Friday, September 28, 2012

தாண்டவம் - என் பார்வையில்



எல்.விஜய் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில், நீரவ்ஷா கேமராவில் சீயான் விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன், சந்தானம், நாசர், ஜெகபதிபாபு, லக்ஷ்மிராய் போன்றோர் முக்கிய பாத்திரங்களிலும்; சரண்யா, எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, டெல்லி கணேஷ் போன்றோர் குறிப்பிடத்தக்க வேடங்களிலும் நடித்து UTV Motion Picture தயாரிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தாண்டவம்!!

கதை - போலிஸ், கிரைம், கால்யாணம், காதல், நட்பு, குடும்பம், கிராமம், டெல்லி, லண்டன், குண்டுவெடிப்பு, தீவிரவாதம், இழப்பு என கதை சொல்லப்பட்டிருக்கின்றது!! புதுமையான கதை இல்லை என்றாலும் அதை புதுமையாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர், அதில் வெற்றியும் கண்டுள்ளார்!!

திரைக்கதை - முதல்பாதியில் வரும் பிளாஷ்பாக் கதையை அங்கேயே இடைநிறுத்தி, இரண்டாம் பாதியில் மீண்டும் இடையில் கொண்டுவந்திருப்பது திரைப்படத்தை தொய்வின்றியும் சலிக்காமலும் கொடுக்க உதவியிருக்கின்றது! வேகமான திரைக்கதை எல்லாம் இல்லை என்றாலும் வழமையான எல்.விஜயின் பாணியில் திரைக்கதை நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது!!

வசனம் - குறிப்பிட்டு சொல்லும்படி பெரிதாக எழுதவில்லை எனினும், வசனம் எந்தவிதத்திலும் குறையாக தெரியவில்லை; கிராமத்து காட்சிகளில் வரும் வசனங்கள் ஜதார்த்தத்தை மீறி நகைச்சுவையாக அதிகம் இருந்தாலும் அவற்றுக்கு சபாஷ் போடலாம்!!


விக்ரம் - என்ன சொல்றது? 46 வயதிலும் இத்தனை கடின உழைப்பை ஒவ்வொரு படத்திற்கும் கொடுக்கணும் என நினைத்து அதை 100 சதவிகிதம் கடைப்பிடிக்கும் விக்ரமிற்கு சபாஷ்!! விக்ரம் படங்கள் அண்மைக்காலங்களில் சொதப்பினாலும் விக்ரமின் உழைப்பு ஒவ்வொரு திரைப்படத்திற்கும் சம அளவில் கடினமானதாக அமைந்திருக்கும்; தாண்டவமும் விதிவிலக்கல்ல!! உடல் எடையை ஏற்றுவதிலும், இறக்குவதிலும், உடலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் விக்ரமுக்கு நிகர் விக்ரம்தான்!! தில் திரைப்படத்தில் பார்த்து வியந்த அதே உடல் கட்டுப்பாடு!! முகத்தில் சற்று முதுமை தெரிந்தாலும் ஆக்ஷன் காட்சிகளிலும், விறுவிறுப்பிலும் விக்ரம் இன்னமும் இளைஞன்தான்!!

அனுஷ்கா - சற்று வயது அதிகமாக தோன்றினாலும் விக்ரமிற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்; இப்போதிருக்கும் நாயகிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் திறன் அதிகம் உடைய அனுஷ்கா தாண்டவத்திலும் அசத்தியிருக்கின்றார். எல்.விஜய் திரைப்படங்களுக்கு இயல்பான நாயகியாக அனுஷ்கா சிறப்பான தேர்வு!!

எமி.ஜாக்சன் - பெரிதாக கவரவில்லை; அழகிலும்!!

சந்தானம் - திரைப்படத்தை தொய்யவிடாமல் சந்தானம் அப்பப்போ திரைக்கதையில் உள்வாங்கப்பட்டிருந்தாலும் அவை கதையைவிட்டு தனியே இல்லாமல் திரைக்கதையின் தேவைக்காக அமைந்திருப்பது சிறப்பு!! ரஜினி என்ன செய்தாலும் ஸ்டைல் என்கின்ற ஒருநிலை உருவாகியதுபோல; சந்தானம் என்ன சொன்னாலும் அதை கவுண்டராக/காமடியாக எடுத்து ரசிகர்கள் விசிலடிக்கும் அளவிற்கு சந்தானத்தின் அசுரவளர்ச்சியை காணக்கூடியதாக உள்ளது!! ஒவ்வொரு கவுண்டருக்கும் கிளாப்ஸ்; கவுண்டர் கொடுப்பதுடன் இப்பெல்லாம் சந்தானம் எக்ஸ்ப்ரஷனிலும் வெளுத்து வாங்குகிறார், சின்ன சின்ன எக்ஸ்ப்ரஷனுக்குகூட செம ரெஸ்போன்ஸ், தாண்டவத்திலும்!!


நாசர் - இலங்கை தமிழ் பேசும் லண்டன் விசாரணைப் போலிஸ்; இதுவரை தமிழ் சினிமா கொடுத்த இலங்கை உச்சரிப்புக்களில் அதிகம் நெருக்கமாகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியளவிலும் உள்ள வசன உச்சரிப்பாக நாசரின் இந்த திரைப்பட உச்சரிப்பை கூறலாம்!! நாசர் கொடுத்ததை சிறப்பாக செய்யாவிட்டால்தான் ஆச்சரியம், இதிலும் சிறப்பாகவே தனது வெளிப்பாட்டை கொடுத்திருக்கின்றார்!!

லக்ஷ்மிராய் - நல்ல ஸ்கோப் உள்ள பாத்திரங்களை கொடுத்தால் சிறப்பாக வெளிப்படுத்தக்கூடியவர்; ஆனால் இவருக்கு சப்பை கேரக்டர்களே தொடர்ந்தும் கிடைக்கின்றமை அவரது துரதிஸ்டம்!!

சரண்யா, எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, டெல்லி கணேஷ் - கிடைத்த சிறிது நேரத்தையும் தமது அனுபவத்தால் கலகலப்பாக்கி விடுகின்றார்கள்!!

எடிட்டிங் - காட்சிகளை சிறப்பாக கோர்த்திருக்கின்றார்; விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக்கொண்டமைக்கு ஆண்டனிக்கு சபாஸ் போடலாம்!!

ஒளிப்பதிவு -
நீரவ்ஷா கேமரா வழமைபோல சிறப்பு; லண்டன், டெல்லி, கிராமம் என மூன்று வித்தியாசமான பிரதேசங்களையும் அழகாக காட்சிப்படுத்திக் கொடுத்திருக்கிறார்; எமி ஜாக்சனை அழகாக காட்டுவதில் மட்டும் தோற்றுப் போய்விட்டாரோ என எண்ணத் தோன்றுகின்றது!!

இசை - ஜீ.வி.பிரகாஷ்குமார் பாடல்களில் ஸ்கோர் பண்ணியிருக்கின்றார்; அனிச்சம் பூவழகி, உயிரின் உயிரே, ஒருபாதி கதவு பாடல்களின் காட்சியமைப்புக்களும் பிரமாதம்!! பின்னணி இசையில் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாகவோ, மட்டமாகவோ தோணவில்லை!!


இயக்கம் - சென்னையில் இருந்து டெல்லிவரை எடுக்கக் கூடிய கதையை, டெல்லியில் இருந்து லண்டனுக்கு எடுத்திருக்கின்றார் இயக்குனர் எல்.விஜய்; திரைப்படத்தை அழகாகவும், ரிச்சாகவும் காட்டுவதற்கான புதிய வழிமுறை!! பெரிய ஹீரோக்கள் படமென்றால் இப்போதெல்லாம் இயக்குனர்கள் இதனையே அதிகம் செய்கின்றார்கள். ஸ்டுடியோவுக்குள் இருந்த கேமராவை கிராமங்களுக்கு கொண்டுவந்த பாரதிராஜாவின் புரட்சியை இன்றைய இயக்குனர்கள் வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்வது ஆரோக்கியமானதா? இல்லையா? என்று சொல்லமுடியவில்லை!! மற்றப்படி இயக்கத்தில் விஜய் வழமைபோல சிறப்பாக இயக்கியிருக்கின்றார்; பல திரைப்படங்களில் பார்த்த காட்சிகள்போல ஞாபகங்கள் ஆங்காங்கே வந்துபோனாலும் எடுத்த விடயத்தை ஆக்ஷன், காமடி, காதல், கிரைம் என மசாலாவாக சலிக்கவைக்காமல் கொடுத்திருக்கின்றார்!!

தாண்டவம் - தமிழ் சினிமாவின் மைல்கள் என்றோ, பக்கா கமர்சியல் விருந்தென்றோ சொல்லமுடியாது என்பது எத்தனை சதவிகிதம் உண்மையோ; அத்தனை சதவிகிதம் தாண்டவம் திரையரங்கில் சலிக்காமல் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம் என்பதும் உண்மை!! நிச்சயம் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம்!!!

குறிப்பு - இது விமர்சனமல்ல 'எனது பார்வையில்' தாண்டவம்! (குறிப்பாக பாலுமஹேந்திரா சார் அவர்களுக்கு)

*--------------*

Tuesday, September 25, 2012

நானும் சினிமாவும் பாகம் - 3 (சீயான் விக்ரம்)



நீண்ட நாட்களுக்கு முன்னர் எழுதிய நானும் சினிமாவும் பாகம் இரண்டாவதின் தொடர்ச்சி!! விக்ரம் சம்பந்தப்பட்டது என்பதால் சற்று விரிவாக என்னுடைய அனுபவத்தில் விக்ரமையும் தாண்டி, விக்ரமை பற்றியும் எழுத வேண்டும் என நினைத்திருந்ததால் பல நாட்கள் தள்ளிப்போய்விட்டது. இந்தவார இறுதியில் தாண்டவம் வெளியாகும் நேரத்தில் இதனை எழுதுவது சரியென தோன்றியது! ரஜினிக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விக்ரம் என்பதனால் முடிந்தளவுக்கு திருப்தியாக, விரிவாக எழுதவேண்டும் என்று நினைக்கின்றேன்; எழுதினேனா இல்லையா என்பதை நானும் உங்களைபோல பதிவின் முடிவில் தெரிந்துகொள்கின்றேன் :-))


எனக்கு பிடித்த விக்ரம் - இந்த விம்பத்தை எனக்கு பொதிகை தொகைக்காட்சி முன்னரே ஒரு சில திரைப்படங்களில் அறிமுகப்படுத்தி இருந்தாலும்; அந்த விம்பத்தை எனக்கு இவர் பெயர் விக்ரம் என அறிமுகப்படுத்தியது 'தில்' திரைப்படம் தான்!! 'சேது' திரைப்படம் விக்ரமிற்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்திருந்தாலும் இங்கு யாழ்ப்பாணத்தில் ஓரிரு 'மினி' திரையரங்கில் மட்டுமே 'சேது' காண்பிக்கப்பட்டது! ஓரிருவர் "படம் நல்லாயிருக்கு" என்று சொன்னாலும் ஏனோ படம் பார்க்க பிடிக்கவில்லை!! சிலகாலம் கழிந்த பின்னர் மீண்டும் ஒரு நண்பனின் உதவியில் 'தில்' திரைப்பட VCD கிடைத்தது; மிகவும் தெளிவான copy வேறு!! படம் ரொம்பவே பிடித்துப்போக, பலதடவைகள் வேறு வேறு இடங்களில்(உறவினர், நண்பர்கள் வீடுகளில்) மீண்டும் மீண்டும் பார்த்ததாலோ என்னமோ அந்த திரைப்படத்தின் நாயகனும் மனதுக்கு நெருக்கமானான்!!

கூட இருந்த அஜித்,விஜய் ரசிகர்களான நண்பர்களின் அடுத்த சூப்பர்ஸ்டார் அலப்பறை; ரஜினிவேறு நீண்ட இடைவெளிகளில் படம் நடிப்பதால் இடைப்பட்ட காலத்தில் திரைப்படம் பார்ப்பதற்கு தேவயான ஒரு பிடிப்பு போன்றவை மறைமுக காரணங்களாக இருக்க தில், காசி, சேது என அடுத்தடுத்து நான் பார்த்த மூன்று திரைப்படங்களிலும் வித்தியாசம் + ஈர்ப்பை கொடுத்த விக்ரம் எனக்கு மனதுக்கு நெருக்கமான நாயகனானார்!! அடுத்தடுத்து விக்ரம் நடித்து வெளியாகும் அனைத்து திரைப்படங்களின் VCD களையும் தேடித் தேடி பார்ப்பது வழக்கம் (திரையரங்குகளுக்கு படங்கள் வந்ததில்லை) ஓரிரு திரைப்படங்கள் வெளிவந்தாலும் அந்த சமயங்களில் நான் ஊரில் இருந்ததில்லை. மிகவும் எதிர்பார்ப்புடன் திரையரங்கில் பார்வையிட எதிர்பார்த்திருந்த பிதாமகனும் கடைசி நேரத்தில் பார்க்க முடியாமல் போயிற்று!! First show மிஸ் பண்ணினால் ஏனோ அந்த படத்தை திரையில் பார்க்க பிடிப்பதில்லை; இன்றுவரை :-)

அதற்கிடையில் தூள், சாமி, ஜெமினி என விக்ரமின் மாஸ் திரைப்படங்கள் என்னை விக்ரமின் தீவிர ரசிகனாக மாற்றியது!! நான் மிகவும் எதிர்பார்த்து முதல் முதலில் திரையரங்கில் பார்த்த திரைப்படம்(கொழும்பில் நான் பார்த்த முதல் திரைப்படம்) 'அருள்' ஊத்திக்கொண்டது!! அடுத்து மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் அந்நியன்; முதல்நாள் மற்றும் சில நாட்கள் திரையரங்கிலும், தொலைக்காட்சி மற்றும் DVD என பலநாட்கள் வீட்டிலுமாக, நான் அதிகதடவைகள் பார்த்த திரைப்படங்கள் வரையில் அந்நியனும் இடம்பிடித்துக்கொண்டது. அந்நியனுக்கு பின்னர் மஜா, பீமா, கந்தசாமி, ராவணன், தெய்வத்திருமகள், ராஜபாட்டை என எந்த திரைப்படத்தின் முதல்நாள் காட்சிகளையும் திரையில் காண தவறவிட்டதில்லை!! இப்போதும் தாண்டவம் முதல்நாள் காட்சிக்காக ஆவலுடன்!!



வெற்றிப்படங்கள் மட்டுமென்றில்லாது விக்ரமின் சரியாக போகாத சில திரைப்படங்களும் எனக்கு மிக்கவும் பிடித்தவை; அவற்றில் பீமா, சாமுராய், இராவணன் போன்றவை முக்கியமானவை!! ஒவ்வொரு திரைப்படங்களுக்கும் மலையளவு எதிர்பார்ப்பு இருக்கும், ஆனால் அவற்றை கடந்த 7 வருடங்களில் தெய்வதிருமகள் மட்டும்தான் பூரணமாக திருப்திப்படுத்தியது; பீமா, ராவணன் திரைப்படங்கள் திருப்தியை கொடுத்தாலும், வணிகரீதியில் சரியாக போகாத குறை இருக்கத்தான் செய்தது. வயது ஏறிக்கொண்டே போகும் நேரத்தில் வீணாக பெரிய பட்ஜெட் என்று காலத்தை இழுத்தடிக்காமல் நல்ல ஸ்கிரிப்ட்களில் விக்ரம் ஆண்டுக்கு இரண்டு படங்களாவது கொடுக்கவேண்டும் என்பதே என் விருப்பம்; தாண்டவத்திற்கு அடுத்து ஷங்கரின் 'ஐ' திரைப்படம் என்பதால் அதற்கும் நீண்டகால அவகாசம் தேவை!!

நடிகர் விக்ரம் - சினிமாக் கனவு; அதற்கான முயற்சியாக படிப்பு, பயிற்சி என தன்னை தயார்ப்படுத்திக்கொண்டு தனது கனவு கோட்டைக்குள் காலடிவைத்த இளைஞன்!! 10 வருட போராட்டம், 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நாயகனாக நடிக்க வாய்ப்பு; ஆனாலும் வெற்றியோ அடையாளமோ கண்ணுக்கெட்டிய தூரம்வரை இல்லை!! கல்லூரி காலத்தில் இருந்து விக்ரமிற்கு தடைக்கற்கள்தான் அதிகம்!! கல்லூரி காலத்தில் மிகவும் ஆபத்தான மோட்டார் சைக்கிள் விபத்தை சந்தித்து இருபதிற்கும் மேற்ப்பட்ட சத்திர சிகிச்சையால் பிழைத்த விக்ரமிற்கு கால்களில் இன்னமும் அதன் தாக்கம் உண்டு. அதன் பின்னர் சினிமாவில் நடிகனாக தோல்வி, தோல்வி, தோல்வி..... அப்பப்போ வேறு நடிகர்களுக்கு டப்பிங் பேசும் சந்தர்ப்பமும் கிடைக்கப்பெற்றது; குறிப்பாக பிரபுதேவாவிற்காக காதலன், மின்சாரகனவு போன்ற திரைப்படங்களிலும்; அப்பாசிற்காக கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பூச்சூடவா திரைப்படங்களிலும்; அஜித்திற்கு அமராவதி திரைப்படத்திலும் பின்னணி குரல் கொடுத்தவர் விக்ரம்தான்!!

