த தைரியம் இருக்கா? திருமணம் என்பது தனி நபர்  விருப்பு வெறுப்பல்ல; பெண்ணிற்கு மேற்சொன்ன சம்பிரதாயங்கள் அற்ற  திருமணத்தில்  விருப்பம் இல்லாத பட்சத்தில் இவர்கள் ஆணாதிக்கமாக தங்கள் எண்ணத்தை திணிக்கவேண்டும். தங்கள் பெற்றோரை, பெண்ணின் பெற்றோரை என பலரை காயப்படுத்தவேண்டும். சரி இப்படியான சூழ்நிலையில் பெண்ணுக்கு புரியவைத்து, பெற்றோரை சமாதனப்படுத்தி/காயப்படுத்தியேனும்  சம்பிரதாயம் அற்ற திருமணம் செய்துகொண்டால் விமர்சனம் ஏதுமில்லை. மாறாக பெண்ணின்(வருங்கால மனைவி), பெற்றோரின், மாமனார் குடும்ப  நம்பிக்கைக்காக என்று தங்கள் நாத்திக கொள்கையை இவர்கள் செருப்பைபோல கழட்டிவிட்டால்; இவர்கள் தங்களை செருப்பால் அடிக்க சம்மதிப்பார்களா?  உணர்வு என்பது தன் குடும்பத்திற்கு மட்டும்தான் இருக்குமா? அடுத்தவன் உணர்வை சொறிபவர்கள்; அதே உணர்வை தன்  சுற்றத்திற்காக  விட்டுக் கொடுப்பது மிகக் கேவலமான செயல். இதனால்தான் சொல்கிறேன் இவர்களில் மிகப்பெரும்பான்மை  போலிகள் என்று!!

கமல்ஹாசன்  பக்தியை உங்கள் படுக்கை அறையில் வைக்கச் சொன்னார். அதையேதான் நானும் சொல்கிறேன் உங்கள் நாத்திகம், பகுத்தறிவையும் உங்கள் படுக்கை அறையிலேயே வைத்துவிடுங்கள். மதம் மட்டும் ஆணுறுப்பு போன்றதல்ல, நாத்திகமும் கூட ஆணுறுப்பு போன்றதுதான்; அதை வெளியில் எடுத்துவிட்டு திரியாதீர்கள், குழந்தைகள்மேல் திணிக்காதீர்கள், எல்லாவற்றையும்  அதை வைத்தே சிந்திக்காதீர்கள். இவை எல்லாவற்றையும் தாண்டிய ஒரு உணர்வு பூர்வமான விடயம் இருக்கின்றது, அதுதான் நம்பிக்கை; அதில் கல்லைவிட்டு எறிந்து மற்றவர்களை காயப்படுத்தி உங்களுக்கு அடையாளம் தேடாதீர்கள். என் நண்பன் ஒருவர் சொன்னது 'தன்  நண்பன் ஒருவன் நாத்திகனாம், அவனுக்கு எந்த சம்பிரதாயங்களிலும் நம்பிக்கை இல்லை, சுவாமி அறைக்குள் செருப்போடு போவானாம்', அதை சொல்லும்போது அவனுக்கு அப்படி ஒரு பெருமையாம். பெற்றவர்களது நம்பிக்கையை காயப்படுத்தி தன்  நாத்திகத்தை வெளிப்படுத்தும் இந்த நண்பரின் நண்பர் செய்யும் செயலுக்குப்  பேர்தான் நாத்திகம்/பகுத்தறிவென்றால் அது என் பார்வையில் குப்பை!! 

நம்பிக்கை, மூட நம்பிக்கையை எதுவென்றாலும் அதை ஒவ்வொருவரும் தங்களிடத்தில் வைத்திருத்தல் நல்லது!!  அதே நேரம் அடுத்தவர்களது நம்பிக்கையில் (அது பார்ப்பவர் பார்வையில் மூட நம்பிக்கையாய் இருப்பினும்) சொறியாமல் இருப்பது இன்னமும் நல்லது!!!  

கொசிறு :-

இன்று இணையத்தில் நிறையவே  சமூகத்தள  புரட்சியாளர்கள்  தோன்றியுள்ளனர்; எங்கு அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்பார்கள், பிரபலங்களில் குறை தேடுவார்கள், எதையும்/எவற்றையும் விமர்சிப்பார்கள், பகுத்தறிவு பேசுவார்கள், (மூட) நம்பிக்கைகளை உடைத்தெறிவார்கள். இவர்களது நிஜமுகம் அங்கு தெரியப்போவதில்லை; பொதுவெளியில் முதிர்ச்சி அடைந்த மனநிலையாளர்களாக, சமூகத்தை நெறிப்படுத்தும் முன்னோடிகளாக தங்களை நிரூபிக்கும் ஒருவகை ஹீரோயிச எண்ணம்தான் இப்படியான இணையப் போராளிகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றது!   ஏழை, தாழ்ந்த ஜாதி(அவர்களே சொல்வார்கள்), படிக்காதவன் போன்றோர்  மகா நல்லவர்கள் என்னும் மாயையையும்; பணக்காரன், உயர்ந்த ஜாதி(அவர்களே சொல்வார்கள்), படித்தவன் போன்றோர்  மகா கெட்டவர்கள் போன்ற மாயையையும் இணைய சமூகத்தளங்களில் காணலாம். மனித குணங்கள் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமும் இருப்பது என்பதைகூட புரிந்துகொள்ள முடியாத போராளிகள் இவர்கள்!! இவர்களைவிட ஆபத்தானவர்கள் சமூக விடுதலைப் போராளிகள்; இவர்களால் எதிர்க்கருத்துக்கு துரோகிப்பட்டம் கூட இலவசமாக வழங்கப்படும்!!

Saturday, January 12, 2013

ஒருநாள் போட்டிகளின் பிதாமகன் சச்சின்...


இரு வாரங்களுக்கு முன்னர் ஒரு பத்திரிகைக்கு எழுதியது!!!


கிரிக்கட் என்கின்ற சொல்லையும் சச்சின் டெண்டுல்கர் என்கின்ற பெயரையும் பிரித்துப் பார்க்க முடியாது. மேலோட்டமாகவேனும் கிரிக்கெட்டை அறிந்திருக்கும் ஒருவருக்கு சச்சினை தெரியாதிருக்கும் வாய்ப்பு 0% தான்!! அந்தளவிற்கு சச்சினது பெயர் கிரிக்கட் உலகில் அனைவருக்கும் மிகவும் பரிச்சியமான ஒன்று!! மூன்று தலைமுறை கடந்து சச்சினை ரசிக்கின்றார்கள், மூன்று தலைமுறை பந்து வீச்சாளர்களை சச்சின் அடித்து நொருக்கியிருக்கின்றார், சச்சினுடன் ஒன்றாக ஆடியவர்களது பிள்ளைகள் சச்சினுடன் சேர்ந்து ஆடியிருக்கின்றார்கள், சச்சினுடன் ஆடியவர்களில் பலர் இன்று வர்ணனையாளர்கள், சச்சினுக்கு எதிராக ஆடியவர்கள் சச்சின் இருக்கும் அணிக்கு பயிற்சியாளர்கள், சச்சினுடன் ஆடிய வீரர்கள் இன்று சச்சினுக்கு நடுவர்களாக தீர்ப்பளிக்கின்றார்கள். எந்த நாட்டு ரசிகராக இருந்தாலும், தமது நாட்டு அணிக்கு எதிராக ஆடுகின்றார் என்கின்றபோதும் சச்சினது அழகான ஷாட்களுக்கு தம்மை மறந்து கைதட்டி ரசிக்கின்றார்கள். வெறும் 5 அடி 5 அங்குலம் உயரமுடைய சச்சின் மிகவும் உயரமான ஆஜானுபாகு தோற்றமுள்ள பந்துவீச்சாளர்களுக்கு தண்ணிகாட்டும் துடுப்பாட்ட கலையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

