Friday, September 28, 2012

தாண்டவம் - என் பார்வையில்



எல்.விஜய் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில், நீரவ்ஷா கேமராவில் சீயான் விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன், சந்தானம், நாசர், ஜெகபதிபாபு, லக்ஷ்மிராய் போன்றோர் முக்கிய பாத்திரங்களிலும்; சரண்யா, எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, டெல்லி கணேஷ் போன்றோர் குறிப்பிடத்தக்க வேடங்களிலும் நடித்து UTV Motion Picture தயாரிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தாண்டவம்!!

கதை - போலிஸ், கிரைம், கால்யாணம், காதல், நட்பு, குடும்பம், கிராமம், டெல்லி, லண்டன், குண்டுவெடிப்பு, தீவிரவாதம், இழப்பு என கதை சொல்லப்பட்டிருக்கின்றது!! புதுமையான கதை இல்லை என்றாலும் அதை புதுமையாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர், அதில் வெற்றியும் கண்டுள்ளார்!!

திரைக்கதை - முதல்பாதியில் வரும் பிளாஷ்பாக் கதையை அங்கேயே இடைநிறுத்தி, இரண்டாம் பாதியில் மீண்டும் இடையில் கொண்டுவந்திருப்பது திரைப்படத்தை தொய்வின்றியும் சலிக்காமலும் கொடுக்க உதவியிருக்கின்றது! வேகமான திரைக்கதை எல்லாம் இல்லை என்றாலும் வழமையான எல்.விஜயின் பாணியில் திரைக்கதை நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது!!

வசனம் - குறிப்பிட்டு சொல்லும்படி பெரிதாக எழுதவில்லை எனினும், வசனம் எந்தவிதத்திலும் குறையாக தெரியவில்லை; கிராமத்து காட்சிகளில் வரும் வசனங்கள் ஜதார்த்தத்தை மீறி நகைச்சுவையாக அதிகம் இருந்தாலும் அவற்றுக்கு சபாஷ் போடலாம்!!


விக்ரம் - என்ன சொல்றது? 46 வயதிலும் இத்தனை கடின உழைப்பை ஒவ்வொரு படத்திற்கும் கொடுக்கணும் என நினைத்து அதை 100 சதவிகிதம் கடைப்பிடிக்கும் விக்ரமிற்கு சபாஷ்!! விக்ரம் படங்கள் அண்மைக்காலங்களில் சொதப்பினாலும் விக்ரமின் உழைப்பு ஒவ்வொரு திரைப்படத்திற்கும் சம அளவில் கடினமானதாக அமைந்திருக்கும்; தாண்டவமும் விதிவிலக்கல்ல!! உடல் எடையை ஏற்றுவதிலும், இறக்குவதிலும், உடலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் விக்ரமுக்கு நிகர் விக்ரம்தான்!! தில் திரைப்படத்தில் பார்த்து வியந்த அதே உடல் கட்டுப்பாடு!! முகத்தில் சற்று முதுமை தெரிந்தாலும் ஆக்ஷன் காட்சிகளிலும், விறுவிறுப்பிலும் விக்ரம் இன்னமும் இளைஞன்தான்!!

அனுஷ்கா - சற்று வயது அதிகமாக தோன்றினாலும் விக்ரமிற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்; இப்போதிருக்கும் நாயகிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் திறன் அதிகம் உடைய அனுஷ்கா தாண்டவத்திலும் அசத்தியிருக்கின்றார். எல்.விஜய் திரைப்படங்களுக்கு இயல்பான நாயகியாக அனுஷ்கா சிறப்பான தேர்வு!!

எமி.ஜாக்சன் - பெரிதாக கவரவில்லை; அழகிலும்!!

சந்தானம் - திரைப்படத்தை தொய்யவிடாமல் சந்தானம் அப்பப்போ திரைக்கதையில் உள்வாங்கப்பட்டிருந்தாலும் அவை கதையைவிட்டு தனியே இல்லாமல் திரைக்கதையின் தேவைக்காக அமைந்திருப்பது சிறப்பு!! ரஜினி என்ன செய்தாலும் ஸ்டைல் என்கின்ற ஒருநிலை உருவாகியதுபோல; சந்தானம் என்ன சொன்னாலும் அதை கவுண்டராக/காமடியாக எடுத்து ரசிகர்கள் விசிலடிக்கும் அளவிற்கு சந்தானத்தின் அசுரவளர்ச்சியை காணக்கூடியதாக உள்ளது!! ஒவ்வொரு கவுண்டருக்கும் கிளாப்ஸ்; கவுண்டர் கொடுப்பதுடன் இப்பெல்லாம் சந்தானம் எக்ஸ்ப்ரஷனிலும் வெளுத்து வாங்குகிறார், சின்ன சின்ன எக்ஸ்ப்ரஷனுக்குகூட செம ரெஸ்போன்ஸ், தாண்டவத்திலும்!!


நாசர் - இலங்கை தமிழ் பேசும் லண்டன் விசாரணைப் போலிஸ்; இதுவரை தமிழ் சினிமா கொடுத்த இலங்கை உச்சரிப்புக்களில் அதிகம் நெருக்கமாகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியளவிலும் உள்ள வசன உச்சரிப்பாக நாசரின் இந்த திரைப்பட உச்சரிப்பை கூறலாம்!! நாசர் கொடுத்ததை சிறப்பாக செய்யாவிட்டால்தான் ஆச்சரியம், இதிலும் சிறப்பாகவே தனது வெளிப்பாட்டை கொடுத்திருக்கின்றார்!!

லக்ஷ்மிராய் - நல்ல ஸ்கோப் உள்ள பாத்திரங்களை கொடுத்தால் சிறப்பாக வெளிப்படுத்தக்கூடியவர்; ஆனால் இவருக்கு சப்பை கேரக்டர்களே தொடர்ந்தும் கிடைக்கின்றமை அவரது துரதிஸ்டம்!!

சரண்யா, எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, டெல்லி கணேஷ் - கிடைத்த சிறிது நேரத்தையும் தமது அனுபவத்தால் கலகலப்பாக்கி விடுகின்றார்கள்!!

எடிட்டிங் - காட்சிகளை சிறப்பாக கோர்த்திருக்கின்றார்; விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக்கொண்டமைக்கு ஆண்டனிக்கு சபாஸ் போடலாம்!!

ஒளிப்பதிவு -
நீரவ்ஷா கேமரா வழமைபோல சிறப்பு; லண்டன், டெல்லி, கிராமம் என மூன்று வித்தியாசமான பிரதேசங்களையும் அழகாக காட்சிப்படுத்திக் கொடுத்திருக்கிறார்; எமி ஜாக்சனை அழகாக காட்டுவதில் மட்டும் தோற்றுப் போய்விட்டாரோ என எண்ணத் தோன்றுகின்றது!!

இசை - ஜீ.வி.பிரகாஷ்குமார் பாடல்களில் ஸ்கோர் பண்ணியிருக்கின்றார்; அனிச்சம் பூவழகி, உயிரின் உயிரே, ஒருபாதி கதவு பாடல்களின் காட்சியமைப்புக்களும் பிரமாதம்!! பின்னணி இசையில் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாகவோ, மட்டமாகவோ தோணவில்லை!!