தனக்கும் சினிமாவுக்கும் எட்டாம் பொருத்தம் என நினைத்து சினிமாவைவிட்டு ஒதுங்கி வெளிநாட்டில் செட்டில் ஆக முடிவெடுத்திருந்த வேளையில் கிடைத்த ஒரு திரைப்பட வாய்ப்பை இறுதி வாய்ப்பாக பயன்படுத்தி மீண்டுமொருதடவை முயற்சி செய்தார் விக்ரம். பாலுமகேந்திரா பாசறையில் இருந்து புதுமுக இயக்குனராக வெளிவந்த பாலா இயக்குனர் அவதாரம் எடுக்க, விக்ரம் அரிதாரம் பூசிய அந்த திரைப்படம்தான் சேது!! சேதுவிற்கான பாலாவால் முதலில் கதை சொல்லப்பட்டது அஜித்குமாருக்குத்தான்!; முதலில் அஜித் நடிப்பதாக கூறப்பட்டு பின்னர் அஜித் விலகிவிட்டார் என அறிவிக்கப்பட்டது. மொட்டை போடும் காட்சியால் அந்த திரைப்படத்தில் இருந்து அஜித் விலகியதாக பேசப்பட்டது (பின்னர் கஜினியில் அஜித் நடிக்க முடியாமைக்கு போகவும் அதே மொட்டை காட்சிதான் காரணம்!) பாலாவிற்கு முதல் முயற்சியாகவும், விக்ரமிற்கு இறுதி முயற்சியாகவும் தயாரிக்கப்பட்ட 'சேது' திரைப்படத்தின் பிரிவியூஷோ மட்டும் 100 நாட்களுக்கு மேல் ஓடியதாக சொல்வார்கள்; யாரும் வாங்க முன்வரவில்லை!!

இறுதியில் ஒருவழியாக 1999 இல் வெளிவந்த சேது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது; இயக்குனர் பாலாவை தமிழ் சினிமா இருகரம் கொடுத்து வரவேற்று முதன்மை இயக்குனர்களுக்கு சமனான சிம்மாசனம் கொடுத்து அழகுபார்த்தது. தமிழ் சினிமாவிற்கு புதிய முகத்தை பாலா கொடுக்க, விக்ரமின் அபரிமிதமான நடிப்பாலும், இளையராஜா, இரத்தினவேல் போன்றோரின் தொழிநுட்பரீதியிலான பங்களிப்பாலும் சேது மிகப்பெரும் வெற்றி பெற்றது!! பல வருடத்து கனவு, 10 வருட உழைப்பு என விக்ரமிற்கு தமிழ் சினிமா வெற்றிக்கதவை மெல்லத் திறந்தது. ஸ்ரீதர், விக்ரமன், பி.சி.ஸ்ரீராம் இயக்கங்களில் கிடைக்காத வெற்றி பாலா என்னும் புதுமுகம் மூலம் விக்ரமிற்கு கிடைத்தது அதிஸ்டமா? நேரமா? உழைப்பிற்கும் இலட்சயத்திற்க்கும் கிடைத்த பிந்திய வெற்றியா? போன்ற கேள்விகளுக்கு வித்திட்டன.


சேதுவை தொடர்ந்து தனது கல்லூரிகால நண்பனான தரணி என்று சினிமா உலகில் அறியப்படும் ரமணியுடன் இணைந்து பணியாற்றிய 'தில்' திரைப்படம் வணிகரீதியில் பெரும் வெற்றி பெற்றது!! தில் திரைப்படம் விக்ரமிற்கு மட்டுமல்ல, எதிரும் புதிரும் திரைப்பட தோல்வியால் தளர்ந்திருந்த தரணிக்கும் 'வெற்றிப்பாதையை திறந்துவிட்டது!! அடிதடியில் மட்டும் ஓடிக்கொண்டிருந்த ஆக்ஷன் கமர்சியல் சினிமாவில் ஐடியா காட்சிகளை டசின் கணக்கில் புகுத்தியதும் தில் திரைப்படம்தான். தில் திரைப்படத்தை தொடர்ந்து வணிகரீதியில் மீண்டும் தரணியுடன் இணைந்து A.M.இரத்தினத்தின் ஸ்ரீசூர்யா மூவிஸுக்காக தூள், சரணுடன் இணைந்து ஏ.வி.எம்க்காக ஜெமினி, ஹரியுடன் இணைந்து கவிதாலயாவுக்காக சாமி என தொடர்ச்சியாக கமர்சியல் வெற்றிகள் விக்ரமிற்கு கிடைத்தன!! சமகாலத்திலேயே தன்னை வருத்தி சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்திய காசி திரைப்படமும் விக்ரமிற்கு மேலும் பெயரை பெற்றுக் கொடுத்தது!!

2001 - 2003 வரையான காலப்பகுதியில் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரம் விக்ரம் என்பது அன்றைய காலப்பகுதியில் விக்ரமிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி, ஏன் சாதனை என்று கூட சொல்லலாம்!! சாமி வெற்றி விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் அவர்களால் இன்றைய சூப்பர்ஸ்டார் விக்ரம்தான் என்கின்ற கூற்று விக்ரமை பொறுத்தவரை மிகப்பெரும் பாராட்டு!! அடுத்து மீண்டும் பாலாவுடன் கைகோர்த்து விக்ரம், சூர்யா கூட்டணியில் வெளிவந்த பிதாமகன் மிகப்பெரும் வரவேற்ப்பை வணிகரீதியிலும், விமர்சனரீதியிலும் பெற்றுக்கொடுத்தது. தனக்கு அங்கீகாரம் கொடுத்த தமிழ் சினிமாவிற்கு கைமாறாக விக்ரம் சிறந்த நடிகருக்கான தேசியவிருது பெற்றுகொடுத்து பெருமை சேர்த்தார்!! தமிழ் சினிமாவில் முழுமையான மாஸ் ஹீரோவாகவும், முழுமையான கிளாஸ் ஹீரோவாகவும் தனித்தனி திரைப்படங்களில் நடித்து இரண்டு வகையிலும் ரசிகர்களால் முழுமையாக அங்கீகாரம் பெற்ற முதல் நடிகன் என்கின்ற பெருமையை விக்ரம் பெற்றுக்கொண்டார்!!

இந்த வெற்றிப் பயணத்திற்கிடையே சாமுராய், காதல் சடுகுடு, கிங், விண்ணுக்கும் மண்ணும் என வணிக ரீதியில் சரியாக போகாத திரைப்படங்களும் அப்பப்போ வெளிவந்தன; ஆனலும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் விக்ரம் தனது அதிகபட்ச வெளிப்பாடை கொடுத்துக்கொண்டிருந்தார். உடல் எடையை கூட்டிக்குறைப்பதில் மாயாஜாலம் நிகழ்த்தினர்; படத்திற்கு படம் உடல்மொழி, வசன உச்சரிப்பு போன்றவற்றில் புதுப்புது பரிமாணங்களை வேறுபடுத்திக் காட்டத் தொடங்கினார்!! பிதாமகனுக்கு அடுத்து ஹீரியுடன் மீண்டும் இணைந்து நடித்த அருள் திரைப்படம் விக்ரமிற்கு மிகப்பெரும் அடியாக அமைந்தது!! விமர்சனங்கள், வசூல் மற்றும் விக்ரமினின் மாறுபட்ட பாத்திரங்கள் என அனைத்திலும் அருள் கைகொடுக்கவில்லை!!

அருள் திரைப்படத்தின் தோல்வியை ஈடுசெய்யும் வகையில் வெளிவந்த விக்ரமின் அடுத்த திரைப்படமான அந்நியன் திரைப்படம் அருளில் இருந்த அத்தனை குறைகளையும் போக்கியது; ஷங்கரின் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட அந்நியன் மிகப்பெரும் வெற்றியை பெற்றுக்கொண்டது!! மூன்று வேறுபட்ட பாத்திரங்களை ஒரு உருவத்தில் கனகச்சிதமாக விக்ரம் கொடுத்திருந்தார்!! உடல்மொழி, வசன உச்சரிப்பு என ஒரு பாத்திரத்திற்கும் மற்றைய பாத்திரங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் அப்படியொரு சிறப்பான வெளிப்பாட்டை கொடுத்திருப்பார். அந்நியன் விக்ரமின் திரைவாழ்க்கையில் மிகப்பெரும் மைல்கல்! விக்ரமை மிகச்சிறந்த நடிகனாக ரசிகர்களும், திரையுலகமும் ஏற்றுக்கொன்டாலும் விக்ரமிற்கு காமடி சரியாக அமைவதில்லை என்பது ஒரு குறையாகவே இருந்தது; சிவாஜிகணேஷன் அவர்களுக்கும் கடைசிவரை இருந்த குறையது!!


குறுகியகாலத்தில் ஒருவரது வெற்றி நீண்டகாலமாக அதே துறையில் இருப்பவருடன் போட்டிக்கு கோர்த்துவிடுவது எல்லா இடங்களிலும் நடக்கும் சம்பவம்; இன்று வீராத் கோலியை சச்சினுடன் ஒப்பிடுவதுபோல அன்று விக்ரமை கமலுடன் ஒப்பீடுகளும் இடம்பெற்றன. கமலுக்கு காமடி காட்சிகள் அல்வா சாப்பிடுவது போன்றது, ஆனால் விக்ரமிற்கோ காமடி பெரிதாக எடுபடவில்லை என்கின்ற குறை; இந்நிலையில்தான் மலையாள இயக்குனர் ஷாபியின் துணையுடன் 'மஜா' என்கின்ற முழுநீள நகைச்சுவை(?) திரைப்படத்தில் விக்ரம் நடித்தார். கமலுடன் போட்டிக்காக விக்ரம் மஜாவிலும், அந்நியனின் மூன்று வேடங்களுக்கு போட்டியாக தன்னை மேலும் நிரூபிக்க கமல் பத்து வேடங்களில் தசாவதாரமும் நடிப்பதாக பேசப்பட்டது!! ஆனால் மஜாவில் விக்ரமிற்கு காமடியும், வணிக ரீதியில் மஜாவும் விக்ரமிற்கு கைகொடுக்கவில்லை!

அந்நியன் கொடுத்த வெற்றியும், புது மற்றும் பிரபலமில்லாத இயக்குனர்கள் கொடுத்த தோல்விகளுமோ என்னவோ விக்ரமை தனது திரைப்பட தெரிவுகளில் புதிய முடிவுகளை எடுக்க தூண்டியது; அந்த முடிவுகள்தான் விக்ரமின் திரைப்பயணத்தில் தொய்வையும், வீழ்ச்சியையும் ஏற்ப்படுத்தியது என்றால் மிகையல்ல. பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடிப்பது மற்றும் பிரபலமான இயக்குனர்களிடம்தான் நடிப்பது போன்றவைதான் அந்நியனுக்கு பின்னர் விக்ரமின் திரைப்படங்களை தெரிவு செய்வதில் எடுத்த தவறான முடிவுகளோ என்று என்ன தோன்றுகின்றது!! 2005 மஜாவிற்கு பின்னர் 2011 இல் தெய்வத்திருமகள் வெளிவரும்வரை ஆறு வருடங்களில் விக்ரம் நடித்தவை வெறும் மூன்று திரைப்படங்கள்தான். பீமா, கந்தசாமி, ராவணன் திரைப்படங்கள்தான் அந்த மூன்று திரைப்படங்களும்; இம் மூன்று திரைப்படங்களும் மிகப்பெரும் பொருட் செலவிலும், அதிக கால அவகாசங்களிலும் எடுக்கப்பட்டாலும் மூன்று திரைப்படங்களாலும் வணிகரீதியில் வெற்றியை பெறமுடியவில்லை!!

அதேநேரம் இந்த மூன்று திரைப்படங்களுக்கும் விக்ரம் கொடுத்த உடல் உழைப்பு அபரிமிதமானது; ஆனால் அவை விழலுக்கு இறைத்த நீராகியது என்பதுதான் உண்மை. பீமா திரைப்படத்தில் காட்சியமைப்புக்களை லிங்குசாமி சிறப்பாக கையாண்டிருந்தாலும் திரைக்கதையில்த்தான் சில தவறுகள்; ஆனாலும் தனிப்பட முறையில் எனக்கு பீமா இன்றும் மிகவும் பிடித்த திரைப்படம்!! கந்தசாமி திரைப்படம் மிகப்பெரும் பட்ஜெட்டில் அதிக காலத்தையும் இழுத்தடித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவிட்டு மிகவும் ஏமாற்றத்தை கொடுத்த திரைப்படம்; சிறிய பட்ஜெட்டில் திருட்டுப்பயலேயை கொடுத்த சுசிகநேஷனால் மிகப்பெரும் பட்ஜெட்டில் கந்தசாமியை காப்பாற்ற முடியவில்லை. அடுத்து மணிரத்தினம் இயக்கத்தில் ராவணன் திரைப்படத்தின் தோல்வி விக்கிரம மீதான எதிர்பார்ப்புக்களை குறைக்க தொடங்கின; அதற்க்கு காரணம் விக்ரம் ஒவ்வொரு திரைப்படத்திற்கு எடுத்துக்கொள்ளும் காலமும், இறுதியில் அவற்றிற்கு கிடைக்கும் எதிர்மறையான முடிவுகளும்தான்!!

இந்நிலையில்தான் என்ன நினைத்தாரோ விக்ரம் தன் திரைப்படங்களின் பட்ஜெட்டை சக நடிகர்களது திரைப்படங்களின் செலவுக்கு இணையாக குறைத்துக்கொண்டார்; ஆனாலும் இன்னும் பிரபல இயக்குனர்களைதான் நம்பிவருகின்றார், இன்றைய தேதியில் விக்ரம் மட்டுமல்ல அனைத்து முன்னணி நடிகர்களும் இதற்கு விதிவிலக்கல்ல!! நீண்ட காலங்களுக்கு இழுத்தடிக்கப்பட்ட திரைப்படங்கள் கொடுத்த தோல்வியை குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்ட தெய்வத்திருமகள் ஈடு செய்தது!! ஐ ஆம் சாம் திரைப்படத்தின் தழுவல் என பலரும் கூப்பாடு போட்டாலும் ஐ ஆம் சாம் என்றால் ஐ ஆம் சாரி என சொல்லும் பெரும்பான்மை மக்களால் இயக்குனர் விஜய் இயக்கிய தெய்வதிருமகள் ரசிக்கப்பட்டது!! வணிகரீதியிலும், விக்ரமிற்கு நடிப்பிலும் நல்லபெயரை பெற்றுக்கொடுத்தது. ஆனால் அடுத்துவந்த ராஜபாட்டை திரைப்படம் விக்ரமின் திரைவரலாற்றின் மிக மோசமான திரைப்படமாக அமைந்தது, பிரபல இயக்குனரை கண்ணைமூடிக்கொண்டு நம்பியதன் பலன்.


2005 ஆம் ஆண்டில் அந்நியனின் மிகப்பெரும் வெற்றிக்கு பின்னர் இந்த ஏழு ஆண்டுகளில் அதிக திரைப்படங்களில் நடிக்காவிட்டால்கூட தெய்வதிருமகள் தவிர்த்து வேறந்த திரைப்படமும் வணிகரீதியாக விக்ரமிற்கு வெற்றிபெறவில்லை; தெய்வத்திருமகள்கூட முதலுக்கு சற்று அதிகமாக வசூலித்ததே அன்றி சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியல்ல!! இந்த நிலையில் மிகவும் கடினாமாக உழைத்து தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் தக்கவைத்த நடிகர் விக்ரமிற்கு இப்போது தேவை ஒரு மிகப்பெரிய கமர்சியல் பிரேக்; அந்த பிரேக்கை தாண்டவம் பெற்றுக்கொடுத்தால் அடுத்த ஷங்கரின் 'ஐ' திரைப்படம் அதனை தக்கவைக்கும் என்கின்ற நம்பிக்கை உண்டு!! விக்ரம் come Back ஆவதற்கு தாண்டவத்தின் வெற்றி மிகமிக அவசியம். ஆட்டையை போட்டாலும் திரைப்படத்தை ஜனரஞ்சகமாக கொடுப்பதில் இயக்குனர் விஜய் கில்லாடி, எப்படி தாண்டவத்தை கொடுத்திருகின்றார் என்பதித்தான் விக்ரமின் மறுபிரவேசம் தங்கியுள்ளது!!

அதே நேரம் விக்ரம் இனிமேல் பெரிய இயக்குனர், பெரிய பட்ஜெட் என்று பார்க்காமல் நல்ல ஸ்கிரிப்ட், நல்ல ரோல் உள்ள திரைப்படங்களை எந்த இயக்குனராக இருப்பினும் தேடித், தேர்ந்து நடிப்பது அவசியம்!! ஏழு ஆண்டுகளில் விக்ரம் மிகப்பெரும் வெற்றிகள் எதையும் கொடுக்காவிட்டாலும் இன்றுவரை விக்ரம் திரைப்படங்களுக்கு கிடைக்கும் ஓப்பினிங் ஆச்சரியமானது!! வெற்றித் திரைப்படங்களை கொடுக்கும் சக நடிகர்களுக்கு சற்றும் குறைவில்லாத முதல்வார வசூல்கள் அவை; விக்ரமின் இன்றைய தேவை கிடைக்கும் ஓப்பினிங்கை வெற்றியாக மாற்றும் சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதுதான். விக்ரம் என்னு அற்புதமான கலைஞன் இல்லாமல் போவதில் எனக்கு சம்மதமில்லை; சிறந்த இயக்குனர்கள், ஸ்கிரிப்டுகள் வந்துகொண்டிருக்கும் இன்றையதேதியில் விக்ரம் அவற்றை சரியாக தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் சீயானால் தமிழ் சினிமா இன்னும் தலை நிமிரும்!!

குறிப்பு:- தனிப்பட்ட முறையில் சொல்வதானால் விக்ரம் டிவி ஷோக்களில் சிறுபிள்ளைபோல பழகிக்கொள்வதையும், ப்ரோமொஷங்களில் ஓவராக பில்டப் + பீட்டர் + பீலா விடுவதையும் குறைத்துக்கொண்டால் நல்லது:-)) ரெம்ப ஓவரா இருக்கு :p

தெரியாதவர்களுக்கு இன்னுமொரு எக்ஸ்ட்ரா தகவல் -: நடிகர் பிரஷாந்தின் தந்தையும் நடிகர் விக்ரமின் தாயாரும் உடன்பிறந்தவர்கள்!!