1989 களின் இறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடிய சச்சின், 23 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் (2012 இறுதியில்) தனது ஒருநாள் போட்டிகளின் நீண்ட பயணத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆம், அவர் இறுதியாக ஆடியதும் ஆசிய கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகத்தான். 23 ஆண்டுகள் சர்வதேசப்போட்டிகளில் தொடர்ச்சியாக ஆடுவதென்பது சாதாரண விடயமல்ல! உபாதைகள், மோசமான ஓட்டக்குவிப்பு நிலை, கிரிக்கட்டில் அரசியல் என பல தடைக்கற்களில் சிக்காமல் இருந்தால் மாத்திரமே இது சாத்தியம், இந்த மூன்றும் சச்சினை அவ்வப்போது நெருங்கியிருப்பினும் சச்சின் அவற்றிலிருந்து மீண்டுவந்து தனது ஓட்டக்குவிப்பை அதிகப்படுத்தினாரேயன்றி தளர்ந்துவிடவில்லை. 40 வயது நெருங்கும் நிலையிலும் சச்சினது ஓய்வு பலருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதான், ஆனாலும் என்றோ ஒருநாள் இதை செய்துதானே ஆகவேண்டும்!! அண்மைக் காலங்களாக ஒருநாள் போட்டிகளில் சச்சினுக்கு தொடர்ச்சியான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை; உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்குப் பின்னர் கடந்த 20 மாதங்களில் சச்சின் வெறும் 10 போட்டிகளில் மாத்திரமே ஆடியுள்ளார். முதுமையும், ஓட்டக்குவிப்பின்மையால் வந்த விமர்சனங்களும்தான் அழுத்தமாக மாறி சச்சினை ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறத் தூண்டியிருப்பினும், அவர் ஓய்வுபெற்ற இத்தருணம் சரியான நேரம்தான்!!

சச்சினது முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் பெற்ற ஓட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? பூச்சியம். முதல் போட்டியே சச்சினுக்கு வித்தியாசமான போட்டிதான், பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் நடைபெற்ற 16 ஓவர்களைக் கொண்ட (மழை காரணமாக) போட்டிதான் சச்சினின் முதலாவது ஒருநாள் போட்டி; சுவாரசியம் என்னவென்றால் சச்சினுக்கு அப்போது வயதும் 16 தான். இந்தப்போட்டியில் உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரான வக்கார் யூனிஸின் பந்துவீச்சில் சச்சின் ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சில மாதங்களின் பின்னர் மீண்டும் அவர் ஆடிய நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் ஓட்டங்கள் எதனையும் அவரால் குவிக்க முடியவில்லை. அதன் பின்னர் சில போட்டிகளில் சச்சின் ஆடியிருப்பினும் சொல்லிக்கொள்ளும்படியான ஓட்டக்குவிப்புக்கள் எவையும் இடம்பெறவில்லை. ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிகூடிய அரைச்சதங்களாக 96 அரைச்சதங்களை குவித்துள்ள சச்சின் தனது ஒன்பதாவது போட்டியில்தான் தனது கன்னி அரைச்சதத்தை இலங்கைக்கு எதிராக பெற்றுக்கொண்டார். அந்தப் போட்டியில் 5 ஆம் இலக்கத்தில் களமிறங்கி 41 பந்துகளில் 53 ஓட்டங்களை பெற்று இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்த சச்சின், பந்துவீச்சிலும் இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றியிருந்ததால் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்; ஒருநாள் போட்டிகளில் ஆகக்கூடியதாக 62 ஆட்டநாயகன் விருதுகளை தனது பெயரில் கொண்டுள்ள சச்சினின் முதல் ஒருநாள் போட்டிக்கான ஆட்டநாயகன் விருது இதுதான்.


சாதனை எண்ணிக்கையான 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, ஒருநாள் போட்டிகளின் அதிகபட்சமான யாரும் இலகுவில் எட்டமுடியாத 49 சதங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் சச்சின் தனது கன்னிச் சதத்தை தனது 79 ஆவது போட்டியில்தான் பெற்றுக்கொண்டார். 1994 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற 'சிங்கர் வேர்ல்ட் சீரிஸ்' தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி 130 பந்துகளை எதிர்கொண்டு சச்சின் குவித்த 110 ஓட்டங்கள் அந்தப்போட்டியில் இந்தியாவிற்கு வெற்றியையும், சச்சினுக்கு ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக்கொடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி ஒரு வீரர் பெற்றுக்கொண்ட அதிக ஓட்டங்கள் என்னும் சாதனையாக 15310 ஓட்டங்களை குவித்துள்ள சச்சின்; முதன்முதலாக ஆரம்பத் துடுப்பாட்டவீரராக களமிறங்கிய போட்டி நியூசிலாந்துக்கு எதிராக நியூசிலாந்தின் அக்லண்ட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டிதான். 142 என்னும் இலகுவான ஓட்ட எண்ணிக்கையை எட்டிப்பிடிக்க வேண்டிய இந்தியா சச்சினை முதன் முதலாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்கியது; காரணம், இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நவ்ஜொட் சிங் சித்துவிற்கு ஏற்பட்ட உபாதை. கிடைத்த சந்தர்ப்பத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட சச்சின்; யாரும் எதிர்பாராதவகையில் அதிரடியாக ஆடி 15 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என வெறும் 49 பந்துகளில் 82 ஓட்டங்களை விளாசினார், கூடவே ஆட்டநாயகன் விருதையும் தட்டிக்கொண்டார். அன்றிலிருந்து சச்சின் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மாபெரும் பங்களிப்பை இறுதிவரை கொடுத்துவந்துள்ளார்!!

ஒருநாள் போட்டிகளில் சச்சின் 49 சதங்களை பெற்றிருந்தாலும் 1998 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக ஷார்ஜா மைதானத்தில் இறுதிப் போட்டியொன்றில் பெற்றுக்கொண்ட சதம்; சச்சினின் மிகச்சிறந்த சதங்களிலில் ஒன்றாக இன்றும் கருதப்படுகின்றது. அன்றைய காலப்பகுதியில் 272 என்னும் மிகப்பெரிய இலக்கை ஷார்ஜா மைதானத்தில் இரவுநேரம் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி பெற்றுக்கொள்வதென்பது இலகுவான காரியமன்று!! பலம் பொருந்திய அவுஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து நொருக்கி சச்சின் பெற்றுக்கொண்ட அந்த 134 ஓட்டங்கள் இந்தியாவிற்கு கிண்ணத்தையும் சச்சினுக்கு ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக்கொடுத்தது. சச்சின் சதம் பெற்ற மற்றுமொரு முக்கிய போட்டி 1999 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் கென்யாவுக்கு எதிராக பெறப்பட்டது; தனது தந்தையின் பிரிவின் மணித்துளிகள் கடக்கும் முன்னர், மனதின் பாரத்தை இறக்கிவைக்கும் அளவுக்கு கால அவகாசம் போதாத நிலையில்; சச்சின் 114 பந்துகளில் பெற்றுக்கொண்ட 140 ஓட்டங்கள் மிகவும் உணர்ச்சி பூர்வமானது. இப்படி சச்சின் பெற்ற சதங்களில் பல சதங்கள் சிறப்பு வாய்ந்தவை எனினும்; 2003 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளில் 273 என்னும் கடினமான இலக்கை பலமான பாகிஸ்தான் பந்து வீச்சை எதிர்கொண்டு, வெறும் 75 பந்துகளில் சச்சின் பெற்ற 98 ஓட்டங்கள் சச்சினின் மிகவும் முக்கியமான இனிங்ஸ்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது. பரம எதிரி நாடான பாகிஸ்தானுக்கு எதிராக வேகப் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமான மைதானத்தில் பலமான பாகிஸ்தான் வேகங்களை சச்சின் அடித்து நொறுக்கிய இனிங்ஸது. அதேபோன்று மற்றுமொரு முக்கியமான இனிங்க்ஸ்; தென்னாபிரிக்காவுக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு குவாலியோர் மைதானத்தில் சச்சின் பெற்றுக்கொண்ட 200* ஓட்டங்கள்தான், ஒருநாள் போட்டிகளின் முதல் இரட்டை சதம் இதுதான்.