இயக்கம் - சென்னையில் இருந்து டெல்லிவரை எடுக்கக் கூடிய கதையை, டெல்லியில் இருந்து லண்டனுக்கு எடுத்திருக்கின்றார் இயக்குனர் எல்.விஜய்; திரைப்படத்தை அழகாகவும், ரிச்சாகவும் காட்டுவதற்கான புதிய வழிமுறை!! பெரிய ஹீரோக்கள் படமென்றால் இப்போதெல்லாம் இயக்குனர்கள் இதனையே அதிகம் செய்கின்றார்கள். ஸ்டுடியோவுக்குள் இருந்த கேமராவை கிராமங்களுக்கு கொண்டுவந்த பாரதிராஜாவின் புரட்சியை இன்றைய இயக்குனர்கள் வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்வது ஆரோக்கியமானதா? இல்லையா? என்று சொல்லமுடியவில்லை!! மற்றப்படி இயக்கத்தில் விஜய் வழமைபோல சிறப்பாக இயக்கியிருக்கின்றார்; பல திரைப்படங்களில் பார்த்த காட்சிகள்போல ஞாபகங்கள் ஆங்காங்கே வந்துபோனாலும் எடுத்த விடயத்தை ஆக்ஷன், காமடி, காதல், கிரைம் என மசாலாவாக சலிக்கவைக்காமல் கொடுத்திருக்கின்றார்!!

தாண்டவம் - தமிழ் சினிமாவின் மைல்கள் என்றோ, பக்கா கமர்சியல் விருந்தென்றோ சொல்லமுடியாது என்பது எத்தனை சதவிகிதம் உண்மையோ; அத்தனை சதவிகிதம் தாண்டவம் திரையரங்கில் சலிக்காமல் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம் என்பதும் உண்மை!! நிச்சயம் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம்!!!

குறிப்பு - இது விமர்சனமல்ல 'எனது பார்வையில்' தாண்டவம்! (குறிப்பாக பாலுமஹேந்திரா சார் அவர்களுக்கு)

*--------------*

Tuesday, September 25, 2012

நானும் சினிமாவும் பாகம் - 3 (சீயான் விக்ரம்)



நீண்ட நாட்களுக்கு முன்னர் எழுதிய நானும் சினிமாவும் பாகம் இரண்டாவதின் தொடர்ச்சி!! விக்ரம் சம்பந்தப்பட்டது என்பதால் சற்று விரிவாக என்னுடைய அனுபவத்தில் விக்ரமையும் தாண்டி, விக்ரமை பற்றியும் எழுத வேண்டும் என நினைத்திருந்ததால் பல நாட்கள் தள்ளிப்போய்விட்டது. இந்தவார இறுதியில் தாண்டவம் வெளியாகும் நேரத்தில் இதனை எழுதுவது சரியென தோன்றியது! ரஜினிக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விக்ரம் என்பதனால் முடிந்தளவுக்கு திருப்தியாக, விரிவாக எழுதவேண்டும் என்று நினைக்கின்றேன்; எழுதினேனா இல்லையா என்பதை நானும் உங்களைபோல பதிவின் முடிவில் தெரிந்துகொள்கின்றேன் :-))


எனக்கு பிடித்த விக்ரம் - இந்த விம்பத்தை எனக்கு பொதிகை தொகைக்காட்சி முன்னரே ஒரு சில திரைப்படங்களில் அறிமுகப்படுத்தி இருந்தாலும்; அந்த விம்பத்தை எனக்கு இவர் பெயர் விக்ரம் என அறிமுகப்படுத்தியது 'தில்' திரைப்படம் தான்!! 'சேது' திரைப்படம் விக்ரமிற்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்திருந்தாலும் இங்கு யாழ்ப்பாணத்தில் ஓரிரு 'மினி' திரையரங்கில் மட்டுமே 'சேது' காண்பிக்கப்பட்டது! ஓரிருவர் "படம் நல்லாயிருக்கு" என்று சொன்னாலும் ஏனோ படம் பார்க்க பிடிக்கவில்லை!! சிலகாலம் கழிந்த பின்னர் மீண்டும் ஒரு நண்பனின் உதவியில் 'தில்' திரைப்பட VCD கிடைத்தது; மிகவும் தெளிவான copy வேறு!! படம் ரொம்பவே பிடித்துப்போக, பலதடவைகள் வேறு வேறு இடங்களில்(உறவினர், நண்பர்கள் வீடுகளில்) மீண்டும் மீண்டும் பார்த்ததாலோ என்னமோ அந்த திரைப்படத்தின் நாயகனும் மனதுக்கு நெருக்கமானான்!!

கூட இருந்த அஜித்,விஜய் ரசிகர்களான நண்பர்களின் அடுத்த சூப்பர்ஸ்டார் அலப்பறை; ரஜினிவேறு நீண்ட இடைவெளிகளில் படம் நடிப்பதால் இடைப்பட்ட காலத்தில் திரைப்படம் பார்ப்பதற்கு தேவயான ஒரு பிடிப்பு போன்றவை மறைமுக காரணங்களாக இருக்க தில், காசி, சேது என அடுத்தடுத்து நான் பார்த்த மூன்று திரைப்படங்களிலும் வித்தியாசம் + ஈர்ப்பை கொடுத்த விக்ரம் எனக்கு மனதுக்கு நெருக்கமான நாயகனானார்!! அடுத்தடுத்து விக்ரம் நடித்து வெளியாகும் அனைத்து திரைப்படங்களின் VCD களையும் தேடித் தேடி பார்ப்பது வழக்கம் (திரையரங்குகளுக்கு படங்கள் வந்ததில்லை) ஓரிரு திரைப்படங்கள் வெளிவந்தாலும் அந்த சமயங்களில் நான் ஊரில் இருந்ததில்லை. மிகவும் எதிர்பார்ப்புடன் திரையரங்கில் பார்வையிட எதிர்பார்த்திருந்த பிதாமகனும் கடைசி நேரத்தில் பார்க்க முடியாமல் போயிற்று!! First show மிஸ் பண்ணினால் ஏனோ அந்த படத்தை திரையில் பார்க்க பிடிப்பதில்லை; இன்றுவரை :-)

அதற்கிடையில் தூள், சாமி, ஜெமினி என விக்ரமின் மாஸ் திரைப்படங்கள் என்னை விக்ரமின் தீவிர ரசிகனாக மாற்றியது!! நான் மிகவும் எதிர்பார்த்து முதல் முதலில் திரையரங்கில் பார்த்த திரைப்படம்(கொழும்பில் நான் பார்த்த முதல் திரைப்படம்) 'அருள்' ஊத்திக்கொண்டது!! அடுத்து மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் அந்நியன்; முதல்நாள் மற்றும் சில நாட்கள் திரையரங்கிலும், தொலைக்காட்சி மற்றும் DVD என பலநாட்கள் வீட்டிலுமாக, நான் அதிகதடவைகள் பார்த்த திரைப்படங்கள் வரையில் அந்நியனும் இடம்பிடித்துக்கொண்டது. அந்நியனுக்கு பின்னர் மஜா, பீமா, கந்தசாமி, ராவணன், தெய்வத்திருமகள், ராஜபாட்டை என எந்த திரைப்படத்தின் முதல்நாள் காட்சிகளையும் திரையில் காண தவறவிட்டதில்லை!! இப்போதும் தாண்டவம் முதல்நாள் காட்சிக்காக ஆவலுடன்!!



வெற்றிப்படங்கள் மட்டுமென்றில்லாது விக்ரமின் சரியாக போகாத சில திரைப்படங்களும் எனக்கு மிக்கவும் பிடித்தவை; அவற்றில் பீமா, சாமுராய், இராவணன் போன்றவை முக்கியமானவை!! ஒவ்வொரு திரைப்படங்களுக்கும் மலையளவு எதிர்பார்ப்பு இருக்கும், ஆனால் அவற்றை கடந்த 7 வருடங்களில் தெய்வதிருமகள் மட்டும்தான் பூரணமாக திருப்திப்படுத்தியது; பீமா, ராவணன் திரைப்படங்கள் திருப்தியை கொடுத்தாலும், வணிகரீதியில் சரியாக போகாத குறை இருக்கத்தான் செய்தது. வயது ஏறிக்கொண்டே போகும் நேரத்தில் வீணாக பெரிய பட்ஜெட் என்று காலத்தை இழுத்தடிக்காமல் நல்ல ஸ்கிரிப்ட்களில் விக்ரம் ஆண்டுக்கு இரண்டு படங்களாவது கொடுக்கவேண்டும் என்பதே என் விருப்பம்; தாண்டவத்திற்கு அடுத்து ஷங்கரின் 'ஐ' திரைப்படம் என்பதால் அதற்கும் நீண்டகால அவகாசம் தேவை!!