முன்னைய பதிவுகள் 


Friday, September 21, 2012

ஒரு கூமுட்டையின் நீதிமன்ற அரைநாள் அனுபவம்!!




ஹிஸ்றீரியா என்னும் ஒரு நாட்டில் கூமுட்டை  என்கின்ற ஒரு சாதாரண பிரஜை போக்குவரத்து பொலிசாரால் வாகனத்தின் சமிக்ஞை விளக்கு வேலை செய்யவில்லை என்கின்ற காரணத்திற்காகவும், குறிப்பிட்ட தவணையில் போலீசில் கொடுத்த சாரதி அனுமதிப்பத்திரத்தை மீளப்பெறப்படவில்லை என்கின்ற காரணத்திறக்காகவும் நீதிமன்றத்திற்கு  அழைக்கப்பட்டிருந்தான்!!  ஆம் அலைக்கழிக்கப் பட்டிருந்தான்!!  காலை எட்டு மணிக்கு பொலிசாரால் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டிருந்த அவனுக்கு 2.30  கடந்துதான் வழக்கு முடிந்தது!! முதல் முறையாக நீதிமன்றம் சென்ற கூமுட்டைக்கு பல சந்தேகங்கள் மனதில் பிறந்தன!! அந்த சந்தேகங்களை கூமுட்டை  விடயம் தெரிந்தவர்களிடம் அறிந்துகொள்ள முயற்சித்து தன் சந்தேகங்களை கேட்க ஆரம்பிக்கின்றான்!!

காலை எட்டு மணிக்கு நீதிமன்று வந்தவனுக்கு முதல் அதிர்ச்சி காத்திருந்தது; ஆம் நீதிமன்றிற்கு 'காலர்' இல்லாத மேற்சட்டை அணியக்கூடாது என்பதுதான் அது!! வாயிற்காவலனால் மேற்சட்டையை மாற்றிவிட்டு வரும்படி திரும்ப அனுப்பிவைக்கப்படுகின்றான்!!  அடிப்படை சட்டங்கள் எதனையும் பாடப்புத்தகங்களும், பாடசாலைகளும் போதிக்காதவிடத்து முன்னனுபவம் இல்லாத ஒருவனுக்கு இந்த சட்டம் எப்படி தெரிந்திருக்க வாய்ப்புள்ளது என்பதை சட்ட வல்லுனர்கள்தான் சொல்லவேண்டும்!!!  அவன் அருகில் தெரிந்தவர்கள்  வீடு இருந்ததால் அங்கு சென்று வேறொரு சட்டையை மாற்றிவிட்டு வந்தான்; அதுவே  அங்கு யாரையும் தெரியாமல் பலமைல் கடந்து வந்திருந்தால் அவன் நிலைதான் என்ன? புதுச்சட்டை வாங்குவதா?!!!   அடுத்து உள்ளே சென்றவனை வழிமறித்த வாயிற்காவலர் டீஷெட்டை  காற்சட்டைக்குள் உள்ளே விடும்படி உத்தரவிட்டார், சட்டமாம்!! அப்படியானால் லுங்கி, வேஷ்டி கட்டுபவர்கள் மட்டும் வெளியில் விடலாமா?

இப்படியாக ஒருவழியாக உள்ளே நுழைந்தவனுக்கு காலை 9.15 மணிக்கு மன்று ஆரம்பிக்கப்படும் என்று உள்ளிருந்த காவலர்களால் தகவல் கொடுக்கப்பட்டது!!  25 நிமிடங்கள் தாமதமாக நீதிபதி உள்ளேவர மன்று ஆரம்பிக்கப்பட்டது!!  "ஒருநாள்தானே தாமதம் பணத்தை கட்டிவிடுகிறேன் சாரதி அனுமதி பத்திரத்தை கொடுத்துவிடுங்கள்" என கூமுட்டை கேட்டதற்கு போலீசார் "ஒருநாளோ, பாதிநாளோ தாமதம் தாமதம்தான்" என கூறியது நினைவுக்குவர சிரிப்பும் கடுப்பும் வந்து தொலைத்தது!!  நீதி கொடுப்பவர்கள்  தாமதிக்கலாம் என்று சட்டத்தில் இருக்கின்றதோ என்னமோ!! வழக்குகள் ஆரம்பிக்கப்பட்டன; கிரைம் விசாரணைகள், காணாமல் போனவர்கள் சாட்சியம், விவாகரத்து பெற்றவர்களின் பணக் கொடுக்கல் வாங்கல்கள், நகரசபை மற்றும் பிரதேச சபையின் குத்தகை வழக்குகள், சுகாதார கட்டுப்பாட்டு சபையின் வழக்குகள், வயது குறைந்தவருக்கான புகையிலை விற்பனை வழக்கு, போக்குவரத்து பிரிவு வழக்கு என அனைத்தும் கலந்து விசாரணைகள் இடம்பெற ஆரம்பித்தன!!

பார்வையாளர் பகுதியில் வழக்காளிகளும், பார்வையாளர்களும் உட்கார்ந்திருக்க அங்கிருந்த இரண்டு போலிஸ் காவலர்கள்  வாங்கிலில்(உட்காரும் நீண்ட கதிரை) நிமிர்ந்து உட்க்காரும்படியும், கைகளை கட்டியோ, முன்னால் இருக்கும் கதிரையில் பிடித்துக்கொண்டோ இருக்ககூடாது என்றும், கைகள் கீழே இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்; அப்பப்போ மறந்து கைகளை கட்டுபவர்கள் மீண்டும் மீண்டும் கைகளை கீழே விடும்படி பணிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்; அந்த நேரத்தில் நீதிபதி அவர்கள் சாட்சிகளின் விசாரணையை சாயமனை கதிரையில் பக்கவாட்டில் சாய்ந்திருந்து அவதானித்துக்கொண்டிருந்தார்!! இது முரண்பாடா இல்லை பாகுபாடா அல்லது சட்டம் கொடுக்கும் சலுகையா அல்லது அடக்குமுறையா என்னவென்று தெரியாது மனம் அலைபாய்ந்தது. ஒரு மனிதனால் முள்ளந்தண்டை நிமிர்த்தி, முழங்கை மூட்டை மடிக்காமல் மணிக்கணக்கில் இருக்கசொல்லி சட்டம் சொல்கின்றதா? ஆமென்றால் அது மருத்துவரீதியில் எல்லோர்க்கும் சாத்தியமா? 


அங்கிருந்த குற்றவாளிகளில் பாதிக்குமேல் போக்குவரத்து குற்றங்களும், ஜீவனாம்சம் பெறவந்த பிரிந்த ஜோடிக்களும்தான்; அதிகம்பேர் தம்மை 'குற்றவாளிகள்' என ஒப்புக்கொண்டு நாட்டுக்கும், கோட்டுக்கும் தண்டப்பணத்தை இலட்சக்கணக்காக தினம்தினம்  அள்ளியள்ளிக் கொடுக்கும் போக்குவரத்துப் பிரிவுக்கு நிச்சயம் தனியாக ஒரு மன்றம் அவசியம் என்பதை ஏன் நீதிமன்றம்  புரிந்துகொள்ளவில்லையோ என்கின்ற சந்தேகம் கூமுட்டைக்கு மட்டுமல்ல அங்கிருந்த பலருக்கும் இருந்தது!!  குற்றவாளிகளை அழைத்துவரும் 'மேன்மைமிகு' போக்குவரத்துபிரிவு பொலிசாருக்குகூட  தினமும் முழுநாள்  காத்திருப்பும், அலைச்சலும், வீண் நேரவிரயமும் என்பதைகூட மன்றம் புரிந்துகொள்ளவில்லை போலும்! இடப்பற்றாக்குறை (இப்போது அதை சொல்ல முடியாது), நீதிபதிகள் பற்றாக்குறை போன்ற ஒப்புச் சாட்டுக்களை தவிர உருப்படியான பதிகள் எதுவும் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை இல்லை!! 

பொலிசாரால் காலை எட்டு முப்பதுக்கு அழைத்துவரப்பட்டிருந்த கூமுட்டைக்கு மதிய உணவு இடைவேளையில் சிலருடன் பேசவும் சந்தர்ப்பம் கிடைத்தது!! அவர்களில் முக்கியமானவர்கள் ஜீவனாம்சமாக மாதாமாதம் குறிப்பிட்ட பணத்தொகையை மன்றத்திற்கு செலுத்தும் ஆண்களில் ஒருவர்; பருமனான தோற்றம்  உடல் உழைப்பால் ஜீவனாம்சம் செலுத்துபவர் அவர்; 16 வருடங்களுக்கு மேலாக பணம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்!  இதில் என்ன கொடுமை என்றால் அவர் மாதமாதம் இதற்கென கிட்டத்தட்ட முழுநாளை செலவழித்து நீதிமன்றம் வரவேண்டி உள்ளது!! இப்படியானவர்களது எண்ணிக்கை அதிகம், இவர்களுக்கு தனியான பிரிவில் அல்லது போலிஸ் பிரிவில் வைத்து பணத்தை பெற்றுக் கொடுத்தால் எவ்வளவு நேரம்/அலைச்சல்  மிச்சமாகும்?

அத்துடன் இவர்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் வறியவர்கள்; குடும்பத்துடன்  சேர்ந்து குடும்பம் நடத்தும்போது தினமும் வரும் பணத்தை கொண்டுதான் குடும்பத்தை ஓட்டுவார்கள்; அதனால் மாதம் போகும் செலவு பெரிதாக தோற்றாது!! ஆனால் மொத்தமாக ஒரு முழுத் தொகையை ஜீவனாம்சமாக மாதாமாதம் கொடுப்பதென்பது இவர்களுக்கு மிகுந்த சிரமமானது!! அதேநேரம் இந்த பணமில்லாமல் பிள்ளைகளை வளர்ப்பதென்பது மனைவிகளுக்கும் மிகவும் சிரமமானது என்பதையும் சற்றும் மறுப்பதற்கில்லை; அந்த இடத்தித்தான் விவாகரத்து நடைமுறை ரீதியில் எவ்வளவு  அலைச்சலையும் விரக்தியையும் கொடுக்கும் என்பதை புரிந்துகொள்ள முடியும்!!  உடல்நிலை சரியில்லாவிட்டால் கூட பணத்தை கொடுக்கவேண்டும் என்னும் நிலையில் பல அன்றாடம் காய்ச்சி ஆண்கள் மிகவும் சிரமப்படுவதுவும் உண்மை!! ஆணுக்கு சமனான  பெண் விடுதலை பற்றி பேசும் புதுமைப் பெண்களின் ஜீவனாம்சம் பற்றிய நிலைப்பாடுதான் என்ன? என்பதையும் அறியும் ஆவலும் அங்கே தோன்றியது!

அடுத்து கூமுட்டை வியந்த மற்றொரு விடயம் வக்கீல்கள் மன்றுக்குள்  வரும்போதும், வெளியே போகும்போதும் நீதிபதியை நோக்கி கூளக்கும்பிடு போடுவதுதான்!! ஒருநாளைக்கு ஒருதடவை விஷ் பண்ணினால் போதாதா? என்றோ எவரோ கொண்டுவந்த அடிமைத்தனம் போன்ற செயற்கையான மரியாதை கொடுக்கும் சட்டத்தை 2012 இலும் மறுபரீசலனை செய்யாமல் ஒருநாளைக்கு 50 தடவை கூளக்கும்பிடு பூத்தல் கொலஸ்ரோலை குறைக்க நல்ல உடற்ப்பயிர்ச்சியாக நல்லவிடயமன்றி  சாதாரண மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்ட  தேவையற்ற செயற்பாடோ என்கின்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றது!! தான் படித்த விடயங்களை சரியானமுறையில் தீர்ப்பாக வெளிப்படுத்தவேண்டிய பொறுப்பில் உள்ள  நீதிபதியும் மனிதர்தானே!! மனித உயர்களை பாதுகாக்கும், இவர்களைவிட அதிகமான கல்விச்சுமையை தன் மேல் ஏற்றிக்கொண்ட வைத்தியருக்குகூட இப்படியான கூளக்கும்பிடுக்கள் விழுவதில்லை; அடிமைத்தனம் நீதிமன்றில் இருந்தே ஆரம்பிப்பது வேதனை!!


வாய்தா!!!!!  குற்றவாளி என ஒப்புக்கொண்டால்  தண்டப்பணம்/சிறைத்தடனை; மற்றையபடி வாய்தா வாய்தா வாய்தா....  20 லட்சம் பெறுமதியான நகை களவுசெய்த திருடனை சாட்சிகளோடு பிடித்துக்கொடுத்தும் குற்றம் நிரூபிக்கப்படாமல் வாய்தா கொடுத்து கொடுத்து  வழக்கை மாதக்கணக்கில் இழுத்தடித்தமையால்  தாமாகவே வழக்கிலிருந்து விலக்கிக்கொண்ட குடும்பமும் நிஜத்தில் உண்டு!!  வழக்குகள்  மாதக்கணக்கில், வருடக்கணக்கில் நிலுவையில் தேம்புவதாலும், வாய்தாக்களாலும்தான் மக்கள் நீதிமன்றை நாடவே பயப்படுகின்றார்கள்!! சமரசத்தில் பிரச்சனைகளை முடித்து நீதி பெறாமலே  பெரும்பாலான வழக்குகள் முடிக்கப்படுகின்றன! வக்கீல்கள் தமது கட்சிக்காரருடன் வெளியில் பேசும் பேச்சுக்கள் கொடுக்கும் நம்பிக்கையை பெரும்பாலும் வாய்தாக்கள் தகர்த்துவிடுகின்றன!! வக்கீலுக்கு கட்சிக்காரர் மூலம் ஒவ்வொரு அமர்வுக்கும் கட்டணம் கிடைக்கின்றது, ஆனால் கட்சிக்காரருக்கு?

வக்கீல்களும் சும்மா அல்ல!!  இரு தரப்பிலும் முதல் நான்கு, ஐந்து  வாய்தாக்களுக்கும் வழக்காட கட்டணம் வாங்கிவிட்டு இறுதியில் இரண்டு கட்சிக்காரர்  பக்கத்து வக்கீல்களும் இரு கட்சிக்காரரையும் சமாதானப்படுத்தி  அனுப்புவது மிகப்பெருமளவான வழக்குகளில் இடம்பெறும் சம்பவம்!!  நேரவிரயம், பணவிரயம், மன உளைச்சல் போன்றவைதான் நீதிமன்றங்களில் நீதியைவிட அதிகமாக கிடைக்கின்றன!!! அதைவிட கொடுமையானது வக்கீல்களின் ஆங்கில மொழியிலான  வாதாட்டம்!! வராத இங்கிலீசை வா வா என்று அவர்கள் செய்யும் அலப்பறை பார்க்கவே சகிக்கமுடியாத ஒன்று!!  குறித்த மொழிப்பிரதேசத்தில் வேற்றுமொழி போலீஸ்காரன் தன் மொழியில் குற்றத்தை பதிவுசெய்து கொள்ளும்போது; தனது பிரதேசத்தில், தனது கட்சிக்காரருக்கு முன்னால், தன்மொழி பேசும் நீதிபதி முன்னிலையில் எதற்கு வலிந்த ஆங்கிலம் பேசவேண்டும்?

அடுத்து முக்கியமான விடயம் சுகாதாரம்!!! சாதாரண இடங்களில் இருக்கும் உணவகங்களுக்கு சுகாதார உத்தியோகஸ்தர்கள் விதிக்கும் சுகாதார அழுத்தங்களும் தண்டனைகளும்  நீதிமன்றத்தில் உள்ள தேனீர் விடுதிக்கு  பொருந்தாதா?  உணவுகளை கைகளால் எடுத்துக்கொடுக்கும் பழக்கம் தண்டனைக்குரியதாக இருக்கும் பட்சத்திலும் அவை நீதிமன்றில்  நடைமுறைப்படுத்தப்படுவதில்லை!! அடுத்து மலசலகூடம் தேநீர் விடுதிக்கு 10 அடி தூரத்தில் உள்ளது!!! அங்கு நிலமட்டத்தில் இருந்து 5cm அளவு உயரத்திற்கு நீர் தேங்கியுள்ளது; நீளக்காற்சட்டையை மதித்துத்தான் உட்செள்ளவேண்டும்; பொது இடங்களில் உள்ளவைபோல  கதவு தாழ்ப்பாளும் அவுட்!!! அடிப்படை சுகாதாரமே நீதிமன்றில் காற்றில் பறக்கின்றது வேதனை!!!

இங்குதான் இப்படியென்றால் விளக்கமறியல்களின்  கொடுமையை கேட்கவே வேண்டாம்!! போலிஸ் ஸ்டேசனிலும், நீதிமன்றிலும்  இருக்கும் 10 க்கு 10 அறையில் 15 பேரை ஒன்றாக பூட்டிவைப்பது என்பது மிகவும் கொடுமையானது!! அதிலும் போலிஸ் ஸ்டேஷன்களில் மலசலம்  கழிப்பதும் அதே அறையில்த்தான், அனைவர் முன்னிலையில்!!  சந்தேக நபர்களை, குற்றம் நிரூபிக்கப்படாதவர்களை எப்படி இப்படியான ஒரு மனவுளைச்சலுக்கும், மனநோய்க்கும் ஆளாக்ககூடிய  சூழலில் அடைத்து  அடிப்படை சுகாதாரம்/மனித உரிமைகளை மீறவேண்டும்!!  ஏன் அவர்களை மிருகங்களைப்போல நடத்த வேண்டும்!!  நாளை அவன் சுற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவன் அனுபவித்த நரகவேதனைக்கு சட்டமோ, அரசோ என்ன பதில் சொல்லப்போகின்றது?  எந்த குற்றமும் செய்யாதவன் மனநிலையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை!!   தண்டனைகள் வழங்கப்படும்வரை  இப்படியான கைதிகளுக்கு அடிப்படை சுகாதாரம், காற்றோட்டம், தூய்மையான உறைவிடம் அவசியமானதா? இல்லையா? கைதிகளும் மனிதர்கள்தானே!!