சச்சினை ஒரு துடுப்பாட்ட வீரராக மட்டுமே சாதனைகள் முன்னிறுத்தினாலும் பந்துவீச்சிலும் சச்சின் மறக்க முடியாத சில சம்பவங்களை கிரிக்கட் வரலாற்றில் நிகழ்த்தியுள்ளார். 1991 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் பேத் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில்; 6 ஓட்டங்களுக்குள் மேற்கிந்திய தீவுகள் அணியை கட்டுப்படுத்தவேண்டிய நிலையில் அன்றைய அணித்தலைவரான அசாருதீன் தனது முக்கிய பந்துவீச்சாளர்கள் நான்கு பேரினதும் 40 ஓவர்களும் நிறைவடைந்த நிலையில் வேறு வழியின்றி சச்சினை பந்து வீச அழைத்தார். ஒரு விக்கட் மீதமிருக்க இறுதி ஓவரில் 6 ஓட்டங்களுக்காக ஆடிய மேற்கிந்திய அணி முதல் 5 பந்துகளிலும் 5 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. போட்டி சமநிலையில் இருக்கும்போது அந்த ஓவரில் இறுதிப்பந்தை வீசிய சச்சின்; 24 ஓட்டங்களைப் பெற்று சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கமின்ஸை சிலிப் திசையில் நின்றுகொண்டிருந்த அசாருதீனிடம் பிடி கொடுத்து ஆட்டமிழக்கச் செய்தார், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. அதேபோல் 1993 ஆம் ஆண்டு 'ஹீரோ கப்' அரையிறுதியில் தென்னாபிரிக்காவுடனான போட்டியில் இறுதி ஓவரில் தென்னாபிரிக்காவிற்கு 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அனுபவம் மிக்க கபில்தேவ், ஸ்ரீநாத், பிரபாகர் ஓவர்கள் மீதமிருக்க இம்முறை சச்சின் மீது நம்பிக்கை வைத்து பந்துவீச அழைத்தார் அசாருதீன். இறுதி ஓவரில் வெறும் 3 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 ஓட்டங்களால் போட்டியை வெற்றி கொண்டதுடன், இந்தியாவை இறுதிப்போட்டிக்கும் அழைத்துச்சென்றார் சச்சின். இவற்றைவிட 1998 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுடனும், 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனும் 5 இலக்குகளை சாய்த்து போட்டியை இந்தியாவின் கைகளுக்கு வெற்றிக்கனியாக மாற்றியிருக்கின்றார், இந்த இரு போட்டிகளும் இடம்பெற்றது கொச்சி மைதானத்தில் என்பது விசேட அம்சம்.


18426 ஓட்டங்களை உலகசாதனையாக தனது பெயரில் சச்சின் கொண்டிருந்தாலும் அதில் 4 ஓட்டங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஒரு போட்டியில் அவுஸ்திரேலியாவின் கிளேன் மக்ராத் தான் வீசிய பந்தை கையில் எடுத்து மீண்டும் சச்சினை நோக்கி விட்டெறிந்தார், தன்னை நோக்கிவந்த பந்தை பாதுகாப்பிற்காக தனது மட்டையால் சுழற்றி அடித்தார் சச்சின், அந்த பந்து எல்லைக்கோட்டை கடக்கவே அன்றைய விதிமுறைகளின்படி சச்சினுக்கு 4 ஓட்டங்கள் வழங்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு மிகச்சிறந்த இனிங்ஸ் ஒன்று சச்சினால் ஆடப்பட்டபோதும் அந்த இன்னிங்க்ஸ் சர்வதேசப் போட்டிகளில் சேர்க்கபடாததால் எல்லோராலும் கவனிக்கப்படவில்லை. 18 ஆடி 1998 இல் இங்கிலாந்தின் புகழ்பெற்ற லோட்ஸ் மைதானத்தில் MCC அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் உலக பதினொருவர் அணிக்காக ஆடிய சச்சின் 262 என்னும் இலக்கை எட்டுவதற்கு 4 சிக்சர்கள் 15 பவுண்டரிகள் அடங்கலாக 114 பந்துகளில் 125 ஓட்டங்களை குவித்து தனது பங்களிப்பை கொடுத்திருந்தார். உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களான மக்ராத், டொனால்ட், ஸ்ரீநாத், கும்ளே அனைவரையும் சச்சின் ஒருகை பார்த்த ஆட்டமது. அன்று சச்சினும் அரவிந்த டீ சில்வாவும் (அரவிந்தா 82 ஓட்டங்கள்) 177 ஓட்டங்களை தங்களுக்குள் இணைப்பாட்டமாக பெற்றமை கிரிக்கட் ரசிகர்களுக்கு மிகப்பெரும் காணற்கரிய விருந்தாக அமைந்தது, சச்சினின் சிறந்த இனிங்கஸ்களில் ஒன்றாக இதையும் சொல்வார்கள்.

சச்சின் 23 வருடங்களாக கிரிக்கட் பயணத்தை வெற்றிகரமாக பயணித்ததில் அழுத்தங்களை அதிகம் எதிர்கொண்டவர்கள் என்னவோ எதிரணி தலைவர்களும் பந்துவீச்சாளர்களும்தான். சச்சினுக்கு வியூகங்கள் அமைப்பதிலும், எப்படி பந்துவீசி ஆட்டமிழக்க செய்வது என்பதிலும் எதிரணியினரின் கவனம் அதிகமாக இருந்தும் அவர்களால் சச்சினை பெரும்பாலும் கட்டுப்படுத்த முடிவதில்லை; சச்சின் அளவுக்கு உலகின் முன்னணி பந்துவீச்சாளர்கள் பலரையும் எதிர்கொண்டு ஓட்டங்களை வஞ்சனையில்லாமல் குவித்த வீரர்களை எங்கும் காணவியலாது; எந்த நாட்டுக்கு எதிராகவோ, எந்த நாட்டில் இடம்பெற்ற போட்டியாயினும் சச்சினின் ஆதிக்கம் பந்துவீச்சாளர்களுக்கு தலையிடிதான்!! சர்வதேச அரங்கில் அதிக விக்கட்டுகளை வீழ்த்திய முதல் 60 பந்துவீச்சாளர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் தவிர்த்து மிகுதி அனைவருக்கும் எதிராக சச்சின் ஆடியிருக்கின்றார்; அதிலும் பெரும்பாலானவர்களுக்கு சச்சினின் துடுப்பு தலையிடியை கொடுத்திருகின்றமை வரலாறு. சச்சினுக்கு பந்துவீசிய ஓய்வுபெற்ற முன்னாள் பந்துவீச்சாளர்களில் சிலர்; பயிற்சியாளர்களாக இளம் பந்துவீச்சாளர்களை பயிற்றுவித்து சச்சினுக்கு எதிராக பந்துவீச உதவி செய்தபோதும் சச்சினின் துடுப்பின் பதில் ஓட்டக்குவிப்புத்தான்!! இப்படியாக ஒருநாள் போட்டிகளின்மீது தனது ஆதிக்கத்தை செலுத்திவந்த சச்சினுக்கு கிடைத்த மகுடந்தான் 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ணம் வென்ற அணியின் வீரர் என்கின்ற பெருமை. சச்சினுக்காகவேனும் இந்தியா நிச்சயம் உலககிண்ணம் வெல்ல வேண்டும் என்று கூறிவந்த கிரிக்கட் ரசிகர்களின் கனவை மகேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணி மெய்ப்பித்து சச்சினுக்கு கௌரவம் சேர்த்தது.