நடிகர் விக்ரம் - சினிமாக் கனவு; அதற்கான முயற்சியாக படிப்பு, பயிற்சி என தன்னை தயார்ப்படுத்திக்கொண்டு தனது கனவு கோட்டைக்குள் காலடிவைத்த இளைஞன்!! 10 வருட போராட்டம், 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நாயகனாக நடிக்க வாய்ப்பு; ஆனாலும் வெற்றியோ அடையாளமோ கண்ணுக்கெட்டிய தூரம்வரை இல்லை!! கல்லூரி காலத்தில் இருந்து விக்ரமிற்கு தடைக்கற்கள்தான் அதிகம்!! கல்லூரி காலத்தில் மிகவும் ஆபத்தான மோட்டார் சைக்கிள் விபத்தை சந்தித்து இருபதிற்கும் மேற்ப்பட்ட சத்திர சிகிச்சையால் பிழைத்த விக்ரமிற்கு கால்களில் இன்னமும் அதன் தாக்கம் உண்டு. அதன் பின்னர் சினிமாவில் நடிகனாக தோல்வி, தோல்வி, தோல்வி..... அப்பப்போ வேறு நடிகர்களுக்கு டப்பிங் பேசும் சந்தர்ப்பமும் கிடைக்கப்பெற்றது; குறிப்பாக பிரபுதேவாவிற்காக காதலன், மின்சாரகனவு போன்ற திரைப்படங்களிலும்; அப்பாசிற்காக கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பூச்சூடவா திரைப்படங்களிலும்; அஜித்திற்கு அமராவதி திரைப்படத்திலும் பின்னணி குரல் கொடுத்தவர் விக்ரம்தான்!!

தனக்கும் சினிமாவுக்கும் எட்டாம் பொருத்தம் என நினைத்து சினிமாவைவிட்டு ஒதுங்கி வெளிநாட்டில் செட்டில் ஆக முடிவெடுத்திருந்த வேளையில் கிடைத்த ஒரு திரைப்பட வாய்ப்பை இறுதி வாய்ப்பாக பயன்படுத்தி மீண்டுமொருதடவை முயற்சி செய்தார் விக்ரம். பாலுமகேந்திரா பாசறையில் இருந்து புதுமுக இயக்குனராக வெளிவந்த பாலா இயக்குனர் அவதாரம் எடுக்க, விக்ரம் அரிதாரம் பூசிய அந்த திரைப்படம்தான் சேது!! சேதுவிற்கான பாலாவால் முதலில் கதை சொல்லப்பட்டது அஜித்குமாருக்குத்தான்!; முதலில் அஜித் நடிப்பதாக கூறப்பட்டு பின்னர் அஜித் விலகிவிட்டார் என அறிவிக்கப்பட்டது. மொட்டை போடும் காட்சியால் அந்த திரைப்படத்தில் இருந்து அஜித் விலகியதாக பேசப்பட்டது (பின்னர் கஜினியில் அஜித் நடிக்க முடியாமைக்கு போகவும் அதே மொட்டை காட்சிதான் காரணம்!) பாலாவிற்கு முதல் முயற்சியாகவும், விக்ரமிற்கு இறுதி முயற்சியாகவும் தயாரிக்கப்பட்ட 'சேது' திரைப்படத்தின் பிரிவியூஷோ மட்டும் 100 நாட்களுக்கு மேல் ஓடியதாக சொல்வார்கள்; யாரும் வாங்க முன்வரவில்லை!!

இறுதியில் ஒருவழியாக 1999 இல் வெளிவந்த சேது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது; இயக்குனர் பாலாவை தமிழ் சினிமா இருகரம் கொடுத்து வரவேற்று முதன்மை இயக்குனர்களுக்கு சமனான சிம்மாசனம் கொடுத்து அழகுபார்த்தது. தமிழ் சினிமாவிற்கு புதிய முகத்தை பாலா கொடுக்க, விக்ரமின் அபரிமிதமான நடிப்பாலும், இளையராஜா, இரத்தினவேல் போன்றோரின் தொழிநுட்பரீதியிலான பங்களிப்பாலும் சேது மிகப்பெரும் வெற்றி பெற்றது!! பல வருடத்து கனவு, 10 வருட உழைப்பு என விக்ரமிற்கு தமிழ் சினிமா வெற்றிக்கதவை மெல்லத் திறந்தது. ஸ்ரீதர், விக்ரமன், பி.சி.ஸ்ரீராம் இயக்கங்களில் கிடைக்காத வெற்றி பாலா என்னும் புதுமுகம் மூலம் விக்ரமிற்கு கிடைத்தது அதிஸ்டமா? நேரமா? உழைப்பிற்கும் இலட்சயத்திற்க்கும் கிடைத்த பிந்திய வெற்றியா? போன்ற கேள்விகளுக்கு வித்திட்டன.


சேதுவை தொடர்ந்து தனது கல்லூரிகால நண்பனான தரணி என்று சினிமா உலகில் அறியப்படும் ரமணியுடன் இணைந்து பணியாற்றிய 'தில்' திரைப்படம் வணிகரீதியில் பெரும் வெற்றி பெற்றது!! தில் திரைப்படம் விக்ரமிற்கு மட்டுமல்ல, எதிரும் புதிரும் திரைப்பட தோல்வியால் தளர்ந்திருந்த தரணிக்கும் 'வெற்றிப்பாதையை திறந்துவிட்டது!! அடிதடியில் மட்டும் ஓடிக்கொண்டிருந்த ஆக்ஷன் கமர்சியல் சினிமாவில் ஐடியா காட்சிகளை டசின் கணக்கில் புகுத்தியதும் தில் திரைப்படம்தான். தில் திரைப்படத்தை தொடர்ந்து வணிகரீதியில் மீண்டும் தரணியுடன் இணைந்து A.M.இரத்தினத்தின் ஸ்ரீசூர்யா மூவிஸுக்காக தூள், சரணுடன் இணைந்து ஏ.வி.எம்க்காக ஜெமினி, ஹரியுடன் இணைந்து கவிதாலயாவுக்காக சாமி என தொடர்ச்சியாக கமர்சியல் வெற்றிகள் விக்ரமிற்கு கிடைத்தன!! சமகாலத்திலேயே தன்னை வருத்தி சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்திய காசி திரைப்படமும் விக்ரமிற்கு மேலும் பெயரை பெற்றுக் கொடுத்தது!!