மனிதமனம் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டது, இந்த விடயத்தால் மனதின் வலிமையை இழக்கும், மன உளைச்சலுக்கு உள்ளாகும்  ஒருவருக்கு என்ன நஷ்டஈடு கொடுத்தாலும் ஈடுசெய்யமுடியாது!!  இங்கே இப்படியென்றால் சிறைச்சாலைகளில் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை!! குற்றம் செய்பவனை தண்டிக்க மட்டுமா சட்டம்? அவனை நல்வழிப்படுத்துவது, மறுசீரமைப்பது சட்டத்தின் வேலை இல்லையா? அடிப்படை  மனிதவசதிகள், சுகாதாரம் இல்லாத ஒரு தண்டனையை கொடுக்கச் சொல்லியா சட்டம் சொல்கின்றது? அல்லது  சட்டம் இவற்றை ஒரு பொருட்டாக  எடுத்துக்கொள்ளவில்லையா? 

அடுத்த மிகப்பெரும் சந்தேகம் என்னவென்றால் நீதிமன்றங்கள் நீதிகளை கொடுக்கவா? அல்லது வக்கீல்களின் திறமையான வாதத்திற்கு அங்கீகாரம் கொடுக்கவா?  எந்த வழக்காக இருந்தாலும் இவர் இலகுவாக வெளியே எடுத்துவிடுவதாக ஓரிரு வக்கீல்களின் பெயரை  சொல்கின்றார்கள்; அப்படியானால் சட்டம் சார்ந்திருப்பது எதனில்? மருத்துவம் ஒருவரின் உயிர் சம்பந்தப்பட்டதென்றால்  சட்டம் வாழ்க்கை சம்பந்தப்பட்டது; தவறான ஒருவருக்கு பணத்திற்காக வக்கீல்கள் தம் திறமையை காட்டும்போது  எப்படி நீதி தழைக்கும், சமூகம் சிறக்கும்? கொள்ளைக்காரரும், கொலைகாரரும், ரௌடிகளும், லஞ்சப்பேர்வழிகள்  தாம் மாட்டினாலும் தப்பித்துக் கொள்ளலாம் என்கின்ற நம்பிக்கையில் தவறு செய்வதற்கு தூண்டும்  மறைமுகமான மூலகாரணிகளே  திறமையான வக்கீல்கள்தான் என்பதை மறுக்க முடியுமா?

அரச மருத்துவமனை, தபால் நிலையம், கச்சேரி, வங்கிகள் எப்படி அசட்டையீனமாக  இயங்குகின்றனவோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் இயங்குகின்றன நீதிமன்றங்கள்!! ஒரு முக்கியமான தேவையின் நிமித்தம் ஒரு கேள்வியை கேட்டு அங்கிருக்கும் ஊழியரிடமிருந்து பதிலை பெறுவதென்பது கல்லில் நார் உரிப்பதை போன்றது; காரணம் அவர் ஒரு அரச ஊழியர்!!!  இவர்களுக்கு எங்கிருந்து இந்த ஆணவமும், அசட்டையீனமும் பிறக்கின்றனவோ தெரியவில்லை!!   இங்கு வேலைசெய்யும் ஊழியர்களை (போலீசார் உட்பட) பார்க்கும்போது தனியார் வங்கி, தனியார் மருத்துவமனை போன்று நீதிமன்றங்களையும் தனியார் மயப்படுத்தினால்  பரவாயில்லையோ என  கேவலமாக எண்ணத் தோன்றுகின்றது!!

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது தனி மனிதர்களிடமும், சமூகத்திடமும் தங்கியுள்ளது எவ்வளவு  உண்மையோ; அதேயளவிற்கு அரசிலும், அரசுசார்ந்த நிர்வாகங்களிலும்  தங்கியுள்ளது!!! அரச திணைக்களகங்கள், நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் சரியாக, சற்று வேகமாக இயங்க தொடங்கினாலே மாற்றம் அசுரவேகத்தில் இடம்பெறும்!! ஆனால் இங்கு இவை  இருக்கும் நிலைகளை பார்க்கும்போது 3000 ஆம் ஆண்டிலும் சாத்தியமாகுமா என்று தோன்றவில்லை!!


குறிப்பு -: நீதிமன்றில் கூமுட்டை பார்த்த ஒரே நல்ல விடயம்;  உடல்வளர்ச்சி அடைந்த 18 வயது நிரம்பாத ஒரு சிறுவனை திட்டமிட்டு அனுப்பி ஒரு கடையில் சிகரெட் வாங்குவித்து குறிப்பிட்ட கடை உரிமையாளரை மன்றுக்கு அழைத்துவந்த போலிஸ்காரருக்கு விழுந்த டோஸ்தான்; அதிலும் இனிமேல் "டாக்கேட் காட்டணும் என்கிறதுக்காக  இப்படியான சீப்பான வேலைகள் செய்யவேண்டாம்"  என போலீசாரை அதட்டி சொன்னது சற்று ஆறுதல்; ஆனாலும் சட்டம் தன் கடமையை செய்து அந்த நபரிடமிருந்து  1000 ரூபாவை தண்டமாக பெற்று  நாட்டின் வளர்ச்சிக்கு பெருந்துணையாற்றியது :-))

குறை சொல்லவேண்டும் என்பது கூமுட்டையின் நோக்கமல்ல; சிலவிடயங்கள் பார்க்கும்போது சரியாகப்படவில்லை; தனக்கு ஏற்பட்ட விரக்தியை, கோபத்தை, வெறுப்பை; அதற்கான தீர்வை பொதுவில் முன்வைப்பதே அவனின் நோக்கம்!! அரை நாளிலே இவளவு என்றால் தினமும் அங்கு இருப்பவர்களுக்கு  இன்னும் எத்தனையோ அடிப்படை பிரச்சனைகள் தவறென  கண்முன் தெரியும்; அவர்களுக்கும்  இதே உணர்வு வருமா? அப்படி வந்தால்இனிமேலும் அவற்றை  காற்றில் விடாமல் அவர்களுக்கென்று உரிய நேரம்/பதவி வரும்போதே ஏதாவதொரு  ஒரு விடயத்தை ஒருவர் சீர் செய்தாலே மாற்றங்களை கொண்டு வரலாம்!! மாற்றம் ஒன்றுதானே மாறாதது :-))

முக்கிய குறிப்பு -: சட்டவல்லுனர்களே நோட் பண்ணிக்கோங்க; இது கூமுட்டை என்பவன் ஹிஸ்றீரியா என்னும் நாட்டில் தனது அரைநாள் நீதிமன்ற அனுபவத்தை சொல்வதுபோல சித்தரிக்கப்பட்ட கற்பனை பதிவு!!  ஆமா எங்க நாட்டில எப்படி நீதிமன்றங்கள் இயங்குகின்றன?!!!

*...............*

Tuesday, July 24, 2012

நல்லூர் முருகன் கோவிலும், திருவிழாவும், நானும்!!!!




இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்தின் முன்னாள் தலைநகரான நல்லூரின் மத்தியில் அமைந்திருக்கும் முருகன் கோவில்தான் நல்லூர் கந்தசுவாமி கோவில்;யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்று!!! நல்லூர் என்கின்ற சொல் ஒரு பிரதேசத்தை குறிப்பிட்டாலும் பொதுவான பழக்கத்தில் நல்லூர் என்ற சொல் கந்தசுவாமி கோவிலைத்தான் பிரதி பலிக்கின்றது. இலங்கையின் மிகவும் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்றான நல்லூர் ஆலயம்தான் இலங்கையின் மிகப்பெரிய கோவில் என்றும், பணக்கார கோவில் என்றும்கூட சொல்லலாம்!! பொதுவாகவே இலங்கையில் நான்கு முருகன் கோவில்கள் மிகப் பிரபலமானவை; கதிர்காம கந்தன், நல்லூர் கந்தன் (அலங்காரக்கந்தன்), செல்வசந்நிதி முருகன் (அன்னதானக்கந்தன்), மாவிட்டபுர கந்தன்(அபிஷேககந்தன்) ஆகிய நான்கும்தான் முக்கியமான முருகன் கோவில்கள்!!! இவற்றில் நல்லூர் கந்தசுவாமி கோவில் மட்டும்தான் தனி ஒருவருக்கு சொந்தமானது!!

நல்லூர் கந்த சுவாமி கோவிலின் மிகச்சிறந்த பண்பு ஒழுக்கம் மற்றும் சமத்துவம்!!! இன்குள்ளதுபோல நேரந்தவறாமையை வேறெந்த கோவிலிலும் பார்க்க முடியாது!!! அதிகாலை 4.30 மணிக்கு அடிக்கும் நல்லூர் கோவில் மணி யாழ்நகரின் பெரும் பகுதிகளுக்கு அலாரம்; நல்லூர் மணியோசை கேட்டு கண்விழிக்கும் யாழ்ப்பான வாசிகள் ஏராளம்!!! இந்த மணியோசையின் ஒலி என்றுமே நேரம் தவறியதில்லை!!! திருவிழா காலங்களிலும் கொடி ஏற்றம், தேர்(வசந்த மண்டப பூஜை) என்பன சொல்லிவைத்த நேரத்திற்கு தவறி நடந்ததில்லை!!! அடுத்த மிகச்சிறந்த விடயம் பாகுபாடு பார்க்காமை!!! ஆண்களில் எவராக இருந்தாலும் மேற்சட்டையுடன் கோவிலின் உள்ளே செல்ல முடியாது; அவர் அமைச்சரோ, பிரதமராகவோ இருந்தாலும்!!! மேற்சட்டை இல்லாமல் ஆண்களும்; புடவை, சல்வாரில் பெண்களும் கோவிலின் உள்ளே செல்லவேண்டும் என்கின்ற சட்டத்தில் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அந்த சட்டம் யாவர்க்கும் பொதுவானது என்பது வரவேற்க்கத்தக்கது !!!

அடுத்து அர்ச்சனை டிக்கட்டின் விலை; இங்கு பூசகரிடம் பணம் கொடுத்து அர்ச்சனை செய்யமுடியாது!!! அர்ச்சனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் டிக்கட் எடுத்துத்தான் அர்ச்சனை செய்யவேண்டும்; டிக்கட்டின் பெறுமதி 1 ரூபா!!! உங்களுக்கு 1000 ரூபாக்கு அர்ச்சனை செய்யவேண்டும் என்றால் வரிசையில் நின்று 1000 ஒரு ரூபாய் டிக்கட்டுகளை வாங்கித்தான் செய்யமுடியும்; இதுதான் நல்லூருக்கும் ஏனைய கோவில்களுக்குமான மிகப்பெரும் வேறுபாடு!!! இவை தவிர்த்து கோவிலின் தூய்மை எப்போதும் பேணப்படுவதும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய மிக முக்கியமானவிடயம்!!


ஒவ்வொரு வருடமும் ஆடி/ஆவணி மாதங்களில் 25 நாட்கள் திருவிழாவாக நடத்தப்படுகின்றது!!! முதல்நாள் கொடி ஏற்றத்துடன் தொடங்கும் திருவிழா 25 ஆம் நாள் மாலை கொடி இறக்கத்துடன் நிறைவடைந்தாலும் மறுநாள் நிகழும் பூங்காவனத் திருவிழாவுக்கும் மக்கள் கூட்டம் அலைமோதும்!!! யாழ் குடாநாட்டு இந்துக்களில் குறிப்படத்தக்களவு மக்கள் 25 நாட்களும் விரதம் இருப்பவர்கள், பலர் தினத்துக்கு தினம் (கொடியேற்றம், மஞ்சம், கார்த்திகை, தேர், தீர்த்தம்) விரதம் இருப்பவர்கள், கிட்டத்தட்ட 90 % க்கும் அதிகமான இந்துக்கள் மாமிச உணவுகளை இந்த 25 நாட்களுக்கும் உண்ணமாட்டார்கள்!! இவை தவிர்த்து பெரும்பாலான இளைஞர்கள் (முதியவர்கள் கூட) தினமும் கோவிலின் வெளிவீதியை சுற்றி (கிட்டத்தட்ட 500 மீட்டர்கள்) அங்க பிரதட்சணம் செய்வார்கள்!!! முதல் நாட்களில் தலை சுற்றல், வாந்தி போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் பின் நாட்க்களில் சர்வசாதாரணமாக சுற்றி வருவார்கள்; ஒவ்வொரு திருவிழா முடியும்போதும் இவர்களில் அதிகமானவர்கள் 10 kg வரை குறைந்திருப்பார்கள்!!!

ஆரம்ப நாட்களில் அமைதியாக அளவான மக்கள் எண்ணிக்கையில் நடந்துகொண்டிருக்கும் திருவிழா 17,18 ஆம் திருவிழாக்களின் பின்னர் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்!!! மக்கள் கூட்டம் இறுதி நாட்களை நெருங்க நெருங்க அலைமோத தொடங்கும்!!! இறுதிநாளான 25 ஆம் நாள் தீர்த்த திருவிழா நல்லூரின் மிகவும் பிரசித்தமான திருவிழாக்களில் ஒன்று!!! அன்று வரும் காவடிகளின் கண்கொள்ளாக் காட்சியை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது!!! பால்க்காவடி, பறவைக்காவடி, செடில்காவடி, தூக்குக்காவடி என வகைவகையான காவடிகளின் நேர்த்திகள் வியக்கவைக்கும்!!! வயது வேறுபாடின்றி காவடி ஆடுபவர்கள் தங்கள் நேர்த்திகளை நிறைவேற்றிக்கொண்டு இருப்பார்கள்!!! கூட்டம் கூட்டமாக மேளதாளங்களுடன் வரும் நூற்றுக்கணக்கான காவடிகள் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்!!!

இறுதி 10 நாட்களுக்கும் மாலை நேரங்களில் இளசுகளின் படையெடுப்பு அதிகமாக இருக்கும்; முருகனை கும்பிட ஒரு பக்தர்கூட்டம் என்றால்; அலங்கார பதுமைகளான பெண்களை சைட் அடிக்க ஒரு கூட்டமும் அலைமோதும்; இவர்கள் திருவிழா முடிந்த பிற்பாடு நான்கு வீதிகளிலும் மணல்மேல் உட்கார்ந்து கடலை சாப்பிட்டுக்கொண்டே கடலைபோடும் அழகு தனி!! :-)) கோவில் வீதிகளில் ஒழுக்கத்தை பேணுவதற்கு நலன்புரி சங்கம், சாரணர்கள், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையை சேர்ந்தவர்கள் சீருடையில் விறுவிறுப்பாக செயர்ப்படுவதும் அழகாக இருக்கும்!!! காணமால் போன சிறுவர்கள்/பொருட்களை பெற்றோரிடம்/உரியவரிடம் ஒப்படைக்க ஒலிபெருக்கியில் அப்பப்போ ஒலிபரப்புவேறு செய்துகொண்டிருப்பார்கள்!!!


இதனிடையே திருடர்களின் கைவண்ணமும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கும்!!! தங்க நகைகளை கோவிலுக்குள் அணிந்து கொண்டு வராதீர்கள் என வீதிவீதியாக ஒலிபெருக்கியில் அறிவுறுத்தியும் பலரும் அதனை பின்பற்றுவதில்லை; தாலிக்கொடிகள், சங்கிலிகள், நெக்லஸ்கள் என ஒரு 100 பவுணாவது திருடர்களால் வருடா வருடம் தேற்றப்படும்!! இறுதி நாட்களில் கோவிலின் வீதிகளில் கடைகளும் குறிப்பாக ice cream, கச்சான் கடைகள் மக்கள் கூட்டத்தால் மாலை நேரங்களில் அலைமோதும்!!! குடும்பம் குடும்பமாக, உறவினர்களுடன், நண்பர்களுடன் சேர்ந்து ice cream குடிப்பது ஒரு தனி சுகம்!!! விளையாட்டு பொருட்கள் விற்பனை கடை நூற்றுக்கணக்கில் காணப்படும்; ஒவ்வொரு கடைகளுக்கும் முன்னாலும் சிறுவர்கள் தாய் தந்தையரிடம் தமக்கு வேண்டிய பொருட்களை கேட்டு அடம்பிடித்து அழுதுகொண்டிருப்பார்கள்!!!

குழந்தைகளாக இருக்கும்போது தமது பெற்றோரிடம் விளையாட்டு பொருள்கேட்டு அழுதவர்களது குழந்தைகள் இன்று அவர்களிடம் விளையாட்டுப் பொருள் கேட்டு அழுகின்றபோது காலத்தின் வேகத்தையும் அனுபவத்தையும் உணரமுடிகின்றது!!! ஆனாலும் இது ஒரு சுகமான, எண்ணிப்பார்க்கையில் மகிழ்வான அனுபவம் என்பதையும் மறுக்க முடியாது!!! 25 நாட்களும் அனைத்து அன்னதான மடங்களிலும் அன்னதானம் வழங்கப்படும்; அங்கு சபை வைக்கும் இளைஞர்களின் சுறுசுறுப்பும், முண்டியடிக்கும் பக்தர்கள் கூட்டமும் என அந்த இடமே மதிய நேரங்களில் கலகலப்பாக இருக்கும்!!! என்னதான் வீட்டில் பல கறிகளுடன் சமைத்து சாப்பிட்டாலும் கோவில் அன்னதான சாப்பாட்டில் இருக்கும் சுவை தனித்துவமானது என்பதை அதிகமானவர்கள் அனுபவித்திருப்பார்கள்!!!