சச்சின் சதமடிக்கும் போட்டிகள் தோல்வியில் முடிவடையும் என்பதும், சச்சின் போட்டிகளை இறுதிவரை கொண்டுசென்று முடிப்பதில்லை என்பதும் சச்சின் மீது சொல்லப்படுகின்ற முக்கிய குற்றச்சாட்டுகள். சச்சின் சதமடித்த 49 போட்டிகளில் 33 போட்டிகள் இந்தியாவால் வெற்றி கொள்ளப்பட்டவை; இந்த 33 என்னும் எண்ணிக்கையில் இதுவரை வேறெந்த வீரரும் மொத்தமாகவேனும் சதங்களை எட்டவேயில்லை. வெற்றிபெற்ற போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் பட்டியலிலும் சச்சின்தான் முதலிடம்; 56.63 என்னும் சராசரியில் 11157 ஓட்டங்களை வெற்றி ஓட்டங்களாக குவித்த சச்சின் 62 தடவைகள் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். சதமடித்த எந்தப்போட்டியிலும் சச்சின் தேவைக்கு குறைவான ஓட்ட வேகத்தில் சுயநலமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை; தேவைகேற்ப ஆக்ரோஷமான் ஆட்டத்தை வெளிப்படுத்தி சச்சின் சதமடிக்கும் போட்டிகளில் பந்துவீச்சாளர்களும், சக துடுப்பாட்ட வீரர்களும் சொதப்புமிடத்தில் சச்சின் எப்படி அந்த தோல்விகளுக்கு பொறுப்பாக முடியும்? மற்றும் ஒரு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தனது பணியை சரியாக செய்யும் சச்சினை 50 ஓவர்களின் இறுதிவரை நின்று போட்டியை முடித்து கொடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனம்! பின்னர் எதற்கு மத்தியவரிசை வீரர்கள் அணியில் இருக்கின்றார்கள்? இந்தக் குற்றச்சாட்டுக்கள் சச்சின் மீது சொல்லப்படுவது அறியாமையிலும் இயலாமையிலும் தானன்றி வேறில்லை!!


சச்சின் டெண்டுல்கர் - இந்தப் பெயர் கிரிக்கட் என்னும் சொல் நிலைத்திருக்கும் காலமளவுக்கும் நிலைத்திருக்கும். இவரது ஒருநாள் போட்டிகளினது சாதனைகளை இன்னொருவர் தாண்டுவாரா என்பதற்கான பதில் மிகமிக சாத்தியக்குறைவு என்பதுதான். சச்சினை பிடிக்காதவர் இருக்கலாம், சச்சினை விமர்சிக்கலாம், ஆனால் சச்சினை எவராலும் புறக்கணித்து கிரிக்கட்டை நேசிக்க முடியாது! இந்தியாவில் கிரிக்கட் ஒரு மதம், சச்சின் அதன் கடவுள் என்பார்கள்; உண்மைதான், ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை துடுப்பாட்டத்தில் சச்சின் நிச்சயமாக பிதாமகன்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சச்சினின் டெஸ்ட் போட்டிகளின் ஒட்டக்குவிப்பு அண்மைக்காலங்களில் மந்தகதியில் இருப்பினும் சச்சினால் மீண்டு வரமுடியும் என சச்சினும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுசபையும் நம்புவதால் சச்சின் மேலும் சில காலம் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவார். டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஓட்டக்குவிப்பு ஒன்றை நிகழ்த்தியவுடன் சச்சின் தனது ஓய்வை முழுமையாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்; ஒருநாள் போட்டிகளில் சச்சின் ஓய்வை அறிவித்திருக்கும் இந்நேரத்தில் அவர் இறுதியாக ஆடிய இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சதம் மற்றும் அரைச்சதம் குவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயம். சச்சின் என்னும் ஜாம்பவான் வாழும் காலத்தில் அவர்கூட தாங்கள் விளையாடியதை பல வீரர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றார்கள்; அதேபோல ரசிகர்களாகிய நாம் கிரிக்கட்டை நேசித்து, ரசித்த காலத்தில் சச்சின் என்னும் மீபெரும் துடுப்பாட்ட வீரரை ரசித்தது எமக்கும் பெருமையான, மறக்க முடியாத, பசுமையான நினைவுகளாக எம்முடன் என்றென்றும் பயணிக்கும்......

Friday, September 28, 2012

தாண்டவம் - என் பார்வையில்



எல்.விஜய் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில், நீரவ்ஷா கேமராவில் சீயான் விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன், சந்தானம், நாசர், ஜெகபதிபாபு, லக்ஷ்மிராய் போன்றோர் முக்கிய பாத்திரங்களிலும்; சரண்யா, எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, டெல்லி கணேஷ் போன்றோர் குறிப்பிடத்தக்க வேடங்களிலும் நடித்து UTV Motion Picture தயாரிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தாண்டவம்!!

கதை - போலிஸ், கிரைம், கால்யாணம், காதல், நட்பு, குடும்பம், கிராமம், டெல்லி, லண்டன், குண்டுவெடிப்பு, தீவிரவாதம், இழப்பு என கதை சொல்லப்பட்டிருக்கின்றது!! புதுமையான கதை இல்லை என்றாலும் அதை புதுமையாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர், அதில் வெற்றியும் கண்டுள்ளார்!!

திரைக்கதை - முதல்பாதியில் வரும் பிளாஷ்பாக் கதையை அங்கேயே இடைநிறுத்தி, இரண்டாம் பாதியில் மீண்டும் இடையில் கொண்டுவந்திருப்பது திரைப்படத்தை தொய்வின்றியும் சலிக்காமலும் கொடுக்க உதவியிருக்கின்றது! வேகமான திரைக்கதை எல்லாம் இல்லை என்றாலும் வழமையான எல்.விஜயின் பாணியில் திரைக்கதை நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது!!

வசனம் - குறிப்பிட்டு சொல்லும்படி பெரிதாக எழுதவில்லை எனினும், வசனம் எந்தவிதத்திலும் குறையாக தெரியவில்லை; கிராமத்து காட்சிகளில் வரும் வசனங்கள் ஜதார்த்தத்தை மீறி நகைச்சுவையாக அதிகம் இருந்தாலும் அவற்றுக்கு சபாஷ் போடலாம்!!


விக்ரம் - என்ன சொல்றது? 46 வயதிலும் இத்தனை கடின உழைப்பை ஒவ்வொரு படத்திற்கும் கொடுக்கணும் என நினைத்து அதை 100 சதவிகிதம் கடைப்பிடிக்கும் விக்ரமிற்கு சபாஷ்!! விக்ரம் படங்கள் அண்மைக்காலங்களில் சொதப்பினாலும் விக்ரமின் உழைப்பு ஒவ்வொரு திரைப்படத்திற்கும் சம அளவில் கடினமானதாக அமைந்திருக்கும்; தாண்டவமும் விதிவிலக்கல்ல!! உடல் எடையை ஏற்றுவதிலும், இறக்குவதிலும், உடலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் விக்ரமுக்கு நிகர் விக்ரம்தான்!! தில் திரைப்படத்தில் பார்த்து வியந்த அதே உடல் கட்டுப்பாடு!! முகத்தில் சற்று முதுமை தெரிந்தாலும் ஆக்ஷன் காட்சிகளிலும், விறுவிறுப்பிலும் விக்ரம் இன்னமும் இளைஞன்தான்!!

அனுஷ்கா - சற்று வயது அதிகமாக தோன்றினாலும் விக்ரமிற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்; இப்போதிருக்கும் நாயகிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் திறன் அதிகம் உடைய அனுஷ்கா தாண்டவத்திலும் அசத்தியிருக்கின்றார். எல்.விஜய் திரைப்படங்களுக்கு இயல்பான நாயகியாக அனுஷ்கா சிறப்பான தேர்வு!!

எமி.ஜாக்சன் - பெரிதாக கவரவில்லை; அழகிலும்!!