2001 - 2003 வரையான காலப்பகுதியில் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரம் விக்ரம் என்பது அன்றைய காலப்பகுதியில் விக்ரமிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி, ஏன் சாதனை என்று கூட சொல்லலாம்!! சாமி வெற்றி விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் அவர்களால் இன்றைய சூப்பர்ஸ்டார் விக்ரம்தான் என்கின்ற கூற்று விக்ரமை பொறுத்தவரை மிகப்பெரும் பாராட்டு!! அடுத்து மீண்டும் பாலாவுடன் கைகோர்த்து விக்ரம், சூர்யா கூட்டணியில் வெளிவந்த பிதாமகன் மிகப்பெரும் வரவேற்ப்பை வணிகரீதியிலும், விமர்சனரீதியிலும் பெற்றுக்கொடுத்தது. தனக்கு அங்கீகாரம் கொடுத்த தமிழ் சினிமாவிற்கு கைமாறாக விக்ரம் சிறந்த நடிகருக்கான தேசியவிருது பெற்றுகொடுத்து பெருமை சேர்த்தார்!! தமிழ் சினிமாவில் முழுமையான மாஸ் ஹீரோவாகவும், முழுமையான கிளாஸ் ஹீரோவாகவும் தனித்தனி திரைப்படங்களில் நடித்து இரண்டு வகையிலும் ரசிகர்களால் முழுமையாக அங்கீகாரம் பெற்ற முதல் நடிகன் என்கின்ற பெருமையை விக்ரம் பெற்றுக்கொண்டார்!!

இந்த வெற்றிப் பயணத்திற்கிடையே சாமுராய், காதல் சடுகுடு, கிங், விண்ணுக்கும் மண்ணும் என வணிக ரீதியில் சரியாக போகாத திரைப்படங்களும் அப்பப்போ வெளிவந்தன; ஆனலும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் விக்ரம் தனது அதிகபட்ச வெளிப்பாடை கொடுத்துக்கொண்டிருந்தார். உடல் எடையை கூட்டிக்குறைப்பதில் மாயாஜாலம் நிகழ்த்தினர்; படத்திற்கு படம் உடல்மொழி, வசன உச்சரிப்பு போன்றவற்றில் புதுப்புது பரிமாணங்களை வேறுபடுத்திக் காட்டத் தொடங்கினார்!! பிதாமகனுக்கு அடுத்து ஹீரியுடன் மீண்டும் இணைந்து நடித்த அருள் திரைப்படம் விக்ரமிற்கு மிகப்பெரும் அடியாக அமைந்தது!! விமர்சனங்கள், வசூல் மற்றும் விக்ரமினின் மாறுபட்ட பாத்திரங்கள் என அனைத்திலும் அருள் கைகொடுக்கவில்லை!!

அருள் திரைப்படத்தின் தோல்வியை ஈடுசெய்யும் வகையில் வெளிவந்த விக்ரமின் அடுத்த திரைப்படமான அந்நியன் திரைப்படம் அருளில் இருந்த அத்தனை குறைகளையும் போக்கியது; ஷங்கரின் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட அந்நியன் மிகப்பெரும் வெற்றியை பெற்றுக்கொண்டது!! மூன்று வேறுபட்ட பாத்திரங்களை ஒரு உருவத்தில் கனகச்சிதமாக விக்ரம் கொடுத்திருந்தார்!! உடல்மொழி, வசன உச்சரிப்பு என ஒரு பாத்திரத்திற்கும் மற்றைய பாத்திரங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் அப்படியொரு சிறப்பான வெளிப்பாட்டை கொடுத்திருப்பார். அந்நியன் விக்ரமின் திரைவாழ்க்கையில் மிகப்பெரும் மைல்கல்! விக்ரமை மிகச்சிறந்த நடிகனாக ரசிகர்களும், திரையுலகமும் ஏற்றுக்கொன்டாலும் விக்ரமிற்கு காமடி சரியாக அமைவதில்லை என்பது ஒரு குறையாகவே இருந்தது; சிவாஜிகணேஷன் அவர்களுக்கும் கடைசிவரை இருந்த குறையது!!


குறுகியகாலத்தில் ஒருவரது வெற்றி நீண்டகாலமாக அதே துறையில் இருப்பவருடன் போட்டிக்கு கோர்த்துவிடுவது எல்லா இடங்களிலும் நடக்கும் சம்பவம்; இன்று வீராத் கோலியை சச்சினுடன் ஒப்பிடுவதுபோல அன்று விக்ரமை கமலுடன் ஒப்பீடுகளும் இடம்பெற்றன. கமலுக்கு காமடி காட்சிகள் அல்வா சாப்பிடுவது போன்றது, ஆனால் விக்ரமிற்கோ காமடி பெரிதாக எடுபடவில்லை என்கின்ற குறை; இந்நிலையில்தான் மலையாள இயக்குனர் ஷாபியின் துணையுடன் 'மஜா' என்கின்ற முழுநீள நகைச்சுவை(?) திரைப்படத்தில் விக்ரம் நடித்தார். கமலுடன் போட்டிக்காக விக்ரம் மஜாவிலும், அந்நியனின் மூன்று வேடங்களுக்கு போட்டியாக தன்னை மேலும் நிரூபிக்க கமல் பத்து வேடங்களில் தசாவதாரமும் நடிப்பதாக பேசப்பட்டது!! ஆனால் மஜாவில் விக்ரமிற்கு காமடியும், வணிக ரீதியில் மஜாவும் விக்ரமிற்கு கைகொடுக்கவில்லை!

அந்நியன் கொடுத்த வெற்றியும், புது மற்றும் பிரபலமில்லாத இயக்குனர்கள் கொடுத்த தோல்விகளுமோ என்னவோ விக்ரமை தனது திரைப்பட தெரிவுகளில் புதிய முடிவுகளை எடுக்க தூண்டியது; அந்த முடிவுகள்தான் விக்ரமின் திரைப்பயணத்தில் தொய்வையும், வீழ்ச்சியையும் ஏற்ப்படுத்தியது என்றால் மிகையல்ல. பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடிப்பது மற்றும் பிரபலமான இயக்குனர்களிடம்தான் நடிப்பது போன்றவைதான் அந்நியனுக்கு பின்னர் விக்ரமின் திரைப்படங்களை தெரிவு செய்வதில் எடுத்த தவறான முடிவுகளோ என்று என்ன தோன்றுகின்றது!! 2005 மஜாவிற்கு பின்னர் 2011 இல் தெய்வத்திருமகள் வெளிவரும்வரை ஆறு வருடங்களில் விக்ரம் நடித்தவை வெறும் மூன்று திரைப்படங்கள்தான். பீமா, கந்தசாமி, ராவணன் திரைப்படங்கள்தான் அந்த மூன்று திரைப்படங்களும்; இம் மூன்று திரைப்படங்களும் மிகப்பெரும் பொருட் செலவிலும், அதிக கால அவகாசங்களிலும் எடுக்கப்பட்டாலும் மூன்று திரைப்படங்களாலும் வணிகரீதியில் வெற்றியை பெறமுடியவில்லை!!

அதேநேரம் இந்த மூன்று திரைப்படங்களுக்கும் விக்ரம் கொடுத்த உடல் உழைப்பு அபரிமிதமானது; ஆனால் அவை விழலுக்கு இறைத்த நீராகியது என்பதுதான் உண்மை. பீமா திரைப்படத்தில் காட்சியமைப்புக்களை லிங்குசாமி சிறப்பாக கையாண்டிருந்தாலும் திரைக்கதையில்த்தான் சில தவறுகள்; ஆனாலும் தனிப்பட முறையில் எனக்கு பீமா இன்றும் மிகவும் பிடித்த திரைப்படம்!! கந்தசாமி திரைப்படம் மிகப்பெரும் பட்ஜெட்டில் அதிக காலத்தையும் இழுத்தடித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவிட்டு மிகவும் ஏமாற்றத்தை கொடுத்த திரைப்படம்; சிறிய பட்ஜெட்டில் திருட்டுப்பயலேயை கொடுத்த சுசிகநேஷனால் மிகப்பெரும் பட்ஜெட்டில் கந்தசாமியை காப்பாற்ற முடியவில்லை. அடுத்து மணிரத்தினம் இயக்கத்தில் ராவணன் திரைப்படத்தின் தோல்வி விக்கிரம மீதான எதிர்பார்ப்புக்களை குறைக்க தொடங்கின; அதற்க்கு காரணம் விக்ரம் ஒவ்வொரு திரைப்படத்திற்கு எடுத்துக்கொள்ளும் காலமும், இறுதியில் அவற்றிற்கு கிடைக்கும் எதிர்மறையான முடிவுகளும்தான்!!