எனக்கும் நல்லூருக்குமான தொடர்பு எனக்கு 5 வயதாக இருக்கும்போது ஆரம்பித்தது!!! எனக்கு 5 வயதாக இருக்கும்போது வீட்டில் பால்க்காவடி நேர்த்தி வைத்ததனால் அந்த வயதில் இருந்து 20 வயதுவரை பால்க்காவடி எடுத்திருக்கின்றேன்!!! பல வருடங்கள் வேறு இடங்களில் உள்ள கோவில்களில் இருந்து நல்லூரை நோக்கியும், சில வருடங்கள் நல்லூர் கந்த சுவாமி கோவிலில் இருந்தே கோவிலை சுற்றியும் காவடி எடுத்திருக்கின்றேன்!!! அண்ணன்கள்(பெரியம்மா பிள்ளைகள்) அயலவர்கள் என ஒரு 10,15 பேராவது ஒரு குழுவாக செல்வது வழக்கம்!! சிறு வயதில் இருந்து ஆடத்தொடங்கியதால் எனக்கு ஆடுவது சுலபமாகவும், விருப்பமாகவும் இருக்கும் :-)) என் நண்பர்கள் 20 வயதிலும் பால்காவடி எடுப்பதாக கிண்டல் பண்ணத் தொடங்கியதுதான் நான் 20 வயதில் காவடி எடுக்கும் நேர்த்தியை நிறுத்த காரணமாக அமைந்தது!!


20 வயதில் குறைந்தபட்சம் முதுகில் முள்ளுக்குத்தி செடில்காவடியாவது எடுப்பார்கள்; எனக்கு அந்த துணிவில்லை என்பதால் நிறுத்திவிட்டேன்!!! ஆனால் இப்போதும் மேளச்சத்தத்துடன் அடுத்தவர்கள் காவடி ஆடுவதை பார்க்கும்போதெல்லாம் ஆடணும்ன்னு தோணும்!! (ஆடின காலும் பாடின வாயும்..... :P) வெளிநாட்டு இடைவெளி, உறவில் இடைவெளி போன்ற காரணங்களெல்லாம் நீங்கி மீண்டும் அனைவரும் ஒருநாள் ஒருமித்து யாழில் நல்லூர் உற்சவகாலத்தில் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் அந்த திருவிழாவில் மீண்டும் ஒன்றாக சேர்ந்து காவடி எடுப்பது என ஒரு எண்ணம்!!!! (கண்டிப்பாக பால்க்காவடிதான்:p) என்று காவடியை நிறுத்தினேனோ அன்றிலிருந்து எனக்கும் நல்லூர் முருகனுக்குமான இடைவெளி அதிகரிக்க ஆரம்பித்தது; அந்த இடைவெளி இறுதி 6 ஆண்டுகளுக்கு மேலாக திருவிழாக்காலங்களில் கோவிலுக்கு உள்ளே நான் செல்லாத அளவுக்கு அதிகரித்தது ஆச்சரியம்!!!

கடந்த மாதம் நான் கோவிலுக்கு உள்ளே சாதரணமான நாள் ஒன்றில் செல்லும்வரை எனது நல்லூர் முருகனின் நேரடி தரிசனத்தின் இடைவெளி 6 வருடங்களுக்கு மேல்!!! கடந்த ஆண்டுகூட ஒருநாளாவது திருவிழா நாட்க்களில் பூஜை நேரங்களில் கோவிலுக்குள் செல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன்; முழுக்க முழுக்க நேரமிருந்து அது சாத்தியப்படாமல்போக என்னகாரணம் என்று புரியவில்லை!!! அதேநேரம் மாலையில் தினமும் கோவில் வீதியில் நண்பர்களுடன் நேரத்தை பொழுதுபோக்காக போக்கியது குறிப்பிடத்தக்கது!!! 15 நாட்கள் கடந்த பின்னர்தான் கோவில் வீதிகள் களைகட்டும் என்பதால் இம்முறையும் மாலைநேரங்களில் (7 மணிக்கு பின்னர்) 15 நாட்களின் பின்னர் எம்மை சந்திப்பவர்கள் சந்திக்கலாம் :-))) இந்த ஆண்டு நிச்சயம் கோவிலுக்குள்ளே திருவிழா காலத்தில் செல்லவேண்டும்!!!!



என்னை பொறுத்தவரை நல்லூர் திருவிழா என்பது ஒரு கோவில் திருவிழா என்பதையும் தாண்டி ஒரு சிறப்பான மகிழ்வான அனுபவம்!!! மனதில் துன்பங்கள், வேதனைகள், வேண்டுதல்களோடு பக்திப்பரவசத்தில் ஆயிரக்கணக்கான அடியார்கள் திளைக்க; அரோகரா ஓசைகளும், கற்பூர வாசனையும், நாதஸ்வர, தவில் இன்னிசைகளும் மனதை லயிக்கவைக்கும் சூழல் அது!!! இளசுகளுக்கோ பக்தியையும் தாண்டி மனதுக்கு பிடித்த வண்ணமயமான காட்சிகள் :-) கோவிலை அண்டிய சூழல் முழுவதும் விறுவிறுப்பு, பரபரப்பு, ஆச்சாரம் ஆக ஒருவித சுகந்தமான உணர்வு!!! ஆங்காங்கே கோவில்களிலும், கோவிலை அண்டிய வீதிகளும் தண்ணீர்ப்பந்தல்; உறவுகள், நண்பர்கள், என ஒருமித்து ஒன்று சேரும் ஒரு ஒன்றுகூடல் மகிழ்ச்சி; இப்படி நிறையவே சொல்லிக்கொண்டு போகலாம்!!

குறிப்பாக மதுபான சாலைகளுக்கு விடுமுறை கொடுக்கும் இளைஞர்கள்!! இந்த 25 நாட்களில் உடலுக்கு மதுவையும், புகையும் செலுத்துவதில்லை!! {25 நாள் முடிந்து 26 ஆம் நாள் அனைத்து யாழ்நகர மதுபானசாலைகளிலும் நல்லூரில் இருந்ததை விட கூட்டம் அதிகம் என்பது தனிக்கதை :-))} டீ.ஆர் பாணியில் சொல்வதானால் 25 நாட்களுக்கும்; சுற்றிலும் அடியார் படை, தினமும் அன்னதான மடை, வாகன போக்கு வரத்து தடை, வீதிகளின் ஓரங்களில் கடை, நாகரிகமான உடை, அலங்கரிக்கப்பட்ட சடை, தேநீர்க்கடைகளில் சுடசுட வடை, யாராக இருப்பினும் கால் நடை, அசைவத்திற்கும் மதுவுக்கும் விடை!!!


Monday, April 23, 2012

ரஜினியின் 'சிவாஜி'யும், தமிழ் சினிமாவின் சிறந்த ஓப்பினிங்கும்!!!



எச்சரிக்கை - பதிவின் நீளத்தை பார்த்துவிட்டு வாசிக்க தொடங்குங்கள்!

ஓப்பினிங்(Opening) - ஓப்பினிங் என்றால் என்ன? ஒரு திரைப்படம் எந்த நாளில் ரிலீஸ் ஆகின்றதோ, அன்றிலிருந்து முதலாவதாக வரும் ஞாயிற்றுக்கிழமை வரையான வசூல்தான் ஆரம்ப வசூல் அதாவது ஓப்பினிங் வசூல் என்று சொல்லப்படுகின்றது!! திங்கட்கிழமை ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆனாலும், சனிக்கிழமை ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆனாலும் ஞாயிறு வரையான வசூலையே முதல் வார ஓப்பினிங் வசூலாக எடுத்துக் கொள்கின்றனர்; ஆனால் திங்கள், செவ்வாய் கிழமைகளில் திரைப்படங்கள் பொதுவாக ரிலீஸ் ஆவதில்லை. பண்டிகை நாட்கள், விஷேட நாட்களில் மட்டும் சில நேரங்களில் புதன், வியாழன் ஆகிய நாட்க்களில் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன; மிகப்பெரும்பாலான திரைப்படங்கள் வார இறுதிநாளான வெள்ளிக்கிழமை களில்த்தான் வெளியிடப்படுகின்றன, சில தவிர்க்க முடியாத காரணங்களால் சனிக்கிழமைகளிலும் ஒருசில திரைப்படங்கள் வெளியிடப்படும்!!!

அந்த வகையில் பெரும்பாலான திரைப்படங்கள் வெளியிடப்படும் வெள்ளிக்கிழமையை எடுத்துக்கொண்டால்; முதல் மூன்று நாள் வசூல் ஓப்பினிங் வசூலாக கொள்ளப்படும்!! கிட்டத்தட்ட ஒரு திரையரங்கில் 12 - 15 வரையான ஷோக்கள் வார இறுதியில் காண்பிக்கப்படும். ஷோக்களின் எண்ணிக்கை, மக்களின் எண்ணிக்கை, டிக்கட்டின் பெறுமதி, ரிலீஸ் ஆகும் திரையரங்குகளின் எண்ணிக்கை போன்றவற்றை கொண்டே ஒரு திரைப்படத்தின் ஓப்பினிங் கணிக்கப்படுகின்றது!! ஒரு திரைப்படம் 30 திரையரங்குகளில் திரையிடப்பட்டு 360 காட்சிகளில் 90% மக்களின் பார்வையில் பெற்ற வசூலைவிட, 28 திரையரங்குகளில் திரையிட்டு 336 காட்சிகளில் 90% மக்கள் பார்வையில் வேறொரு திரைப்படம் அதிக ஓப்பினிங் வசூலை பெற்றிருக்கலாம்!!! அதற்க்கு காரணம் திரையரங்குகளின் கொள்ளளவு மற்றும் டிக்கட்டின் விலை வித்தியாசங்கள்தான் (மல்டி சென்டர்களில் அதிகம் ரிலீஸ் ஆனால் வசூல் அதிகம்).

ஒரு திரைப்படத்தின் வெற்றியை ஓப்பினிங் இன்றைக்கு எந்தளவிற்கு தீர்மானிக்கின்றது!!! இதை அலசுவதாயின் காலத்தை இரண்டாக பிரிப்பது தவிர்க்க முடியாதது!!! சிவாஜி (SIVAJI 'The Boss') திரைப்படத்திற்கு முன்னர், சிவாஜி திரைப்படத்திற்கு பின்னர் என இரண்டாக பிரித்துப் பார்ப்பது அவசியம்.

சிவாஜிக்கு முன் - ஒரு திரைப்படம் அதன் வெற்றியை தீர்மானிப்பதற்கு குறைந்த பட்சம் 30 நாட்களாவது காத்திருக்கவேண்டும், எத்தனை நாட்கள் அதிகமாக ஓடுகின்றதோ அத்தனை நாட்களை பொறுத்தே வெற்றியின் அளவு கணிக்கப்படும் (ஆளில்லா திரையரங்கில் சுய விளம்பரத்திற்கு ஓட்டப்படுபவை தவிர்த்து). இதற்கு நேர்மாறாக சில திரைப்படங்கள் ஆரம்ப நாட்க்களில் மந்த கதியில் நகர்ந்து தோல்விப்படம் என முத்திரை குத்தப்பட்ட பின்னர்கூட வாய்வழியாக ( Word of Mouth) மற்றும் ஊடகங்களின் விமர்சனங்கள் மூலம் Late pick up ஆகி நாட்கள் போகப்போக கூட்டம் அதிகமாகி வசூலை அள்ளிய வரலாறுகளும் உண்டு; மகேந்திரனின் முள்ளும் மலரும் முதல் மிஸ்கினின் சித்திரம்ம் பேசுதடி வரை பல உதாரணங்கள் ஆங்காங்கே உண்டு!!!


அதேபோல ஆரம்பத்தில் மந்தகதியில் புறப்பட்டு தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்களின் விளம்பர உக்தியால் பின்னர் சிறந்த வசூலை பெற்றுத்தந்த திரைப்படங்களும் உண்டு, உதாரணமாக சொல்வதானால் எஜமான், வேட்டையாடு விளையாடு திரைப்படங்களை சொல்லலாம்!! முதல்வாரம் கடந்து அடுத்தநாள் (திங்கட்கிழமை) மக்கள் கூடம் திரையரங்கிற்கு வந்தால் "அப்பாடா திரைப்படம் தப்பித்து விட்டது" என ஓரளவிற்கு மனதிற்கு ஆறுதலாக இருக்கும், மக்களுக்கு பிடித்துப்போனால் மாத்திரமே வாய்வழியாக சொல்லப்பட்டு இரண்டாம்வாரம் கூட்டம் வரும் என்பது அன்றைய நிலை!!! இப்படியாக மக்களுக்கு பிடித்த திரைப்படங்கள் 175, 200 நாட்கள் என திரையிடப்பட்டது, அதனால் அன்றைய திரைப்படங்களின் வெற்றி 'நாட்களை' வைத்தே கணிக்கப்பட்டது!!! 100 நாள், 175 நாள் (வெள்ளிவிழா) 200 நாள் ஓடிய திரைப்படங்கள் என வெற்றியின் அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்த்தான் 90 களின் இறுதியில் தமிழ் சினிமா ஒரு மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது, அதுதான் திருட்டு VCD!!! அதற்க்கு முன்னரான காலப்பகுதியில் VCR Player கள்தான் பாவனையில் இருந்தன, ஆனால் அவை ஒரு தெருவில் ஒன்றிரண்டு வீடுகளில் மட்டும்தான் இருந்தன; அவற்றுக்கு பயன்படுத்தப்படும் கேசட்டுக்கள் பாவனையும் அதிகளவில் இருக்கவில்லை, காரணம் VCD கள்போல இலகுவில் Copy பண்ண முடியாது, மற்றும் செலவும் ஜாஸ்தி!!! ஆனால் VCD கள் தாரளமாக குறைந்த விலையில், இலகுவாக Copy பண்ணப்பட்டு திருட்டுத்தனமாக விற்க ஆரம்பிக்கப்பட்டன. அவற்றுக்கான Player களும் குறைந்த விலை என்பதால் அதிகமான வீடுகளில் பாவனைக்கு வரத்தொடங்கியது!!!

திரைப்படம் வெளிவரும் அடுத்தடுத்த நாட்களில் திருட்டு VCD க்கள் வெளிவர தொடங்கியதும் மக்கள் திரையரங்கிற்கு செல்வது குறைய ஆரம்பித்தது. 100 ரூபா கொடுத்து ஒருவர் திரையரங்கில் பார்ப்பதைவிட, வீடிலிருந்து 30 ரூபாயில் குடும்பமாக VCD யில் பார்த்தால் பணமும், போக்குவரத்தும் விரயமாகாது என பலரும் எண்ணினர்; இதனால் திரையரங்கிற்கு வரும் மக்கள் தொகை திடீரென வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. முதல் பத்து, பதினைந்து நாட்களுக்கு பின்னர் திரையரங்குகள் காற்று வாங்க ஆரம்பித்தன!! இதனால் தோல்விப்படங்கள் ஆகவேண்டியவை படுதோல்வி ஆயின, வெற்றிப்படங்கள் ஆகவேண்டியவை சராசரி ஆகின, சூப்பர் ஹிட் ஆகவேண்டியவை ஹிட் ஆவதற்கே சிரமப்பட்டன!! தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவரும் லாபம் பார்க்க சிரமப்பட்டனர்!! இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு சிவாஜி திரைப்படத்தின் உரிமையை AVM நிறுவனம் விற்க முடிவு செய்தது........

சென்னை நகருக்கான உரிமையை 'அபிராமி' ராமநாதன் கிட்டத்தட்ட 6.2 கோடிகளுக்கு வாங்கினர்; அதுவரை எந்த திரைப்படமும் சென்னையில் வசூலித்திராத தொகை அது!!! அதுவரை அதிக வசூலை சென்னையில் குவித்திருந்த சந்திரமுகிகூட தொடாத தொகை அது!!! எல்லோருக்குமே ஆச்சரியம், ஆனால் ராமநாதன் பயப்படவில்லை; தான் போட்ட காசை பிடிப்பதற்கு அவர் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார், அதுதான் அதிக திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிடும் திட்டம். சென்னையில் ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் அதிகபட்சம் 10,15 திரையங்குகளில்த்தான் அப்போதெல்லாம் வெளியப்பட்டு வந்தது; ராமநாதன் 'சிவாஜி'யை கிட்டத்தட்ட 30 திரையரங்குகளில் ரிலீஸ் செய்தார், அத்துடன் இணையம் மூலமாகவும், நேரடியாகவும் முன்பதிவுகளை மேற்கொள்ளும் வசதியம் துணையிருக்க முதல் 10 நாட்க்களுக்கான டிக்கட்டுகள் அதிகமாக முற்பதிவு செய்யப்பட்டன!!


சிவாஜி பற்றிய விமர்சனங்கள் Mix Report ஆக வெளிவந்து கொண்டிருக்கும்போதே முதல் நான்கு நாட்களில் ஓப்பினிங் வசூலாக மிகப்பெரும் தொகையான 1 கோடி 34 இலட்சத்தை சிவாஜி வசூலித்து, மூன்றாம் வாரத்தில் போட்ட பணமான 6.2 கோடியை மீட்டெடுத்த 'அபிராமி' ராமநாதன் கிட்டத்தட்ட மொத்தமாக சென்னையில் 12 கோடியை வசூலாக பெற்றார்; இது அவருக்கு இரட்டிப்பு லாபம்!!! சிவாஜி திரைப்படம் வெளியாகிய ஐந்தாவது வார இறுதியில்(வெள்ளி. சனி, ஞாயிறு) பெற்ற வசூல் 48 இலட்சம்; அதே வாரம் வெளியாகிய அஜித்தின் 'கிரீடம்' வார இறுதியில் பெற்ற வசூல் 31 இலட்சம். அஜித்திற்கு கிடைத்த ஓப்பினிங் 98%, அப்படி இருந்தும் வசூலில் 5 ஆவது வாரத்து சிவாஜியை கிரீடம் நெருங்கவில்லை என்றால் என்ன காரணம்? வெளியாகிய திரையரங்குகளின் எண்ணிக்கைதான்; 5 ஆவது வார இறுதியில் சிவாஜி 243 காட்சிகள் ஓடியது, முதல் வார இறுதியில் கிரீடம் வெறும் 189 காட்சிகள்தான்!!!