சந்தானம் - திரைப்படத்தை தொய்யவிடாமல் சந்தானம் அப்பப்போ திரைக்கதையில் உள்வாங்கப்பட்டிருந்தாலும் அவை கதையைவிட்டு தனியே இல்லாமல் திரைக்கதையின் தேவைக்காக அமைந்திருப்பது சிறப்பு!! ரஜினி என்ன செய்தாலும் ஸ்டைல் என்கின்ற ஒருநிலை உருவாகியதுபோல; சந்தானம் என்ன சொன்னாலும் அதை கவுண்டராக/காமடியாக எடுத்து ரசிகர்கள் விசிலடிக்கும் அளவிற்கு சந்தானத்தின் அசுரவளர்ச்சியை காணக்கூடியதாக உள்ளது!! ஒவ்வொரு கவுண்டருக்கும் கிளாப்ஸ்; கவுண்டர் கொடுப்பதுடன் இப்பெல்லாம் சந்தானம் எக்ஸ்ப்ரஷனிலும் வெளுத்து வாங்குகிறார், சின்ன சின்ன எக்ஸ்ப்ரஷனுக்குகூட செம ரெஸ்போன்ஸ், தாண்டவத்திலும்!!


நாசர் - இலங்கை தமிழ் பேசும் லண்டன் விசாரணைப் போலிஸ்; இதுவரை தமிழ் சினிமா கொடுத்த இலங்கை உச்சரிப்புக்களில் அதிகம் நெருக்கமாகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியளவிலும் உள்ள வசன உச்சரிப்பாக நாசரின் இந்த திரைப்பட உச்சரிப்பை கூறலாம்!! நாசர் கொடுத்ததை சிறப்பாக செய்யாவிட்டால்தான் ஆச்சரியம், இதிலும் சிறப்பாகவே தனது வெளிப்பாட்டை கொடுத்திருக்கின்றார்!!

லக்ஷ்மிராய் - நல்ல ஸ்கோப் உள்ள பாத்திரங்களை கொடுத்தால் சிறப்பாக வெளிப்படுத்தக்கூடியவர்; ஆனால் இவருக்கு சப்பை கேரக்டர்களே தொடர்ந்தும் கிடைக்கின்றமை அவரது துரதிஸ்டம்!!

சரண்யா, எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, டெல்லி கணேஷ் - கிடைத்த சிறிது நேரத்தையும் தமது அனுபவத்தால் கலகலப்பாக்கி விடுகின்றார்கள்!!

எடிட்டிங் - காட்சிகளை சிறப்பாக கோர்த்திருக்கின்றார்; விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக்கொண்டமைக்கு ஆண்டனிக்கு சபாஸ் போடலாம்!!

ஒளிப்பதிவு -
நீரவ்ஷா கேமரா வழமைபோல சிறப்பு; லண்டன், டெல்லி, கிராமம் என மூன்று வித்தியாசமான பிரதேசங்களையும் அழகாக காட்சிப்படுத்திக் கொடுத்திருக்கிறார்; எமி ஜாக்சனை அழகாக காட்டுவதில் மட்டும் தோற்றுப் போய்விட்டாரோ என எண்ணத் தோன்றுகின்றது!!

இசை - ஜீ.வி.பிரகாஷ்குமார் பாடல்களில் ஸ்கோர் பண்ணியிருக்கின்றார்; அனிச்சம் பூவழகி, உயிரின் உயிரே, ஒருபாதி கதவு பாடல்களின் காட்சியமைப்புக்களும் பிரமாதம்!! பின்னணி இசையில் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாகவோ, மட்டமாகவோ தோணவில்லை!!


இயக்கம் - சென்னையில் இருந்து டெல்லிவரை எடுக்கக் கூடிய கதையை, டெல்லியில் இருந்து லண்டனுக்கு எடுத்திருக்கின்றார் இயக்குனர் எல்.விஜய்; திரைப்படத்தை அழகாகவும், ரிச்சாகவும் காட்டுவதற்கான புதிய வழிமுறை!! பெரிய ஹீரோக்கள் படமென்றால் இப்போதெல்லாம் இயக்குனர்கள் இதனையே அதிகம் செய்கின்றார்கள். ஸ்டுடியோவுக்குள் இருந்த கேமராவை கிராமங்களுக்கு கொண்டுவந்த பாரதிராஜாவின் புரட்சியை இன்றைய இயக்குனர்கள் வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்வது ஆரோக்கியமானதா? இல்லையா? என்று சொல்லமுடியவில்லை!! மற்றப்படி இயக்கத்தில் விஜய் வழமைபோல சிறப்பாக இயக்கியிருக்கின்றார்; பல திரைப்படங்களில் பார்த்த காட்சிகள்போல ஞாபகங்கள் ஆங்காங்கே வந்துபோனாலும் எடுத்த விடயத்தை ஆக்ஷன், காமடி, காதல், கிரைம் என மசாலாவாக சலிக்கவைக்காமல் கொடுத்திருக்கின்றார்!!

தாண்டவம் - தமிழ் சினிமாவின் மைல்கள் என்றோ, பக்கா கமர்சியல் விருந்தென்றோ சொல்லமுடியாது என்பது எத்தனை சதவிகிதம் உண்மையோ; அத்தனை சதவிகிதம் தாண்டவம் திரையரங்கில் சலிக்காமல் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம் என்பதும் உண்மை!! நிச்சயம் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம்!!!

குறிப்பு - இது விமர்சனமல்ல 'எனது பார்வையில்' தாண்டவம்! (குறிப்பாக பாலுமஹேந்திரா சார் அவர்களுக்கு)

*--------------*

Tuesday, September 25, 2012

நானும் சினிமாவும் பாகம் - 3 (சீயான் விக்ரம்)



நீண்ட நாட்களுக்கு முன்னர் எழுதிய நானும் சினிமாவும் பாகம் இரண்டாவதின் தொடர்ச்சி!! விக்ரம் சம்பந்தப்பட்டது என்பதால் சற்று விரிவாக என்னுடைய அனுபவத்தில் விக்ரமையும் தாண்டி, விக்ரமை பற்றியும் எழுத வேண்டும் என நினைத்திருந்ததால் பல நாட்கள் தள்ளிப்போய்விட்டது. இந்தவார இறுதியில் தாண்டவம் வெளியாகும் நேரத்தில் இதனை எழுதுவது சரியென தோன்றியது! ரஜினிக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விக்ரம் என்பதனால் முடிந்தளவுக்கு திருப்தியாக, விரிவாக எழுதவேண்டும் என்று நினைக்கின்றேன்; எழுதினேனா இல்லையா என்பதை நானும் உங்களைபோல பதிவின் முடிவில் தெரிந்துகொள்கின்றேன் :-))


எனக்கு பிடித்த விக்ரம் - இந்த விம்பத்தை எனக்கு பொதிகை தொகைக்காட்சி முன்னரே ஒரு சில திரைப்படங்களில் அறிமுகப்படுத்தி இருந்தாலும்; அந்த விம்பத்தை எனக்கு இவர் பெயர் விக்ரம் என அறிமுகப்படுத்தியது 'தில்' திரைப்படம் தான்!! 'சேது' திரைப்படம் விக்ரமிற்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்திருந்தாலும் இங்கு யாழ்ப்பாணத்தில் ஓரிரு 'மினி' திரையரங்கில் மட்டுமே 'சேது' காண்பிக்கப்பட்டது! ஓரிருவர் "படம் நல்லாயிருக்கு" என்று சொன்னாலும் ஏனோ படம் பார்க்க பிடிக்கவில்லை!! சிலகாலம் கழிந்த பின்னர் மீண்டும் ஒரு நண்பனின் உதவியில் 'தில்' திரைப்பட VCD கிடைத்தது; மிகவும் தெளிவான copy வேறு!! படம் ரொம்பவே பிடித்துப்போக, பலதடவைகள் வேறு வேறு இடங்களில்(உறவினர், நண்பர்கள் வீடுகளில்) மீண்டும் மீண்டும் பார்த்ததாலோ என்னமோ அந்த திரைப்படத்தின் நாயகனும் மனதுக்கு நெருக்கமானான்!!