இந்நிலையில்தான் என்ன நினைத்தாரோ விக்ரம் தன் திரைப்படங்களின் பட்ஜெட்டை சக நடிகர்களது திரைப்படங்களின் செலவுக்கு இணையாக குறைத்துக்கொண்டார்; ஆனாலும் இன்னும் பிரபல இயக்குனர்களைதான் நம்பிவருகின்றார், இன்றைய தேதியில் விக்ரம் மட்டுமல்ல அனைத்து முன்னணி நடிகர்களும் இதற்கு விதிவிலக்கல்ல!! நீண்ட காலங்களுக்கு இழுத்தடிக்கப்பட்ட திரைப்படங்கள் கொடுத்த தோல்வியை குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்ட தெய்வத்திருமகள் ஈடு செய்தது!! ஐ ஆம் சாம் திரைப்படத்தின் தழுவல் என பலரும் கூப்பாடு போட்டாலும் ஐ ஆம் சாம் என்றால் ஐ ஆம் சாரி என சொல்லும் பெரும்பான்மை மக்களால் இயக்குனர் விஜய் இயக்கிய தெய்வதிருமகள் ரசிக்கப்பட்டது!! வணிகரீதியிலும், விக்ரமிற்கு நடிப்பிலும் நல்லபெயரை பெற்றுக்கொடுத்தது. ஆனால் அடுத்துவந்த ராஜபாட்டை திரைப்படம் விக்ரமின் திரைவரலாற்றின் மிக மோசமான திரைப்படமாக அமைந்தது, பிரபல இயக்குனரை கண்ணைமூடிக்கொண்டு நம்பியதன் பலன்.


2005 ஆம் ஆண்டில் அந்நியனின் மிகப்பெரும் வெற்றிக்கு பின்னர் இந்த ஏழு ஆண்டுகளில் அதிக திரைப்படங்களில் நடிக்காவிட்டால்கூட தெய்வதிருமகள் தவிர்த்து வேறந்த திரைப்படமும் வணிகரீதியாக விக்ரமிற்கு வெற்றிபெறவில்லை; தெய்வத்திருமகள்கூட முதலுக்கு சற்று அதிகமாக வசூலித்ததே அன்றி சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியல்ல!! இந்த நிலையில் மிகவும் கடினாமாக உழைத்து தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் தக்கவைத்த நடிகர் விக்ரமிற்கு இப்போது தேவை ஒரு மிகப்பெரிய கமர்சியல் பிரேக்; அந்த பிரேக்கை தாண்டவம் பெற்றுக்கொடுத்தால் அடுத்த ஷங்கரின் 'ஐ' திரைப்படம் அதனை தக்கவைக்கும் என்கின்ற நம்பிக்கை உண்டு!! விக்ரம் come Back ஆவதற்கு தாண்டவத்தின் வெற்றி மிகமிக அவசியம். ஆட்டையை போட்டாலும் திரைப்படத்தை ஜனரஞ்சகமாக கொடுப்பதில் இயக்குனர் விஜய் கில்லாடி, எப்படி தாண்டவத்தை கொடுத்திருகின்றார் என்பதித்தான் விக்ரமின் மறுபிரவேசம் தங்கியுள்ளது!!

அதே நேரம் விக்ரம் இனிமேல் பெரிய இயக்குனர், பெரிய பட்ஜெட் என்று பார்க்காமல் நல்ல ஸ்கிரிப்ட், நல்ல ரோல் உள்ள திரைப்படங்களை எந்த இயக்குனராக இருப்பினும் தேடித், தேர்ந்து நடிப்பது அவசியம்!! ஏழு ஆண்டுகளில் விக்ரம் மிகப்பெரும் வெற்றிகள் எதையும் கொடுக்காவிட்டாலும் இன்றுவரை விக்ரம் திரைப்படங்களுக்கு கிடைக்கும் ஓப்பினிங் ஆச்சரியமானது!! வெற்றித் திரைப்படங்களை கொடுக்கும் சக நடிகர்களுக்கு சற்றும் குறைவில்லாத முதல்வார வசூல்கள் அவை; விக்ரமின் இன்றைய தேவை கிடைக்கும் ஓப்பினிங்கை வெற்றியாக மாற்றும் சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதுதான். விக்ரம் என்னு அற்புதமான கலைஞன் இல்லாமல் போவதில் எனக்கு சம்மதமில்லை; சிறந்த இயக்குனர்கள், ஸ்கிரிப்டுகள் வந்துகொண்டிருக்கும் இன்றையதேதியில் விக்ரம் அவற்றை சரியாக தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் சீயானால் தமிழ் சினிமா இன்னும் தலை நிமிரும்!!

குறிப்பு:- தனிப்பட்ட முறையில் சொல்வதானால் விக்ரம் டிவி ஷோக்களில் சிறுபிள்ளைபோல பழகிக்கொள்வதையும், ப்ரோமொஷங்களில் ஓவராக பில்டப் + பீட்டர் + பீலா விடுவதையும் குறைத்துக்கொண்டால் நல்லது:-)) ரெம்ப ஓவரா இருக்கு :p

தெரியாதவர்களுக்கு இன்னுமொரு எக்ஸ்ட்ரா தகவல் -: நடிகர் பிரஷாந்தின் தந்தையும் நடிகர் விக்ரமின் தாயாரும் உடன்பிறந்தவர்கள்!!

முன்னைய பதிவுகள் 


Friday, September 21, 2012

ஒரு கூமுட்டையின் நீதிமன்ற அரைநாள் அனுபவம்!!




ஹிஸ்றீரியா என்னும் ஒரு நாட்டில் கூமுட்டை  என்கின்ற ஒரு சாதாரண பிரஜை போக்குவரத்து பொலிசாரால் வாகனத்தின் சமிக்ஞை விளக்கு வேலை செய்யவில்லை என்கின்ற காரணத்திற்காகவும், குறிப்பிட்ட தவணையில் போலீசில் கொடுத்த சாரதி அனுமதிப்பத்திரத்தை மீளப்பெறப்படவில்லை என்கின்ற காரணத்திறக்காகவும் நீதிமன்றத்திற்கு  அழைக்கப்பட்டிருந்தான்!!  ஆம் அலைக்கழிக்கப் பட்டிருந்தான்!!  காலை எட்டு மணிக்கு பொலிசாரால் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டிருந்த அவனுக்கு 2.30  கடந்துதான் வழக்கு முடிந்தது!! முதல் முறையாக நீதிமன்றம் சென்ற கூமுட்டைக்கு பல சந்தேகங்கள் மனதில் பிறந்தன!! அந்த சந்தேகங்களை கூமுட்டை  விடயம் தெரிந்தவர்களிடம் அறிந்துகொள்ள முயற்சித்து தன் சந்தேகங்களை கேட்க ஆரம்பிக்கின்றான்!!