இது தவிர்த்து அமேரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்து ஐங்கரன் நிறுவனமும் புதிய வர்த்தகப்பாதையை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது!! இப்படியாக தமிழ் சினிமாவின் மாக்கேட்டிங் சிவாஜிக்கு பின்னர் புதிய வடிவில் எழுச்சி பெற ஆரம்பித்தது. ஆனாலும் இந்த மாற்றத்தை ஏனைய திரைப்பட விநியோகிஸ்தர்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்தும் குறைந்த திரையரங்குகளிலேயே திரைப்படங்கள் வெளியிடப்பட்டுவந்தன. சிவாஜிக்கு அடுத்து அதே ஆண்டு மிகப்பெரும் வசூலை குவித்த திரைப்படம் பில்லா; சென்னையில் அதன் ஆரம்ப வசூல் மூன்று நாட்களில் 59 இலட்சம், மொத்தமாக பில்லா சென்னையில் கிட்டத்தட்ட 4.5 கோடிவரை வசூலித்தது; அன்றைய தேதியில் இதுவொரு மிகச்சிறந்த வசூல்!!! ( அதேநேரம் இன்றைய சராசரி படங்களின் வசூலைவிட இது குறைவே!!)

முதல் வார இறுதி வசூலாக விஜயின் 'அழகிய தமிழ்மகன்' நான்கு நாட்களில் 29 இலட்சம், சூர்யாவின் 'வேல்' நான்கு நாட்களில் 28 இலட்சம், தனுஸின் 'பொல்லாதவன்' நான்கு நாட்களில் 27 இலட்சம், விக்ரமின் 'பீமா' நான்கு நாட்களில் 58 இலட்சம், சிம்புவின் 'காளை' நான்கு நாட்களில் 36 இலட்சம், வடிவேலுவின் 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' 3 நாட்க்களில் 40 இலட்சம் என 'தசாவதாரம்' வரும்வரை வேறெந்த திரைப்படமும் அதிக வசூலை ஓப்பினிங்காக பெறவில்லை; ஆனால் இவை அனைத்தையும் முதல் வாரத்தில் 90% க்கு அதிகமான மக்கள் பார்வையிட்டிருந்தனர்; அப்படி இருந்தும் ஓப்பினிங் குறைவாக உள்ளதென்றால்(இன்றோடு ஒப்பிடும்போது) அதற்க்கு முழுக்காரணமும் திரையரங்க எண்ணிக்கைதான்.

'சிவாஜி'க்கு பின்னர் கமலின் 'தசாவதாரம்' திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டு சிறப்பான வசூலை குவித்தது!! சென்னையில் ஓப்பினிங்காக மூன்று நாட்க்களில் 95 இலட்சம் வசூலித்த தசாவதாரம் மொத்தமாக சென்னையில் கிட்டத்தட்ட 11 கோடிகளை வசூலித்தது!!! வெளிநாடுகளிலும் அதிக திரைகளில் வெளியிடப்பட்டு கணிசமான வசூலை பெற்றது!!! தசாவதாரத்தை தொடர்ந்தும் அதிக திரையரங்கில் வெளியாகி அதிக ஓப்பினிங்கை பெற்ற திரைப்படம் 'குசேலன்', மூன்று நாட்களில் 84 இலட்சம்வரை வசூலித்தது. பின்னர் விக்ரமின் 'கந்தசாமி' திரைப்படத்தை பெரிய பட்ஜெட், எதிர்பார்ப்பு போன்ற காரணத்தால் அதிகளவு திரையில் திரையிட்டார்கள், எதிர்பார்த்ததுபோல மூன்று நாட்க்களில் 93 இலட்சம் வசூலாக கிடைத்தது!! அதனை தொடர்ந்து வேட்டைக்காரன் மூன்று நாட்க்களில் 89 இலட்சம், ராவணன் மூன்று நாட்க்களில் 88 இலட்சம் என சராசரியாக ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 30 இலட்சங்களை அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்ட திரைப்படங்கள் பெற்றுக்கொடுத்தன!


இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு மீண்டும் ரஜினியின் 'எந்திரன்' திரைப்படத்தின் சென்னை உரிமையை கிட்டத்தட்ட 10 கோடிகளுக்கு வாங்கிய 'அபிராமி' ராமநாதன் இம்முறை திரையரங்குகளை இன்னமும் அதிகரித்தார்; 45 க்கும் அதிகமான திரையரங்குகளில் சென்னையில் வெளியாகிய எந்திரன் முதல் மூன்று நாட்க்களில் இரண்டு கோடி (202 இலட்சம்) வசூல் செய்தது; மொத்தமாக 17 கோடிகளை சென்னையில் வசூலித்தது!!! எந்திரனை தொடர்ந்து அதிகமான முன்னணி நடிகர்களது திரைப்படங்கள் அதிக திரையரங்குகளில் வெளியாக ஆரம்பித்தது!!! அஜித்தின் மங்காத்தா ஐந்து நாட்களில் 1 கோடி 80 இலட்சம்வரை வசூலித்தது!! மொத்தமாக 8 கோடிகளுக்குமேல் வசூல்!! மங்காத்தா ரஜினி, கமலுக்கு அடுத்து சென்னையில் 8 கோடியை தொட்ட நடிகர் என்கின்ற பெருமையை அஜித்திற்கு பெற்றுக் கொடுத்தது!.

அதன் பின்னர் சென்னையில் சூர்யாவின் 7 ஆம் அறிவு திரைப்படம் ஓப்பினிங்காக ஐந்து நாட்க்களில் 2 கோடி 20 இலட்சத்தையும், விஜயின் வேலாயுதம் ஐந்து நாட்களில் 1 கோடி 95 இலட்சத்தையும் வசூலித்தன. வேலாயுதம் சென்னையில் 8 கோடி கடந்த முதல் விஜய் படமாகவும்; 7 ஆம் அறிவு ரஜினி, கமலுக்கு அடுத்து 9 கோடியை கடந்த நடிகராக சூர்யாவிற்கு பெருமையை தேடிக்கொடுத்தது. அதன் பின்னர் வெளிவந்த விக்ரமின் 'ராஜபாட்டை' மூன்று நாட்க்களில் 96 இலட்சம், விஜயின் 'நண்பன்' நான்கு நாட்க்களில் 1 கோடி 37 இலட்சம், தனுஸின் 'மயக்கம் என்ன' மூன்று நாட்க்களில் 97 இலட்சம், சிம்புவின் 'ஒஸ்தி' நான்கு நாட்களில் 1 கோடி 33 இலட்சம், தனுஸின் '3' மூன்று நாட்க்களில் 1 கோடி 31 இலட்சமும், உதயநிதியின் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' மூன்று நாட்க்களில் 1 கோடி 73 இலட்சத்தையும் வசூலித்திருக்கின்றன!!!

இவை அனைத்தும் இரண்டு வாரங்கள் முடிவதற்குள் குறைந்தபட்சம் சென்னையில் மட்டும் 3 கோடியை தொட்ட திரைப்படங்கள், இவற்றில் படு தோல்விப்படங்களான ராஜபாட்டை, ஒஸ்தி போன்றன சென்னையில் மட்டும் 3 கோடிகள் என்றால் தமிழ் நாடு + தெலுங்கு + வெளிநாடு என முதல் மூன்று நாட்க்களில் 20 கோடிகளையாவது வசூலித்திருக்கும்!!! இந்த திரைப்படங்களின் விநியோகம் 40 கோடிகள் என்றால், கிட்டத்தட்ட அரைவாசிப் பணமாவது மீள பெறப்பட்டிருக்கும்!! இதே திரைப்படங்கள் முன்னர் வெளியாகுவதுபோல குறைந்த திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் 10 கோடிகள் கூட தேறியிருக்காது. பெரிய நடிகர்களது திரைப்படங்கள் இப்பொது அதிக திரையரங்குகளில் வெளியாவதால் எப்படிப்பட்ட மோசமான திரைப்படமாக இருந்தாலும் முன்பதிவு மற்றும் எதிர்பார்ப்பால் முதல் 10 நாட்களுக்குள் (மக்கள் படம் மோசம் என்று புறக்கணிப்பதற்குள்) பாதிப் பணத்தையாவது தேற்றி விடுகின்றார்கள்.

அதே நேரம் திரைப்படம் நன்றாக இருந்தால் மூன்று வாரங்களுக்குள் லாபம் பார்த்துவிடுகின்றார்கள், ஐந்து வாரம் சிறப்பாக ஓடினால் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெறுகின்றது; முன்னர் 200 நாட்கள் ஓடி பெறப்பட்ட வசூலை இப்போது 40 நாட்களுக்குள் பெற்று விடுகின்றார்கள்!! 2007 ஆம் ஆண்டின் Blockbuster Hit ஆன பில்லாவின் முதல் நான்குநாள் வசூலை இன்று 'ஒரு கல் ஒரு கண்ணாடி' கிட்டத்தட்ட ஒரே நாளில் பெறுகின்றதென்றால் இந்த மாற்றம் சிவாஜியால் (அபிராமி ராமநாதனால்) ஏற்ப்படுத்தப்பட்டது!! சிவாஜியை 'கமர்சியல் குப்பை' என்பவர்களுக்கு சிவாஜி தமிழ் சினிமாவின் வர்த்தகத்தில் ஏற்ப்படுத்திய மாற்றம் புரிந்தாலும் புரியாதது போலத்தான் இருப்பார்கள்!!!


இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் சிறந்த ஓப்பினிங் யாருக்கு - ஒரு திரைப்படத்தின் ஓப்பினிங்கில் நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், நடிகர்களால் மட்டும் மிகச்சிறந்த ஒப்பினிங்கை பெற்றுக்கொடுக்க முடியாது. நடிகர்களையும் தாண்டி ஒரு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புத்தான் ஓப்பினிங்கை தீர்மானிக்கின்றது; அந்த எதிர்பார்ப்பு பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு நடிகரும், குறிப்பிட்ட ஒரு இயக்குனரும் சேரும்போதுதான் அதிகமாக ஏற்ப்படுகின்றது, இயக்குனரும் இசையமைப்பாளரும் இணையும்போது கூட எதிர்பார்ப்புக்கள் அதிகரித்த சந்தர்ப்பங்களும் உண்டு!!! இவைதவிர மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள், வெற்றிபெற்ற கூட்டணி போன்றனவும் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ஏனைய காரணிகள்.

திரைப்படத்தின் எதிர்பார்ப்பு தவிர்த்து; திரைப்படம் வெளியாகும் காலப்பகுதி, திரையரங்குகளின் எண்ணிக்கை போன்றவையும் ஒரு திரைப்படத்தின் ஓப்பினிங்கில் முக்கியத்துவம் செலுத்தும் முக்கிய காரணிகள்.


திரைப்படம் வெளியாகும் காலப்பகுதி - பண்டிகை/விசேட தினங்களில் வெளியிடப்படும் திரைப்படங்களுக்கு பெரும்பாலும் போட்டி இருக்கும்! போட்டிக்கு வேறு எதிர்பார்ப்புள்ள திரைப்படங்களும், சில சிறு திரைப்படங்களும் வெளிவரும் சந்தர்ப்பம் உண்டு; அதனால் அதிகமான திரையரங்குகளில் திரையிட முடியாத நிலை தோன்றலாம், இது நிச்சயம் பாதகமான நிலைதான்!!! ஆனால் பண்டிகை/விசேட தினங்களில் அதிகளவான மக்கள் திரையரங்கை நாடிப்போவதும், பண்டிகை காலமாகையால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இலவச விளம்பரங்களாக உதவிசெய்வதும் இந்தக்காலப்பகுதியில் திரைப்படங்களை வெளியிடுவதால் கிடைக்கும் சாதகமான தன்மைகள்.

அத்துடன் இரண்டு பெரிய திரைப்படங்கள் ஒரேநேரத்தில் போட்டிக்கு வெளியாகினால், அவ்விரு திரைப்படங்களில் நடித்த நடிகர்களது ரசிகர்கள் இருபடத்தையும் ஒப்பிடும் நோக்கில் அவ்விரு திரைப்படங்களையும் பெரும்பாலும் பார்வையிடுவார்கள், இதுகூட பண்டிகை காலங்களில் திரைப்படங்களின் ஓப்பினிங்கிற்கு கிடைக்கும் சாதகம்தான். அதே நேரம் பிறிதொருநாளில் தனியாக ஒரு பெரிய திரைப்படம் வெளியிடப்படும்போது மேற்சொன்ன சாதகங்கள் பாதகமாகவும், பாதகங்கள் சாதகமாகவும் அமையும்!!! அனாலும் பலரும் பண்டிகைகாலங்களில் திரைப்படங்களை வெளியிடவே விரும்புகின்றனர்!!! இயக்குனர் ஹரி, சரண் போன்ற கமர்சியல் இயக்குனர்கள் தங்கள் திரைப்படங்களை அதிகமாக பண்டிகை நாட்களில் வெளியிட விரும்புவதே வழக்கம்; காரணம் கமர்சியல் திரைப்படங்கள் Festival mode இல் அதிகமாக மக்களிடம் எடுபடும் என்பதுதான்!!!

திரையரங்குகளின் எண்ணிக்கை - பெரிய திரைப்படங்களை பொறுத்தவரை எவ்வளவுக்கெவ்வளவு அதிக திரையில் வெளியிடுகின்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிக ஒப்பினிங்கை பெறமுடியும், இது தயாரிப்பாளர், வினியோகிஸ்தர் கைகளில்த்தான் உண்டு. படத்தின் எதிர்பார்ப்பை பொறுத்தே திரையரங்கங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டாலும், பண்டிகை காலங்களில் பல திரைப்படங்கள் வருவதால் அதிகமான திரையரங்குகள் கிடைப்பதில்லை; அதிகமான மற்றும் சிறந்த திரையரங்கை பெற்றுக்கொள்ளும் புத்திசாலி விநியோகிஸ்தர் அதிக ஓப்பினிங்கை பெற்றுக்கொள்ளுவார்!!


ரஜினிகாந்த் - சிவாஜி வரும்வரை சந்திரமுகியின் ஓப்பினிங்கை எந்த திரைப்படமும் தாண்டவில்லை, எந்திரன் வரும்வரை சிவாஜியின் ஓப்பினிங்கை எந்த திரைப்படமும் தாண்டவில்லை, எந்திரன் வெளிவந்து 2 ஆண்டுகள் ஆகியும் எந்திரனின் ஓப்பினிங்கை எந்த திரைப்படமும் நெருங்கவில்லை, ரஜினியின் முழுநீளத் திரைப்படமல்லாத குசேலன் திரைப்படத்தின் சென்னை ஓப்பினிங் மூன்று நாட்களில் 84 இலட்சம்; அன்றைய தேதியில் இது சிவாஜி, தசாவதாரம் திரைப்படங்களுக்கு அடுத்து மூன்றாவது மிகப்பெரும் ஓப்பினிங்!! ஒவ்வொரு ரஜினியின் திரைப்படத்திற்கும் உள்ள அதிகபட்ச எதிர்பார்ப்புத்தான் ஓவ்வொரு தடவையும் மிகப்பெரிய ஓப்பினிங் அமைய காரணம். எந்திரனது மிகப்பெரும் ஓப்பினிங்கிற்கு ரஜினி தவிர இயக்குனர் ஷங்கர், ரஜினி & ஷங்கர் கூட்டணி, சண் பிக்சர்ஸின் மாக்கெட்டிங், அதிகளவு திரையரங்குகளில் வெளியிடப்பட்டமை போன்றவையும் முக்கிய காரணிகள்.

கமல் - கிட்டத்தட்ட சிவாஜிக்கு இணையான ஓப்பினிங்கை தசாவதாரம் பெற்றாலும் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்களுடன் வெளியிடப்பட்ட 'மன்மதன் அம்பு' சென்னையில் நான்கு நாட்க்களில் 94 இலட்சங்களை மாத்திரமே வசூலித்தது!!! இரண்டு திரைப்படங்களிலும் கமல்தான் நாயகன், ரவிக்குமார்தான் இயக்குனர், அசினுக்கு பதில் திரிஷா, மாதவன் வேறு நடித்திருந்தார், மற்றும் தசாவதாரத்திற்கு பின்னர் வருவதனால் கூடுதல் எதிர்பார்ப்பு வேறு!! அப்படி இருந்தும் தசாவதாரம் மூன்று நாட்க்களில் பெற்ற வசூலை மன்மதன் அம்பு நான்கு நாட்களில்கூட பெறவில்லை!! அதற்க்குக் காரணம் கமலின் 10 கெட்டப் என்பதால் தசாவதாரத்திற்கு இருந்த மலையளவு எதிர்பார்ப்பு, அந்த எதிர்பார்ப்பு அதன் பின்னரான மற்றைய கமல் படங்களுக்கு அமையவில்லை, விஸ்வரூபத்தில் அமைகிறதா என பார்ப்போம்!!