கூட இருந்த அஜித்,விஜய் ரசிகர்களான நண்பர்களின் அடுத்த சூப்பர்ஸ்டார் அலப்பறை; ரஜினிவேறு நீண்ட இடைவெளிகளில் படம் நடிப்பதால் இடைப்பட்ட காலத்தில் திரைப்படம் பார்ப்பதற்கு தேவயான ஒரு பிடிப்பு போன்றவை மறைமுக காரணங்களாக இருக்க தில், காசி, சேது என அடுத்தடுத்து நான் பார்த்த மூன்று திரைப்படங்களிலும் வித்தியாசம் + ஈர்ப்பை கொடுத்த விக்ரம் எனக்கு மனதுக்கு நெருக்கமான நாயகனானார்!! அடுத்தடுத்து விக்ரம் நடித்து வெளியாகும் அனைத்து திரைப்படங்களின் VCD களையும் தேடித் தேடி பார்ப்பது வழக்கம் (திரையரங்குகளுக்கு படங்கள் வந்ததில்லை) ஓரிரு திரைப்படங்கள் வெளிவந்தாலும் அந்த சமயங்களில் நான் ஊரில் இருந்ததில்லை. மிகவும் எதிர்பார்ப்புடன் திரையரங்கில் பார்வையிட எதிர்பார்த்திருந்த பிதாமகனும் கடைசி நேரத்தில் பார்க்க முடியாமல் போயிற்று!! First show மிஸ் பண்ணினால் ஏனோ அந்த படத்தை திரையில் பார்க்க பிடிப்பதில்லை; இன்றுவரை :-)

அதற்கிடையில் தூள், சாமி, ஜெமினி என விக்ரமின் மாஸ் திரைப்படங்கள் என்னை விக்ரமின் தீவிர ரசிகனாக மாற்றியது!! நான் மிகவும் எதிர்பார்த்து முதல் முதலில் திரையரங்கில் பார்த்த திரைப்படம்(கொழும்பில் நான் பார்த்த முதல் திரைப்படம்) 'அருள்' ஊத்திக்கொண்டது!! அடுத்து மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் அந்நியன்; முதல்நாள் மற்றும் சில நாட்கள் திரையரங்கிலும், தொலைக்காட்சி மற்றும் DVD என பலநாட்கள் வீட்டிலுமாக, நான் அதிகதடவைகள் பார்த்த திரைப்படங்கள் வரையில் அந்நியனும் இடம்பிடித்துக்கொண்டது. அந்நியனுக்கு பின்னர் மஜா, பீமா, கந்தசாமி, ராவணன், தெய்வத்திருமகள், ராஜபாட்டை என எந்த திரைப்படத்தின் முதல்நாள் காட்சிகளையும் திரையில் காண தவறவிட்டதில்லை!! இப்போதும் தாண்டவம் முதல்நாள் காட்சிக்காக ஆவலுடன்!!



வெற்றிப்படங்கள் மட்டுமென்றில்லாது விக்ரமின் சரியாக போகாத சில திரைப்படங்களும் எனக்கு மிக்கவும் பிடித்தவை; அவற்றில் பீமா, சாமுராய், இராவணன் போன்றவை முக்கியமானவை!! ஒவ்வொரு திரைப்படங்களுக்கும் மலையளவு எதிர்பார்ப்பு இருக்கும், ஆனால் அவற்றை கடந்த 7 வருடங்களில் தெய்வதிருமகள் மட்டும்தான் பூரணமாக திருப்திப்படுத்தியது; பீமா, ராவணன் திரைப்படங்கள் திருப்தியை கொடுத்தாலும், வணிகரீதியில் சரியாக போகாத குறை இருக்கத்தான் செய்தது. வயது ஏறிக்கொண்டே போகும் நேரத்தில் வீணாக பெரிய பட்ஜெட் என்று காலத்தை இழுத்தடிக்காமல் நல்ல ஸ்கிரிப்ட்களில் விக்ரம் ஆண்டுக்கு இரண்டு படங்களாவது கொடுக்கவேண்டும் என்பதே என் விருப்பம்; தாண்டவத்திற்கு அடுத்து ஷங்கரின் 'ஐ' திரைப்படம் என்பதால் அதற்கும் நீண்டகால அவகாசம் தேவை!!

நடிகர் விக்ரம் - சினிமாக் கனவு; அதற்கான முயற்சியாக படிப்பு, பயிற்சி என தன்னை தயார்ப்படுத்திக்கொண்டு தனது கனவு கோட்டைக்குள் காலடிவைத்த இளைஞன்!! 10 வருட போராட்டம், 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நாயகனாக நடிக்க வாய்ப்பு; ஆனாலும் வெற்றியோ அடையாளமோ கண்ணுக்கெட்டிய தூரம்வரை இல்லை!! கல்லூரி காலத்தில் இருந்து விக்ரமிற்கு தடைக்கற்கள்தான் அதிகம்!! கல்லூரி காலத்தில் மிகவும் ஆபத்தான மோட்டார் சைக்கிள் விபத்தை சந்தித்து இருபதிற்கும் மேற்ப்பட்ட சத்திர சிகிச்சையால் பிழைத்த விக்ரமிற்கு கால்களில் இன்னமும் அதன் தாக்கம் உண்டு. அதன் பின்னர் சினிமாவில் நடிகனாக தோல்வி, தோல்வி, தோல்வி..... அப்பப்போ வேறு நடிகர்களுக்கு டப்பிங் பேசும் சந்தர்ப்பமும் கிடைக்கப்பெற்றது; குறிப்பாக பிரபுதேவாவிற்காக காதலன், மின்சாரகனவு போன்ற திரைப்படங்களிலும்; அப்பாசிற்காக கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பூச்சூடவா திரைப்படங்களிலும்; அஜித்திற்கு அமராவதி திரைப்படத்திலும் பின்னணி குரல் கொடுத்தவர் விக்ரம்தான்!!

தனக்கும் சினிமாவுக்கும் எட்டாம் பொருத்தம் என நினைத்து சினிமாவைவிட்டு ஒதுங்கி வெளிநாட்டில் செட்டில் ஆக முடிவெடுத்திருந்த வேளையில் கிடைத்த ஒரு திரைப்பட வாய்ப்பை இறுதி வாய்ப்பாக பயன்படுத்தி மீண்டுமொருதடவை முயற்சி செய்தார் விக்ரம். பாலுமகேந்திரா பாசறையில் இருந்து புதுமுக இயக்குனராக வெளிவந்த பாலா இயக்குனர் அவதாரம் எடுக்க, விக்ரம் அரிதாரம் பூசிய அந்த திரைப்படம்தான் சேது!! சேதுவிற்கான பாலாவால் முதலில் கதை சொல்லப்பட்டது அஜித்குமாருக்குத்தான்!; முதலில் அஜித் நடிப்பதாக கூறப்பட்டு பின்னர் அஜித் விலகிவிட்டார் என அறிவிக்கப்பட்டது. மொட்டை போடும் காட்சியால் அந்த திரைப்படத்தில் இருந்து அஜித் விலகியதாக பேசப்பட்டது (பின்னர் கஜினியில் அஜித் நடிக்க முடியாமைக்கு போகவும் அதே மொட்டை காட்சிதான் காரணம்!) பாலாவிற்கு முதல் முயற்சியாகவும், விக்ரமிற்கு இறுதி முயற்சியாகவும் தயாரிக்கப்பட்ட 'சேது' திரைப்படத்தின் பிரிவியூஷோ மட்டும் 100 நாட்களுக்கு மேல் ஓடியதாக சொல்வார்கள்; யாரும் வாங்க முன்வரவில்லை!!

இறுதியில் ஒருவழியாக 1999 இல் வெளிவந்த சேது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது; இயக்குனர் பாலாவை தமிழ் சினிமா இருகரம் கொடுத்து வரவேற்று முதன்மை இயக்குனர்களுக்கு சமனான சிம்மாசனம் கொடுத்து அழகுபார்த்தது. தமிழ் சினிமாவிற்கு புதிய முகத்தை பாலா கொடுக்க, விக்ரமின் அபரிமிதமான நடிப்பாலும், இளையராஜா, இரத்தினவேல் போன்றோரின் தொழிநுட்பரீதியிலான பங்களிப்பாலும் சேது மிகப்பெரும் வெற்றி பெற்றது!! பல வருடத்து கனவு, 10 வருட உழைப்பு என விக்ரமிற்கு தமிழ் சினிமா வெற்றிக்கதவை மெல்லத் திறந்தது. ஸ்ரீதர், விக்ரமன், பி.சி.ஸ்ரீராம் இயக்கங்களில் கிடைக்காத வெற்றி பாலா என்னும் புதுமுகம் மூலம் விக்ரமிற்கு கிடைத்தது அதிஸ்டமா? நேரமா? உழைப்பிற்கும் இலட்சயத்திற்க்கும் கிடைத்த பிந்திய வெற்றியா? போன்ற கேள்விகளுக்கு வித்திட்டன.