காலை எட்டு மணிக்கு நீதிமன்று வந்தவனுக்கு முதல் அதிர்ச்சி காத்திருந்தது; ஆம் நீதிமன்றிற்கு 'காலர்' இல்லாத மேற்சட்டை அணியக்கூடாது என்பதுதான் அது!! வாயிற்காவலனால் மேற்சட்டையை மாற்றிவிட்டு வரும்படி திரும்ப அனுப்பிவைக்கப்படுகின்றான்!!  அடிப்படை சட்டங்கள் எதனையும் பாடப்புத்தகங்களும், பாடசாலைகளும் போதிக்காதவிடத்து முன்னனுபவம் இல்லாத ஒருவனுக்கு இந்த சட்டம் எப்படி தெரிந்திருக்க வாய்ப்புள்ளது என்பதை சட்ட வல்லுனர்கள்தான் சொல்லவேண்டும்!!!  அவன் அருகில் தெரிந்தவர்கள்  வீடு இருந்ததால் அங்கு சென்று வேறொரு சட்டையை மாற்றிவிட்டு வந்தான்; அதுவே  அங்கு யாரையும் தெரியாமல் பலமைல் கடந்து வந்திருந்தால் அவன் நிலைதான் என்ன? புதுச்சட்டை வாங்குவதா?!!!   அடுத்து உள்ளே சென்றவனை வழிமறித்த வாயிற்காவலர் டீஷெட்டை  காற்சட்டைக்குள் உள்ளே விடும்படி உத்தரவிட்டார், சட்டமாம்!! அப்படியானால் லுங்கி, வேஷ்டி கட்டுபவர்கள் மட்டும் வெளியில் விடலாமா?

இப்படியாக ஒருவழியாக உள்ளே நுழைந்தவனுக்கு காலை 9.15 மணிக்கு மன்று ஆரம்பிக்கப்படும் என்று உள்ளிருந்த காவலர்களால் தகவல் கொடுக்கப்பட்டது!!  25 நிமிடங்கள் தாமதமாக நீதிபதி உள்ளேவர மன்று ஆரம்பிக்கப்பட்டது!!  "ஒருநாள்தானே தாமதம் பணத்தை கட்டிவிடுகிறேன் சாரதி அனுமதி பத்திரத்தை கொடுத்துவிடுங்கள்" என கூமுட்டை கேட்டதற்கு போலீசார் "ஒருநாளோ, பாதிநாளோ தாமதம் தாமதம்தான்" என கூறியது நினைவுக்குவர சிரிப்பும் கடுப்பும் வந்து தொலைத்தது!!  நீதி கொடுப்பவர்கள்  தாமதிக்கலாம் என்று சட்டத்தில் இருக்கின்றதோ என்னமோ!! வழக்குகள் ஆரம்பிக்கப்பட்டன; கிரைம் விசாரணைகள், காணாமல் போனவர்கள் சாட்சியம், விவாகரத்து பெற்றவர்களின் பணக் கொடுக்கல் வாங்கல்கள், நகரசபை மற்றும் பிரதேச சபையின் குத்தகை வழக்குகள், சுகாதார கட்டுப்பாட்டு சபையின் வழக்குகள், வயது குறைந்தவருக்கான புகையிலை விற்பனை வழக்கு, போக்குவரத்து பிரிவு வழக்கு என அனைத்தும் கலந்து விசாரணைகள் இடம்பெற ஆரம்பித்தன!!

பார்வையாளர் பகுதியில் வழக்காளிகளும், பார்வையாளர்களும் உட்கார்ந்திருக்க அங்கிருந்த இரண்டு போலிஸ் காவலர்கள்  வாங்கிலில்(உட்காரும் நீண்ட கதிரை) நிமிர்ந்து உட்க்காரும்படியும், கைகளை கட்டியோ, முன்னால் இருக்கும் கதிரையில் பிடித்துக்கொண்டோ இருக்ககூடாது என்றும், கைகள் கீழே இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்; அப்பப்போ மறந்து கைகளை கட்டுபவர்கள் மீண்டும் மீண்டும் கைகளை கீழே விடும்படி பணிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்; அந்த நேரத்தில் நீதிபதி அவர்கள் சாட்சிகளின் விசாரணையை சாயமனை கதிரையில் பக்கவாட்டில் சாய்ந்திருந்து அவதானித்துக்கொண்டிருந்தார்!! இது முரண்பாடா இல்லை பாகுபாடா அல்லது சட்டம் கொடுக்கும் சலுகையா அல்லது அடக்குமுறையா என்னவென்று தெரியாது மனம் அலைபாய்ந்தது. ஒரு மனிதனால் முள்ளந்தண்டை நிமிர்த்தி, முழங்கை மூட்டை மடிக்காமல் மணிக்கணக்கில் இருக்கசொல்லி சட்டம் சொல்கின்றதா? ஆமென்றால் அது மருத்துவரீதியில் எல்லோர்க்கும் சாத்தியமா? 


அங்கிருந்த குற்றவாளிகளில் பாதிக்குமேல் போக்குவரத்து குற்றங்களும், ஜீவனாம்சம் பெறவந்த பிரிந்த ஜோடிக்களும்தான்; அதிகம்பேர் தம்மை 'குற்றவாளிகள்' என ஒப்புக்கொண்டு நாட்டுக்கும், கோட்டுக்கும் தண்டப்பணத்தை இலட்சக்கணக்காக தினம்தினம்  அள்ளியள்ளிக் கொடுக்கும் போக்குவரத்துப் பிரிவுக்கு நிச்சயம் தனியாக ஒரு மன்றம் அவசியம் என்பதை ஏன் நீதிமன்றம்  புரிந்துகொள்ளவில்லையோ என்கின்ற சந்தேகம் கூமுட்டைக்கு மட்டுமல்ல அங்கிருந்த பலருக்கும் இருந்தது!!  குற்றவாளிகளை அழைத்துவரும் 'மேன்மைமிகு' போக்குவரத்துபிரிவு பொலிசாருக்குகூட  தினமும் முழுநாள்  காத்திருப்பும், அலைச்சலும், வீண் நேரவிரயமும் என்பதைகூட மன்றம் புரிந்துகொள்ளவில்லை போலும்! இடப்பற்றாக்குறை (இப்போது அதை சொல்ல முடியாது), நீதிபதிகள் பற்றாக்குறை போன்ற ஒப்புச் சாட்டுக்களை தவிர உருப்படியான பதிகள் எதுவும் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை இல்லை!! 

பொலிசாரால் காலை எட்டு முப்பதுக்கு அழைத்துவரப்பட்டிருந்த கூமுட்டைக்கு மதிய உணவு இடைவேளையில் சிலருடன் பேசவும் சந்தர்ப்பம் கிடைத்தது!! அவர்களில் முக்கியமானவர்கள் ஜீவனாம்சமாக மாதாமாதம் குறிப்பிட்ட பணத்தொகையை மன்றத்திற்கு செலுத்தும் ஆண்களில் ஒருவர்; பருமனான தோற்றம்  உடல் உழைப்பால் ஜீவனாம்சம் செலுத்துபவர் அவர்; 16 வருடங்களுக்கு மேலாக பணம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்!  இதில் என்ன கொடுமை என்றால் அவர் மாதமாதம் இதற்கென கிட்டத்தட்ட முழுநாளை செலவழித்து நீதிமன்றம் வரவேண்டி உள்ளது!! இப்படியானவர்களது எண்ணிக்கை அதிகம், இவர்களுக்கு தனியான பிரிவில் அல்லது போலிஸ் பிரிவில் வைத்து பணத்தை பெற்றுக் கொடுத்தால் எவ்வளவு நேரம்/அலைச்சல்  மிச்சமாகும்?