அஜித் - King of Opining, Gilli Of Kollywood போன்ற சொற்களால் ஆங்கில இலத்திரனியல் ஊடகங்களால் புகழப்படும் நடிகர். மிகக் குறைவான விளம்பரங்களுடன்; தொலைக்காட்சிகளுக்கு பேட்டிகள் கொடுக்காமல்; பெரிய பானர், பெரிய இயக்குனர் என பெரிய கூட்டணி இல்லாமல்; எத்தனை தோல்விகளை தொடர்ந்து கொடுத்தாலும் அடுத்துவரும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ரசிகர்கள் கொடுக்கும் மலையளவு வரவேற்ப்பை வைத்துத்தான் அஜித்திற்கு மேற்சொன்ன பட்டங்கள் அடைமொழியாக கொள்ளப்படுகின்றது!! அஜித்தை பொறுத்தவரை எந்த திரைப்படத்திற்கும் 95 % ஓப்பினிங் ரசிகர்களால் கொடுக்கப்படும்; ஆனாலும் அஜித் திரைப்படங்களில் அஜித்தின் பட்டப் பெயர்களை மெய்ப்பிக்கும் வகையில் அதிகம் ஓப்பினிங் வசூலை கொடுத்த திரைப்படங்கள் 'பில்லா' மற்றும் 'மங்காத்தா' திரைப்படங்கள்தான்; அன்றைய தேதியில் 'பில்லா' சிவாஜிக்கு அடுத்து மிகப்பெரிய ஓப்பினிங், 'மங்காத்தா' எந்திரனுக்கு அடுத்து மிகப்பெரிய ஓப்பினிங் !!!

விக்ரம் - 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக வெற்றித் திரைப்படங்கள் இல்லை, ஆனாலும் விக்ரமின் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் கிடைக்கும் ஓப்பினிங் மிக அதிகம்!! அதற்க்கு காரணம் விக்ரம் மாத்திரமன்னு!! அந்தந்த திரைப்படங்கள் மீதான அளவுக்கதிகமான எதிர்பார்ப்புக்கள்தான் (அதிகமான திரைப்படங்கள் தோற்க்கவும் அவைதான் காரணம்) அதிக ஓப்பினிங் கிடைக்க முக்கிய காரணம். விக்ரம், சுசிகணேசன் கூட்டணியில் மிகப்பெரும் எதிர்பார்ப்போடு வெளிவந்த கந்தசாமி திரைப்படத்தின் ஓப்பினிங் சென்னையில் மூன்று நாட்களில் 93 இலட்சங்கள்; இந்த தொகையை கடக்க அஜித் மங்காத்தாவரையிலும், விஜய் வேலாயுதம் வரையிலும், சூர்யா 7 ஆம் அறிவிவு வரையிலும் காத்திருக்கவேண்டி வந்தது!!! அதேபோல மணிரத்தினம், விக்ரம் கூட்டணியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த ராவணன் சென்னையில் மூன்று நாட்களில் 88 இலட்சங்களை வசூலித்தது!!! தெய்வத்திருமகள், ராஜபாட்டை போன்ற திரைப்படங்களும் மூன்று நாட்க்களில் முறையே 80, 95 இலட்சம்வரை வசூலித்திருந்தது!!



விஜய் - வேலாயுதம் திரைப்படம் வரை மிகப்பெரிய ஓப்பினிங் எதுவும் விஜய்க்கு அமையவில்லை! அதற்க்கு முந்தய திரைப்படங்களில் சண் பிக்சர்ஸின் விளம்பர உதவியுடன் 'வேட்டைக்காரன்' மூன்று நாட்களில் எட்டிய 89 இலட்சங்கள்தான் சென்னையில் விஜயின் அதிகபட்ச ஓப்பினிங். வேலாயுதம் விஜய்க்கு மிகப்பெரிய ஓப்பினிங்கை பெற்றுக் கொடுத்தாலும் அதிக திரையரங்குகளில், அதிக எதிர்பார்ப்போடு வெளியாகிய '7 ஆம் அறிவின்' ஓப்பினிங்கை தாண்டமுடியவில்லை!!! ஷங்கர், விஜய் கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'நண்பன்' திரைப்படம் சிறப்பான ஓப்பினிங்கை பெற்றாலும் முன்னைய வேலாயுதத்தை கடக்கவில்லை!!

அதிகளவில் ரசிகர்கள் இருந்தாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் போட்டி நடிகர்களைவிட குறைவான ஓப்பினிங்கை விஜய் பெற இரண்டு முக்கிய கரணங்கள் 1) பெரிய பானர், பெரிய இயக்குனர், பெரிய பட்ஜெட் என பொதுவான ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை தூண்டும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் எதிலும் விஜய் நடிக்காமையும் 2) அதிகளவிலான விஜய் ரசிகர்கள் பெண்களாகவும், குழந்தைகளாகவும் இருப்பதால் முதல் வாரம் திரையரங்கு செல்வதற்கு சாத்தியகுறைவு உள்ளமையும் முக்கிய காரணங்கள். ஆனாலும் விஜய் ரசிகர்களால் கொடுக்கப்படும் ஓப்பினிங் அண்மைக்காலங்களில் முன்னரைவிட கணிசமான அளவு அதிகரித்து வருகின்றது!! முருகதாஸ், விஜய் இணையும் கமர்சியல் கூட்டணி என்பதால் விஜய் படங்களில் அதிகளவு ஓப்பினிங் பெற்ற திரைப்படமாக துப்பாக்கி அமையலாம்!!!

சூர்யா - இதுவரை சூர்யாவிற்கென்று தனிப்பட்ட ரீதியில் பெரியளவு ஓப்பினிங் கிடைக்கவில்லை ஆயினும் சூர்யா சேரும் கூட்டணியை பொறுத்து அவரது ஓப்பினிங் வசூல் மாறுபடும். சூர்யாவின் சிங்கம் திரைப்படத்தின் ஓப்பினிங் சென்னையில் மூன்று நாட்க்களில் 77 இலட்சம்தான், ஆதவனின் மூன்றுநாள் வசூல் சென்னையில் 54 இலட்சம்தான்; ஆனால் 7 ஆம் அறிவின் முதல் ஐந்துநாள் வசூல் 2 கோடி 20 இலட்சம்; இது '7 ஆம் அறிவு' திரைப்படத்தின் மீதான மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு கிடைத்த ஓப்பினிங், 'ஒரு கல் ஒரு கண்ணாடி' வரும்வரை இதுதான் மிகப்பெரும் ஓப்பினிங்!!!(எந்திரன் தவிர்த்து) இதேபோல முன்னரும் ஒருதடவை 'வாரணம் ஆயிரம்' வரும்போது சூர்யாவிற்கு மிகப்பெரும் ஓப்பினிங் கிடைத்தது; சென்னையில் மூன்று நாட்க்களில் அன்று 75 இலட்சம்வரை வசூலானது; இது அன்று அஜித், விஜய் எட்டாத தொகை; காரணம் கௌதம் மேனன், சூர்யா கூட்டணிமீதான பெரும் எதிர்பார்ப்பு!!! இந்த தொகையை சூர்யாவின் மிகப்பெரும் வெற்றித் திரைப்படமான அயன்கூட எட்டவில்லை!!!!



தனுஷ், சிம்பு - மாறிமாறி இருவரும் தமது சாதனைகளை முறியடித்துக்கொண்டு வருகின்றார்கள்; கௌதம் மேனன், ஏ.ஆர்,ரகுமான் கூட்டணிமீதான எதிர்பார்ப்பால் 'விண்ணைத்தாண்டி வருவாயா' மூன்று நாட்களில் 64 இலட்சங்களை சென்னையில் வசூலித்தது. செல்வராகவன், தனுஸ் கூட்டணி மீதான எதிர்பார்ப்பில் 'மயக்கம் என்ன' மூன்று நாட்க்களில் 97 இலட்சங்களை வசூலித்தது. சிம்புவின் 'ஒஸ்தி' நான்கு நாட்களில் 1 கோடி 33 இலட்சங்களை வசூலித்தது. கொலைவெறி கொடுத்த எதிர்பார்ப்பால் தனுஸின் '3' திரைப்படம் மிகப்பெரும் ஓப்பினிங்கான ஒரு கோடி 31 இலட்சங்களை சென்னையில் வசூலித்திருக்கின்றது!!! இது ஒரு மிகப்பெரிய தொகை!!! இருவருக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ஏறுமுகத்தில் ஓப்பினிங்கை கொடுத்துக்கொண்டிருப்பது இருவருக்கு ஆரோக்கியமான விடயம்!!

கார்த்தி - முதல் திரைப்படமான பருத்தி வீரனுக்கு எதிராபார்க்காதளவிற்கு மிகப்பெரியளவில் ஓப்பினிங் கிடைத்தது; காரணம் இயக்குனர் அமீரா, சூர்யாவின் தம்பி என்கின்ற கார்த்தி மீதான எதிர்பார்ப்பா என்பது பதில் தெரியாத கேள்வி!! அதனை தொடர்ந்து கார்த்தியின் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் சிறந்த ஓப்பினிங் கிடைத்துக்கொண்டே இருக்கின்றது!!! கார்த்திக்கு அடுத்து நடிகர்களில் விஷால், ஜீவா, ஆர்யா போன்றோருக்கும் கணிசமான ஓப்பினிங் கிடைக்கின்றது!!!

நடிகர்களை தாண்டியும் ஒரு சில திரைப்படங்களுக்கு எதிர்பார்க்காதளவிற்கு ஓப்பினிங் கிடைத்திருக்கின்றது; அப்படியான இரு சந்தர்ப்பங்கள் சிலவருடங்களுக்குள் நிகழ்ந்துக்கான 1) வடிவேலுவின் 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்', 2) ராஜேஷ் சந்தானம் எதிர்பார்ப்பில் வெளிவந்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி'. 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' முதல் மூன்று நாட்க்களில் சென்னையில் 40 இலட்சங்கள்வரை வசூலித்தது, இது அன்று எந்த விஜய், சூர்யா திரைப்படங்களும் வசூலிக்காத ஓப்பினிங்!! அதற்க்கு காரணம் 'இம்சை அரசன்' திரைப்படத்தால் வடிவேலுவுக்கு ஏற்ப்பட்ட எதிர்பார்ப்புத்தான்!!

இன்று ஒரு கல் ஒரு கண்ணாடி யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு முதல் மூன்று நாட்களில் சென்னையில் 1 கோடி 73 இலட்சம்வரை வசூலித்திருக்கின்றது; இது ஒரு மிகபெரும் தொகை!!! அஜித், விஜய், சூர்யா போன்ற மிக அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர்களது திரைப்படங்களின் வசூலை அறிமுக நாயகன் உதயநிதியின் திரைப்படம் எப்படி கடந்து சென்றது!!! காரணம் உதயநிதி அல்ல என்பது உதயநிதிக்கும் தெரியும். அப்படிஎன்றால் இந்த ஓப்பினிங் யாருக்கு? சந்தானத்திற்க்கா? இல்லை இயக்குனர் ராஜேஷிற்கா? இருவரும் தனித்தனியாக இல்லை, இருவரும் ஒன்றாக சேர்ந்த கூட்டணிக்குத்தான் இந்த ஓப்பினிங்!!!


சந்தானம் இல்லாமல் ராஜேஷ் ஒரு படத்தை இயக்கினாலோ, ராஜேஷ் இல்லாமல் சந்தானம் வேறு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததாலோ இந்த ஓப்பினிங் நிச்சயமாக சாத்தியமில்லை. இருவரும் சேரும்போது ஏற்ப்பட்ட எதிர்பார்ப்புத்தான் இந்த ஓப்பினிங்கின் இரகசியம்!!! மற்றும் விஷேடதினங்களிலேயே அதிக மக்கள் திரையரங்குவரும் சித்திரை புத்தாண்டு (காரணம் கோடைவிடுமுறை) தினத்தில் போட்டிக்கு வேறெந்த திரைப்படமும் வராமையும் இதன் பலம். டிரெயிலர் மற்றும் தமது முன்னைய திரைப்படங்கள் மூலம் இதுவொரு பக்கா காமடி பொழுதுபோக்கு திரைப்படம் என்பதை படக்குழு தெளிவாக மக்களுக்கு உணர்த்தி இருந்தமையால் எல்லா நடிகர்களின் ரசிகர்களும் இந்த திரைப்படத்தை விரும்பி எதிர்பார்த்திருந்தனர், அதுதான் இந்த திரைப்படம் அதிகளவு ஓப்பினிங் பெற முக்கிய காரணம்!!!

ஒரு ஹீரோதான் ஓப்பினிங்கின் காரணகர்த்தா என்றால் ரஜினிக்கு அடுத்து தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஓப்பினிங் உதயநிதிக்குத்தான்!! இதை யாரவது ஒத்துக்கொள்வார்களா? ஓப்பினிங் என்பது ஹீரோவைவிட அந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பில்த்தான் எப்போதும் தங்கி இருக்கின்றது; அதிகமாக ஹீரோக்கள்தான் அந்த எதிர்பார்ப்பிற்கு காரணமாக அமைவதால் ஹீரோக்களை முன்னிறுத்தி ஓப்பினிங் சொல்லப்படுகிறது. ஆனாலும் ஹீரோக்களைதாண்டி எதிர்பார்ப்புக்கள் அதிக ஓப்பினிங்கை பெறுவது அப்பப்போ இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது, இனியும் இடம்பெறும்!!!

குறிப்பு :- 

* ஒரு திரைப்படத்தின் ஓப்பினிங்கிற்கும் அதன் வெற்றிக்கும் சம்பந்தமில்லை.

* பதிவில் சென்னை பாக்ஸ் ஆபீஸ் மட்டுமே பெறுமதிகளில் சொல்லப்பட்டுள்ளது.

* Behindwoods தளம் 2007 ஆம் ஆண்டுமுதல் வாரவாரம் தவறாமல் சென்னை பாக்ஸ் ஆபீஸ் ரிப்போட் கொடுத்துக்கொண்டு இருக்கின்றது, இங்கு சொல்லப்பட்ட விபரங்கள் அதன் அடிப்படையில்த்தான் சொல்லப்பட்டிருக்கின்றது!!! 100 % நம்பகத்தன்மை உண்டென்று சொல்லமுடியாவிட்டாலும் Behindwoods பக்கச்சார்பான தளமில்லை என்பதை அனைத்து நடிகர்களும் Behindwoods உடன் கொண்டிருக்கும் நெருக்கம் உணர்த்துகின்றது!!!

* ஒரு திரைப்படம் வெளியாகியவுடன் சொல்லப்படும் மொத்த, சில்லறை வசூல்கள் எவையும் ஆதாரம் இல்லாமல் குறிப்பிட்ட தரப்புக்களால் சொல்லப்படுபவை என்பதால் அவ்வாறு சொல்லப்பட்ட எந்த இலக்கங்களையும் இந்த பதிவில் சேர்த்துக்கொள்ளவில்லை.

* Official இல்லாவிட்டாலும் கடந்த 5 ஆண்டிகளாக மூன்று இடங்களுக்கு பாக்ஸ் ஆபீஸ் ரிப்போட் வாராவாரம் வெளிவந்துகொண்டிருக்கின்றன; சென்னை, UK, மலேசியா (இவை பக்கச்சார்ப்பில்லாத நம்பகமான தளங்கள்)

* இவ்வளவு தொளில்நுட்பம் வளர்ச்சி அடைந்த நிலையிலும் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள் இதுவரை ஒரு திரைப்படத்தின் உண்மையான வசூலை வாரவாரம் வெளியிடுமளவிற்கு இன்னமும் தயாராகாதது ஏன் என்று புரியவில்லை!!! வருமானவரிக்காகவா ? இல்லை நடிகர்களின் இமேஜை காப்பாற்றவா? Official ஆக வாராவாரம் Box Office இனை அறிவித்தால் எல்லோருக்குமே நல்லது; குறிப்பாக சமூகத்தளங்களில் ரசிகர்களது சண்டையும் நேரமும் அதிகளவில் மிச்சமாகும், அத்துடன் போலியாக ஆளாளுக்கு கணக்கு காட்டி ரசிகர்களை ஏமாற்றி இணையத்தை ஓட்டுவதும் குறைவடையும்!! குறிப்பாக தொலைக்காட்சிகளில் தோன்றி அவ்வளவு வசூல், இவ்வளவு வசூல் என கதை அளந்து மக்களை ஏமாற்றும் படக்குளுவினர்களது நாடகங்களும் உடைபட்டுப் போகும்!!

*--------*

Friday, April 13, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி






உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளர் + அறிமுக நாயகனாகவும், ஹன்சிகா கதாநாயகியாகவும், சந்தானம் ஹீரோ + காமடியன் + குணச்சித்திரம் என பல பரிமாணங்களிலும் நடிக்க; ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், பாலசுப்ரமணியத்த்தின் ஒளிப்பதிவில், M.ராஜேஷ் இயக்கிய திரைப்படம்தான் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' (ஓகே ஓகே) இவர்களுடன் கௌரவ வேடத்தில் ஆர்யா, சினேகா, ஆண்ரியாவும் முக்கிய வேடத்தில் சரண்யா பொன்வண்ணனும் நடித்துள்ளார். 2012 கோடை விடுமுறை + சித்திரை புது வருடத்திற்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக வெளிவந்துள்ள அதிகபட்ட பொழுதுபோக்கு திரைப்படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்றால் அது மிகையில்லை.