சேதுவை தொடர்ந்து தனது கல்லூரிகால நண்பனான தரணி என்று சினிமா உலகில் அறியப்படும் ரமணியுடன் இணைந்து பணியாற்றிய 'தில்' திரைப்படம் வணிகரீதியில் பெரும் வெற்றி பெற்றது!! தில் திரைப்படம் விக்ரமிற்கு மட்டுமல்ல, எதிரும் புதிரும் திரைப்பட தோல்வியால் தளர்ந்திருந்த தரணிக்கும் 'வெற்றிப்பாதையை திறந்துவிட்டது!! அடிதடியில் மட்டும் ஓடிக்கொண்டிருந்த ஆக்ஷன் கமர்சியல் சினிமாவில் ஐடியா காட்சிகளை டசின் கணக்கில் புகுத்தியதும் தில் திரைப்படம்தான். தில் திரைப்படத்தை தொடர்ந்து வணிகரீதியில் மீண்டும் தரணியுடன் இணைந்து A.M.இரத்தினத்தின் ஸ்ரீசூர்யா மூவிஸுக்காக தூள், சரணுடன் இணைந்து ஏ.வி.எம்க்காக ஜெமினி, ஹரியுடன் இணைந்து கவிதாலயாவுக்காக சாமி என தொடர்ச்சியாக கமர்சியல் வெற்றிகள் விக்ரமிற்கு கிடைத்தன!! சமகாலத்திலேயே தன்னை வருத்தி சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்திய காசி திரைப்படமும் விக்ரமிற்கு மேலும் பெயரை பெற்றுக் கொடுத்தது!!

2001 - 2003 வரையான காலப்பகுதியில் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரம் விக்ரம் என்பது அன்றைய காலப்பகுதியில் விக்ரமிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி, ஏன் சாதனை என்று கூட சொல்லலாம்!! சாமி வெற்றி விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் அவர்களால் இன்றைய சூப்பர்ஸ்டார் விக்ரம்தான் என்கின்ற கூற்று விக்ரமை பொறுத்தவரை மிகப்பெரும் பாராட்டு!! அடுத்து மீண்டும் பாலாவுடன் கைகோர்த்து விக்ரம், சூர்யா கூட்டணியில் வெளிவந்த பிதாமகன் மிகப்பெரும் வரவேற்ப்பை வணிகரீதியிலும், விமர்சனரீதியிலும் பெற்றுக்கொடுத்தது. தனக்கு அங்கீகாரம் கொடுத்த தமிழ் சினிமாவிற்கு கைமாறாக விக்ரம் சிறந்த நடிகருக்கான தேசியவிருது பெற்றுகொடுத்து பெருமை சேர்த்தார்!! தமிழ் சினிமாவில் முழுமையான மாஸ் ஹீரோவாகவும், முழுமையான கிளாஸ் ஹீரோவாகவும் தனித்தனி திரைப்படங்களில் நடித்து இரண்டு வகையிலும் ரசிகர்களால் முழுமையாக அங்கீகாரம் பெற்ற முதல் நடிகன் என்கின்ற பெருமையை விக்ரம் பெற்றுக்கொண்டார்!!

இந்த வெற்றிப் பயணத்திற்கிடையே சாமுராய், காதல் சடுகுடு, கிங், விண்ணுக்கும் மண்ணும் என வணிக ரீதியில் சரியாக போகாத திரைப்படங்களும் அப்பப்போ வெளிவந்தன; ஆனலும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் விக்ரம் தனது அதிகபட்ச வெளிப்பாடை கொடுத்துக்கொண்டிருந்தார். உடல் எடையை கூட்டிக்குறைப்பதில் மாயாஜாலம் நிகழ்த்தினர்; படத்திற்கு படம் உடல்மொழி, வசன உச்சரிப்பு போன்றவற்றில் புதுப்புது பரிமாணங்களை வேறுபடுத்திக் காட்டத் தொடங்கினார்!! பிதாமகனுக்கு அடுத்து ஹீரியுடன் மீண்டும் இணைந்து நடித்த அருள் திரைப்படம் விக்ரமிற்கு மிகப்பெரும் அடியாக அமைந்தது!! விமர்சனங்கள், வசூல் மற்றும் விக்ரமினின் மாறுபட்ட பாத்திரங்கள் என அனைத்திலும் அருள் கைகொடுக்கவில்லை!!

அருள் திரைப்படத்தின் தோல்வியை ஈடுசெய்யும் வகையில் வெளிவந்த விக்ரமின் அடுத்த திரைப்படமான அந்நியன் திரைப்படம் அருளில் இருந்த அத்தனை குறைகளையும் போக்கியது; ஷங்கரின் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட அந்நியன் மிகப்பெரும் வெற்றியை பெற்றுக்கொண்டது!! மூன்று வேறுபட்ட பாத்திரங்களை ஒரு உருவத்தில் கனகச்சிதமாக விக்ரம் கொடுத்திருந்தார்!! உடல்மொழி, வசன உச்சரிப்பு என ஒரு பாத்திரத்திற்கும் மற்றைய பாத்திரங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் அப்படியொரு சிறப்பான வெளிப்பாட்டை கொடுத்திருப்பார். அந்நியன் விக்ரமின் திரைவாழ்க்கையில் மிகப்பெரும் மைல்கல்! விக்ரமை மிகச்சிறந்த நடிகனாக ரசிகர்களும், திரையுலகமும் ஏற்றுக்கொன்டாலும் விக்ரமிற்கு காமடி சரியாக அமைவதில்லை என்பது ஒரு குறையாகவே இருந்தது; சிவாஜிகணேஷன் அவர்களுக்கும் கடைசிவரை இருந்த குறையது!!


குறுகியகாலத்தில் ஒருவரது வெற்றி நீண்டகாலமாக அதே துறையில் இருப்பவருடன் போட்டிக்கு கோர்த்துவிடுவது எல்லா இடங்களிலும் நடக்கும் சம்பவம்; இன்று வீராத் கோலியை சச்சினுடன் ஒப்பிடுவதுபோல அன்று விக்ரமை கமலுடன் ஒப்பீடுகளும் இடம்பெற்றன. கமலுக்கு காமடி காட்சிகள் அல்வா சாப்பிடுவது போன்றது, ஆனால் விக்ரமிற்கோ காமடி பெரிதாக எடுபடவில்லை என்கின்ற குறை; இந்நிலையில்தான் மலையாள இயக்குனர் ஷாபியின் துணையுடன் 'மஜா' என்கின்ற முழுநீள நகைச்சுவை(?) திரைப்படத்தில் விக்ரம் நடித்தார். கமலுடன் போட்டிக்காக விக்ரம் மஜாவிலும், அந்நியனின் மூன்று வேடங்களுக்கு போட்டியாக தன்னை மேலும் நிரூபிக்க கமல் பத்து வேடங்களில் தசாவதாரமும் நடிப்பதாக பேசப்பட்டது!! ஆனால் மஜாவில் விக்ரமிற்கு காமடியும், வணிக ரீதியில் மஜாவும் விக்ரமிற்கு கைகொடுக்கவில்லை!