அத்துடன் இவர்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் வறியவர்கள்; குடும்பத்துடன்  சேர்ந்து குடும்பம் நடத்தும்போது தினமும் வரும் பணத்தை கொண்டுதான் குடும்பத்தை ஓட்டுவார்கள்; அதனால் மாதம் போகும் செலவு பெரிதாக தோற்றாது!! ஆனால் மொத்தமாக ஒரு முழுத் தொகையை ஜீவனாம்சமாக மாதாமாதம் கொடுப்பதென்பது இவர்களுக்கு மிகுந்த சிரமமானது!! அதேநேரம் இந்த பணமில்லாமல் பிள்ளைகளை வளர்ப்பதென்பது மனைவிகளுக்கும் மிகவும் சிரமமானது என்பதையும் சற்றும் மறுப்பதற்கில்லை; அந்த இடத்தித்தான் விவாகரத்து நடைமுறை ரீதியில் எவ்வளவு  அலைச்சலையும் விரக்தியையும் கொடுக்கும் என்பதை புரிந்துகொள்ள முடியும்!!  உடல்நிலை சரியில்லாவிட்டால் கூட பணத்தை கொடுக்கவேண்டும் என்னும் நிலையில் பல அன்றாடம் காய்ச்சி ஆண்கள் மிகவும் சிரமப்படுவதுவும் உண்மை!! ஆணுக்கு சமனான  பெண் விடுதலை பற்றி பேசும் புதுமைப் பெண்களின் ஜீவனாம்சம் பற்றிய நிலைப்பாடுதான் என்ன? என்பதையும் அறியும் ஆவலும் அங்கே தோன்றியது!

அடுத்து கூமுட்டை வியந்த மற்றொரு விடயம் வக்கீல்கள் மன்றுக்குள்  வரும்போதும், வெளியே போகும்போதும் நீதிபதியை நோக்கி கூளக்கும்பிடு போடுவதுதான்!! ஒருநாளைக்கு ஒருதடவை விஷ் பண்ணினால் போதாதா? என்றோ எவரோ கொண்டுவந்த அடிமைத்தனம் போன்ற செயற்கையான மரியாதை கொடுக்கும் சட்டத்தை 2012 இலும் மறுபரீசலனை செய்யாமல் ஒருநாளைக்கு 50 தடவை கூளக்கும்பிடு பூத்தல் கொலஸ்ரோலை குறைக்க நல்ல உடற்ப்பயிர்ச்சியாக நல்லவிடயமன்றி  சாதாரண மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்ட  தேவையற்ற செயற்பாடோ என்கின்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றது!! தான் படித்த விடயங்களை சரியானமுறையில் தீர்ப்பாக வெளிப்படுத்தவேண்டிய பொறுப்பில் உள்ள  நீதிபதியும் மனிதர்தானே!! மனித உயர்களை பாதுகாக்கும், இவர்களைவிட அதிகமான கல்விச்சுமையை தன் மேல் ஏற்றிக்கொண்ட வைத்தியருக்குகூட இப்படியான கூளக்கும்பிடுக்கள் விழுவதில்லை; அடிமைத்தனம் நீதிமன்றில் இருந்தே ஆரம்பிப்பது வேதனை!!


வாய்தா!!!!!  குற்றவாளி என ஒப்புக்கொண்டால்  தண்டப்பணம்/சிறைத்தடனை; மற்றையபடி வாய்தா வாய்தா வாய்தா....  20 லட்சம் பெறுமதியான நகை களவுசெய்த திருடனை சாட்சிகளோடு பிடித்துக்கொடுத்தும் குற்றம் நிரூபிக்கப்படாமல் வாய்தா கொடுத்து கொடுத்து  வழக்கை மாதக்கணக்கில் இழுத்தடித்தமையால்  தாமாகவே வழக்கிலிருந்து விலக்கிக்கொண்ட குடும்பமும் நிஜத்தில் உண்டு!!  வழக்குகள்  மாதக்கணக்கில், வருடக்கணக்கில் நிலுவையில் தேம்புவதாலும், வாய்தாக்களாலும்தான் மக்கள் நீதிமன்றை நாடவே பயப்படுகின்றார்கள்!! சமரசத்தில் பிரச்சனைகளை முடித்து நீதி பெறாமலே  பெரும்பாலான வழக்குகள் முடிக்கப்படுகின்றன! வக்கீல்கள் தமது கட்சிக்காரருடன் வெளியில் பேசும் பேச்சுக்கள் கொடுக்கும் நம்பிக்கையை பெரும்பாலும் வாய்தாக்கள் தகர்த்துவிடுகின்றன!! வக்கீலுக்கு கட்சிக்காரர் மூலம் ஒவ்வொரு அமர்வுக்கும் கட்டணம் கிடைக்கின்றது, ஆனால் கட்சிக்காரருக்கு?

வக்கீல்களும் சும்மா அல்ல!!  இரு தரப்பிலும் முதல் நான்கு, ஐந்து  வாய்தாக்களுக்கும் வழக்காட கட்டணம் வாங்கிவிட்டு இறுதியில் இரண்டு கட்சிக்காரர்  பக்கத்து வக்கீல்களும் இரு கட்சிக்காரரையும் சமாதானப்படுத்தி  அனுப்புவது மிகப்பெருமளவான வழக்குகளில் இடம்பெறும் சம்பவம்!!  நேரவிரயம், பணவிரயம், மன உளைச்சல் போன்றவைதான் நீதிமன்றங்களில் நீதியைவிட அதிகமாக கிடைக்கின்றன!!! அதைவிட கொடுமையானது வக்கீல்களின் ஆங்கில மொழியிலான  வாதாட்டம்!! வராத இங்கிலீசை வா வா என்று அவர்கள் செய்யும் அலப்பறை பார்க்கவே சகிக்கமுடியாத ஒன்று!!  குறித்த மொழிப்பிரதேசத்தில் வேற்றுமொழி போலீஸ்காரன் தன் மொழியில் குற்றத்தை பதிவுசெய்து கொள்ளும்போது; தனது பிரதேசத்தில், தனது கட்சிக்காரருக்கு முன்னால், தன்மொழி பேசும் நீதிபதி முன்னிலையில் எதற்கு வலிந்த ஆங்கிலம் பேசவேண்டும்?

அடுத்து முக்கியமான விடயம் சுகாதாரம்!!! சாதாரண இடங்களில் இருக்கும் உணவகங்களுக்கு சுகாதார உத்தியோகஸ்தர்கள் விதிக்கும் சுகாதார அழுத்தங்களும் தண்டனைகளும்  நீதிமன்றத்தில் உள்ள தேனீர் விடுதிக்கு  பொருந்தாதா?  உணவுகளை கைகளால் எடுத்துக்கொடுக்கும் பழக்கம் தண்டனைக்குரியதாக இருக்கும் பட்சத்திலும் அவை நீதிமன்றில்  நடைமுறைப்படுத்தப்படுவதில்லை!! அடுத்து மலசலகூடம் தேநீர் விடுதிக்கு 10 அடி தூரத்தில் உள்ளது!!! அங்கு நிலமட்டத்தில் இருந்து 5cm அளவு உயரத்திற்கு நீர் தேங்கியுள்ளது; நீளக்காற்சட்டையை மதித்துத்தான் உட்செள்ளவேண்டும்; பொது இடங்களில் உள்ளவைபோல  கதவு தாழ்ப்பாளும் அவுட்!!! அடிப்படை சுகாதாரமே நீதிமன்றில் காற்றில் பறக்கின்றது வேதனை!!!