ஹீரோவாக உதயநிதி - சாம் அண்டர்சன், பவர் ஸ்டார் ரேஞ்சிற்கு கலாய்க்கப்படுவார் என எதிர்பார்த்த அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது!!! எனக்கும்தான். மனிதர் அசத்தி இருக்கிறார், ஆகா ஓகோன்னு நடிப்பில் புரட்டி எல்லாம் போடவில்லை, ஆனால் இயக்குனர் கொடுக்க நினைத்ததை உள்வாங்கி சிறப்பான வெளிப்பாட்டை கொடுத்திருக்கிறார். இவர் முதல் திரைப்படத்தில் நடிப்பது போன்ற எண்ணம் காதல் & பாடல் காட்சிகளில் மட்டும் அப்பப்போ தெரிகிறது, சிறிது தயக்கம் உள்ளதுபோன்ற உணர்வு, மற்ற இடங்களில் சிறப்பாக அசத்தி இருக்கிறார். வசன உச்சரிப்பு, உடல்மொழி போன்றவைகூட இந்த திரைப்படத்திற்கு போதுமான அளவில் நன்றாகவே உள்ளது. தனக்கேற்ற கதையை தெரிவு செய்து நடித்தால் தமிழ் சினிமாவில் இவரும் தாக்குப்பிடிக்கலாம்!!!!!

ஹன்சிகா - நன்றாக ஊதிய பலூன் போல் இருக்கிறார், அதிக தசை போட்டதாலோ என்னமோ முகமும் அதைத்ததுபோல உள்ளது, உடைகளும் பெரிதாக பொருந்தவில்லை, பெரிதாக கவரவில்லை, ஒருவேளை சந்தானம் சொன்னதுபோல நைட்டியில் நல்லாயிருப்பாரோ என்னமோ :-)) ஆனாலும் அவருக்கான பாத்திரத்தை குறைவில்லாமல் வெளிப்படுத்தி இருக்கிறார். ஹன்சிகாவிற்கு இப்ப 'உடை' குறைப்பைவிட 'எடை' குறைப்புத்தான் அவசியம் (இதில இவங்க 58 Kg ஆம்:p), இல்லையென்றால் அடுத்தடுத்த ஆண்டுகளில் 'மானாட மயிலாட'வில் நமீதாவுக்கு பக்கத்தில இன்னொரு சீட் போடும் நிலை வரலாம்!!!!!


சந்தானம் - சந்தானம் இல்லையென்றால் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' இல்லவே இல்லை!!!! அசத்துகிறார், கலக்குகிறார், பின்னுகிறார், ஜமாய்க்கிறார், பிரிச்சு மேய்கிறார்...... இந்தமாதிரி வார்த்தைகள் எத்தனை இருக்கோ அத்தனையையும் சேர்த்துக்கோங்க. என்ன மனுசன்யா இந்தாளு!!!!! எனக்கு தெரிஞ்சு ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்களுக்கு அடுத்து முதல்க்காட்சி அரங்குநிறைந்த காட்சியாக யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் நான் பார்த்த ஒரே திரைப்படம் இதுதான். புதுவருட விடுமுறை, கோடைவிடுமுறை என பல காரணிகள் இருந்தாலும் அதிகமானவர்களை திரையரங்கிற்கு வரவைத்தது சந்தானம்தான் என்பதில் சந்தேகமே இல்லை; இதை அவரும், அவர் பெயரும் திரையில் அறிமுகமானபோது பறந்த விசில், மற்றும் கரகோஷம் உணர்த்தியது.

என்ன ஒரு உடல் மொழி!!! எத்தனை விதமான வசன உச்சரிப்பு!!! எத்தனை விதமான ரியாக்சன்கள்!! அசத்தலான டைமிங், மொத்தத்தில் மிகச்சிறப்பான Screen present. சந்தானம் - One Of the Best Actor!!! ஒரு முழுத் திரைப்படத்தையே ஒரு காமடியனை நம்பி இயக்கி, அதில் மூன்று தடவைகள் ஒரு இயக்குனர் ஜெயித்திருக்கிறார் என்றால் அவரை காமடியன் என்பதைவிட 'ஹீரோ' என்று சொல்வதே சால பொருந்தும். இந்த்த திரைப்படத்தின் பின்னர் சந்தானத்திற்கு ரசிகர்கள் நிச்சயம் அதிகரிப்பார்கள் என்று அடித்து சொல்லலாம், 'ஒரு கல் ஒரு கண்ணாடி' சந்தானத்தின் கேரியரில் மற்றொரு முத்திரை.

சரண்யா பொன்வண்ணன் - வழமையான அம்மா பாத்திரம், இவங்களைவிட்டா அந்த கேரக்டருக்கு வேறு தேர்வே இல்லை, வழமைபோல கலக்கி இருக்கிறாங்க. ஆர்யா - வழமையாக ராஜேஷ் திரைப்படங்களை முடித்துவைக்க ஒரு ஹீரோ வருவார், 'சிவா மனசில சக்தி'க்கு அப்புறம் மீண்டும் ஆர்யா இரண்டாவது தடவையாக திரைப்படத்தை முடித்து வைக்கிறார். சினேகா - பிரசன்னா குடுத்து வச்சவன்யா!!! ம்ம்ம்... :p ஆண்ட்ரியா - வேஸ்டா சும்மா ஜாலிக்கு வந்திட்டு போனாங்க!!


ஹாரிஸ் ஜெயராச்சின் இசையில் பாடல்கள் எல்லாமே நன்றாக படமாக்கப்பட்டிருக்கின்றன, உதயநிதி சொதப்பாதது ஆச்சரியம்!!! சூப் சாங்கான "வேணாம் மச்சான் வேணாம்" படமாக்கியவிதம் மற்றும் அந்தப் பாடலில் சந்தானத்தின் காஸ்டியூம்ஸ் கலக்கல்! பின்னணி இசையை கவனிக்கவே முடியவில்லை (படம் முழுக்க விசில் & கைதட்டல் சத்தத்தில எப்டி ரீ ரெக்கோடிங் புரியும்!!!) தப்பிச்சீங்க ஹாரிஸ் :-)) பால்சுப்ரமணியத்தின் கமரா அழகியல்; தமிழ் சினிமாவின் கலர்புல் ஒளிப்பதிவாளர்களில் முக்கியமானவரான பாலா ஒளிப்பதிவில் சொத்தப்பினல்த்தான் ஆச்சரியம், வழமைபோலவே கலக்கி இருக்கிறார், கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவு!!!! விவேக் ஹர்சன் படத்தொகுப்பு விறுவிறு!!!

M.ராஜேஷ் - அடித்து சொல்லலாம் இது இவரது மூன்றாவது ஹிட் திரைப்படம் என்று!!! மூன்றும் ஒரே பார்முலா, ஆனாலும் ரச்கர்களுக்கு சலிக்கவே சலிக்காது, யாருக்குத்தான் காமடி சலிக்கும்!!! பேரரசு செய்யும் வேலைதான், ஆனால் இங்கே ராஜேஷ் கலர்புல்லா, செம ஜாலியா, சிறந்த டைம்பாஸா, சிறந்த பொழுதுபோக்கா 2.30 மணி நேரமும் நேரம் போனது தெரியாம ஒரு படத்தை இயக்கியிருக்கிறார்; அதுதான் இவரின் வெற்றி ரகசியம்!!! வேகமான, மிகச்சிறந்த டைமிங் காமடியுடனான திரைக்கதை, மிகச்சிறப்பான வசனங்கள், அதிலும் காமடி வசனங்கள் எல்லாமே அடி தூள் ரகம்!!!! இவைதான் ராஜேஷின் சுமாரான இயக்கத்தையும், லாஜிக் மீறல்களையும் மறைத்து நிற்கின்றன. ஒண்ணுமே இல்லாத கதைக்கு சிறப்பான திரைக்கதை + மிகச்சிறப்பான காமடி வசனங்கள் சேர்த்து ரசிகர்களை படம் முழுவது விசில் + கைதட்டல் என அதிர வைத்த ராஜேசுக்கு ஒரு சலூட் போடலாம்!!


கலைப்படைப்புக்களை எடுக்கிறவங்க எடுக்கட்டும், அவங்க தமிழ் சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு போகட்டும்!! அதே நேரம் ராஜேஷ் போன்ற பக்கா காமடி + பொழுதுபோக்கு திரைப்படங்களை கொடுக்கும் இயக்குனர்களை நிச்சயம் வரவேற்கலாம், இவர்கள் தமிழ் சினிமாவிற்கு முக்கியமில்லாமல் இருக்கலாம், ஆனால் தமிழ் சினிமாவை வாழவைக்கும் ரசிகர்களுக்கு தமிழ் சினிமாவை தொடர்ந்தும் நேசிப்பதற்கு இவர்கள்தான் பூஸ்ட்!!! ஒட்டுமொத்த திரையரங்குமே ஜாலியாக கைதட்டி, விசிலடித்து, கரகோஷம் செய்து ஒரு படத்தை முழுமையாக ரசிக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு சபாஷ் போடுவதில் தப்பில்லை!!!

படத்தின் மைனஸ் என்றால் - போங்கையா மைனசும் மண்ணாங்கட்டியும்!!! படம் முழுக்க எல்லோரும் எஞ்ஜோய் பண்ணும்போது எதுக்கு அதை தேடிக்கிட்டு!!! இதயநோய், வயிற்றுவலி உள்ளவர்கள், சிரித்தால் நஷ்டம் ஏற்ப்படும் என்று நினைப்பவர்கள் தவிர்த்து மிகுதி அனைவருக்கும் இது ஒரு பக்கா விருந்து....

ஒரு கல் ஒரு கண்ணாடி - சூப்பர், செம, ஜாலி, கலக்கல்!!! Fact... Fact...Fact...Fact...Fact..

Friday, March 30, 2012

'3' - எனது பார்வையில்..





கஸ்தூரிராஜா தனுஷ் கூட்டுத் தயாரிப்பில்; தனுஷ், ஸ்ருதிஹாசன், பிரபு, பானுபிரகாஷ், பானுபிரியா, ரோஹினி, சுந்தர், சிவகார்த்திகேயன் நடிப்பில்; அனிருத்தின் இசையில் வேல்ராஜ்சின் ஒளிப்பதிவில்; ஐஸ்வர்யா.R.தனுஷ் இயக்கிய திரைப்படம்தான் '3'. கொலைவெறி பாடல் மூலம் எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தியிருந்த '3' திரைப்படம் அதன் எதிர்பார்ப்பை வர்த்தக ரீதியாக பூர்த்தி செய்யுமோ இல்லையோ ஒரு அழகிய திரைப்படமாக பூர்த்தி செய்துள்ளது.

திரைப்படம் ஆரம்பிக்கும்போதே அமங்கலமாக ஆரம்பிக்கின்றது; சுருதி, சுந்தர் Point Of View வில் கதை பிளாஷ்பாக் மூலம் சொல்லப்படுகின்றது, குழப்பமான கதைக்கு குழப்பமில்லாத தெளிவான திரைக்கதை அமைத்துள்ள இயக்குனர்; இரண்டாம் பாதியை மிகவும் மெதுவாகவே நகர்த்தி இருக்கின்றார். முதல் பாதி இளமை, காதல், நகைச்சுவை, சென்டிமென்ட் என்று விறுவிறுப்பாக நகர்கின்றது; இரண்டாம் பாதியில் காட்சிகள் அனைத்தும் இறுக்கமாகவும் மெதுவாகவும் நகர்கின்றது. படம் ஆரம்பிக்கும்போதே இதுதான் கிளைமாக்ஸ் என்று சொல்லியிருந்தாலும் திடீரென படம் நிறைவடைகின்றது. படம் பார்த்து முடித்ததும் மனதில் ஏற்ப்பட்ட ஒரு கனம் இந்தக்கணம்வரை விலகவில்லை....

தனுஷ் - இந்த மாதிரி படங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு தனுஷை ஹீரோவாக தெரிவு செய்யலாம், வேறு யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத கேரக்டர். கெட்டப் போட்டால்த்தான் நடிப்பில் சிறப்பான வெளிப்பாட்டை காட்ட முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை தனுஷ் தவறென நிரூபித்திருக்கின்றார். இந்த மாதிரியான திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக நன்றாக போகவில்லை என்று தனுஸ் கவலைப்படத் தேவையில்லை; பதினைந்து, இருபது வருடம் கழித்து தனது கேரியரை திரும்பி பார்க்கும்போது இவைதான் தனுசின் கேரியரை பூரணப்படுத்தும்!!! பள்ளி மாணவனாகவும், இளைஞனாகவும், அசாதாரண நிலையிலும் தனுஷ் உடல்மொழி, வசன உச்சரிப்பு, முகபாவங்களில் காட்டும் வேறுபாட்டுக்கு ஒரு சபாஸ் போடலாம். அசாதாரண நிலைகளில் புதுப்பேட்டை, மயக்கம் என்ன தனுஷை நினவு படுத்துவதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்; ஆனாலும் அந்த கிளைமாக்ஸில் - Hats Off To U Danush



ஸ்ருதி - சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் "பெரிசா ஒண்ணுமே இல்லையேடா" என்று ஒரு வசனம் சொல்லுவார்; அது உண்மைதான்; ஆனால் அவரது பெர்போமான்ஸ் எதிர்பார்க்காத ஒன்று. 7 ஆம் அறிவில் அலுப்படித்த ஸ்ருதியா இதென்று ஆச்சரியப்பட வைத்திருக்கின்றார். ஒரு திரைப்படத்திற்குள் இத்தனை முதிர்ச்சியான நடிப்பு எதிர்பார்க்காத ஒன்று!! புலிக்கு பிறந்தது புலிக்குட்டிதான்!! காதல், பாசம், பிரிவு என எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்திருக்கின்றார். பேரழிகியெல்லாம் இல்லை என்றாலும் அழகாகத்தான் இருக்கின்றார்!!!

பிரபு, பனுபிரகாஷ், பானுப்பிரியா, ரோஹினி போன்றவர்கள் தமக்கு கொடுத்த பாத்திரத்தை சிறப்பாகவும் நிறைவாகவும் செய்திருக்கின்றார்கள். சிவகார்த்திகேயன் முதல் பாதியை கலகலப்பாக்கினாலும் சிவகார்த்திகேயனிடமிருந்து ரசிகர்கள் இன்னமும் அதிகமாக எதிர்பார்க்கின்றார்கள் என்பதை டைட்டிலில் அவர் பெயர் வரும்போது திரையரங்கில் ரசிகர்கள் எழுப்பிய கரகோஷம் உணர்த்தியது!!! சுந்தர் 'மயக்கம் என்ன'வில் டம்மி அக்கப்பட்டவர், இங்கு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கின்றார். தனுஷ், சுருதிக்கு அடுத்து அதிக காட்சிகள் இவருக்குத்தான்; ஆகா ஓகோன்னு இல்லாவிட்டாலும் தன்னால் குடுக்ககூடிய அதிகபட்ச்சத்தை நிறைவாக கொடுத்திருக்கின்றார்.(சுந்தருக்கு முன்னாடி தனுஷ் ஹீரோயினை கட்டிப்பிடிக்கிற சீன் தொடர்ந்துகிட்டே இருக்கு :p)

அனிருத்தின் இசையில் மிகப்பெரும் ஹிட்டான கொலைவெறி பாடலை தவிர ஏனைய பாடல்களுக்கு கதையை ஒட்டியே காட்சி அமைக்கப்பட்டிருக்கின்றது; கொலைவெறி பாடல் எதிர்பார்க்கப்பட்டது போலவே திரைப்படத்தில் திணிக்கப்பட்டுள்ளது. பின்னணி இசையில் அதிகமான இடங்களில் நிசப்தத்தை பயன்படுத்தி இருக்கும் அனிருத் சில இடங்களில் சிறப்பான பின்னணியை வழங்கியிருக்கின்றார்; சில இடங்கள் சப்பென்றும் இருக்கின்றது. பொல்லாதவன், ஆடுகளம் புகழ் வேல்ராஜ்சின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம்; கதையின் தேவைக்கு, காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப இவர் கொடுத்த லைட்டிங் பிரமாதம். கோலா பாஸ்கரின் எடிடிங் Point Of View வில் சொல்லப்படும் கதை என்பதால் ஒரு சில இடங்களில் லாஜிக்கை உறுத்தினாலும், குழப்பமில்லாத, தெளிவான திரைக்கதைக்கு உதவியிருக்கின்றது.



கொலைவெறி பாடல் என்னதான் பட்டையை கிளப்பி எதிர்பார்ப்பை உயர்த்தினாலும், ஐஸ்வர்யாவால் ஒரு படத்தை சிறப்பாக கொடுக்க முடியுமா என்கின்ற சந்தேகம் பலருக்கும் இருக்கத்தான் செய்தது. முதலில் வந்த ட்ரெயிலர்களும் அதை நிரூபிப்பதுபோலத்தான் இருந்தது. படம் சிறுபிள்ளை வேளாண்மை போலத்தான் இருக்கும் என்கின்ற நினைப்பை தகர்த்திருக்கின்றார் செல்வராகவனின் முன்னாள் உதவி இயக்குனர் ஐஸ்வர்யா; படம் முழுவதும் ஆங்காங்கே செல்வராகவன் டச்!! ஆனாலும் பல இடங்களில் ஐஸ்வர்யா 'அட' போட வைத்திருக்கின்றார். பல காட்சிகள் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் உள்ளது. ஒரு இயக்குனராக ஐஸ்வர்யா ஜெயித்திருக்கின்றார்!!! கதைக்கு தேவை என்றாலும் இரண்டாம் பாதியில் அதிகமான நேரம் நாயகனும், நாயகியும் அழுவது போன்ற காட்சிகள் சலிப்பையும், திரைக்கதையில் தொய்வையும் ஏற்ப்படுத்தியத்தையும் மறுப்பதற்கில்லை!!!

'3' பொழுதுபோக்கு அம்சங்களை மட்டும் விரும்புபவர்களுக்கு ஏற்ற திரைப்படம் இல்லை; இவர்கள் திரையரங்கு சென்றால் ஏமாற்றம்தான் மிஞ்சும். ஏனையவர்கள் '3' திரைப்படத்தை நிச்சயமாக ரசிக்கலாம்!!

'3' - 3 Out Of 5