அந்நியன் கொடுத்த வெற்றியும், புது மற்றும் பிரபலமில்லாத இயக்குனர்கள் கொடுத்த தோல்விகளுமோ என்னவோ விக்ரமை தனது திரைப்பட தெரிவுகளில் புதிய முடிவுகளை எடுக்க தூண்டியது; அந்த முடிவுகள்தான் விக்ரமின் திரைப்பயணத்தில் தொய்வையும், வீழ்ச்சியையும் ஏற்ப்படுத்தியது என்றால் மிகையல்ல. பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடிப்பது மற்றும் பிரபலமான இயக்குனர்களிடம்தான் நடிப்பது போன்றவைதான் அந்நியனுக்கு பின்னர் விக்ரமின் திரைப்படங்களை தெரிவு செய்வதில் எடுத்த தவறான முடிவுகளோ என்று என்ன தோன்றுகின்றது!! 2005 மஜாவிற்கு பின்னர் 2011 இல் தெய்வத்திருமகள் வெளிவரும்வரை ஆறு வருடங்களில் விக்ரம் நடித்தவை வெறும் மூன்று திரைப்படங்கள்தான். பீமா, கந்தசாமி, ராவணன் திரைப்படங்கள்தான் அந்த மூன்று திரைப்படங்களும்; இம் மூன்று திரைப்படங்களும் மிகப்பெரும் பொருட் செலவிலும், அதிக கால அவகாசங்களிலும் எடுக்கப்பட்டாலும் மூன்று திரைப்படங்களாலும் வணிகரீதியில் வெற்றியை பெறமுடியவில்லை!!

அதேநேரம் இந்த மூன்று திரைப்படங்களுக்கும் விக்ரம் கொடுத்த உடல் உழைப்பு அபரிமிதமானது; ஆனால் அவை விழலுக்கு இறைத்த நீராகியது என்பதுதான் உண்மை. பீமா திரைப்படத்தில் காட்சியமைப்புக்களை லிங்குசாமி சிறப்பாக கையாண்டிருந்தாலும் திரைக்கதையில்த்தான் சில தவறுகள்; ஆனாலும் தனிப்பட முறையில் எனக்கு பீமா இன்றும் மிகவும் பிடித்த திரைப்படம்!! கந்தசாமி திரைப்படம் மிகப்பெரும் பட்ஜெட்டில் அதிக காலத்தையும் இழுத்தடித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவிட்டு மிகவும் ஏமாற்றத்தை கொடுத்த திரைப்படம்; சிறிய பட்ஜெட்டில் திருட்டுப்பயலேயை கொடுத்த சுசிகநேஷனால் மிகப்பெரும் பட்ஜெட்டில் கந்தசாமியை காப்பாற்ற முடியவில்லை. அடுத்து மணிரத்தினம் இயக்கத்தில் ராவணன் திரைப்படத்தின் தோல்வி விக்கிரம மீதான எதிர்பார்ப்புக்களை குறைக்க தொடங்கின; அதற்க்கு காரணம் விக்ரம் ஒவ்வொரு திரைப்படத்திற்கு எடுத்துக்கொள்ளும் காலமும், இறுதியில் அவற்றிற்கு கிடைக்கும் எதிர்மறையான முடிவுகளும்தான்!!

இந்நிலையில்தான் என்ன நினைத்தாரோ விக்ரம் தன் திரைப்படங்களின் பட்ஜெட்டை சக நடிகர்களது திரைப்படங்களின் செலவுக்கு இணையாக குறைத்துக்கொண்டார்; ஆனாலும் இன்னும் பிரபல இயக்குனர்களைதான் நம்பிவருகின்றார், இன்றைய தேதியில் விக்ரம் மட்டுமல்ல அனைத்து முன்னணி நடிகர்களும் இதற்கு விதிவிலக்கல்ல!! நீண்ட காலங்களுக்கு இழுத்தடிக்கப்பட்ட திரைப்படங்கள் கொடுத்த தோல்வியை குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்ட தெய்வத்திருமகள் ஈடு செய்தது!! ஐ ஆம் சாம் திரைப்படத்தின் தழுவல் என பலரும் கூப்பாடு போட்டாலும் ஐ ஆம் சாம் என்றால் ஐ ஆம் சாரி என சொல்லும் பெரும்பான்மை மக்களால் இயக்குனர் விஜய் இயக்கிய தெய்வதிருமகள் ரசிக்கப்பட்டது!! வணிகரீதியிலும், விக்ரமிற்கு நடிப்பிலும் நல்லபெயரை பெற்றுக்கொடுத்தது. ஆனால் அடுத்துவந்த ராஜபாட்டை திரைப்படம் விக்ரமின் திரைவரலாற்றின் மிக மோசமான திரைப்படமாக அமைந்தது, பிரபல இயக்குனரை கண்ணைமூடிக்கொண்டு நம்பியதன் பலன்.


2005 ஆம் ஆண்டில் அந்நியனின் மிகப்பெரும் வெற்றிக்கு பின்னர் இந்த ஏழு ஆண்டுகளில் அதிக திரைப்படங்களில் நடிக்காவிட்டால்கூட தெய்வதிருமகள் தவிர்த்து வேறந்த திரைப்படமும் வணிகரீதியாக விக்ரமிற்கு வெற்றிபெறவில்லை; தெய்வத்திருமகள்கூட முதலுக்கு சற்று அதிகமாக வசூலித்ததே அன்றி சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியல்ல!! இந்த நிலையில் மிகவும் கடினாமாக உழைத்து தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் தக்கவைத்த நடிகர் விக்ரமிற்கு இப்போது தேவை ஒரு மிகப்பெரிய கமர்சியல் பிரேக்; அந்த பிரேக்கை தாண்டவம் பெற்றுக்கொடுத்தால் அடுத்த ஷங்கரின் 'ஐ' திரைப்படம் அதனை தக்கவைக்கும் என்கின்ற நம்பிக்கை உண்டு!! விக்ரம் come Back ஆவதற்கு தாண்டவத்தின் வெற்றி மிகமிக அவசியம். ஆட்டையை போட்டாலும் திரைப்படத்தை ஜனரஞ்சகமாக கொடுப்பதில் இயக்குனர் விஜய் கில்லாடி, எப்படி தாண்டவத்தை கொடுத்திருகின்றார் என்பதித்தான் விக்ரமின் மறுபிரவேசம் தங்கியுள்ளது!!

அதே நேரம் விக்ரம் இனிமேல் பெரிய இயக்குனர், பெரிய பட்ஜெட் என்று பார்க்காமல் நல்ல ஸ்கிரிப்ட், நல்ல ரோல் உள்ள திரைப்படங்களை எந்த இயக்குனராக இருப்பினும் தேடித், தேர்ந்து நடிப்பது அவசியம்!! ஏழு ஆண்டுகளில் விக்ரம் மிகப்பெரும் வெற்றிகள் எதையும் கொடுக்காவிட்டாலும் இன்றுவரை விக்ரம் திரைப்படங்களுக்கு கிடைக்கும் ஓப்பினிங் ஆச்சரியமானது!! வெற்றித் திரைப்படங்களை கொடுக்கும் சக நடிகர்களுக்கு சற்றும் குறைவில்லாத முதல்வார வசூல்கள் அவை; விக்ரமின் இன்றைய தேவை கிடைக்கும் ஓப்பினிங்கை வெற்றியாக மாற்றும் சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதுதான். விக்ரம் என்னு அற்புதமான கலைஞன் இல்லாமல் போவதில் எனக்கு சம்மதமில்லை; சிறந்த இயக்குனர்கள், ஸ்கிரிப்டுகள் வந்துகொண்டிருக்கும் இன்றையதேதியில் விக்ரம் அவற்றை சரியாக தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் சீயானால் தமிழ் சினிமா இன்னும் தலை நிமிரும்!!

குறிப்பு:- தனிப்பட்ட முறையில் சொல்வதானால் விக்ரம் டிவி ஷோக்களில் சிறுபிள்ளைபோல பழகிக்கொள்வதையும், ப்ரோமொஷங்களில் ஓவராக பில்டப் + பீட்டர் + பீலா விடுவதையும் குறைத்துக்கொண்டால் நல்லது:-)) ரெம்ப ஓவரா இருக்கு :p

தெரியாதவர்களுக்கு இன்னுமொரு எக்ஸ்ட்ரா தகவல் -: நடிகர் பிரஷாந்தின் தந்தையும் நடிகர் விக்ரமின் தாயாரும் உடன்பிறந்தவர்கள்!!

முன்னைய பதிவுகள்