இங்குதான் இப்படியென்றால் விளக்கமறியல்களின்  கொடுமையை கேட்கவே வேண்டாம்!! போலிஸ் ஸ்டேசனிலும், நீதிமன்றிலும்  இருக்கும் 10 க்கு 10 அறையில் 15 பேரை ஒன்றாக பூட்டிவைப்பது என்பது மிகவும் கொடுமையானது!! அதிலும் போலிஸ் ஸ்டேஷன்களில் மலசலம்  கழிப்பதும் அதே அறையில்த்தான், அனைவர் முன்னிலையில்!!  சந்தேக நபர்களை, குற்றம் நிரூபிக்கப்படாதவர்களை எப்படி இப்படியான ஒரு மனவுளைச்சலுக்கும், மனநோய்க்கும் ஆளாக்ககூடிய  சூழலில் அடைத்து  அடிப்படை சுகாதாரம்/மனித உரிமைகளை மீறவேண்டும்!!  ஏன் அவர்களை மிருகங்களைப்போல நடத்த வேண்டும்!!  நாளை அவன் சுற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவன் அனுபவித்த நரகவேதனைக்கு சட்டமோ, அரசோ என்ன பதில் சொல்லப்போகின்றது?  எந்த குற்றமும் செய்யாதவன் மனநிலையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை!!   தண்டனைகள் வழங்கப்படும்வரை  இப்படியான கைதிகளுக்கு அடிப்படை சுகாதாரம், காற்றோட்டம், தூய்மையான உறைவிடம் அவசியமானதா? இல்லையா? கைதிகளும் மனிதர்கள்தானே!!


மனிதமனம் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டது, இந்த விடயத்தால் மனதின் வலிமையை இழக்கும், மன உளைச்சலுக்கு உள்ளாகும்  ஒருவருக்கு என்ன நஷ்டஈடு கொடுத்தாலும் ஈடுசெய்யமுடியாது!!  இங்கே இப்படியென்றால் சிறைச்சாலைகளில் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை!! குற்றம் செய்பவனை தண்டிக்க மட்டுமா சட்டம்? அவனை நல்வழிப்படுத்துவது, மறுசீரமைப்பது சட்டத்தின் வேலை இல்லையா? அடிப்படை  மனிதவசதிகள், சுகாதாரம் இல்லாத ஒரு தண்டனையை கொடுக்கச் சொல்லியா சட்டம் சொல்கின்றது? அல்லது  சட்டம் இவற்றை ஒரு பொருட்டாக  எடுத்துக்கொள்ளவில்லையா? 

அடுத்த மிகப்பெரும் சந்தேகம் என்னவென்றால் நீதிமன்றங்கள் நீதிகளை கொடுக்கவா? அல்லது வக்கீல்களின் திறமையான வாதத்திற்கு அங்கீகாரம் கொடுக்கவா?  எந்த வழக்காக இருந்தாலும் இவர் இலகுவாக வெளியே எடுத்துவிடுவதாக ஓரிரு வக்கீல்களின் பெயரை  சொல்கின்றார்கள்; அப்படியானால் சட்டம் சார்ந்திருப்பது எதனில்? மருத்துவம் ஒருவரின் உயிர் சம்பந்தப்பட்டதென்றால்  சட்டம் வாழ்க்கை சம்பந்தப்பட்டது; தவறான ஒருவருக்கு பணத்திற்காக வக்கீல்கள் தம் திறமையை காட்டும்போது  எப்படி நீதி தழைக்கும், சமூகம் சிறக்கும்? கொள்ளைக்காரரும், கொலைகாரரும், ரௌடிகளும், லஞ்சப்பேர்வழிகள்  தாம் மாட்டினாலும் தப்பித்துக் கொள்ளலாம் என்கின்ற நம்பிக்கையில் தவறு செய்வதற்கு தூண்டும்  மறைமுகமான மூலகாரணிகளே  திறமையான வக்கீல்கள்தான் என்பதை மறுக்க முடியுமா?

அரச மருத்துவமனை, தபால் நிலையம், கச்சேரி, வங்கிகள் எப்படி அசட்டையீனமாக  இயங்குகின்றனவோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் இயங்குகின்றன நீதிமன்றங்கள்!! ஒரு முக்கியமான தேவையின் நிமித்தம் ஒரு கேள்வியை கேட்டு அங்கிருக்கும் ஊழியரிடமிருந்து பதிலை பெறுவதென்பது கல்லில் நார் உரிப்பதை போன்றது; காரணம் அவர் ஒரு அரச ஊழியர்!!!  இவர்களுக்கு எங்கிருந்து இந்த ஆணவமும், அசட்டையீனமும் பிறக்கின்றனவோ தெரியவில்லை!!   இங்கு வேலைசெய்யும் ஊழியர்களை (போலீசார் உட்பட) பார்க்கும்போது தனியார் வங்கி, தனியார் மருத்துவமனை போன்று நீதிமன்றங்களையும் தனியார் மயப்படுத்தினால்  பரவாயில்லையோ என  கேவலமாக எண்ணத் தோன்றுகின்றது!!

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது தனி மனிதர்களிடமும், சமூகத்திடமும் தங்கியுள்ளது எவ்வளவு  உண்மையோ; அதேயளவிற்கு அரசிலும், அரசுசார்ந்த நிர்வாகங்களிலும்  தங்கியுள்ளது!!! அரச திணைக்களகங்கள், நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் சரியாக, சற்று வேகமாக இயங்க தொடங்கினாலே மாற்றம் அசுரவேகத்தில் இடம்பெறும்!! ஆனால் இங்கு இவை  இருக்கும் நிலைகளை பார்க்கும்போது 3000 ஆம் ஆண்டிலும் சாத்தியமாகுமா என்று தோன்றவில்லை!!


குறிப்பு -: நீதிமன்றில் கூமுட்டை பார்த்த ஒரே நல்ல விடயம்;  உடல்வளர்ச்சி அடைந்த 18 வயது நிரம்பாத ஒரு சிறுவனை திட்டமிட்டு அனுப்பி ஒரு கடையில் சிகரெட் வாங்குவித்து குறிப்பிட்ட கடை உரிமையாளரை மன்றுக்கு அழைத்துவந்த போலிஸ்காரருக்கு விழுந்த டோஸ்தான்; அதிலும் இனிமேல் "டாக்கேட் காட்டணும் என்கிறதுக்காக  இப்படியான சீப்பான வேலைகள் செய்யவேண்டாம்"  என போலீசாரை அதட்டி சொன்னது சற்று ஆறுதல்; ஆனாலும் சட்டம் தன் கடமையை செய்து அந்த நபரிடமிருந்து  1000 ரூபாவை தண்டமாக பெற்று  நாட்டின் வளர்ச்சிக்கு பெருந்துணையாற்றியது :-))

குறை சொல்லவேண்டும் என்பது கூமுட்டையின் நோக்கமல்ல; சிலவிடயங்கள் பார்க்கும்போது சரியாகப்படவில்லை; தனக்கு ஏற்பட்ட விரக்தியை, கோபத்தை, வெறுப்பை; அதற்கான தீர்வை பொதுவில் முன்வைப்பதே அவனின் நோக்கம்!! அரை நாளிலே இவளவு என்றால் தினமும் அங்கு இருப்பவர்களுக்கு  இன்னும் எத்தனையோ அடிப்படை பிரச்சனைகள் தவறென  கண்முன் தெரியும்; அவர்களுக்கும்  இதே உணர்வு வருமா? அப்படி வந்தால்இனிமேலும் அவற்றை  காற்றில் விடாமல் அவர்களுக்கென்று உரிய நேரம்/பதவி வரும்போதே ஏதாவதொரு  ஒரு விடயத்தை ஒருவர் சீர் செய்தாலே மாற்றங்களை கொண்டு வரலாம்!! மாற்றம் ஒன்றுதானே மாறாதது :-))

முக்கிய குறிப்பு -: சட்டவல்லுனர்களே நோட் பண்ணிக்கோங்க; இது கூமுட்டை என்பவன் ஹிஸ்றீரியா என்னும் நாட்டில் தனது அரைநாள் நீதிமன்ற அனுபவத்தை சொல்வதுபோல சித்தரிக்கப்பட்ட கற்பனை பதிவு!!  ஆமா எங்க நாட்டில எப்படி நீதிமன்றங்கள் இயங்குகின்றன?!!!

*...............*